Sunday, December 16, 2012

பாடப்படாத பாடல்

 
மூலம்: Song Unsung, Gitanjali, Selected Poems, Tagore

நான் பாடவந்த ஒரு பாடல்
பாடப்படாமலேயே இருக்கிறது
இன்று வரையில்....

என்னுடையை
இசைக்கருவியின் தந்திகளை
முடுக்கவுமாய் தளர்த்தவுமாய்
என் நாட்களைக் கழிக்கின்றேன்.

இன்னும் மெய்மையான அந்த நேரம்
வந்து வாய்த்தபாடில்லை;
வார்த்தைகளும் சரிவர
அமைக்கப்படவில்லை.

காற்று மட்டும் பெருமூச்சுடன்
கடந்து போகின்றது;
இன்னும் மொட்டுகள் அவிழ்ந்து திறக்கவில்லை.

நான் அவனுடைய முகத்தைப் பார்க்கவில்லை
இன்னும்..
அவன் குரலையும் கூடக் கேட்கவில்லை.

என் வீட்டின் முன் செல்லும் சாலையில்
மென்மையான அவன் காலடி அசைவுகளின்
ஒலி மட்டுமே கேட்டிருக்கிறேன்.

இந்த நீண்ட நாள் முழுவதும்
அவனுக்கான இருக்கையைத்
தரையில் விரிப்பதிலேயே கழிந்துபோய்விட்டது.

ஆனால் ஒளிவிளக்கு இன்னமும் ஏற்றப்படவில்லை;
என்னால் வீட்டுக்குள் வரும்படி
அவனை வரவேற்கவும் இயலவில்லை.

அவனைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்
நான் வாழ்கின்றேன்;
ஆனால் அந்தச் சந்திப்பு இதுவரையில்
நிகழவே இல்லை.
 

அதீதம் 14 செப்டம்பர் 2012 இதழில் வெளிவந்தது.

Monday, December 10, 2012

நான் அறிந்த சிலம்பு - 31

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

நாள் அங்காடி பூதத்தை மறக்குல மகளிர் வழிபடுதல்

சிலம்பின் வரிகள் இங்கே: 60-75

இருபெரு வேந்தர்
போர் செய்யும் முனைப்பில்
வந்து தங்கும் பாசறைகளுக்கு
இடைப்பட்ட நிலத்தில் இருக்கும்
இருவர்க்கும் பொதுவாக அமைந்த
போர்க்களம் அது போல
மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம்
இடையேயுள்ள நிலப்பரப்பில்தான் இருந்ததுவே
நாள் அங்காடி எனும் கடைத்தெரு.

நெருக்கமாய் நெருங்கி வளர்ந்திருந்த
சோலையதன் மரங்களின் அடிகளைத்
தூணாகக் கொண்டேதான்
அமைக்கப்பட்டிருந்தன கடைகள்.


அக்கடைகளில்தாம் பொருட்களை
விலை பேசி விற்போர் குரலும்
விலை கொடுத்து வாங்குவோர் குரலும்
ஒலித்துக்கொண்டேயிருந்தது
தொய்வின்றித் தொடர்ச்சியாக.
 
முன்னொரு முறை
முசுகுந்தன் என்ற சோழவேந்தன் தானும்
அசுரவதம் செய்ய உதவினன் இந்திரனுக்கு.
அச்செயல்தனைப் பாராட்டும் முகமாய்
புகார் நகரையும் அரசனையும்
காப்பதற்கென்றே வலிமைமிக்க
பூதமொன்றைப் பரிசளித்தனன்
இந்திரன் முசுகுந்த மன்னனுக்கு.

அப்பூதம் தானும்
காவிரிப்பூம்பட்டினத்தின்
நாளங்காடி மருங்கில்
தங்கியே நின்று தக்க காவல் புரிந்தது.

இந்திர விழாவின் தொடக்கத்தில்
அப்பூததுக்குப் பலிகள் இட்டு
வணங்கி வருவது மரபு.
அம்மரபின் அடியொற்றியே
நிகழ்ந்தன பூசைகள் நாளங்காடிதன்னில்.

சித்திரை மாதத்தில்
சித்திரை நட்சத்திரத்தில்
நிறைந்த முழுமதி நாளன்று
நாளங்காடி மருங்கே
திரண்டு வந்தனர் மறக்குல மகளிர்.

"வெற்றிவேல் ஏந்திய முசுகுந்த மன்னனுக்கு
உற்ற துயர் ஒழித்திடுவாயாக"
என்றேதான் வேண்டி இந்திரன் ஆணைப்படி
புகார் நகரக் காவல்பூதத்தின்
கோயில் வாசல் பலிபீடத்தில்
அவரை துவரை புழுங்கிய பண்டங்கள்
எள்ளுருண்டைய் கறிச்சோறு
இவற்றுடன்
பூக்கள் நறும்புகை பொங்கல்
படைத்தேதான் வழிபட்டனர்.

பின் தெய்வம் ஏறி
துணங்கைக்கூத்தராகி, குரவைக்கூத்தராகி
ஆடி மகிழ்ந்து
"எம்பெருநில மன்னவன் அவன்
காத்தருளும் இருநிலமும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
மழையும் வளமும் சுரந்திடுக"
என வாழ்த்துப் பாடியே
அழகிய கோலம்பூண்ட மறக்குல மகளிர்
வல்லமையுடன் ஆரவார ஓசையுடன்
முழங்கியே விழாவது கொண்டாடினர்.
 

வல்லமை 30.07.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, November 27, 2012

நான் அறிந்த சிலம்பு - 30

புகார்க்காண்டம் - 05. இந்திர விழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 40 - 58
 

பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கத்தின்
காட்சிகள் இவை.
மிகவும் பெரிய இராஜ வீதிகள்
கொடிகளையுடைய தேர் ஓடும் வீதிகள்
கடைத்தெரு
பெருங்குடிப் பிறந்த
வாணிகர் வாழ் மாடமாளிகைகள் இருந்தன.

மறை ஓதும் அந்தணர்
அனைவராலும் விரும்பப்படும் உழவர்
ஆயுள் காக்கும் வேத மருத்துவர்
காலம் கணிக்கும் சோதிடர்

இங்ஙனம் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த
பல்வகைப்பட்டவரும்
தனித்தனியே வாழ் இடங்கள் இருந்தன.

முத்துக் கோர்ப்போர்
சங்கை அறுத்து வளையல்கள் செய்வோர்
இவர்கள் வாழ்கின்ற அகன்ற பெருவீதி

அரசனை வணங்கும் சூதர்
புகழ்ந்து பேசும் மாகதர்
வைதாளி ஆட்டமாடும் வேதிகர்
காலம் கணிக்கும் நாழிகைக் கணக்கர்
அழகாய்ப் புனைந்து ஆடி
அனைவரையும் மகிழ்விக்கும் சாந்திக் கூத்தர்


காமக் கிழத்தியராம் பரத்தையர்
கோலத்தார் கூத்தார்
அன்று அன்றே தம் பரிசுகள் பெறும் விலைமகளிர்
ஏவல் தொழில் செய்து வாழ்பவர்
ஆகியோர் வாழும் இடங்கள் இருந்தன.

தொழிற்பயிற்சி சிறப்புறப்பெற்ற
குயிலுவக் கருவியாளர்
படைக்கும் விழவுக்கும்
பல்வகை நிகழ்ச்சிக்கும் வாசிக்கும்
வாத்தியக் கலைஞர்
நகைச்சுவையுடன் பேசும் விதூடகர்
ஆகியோர் வாழும் இடங்கள் இருந்தன.

விரைந்து செல்லும்படி
குதிரைகளைச் செலுத்தும்
குதிரைவீரர்கள்
யானைப்பாகர்
நெடிய தேரைச் செலுத்தும்
தேர்ப்பாகர்
அஞ்சுதல் என்பதறியாத
வீரத்தில் சிறந்த
காலாட்படைத் தலைவர்

இவர்கள் அனைவரும்
அரசனவன் கோட்டையைச்
சூழ்ந்து இருக்கும்படி அமைந்த
வாழ் இடங்கள் இருந்தன.

இன்னும் இன்னும்
பலப்பல பெருமைகள் கொண்டு
சிறப்பு வாய்ந்த சான்றோரால்
புலவர் பெருமக்களால்
வாழ்த்திப் பாடற்குரிய
சிற்ப்புகளும் பெருமைகளும்
பெற்று விளங்கியது பட்டினப்பாக்கம்.
 

வல்லமை 23.07.12 இதழில் வெளிவந்தது.

Saturday, October 13, 2012

நான் அறிந்த சிலம்பு - 29

புகார்க்காண்டம் – 05 இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 21- 30
சிலம்பின் வரிகள் இங்கே: 31 - 39

மருவூர்ப்பாக்கம் – பகுதி – 2

இது இது இன்ன இன்னது
என்று பிரித்தறியச் சுலபமாக,
குவித்து வைக்கப்பட்ட பொருட்களுடன்
கூலவீதிகளில்
எண்வகைத் தானியங்கள்
குவிந்தேதான் இருந்தன.

பிட்டு வணிகர்
அப்ப வணிகர்
கள் வணிகராம் வலைச்சியர்
மீன் வணிகராம் பரதவர்
வெள்ளை உப்பு வணிகராம்
உமணர் உமட்டியர்

கயிறு திரித்து விற்கும் பாசவர்
வெற்றிலை வணிகர்
வாசனைப் பொருள் வணிகர்
பல வகை மாமிச வணிகர்
எண்ணெய் வணிகர்
நிறைந்து காணப்படும்
ஊன்மிக்க வாழிடங்கள் இருந்தன.

வெண்கலத்தில் பாத்திரம் செய்யும் கன்னார்
செப்பு வேலை செய்யும் கொட்டிகள்
மரவேலை செய்யும் தச்சர்
வலிமை மிக்க கைகளுடைய கொல்லர்
ஓவிய வினைஞர்
மண்பாண்டம் செய்யும் குயவர்
பொன் வேலை செய்யும் கொல்லர்
இரத்தின வேலை செய்பவர்

துணிவேலை செய்யும் தையற்காரர்
தோல்பொருள் செய்யும் செம்மார்
துணிகள் கொண்டு
படம் முதலியன செய்வோர்
நெட்டிக் கோரைகள் கொண்டு
விலங்கு பறவை பூங்கொத்து முதலிய
கலைப்பொருள் செய்வோர்
என்று பலவாகக்
குற்றமற்ற கைத்தொழில்
செய்திடுவோர் பலரும்
வாழும் இடங்கள் இருந்தன.

குழல் கொண்டு யாழ் கொண்டு
குரல் முதலான ஏழிசைகளைக்
குற்றமற இசைத்து
அவ்விசைவழி தோன்றும்
திறங்களையும்
திறமையுடன் பாடவல்ல
பெரும்பாணர் வாழிடங்கள் இருந்தன.

சிறு சிறு கைத்தொழில் செய்வார்
பிறர் கட்டளைக்குப் பணிந்து
குற்றேவல் புரிந்து நிற்பவர்
வாழும் இடங்களும் இருந்தன.

கடலதன் பரப்பில்
யவனர் இருக்கை தொடங்கி
நகரதன் வீதிகளில்
பல்பொருள் அங்காடிகள் கொண்டு
பலதரப்பட்ட குடிமக்கள்
வாழும் இடங்களைக் கொண்டு
குற்றமறச் செழித்து நின்றது
மருவூர்ப்பாக்கம்.

வல்லமை 16.07.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, October 9, 2012

மனவறைச் சுத்தம்

மனவறைச் சுத்தம் - 1

சுருட்டிய கூந்தல்
உடைந்திட்ட கேசகவ்வி
ஜோடியற்ற ஒற்றைத்தோடு
காலியான வாசனை திரவியக் குப்பி
வீண் பொருட்கள்
அலங்கார மேசையில்..


எழுதாத பேனா
உதவாத கசங்கிய காகிதம்
உலர் பசை
எழுதிமுடித்த கவிதையின்
ஒத்திகை வரைவுகள்
வீண் பொருட்கள்
எழுது மேசையில்..


களையப்படுகின்றன குப்பைகள்
அறைதோறும் அவ்வப்போதேனும்..


பொறாமை பழியுணர்வு
என்றோ கேட்டதொரு வசவு
எங்கோ பார்த்ததொரு
வேண்டாத காட்சி
யாரோ கிளறிய
குப்பை நினைவு
சினம் ரணம்..


களைய முடியத்தான் இல்லை..
பழையன களை(ழி)யும் முன்னே
மீண்டும் புதிய குப்பைகள்
மனவறை மருங்கினில்..

*********************

மனவறைச் சுத்தம் - 2

கழிவுநீர்த் துளையின்
அடைப்பானில்
பிடிவாதமாய் ஒட்டியிருக்கும்
கழிவுணவுப் பிசுக்குகள்போல்


மரிக்காமல் மனதில்
மேடை போட்டு
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்
கழிவுணர்வுத் துகள்கள்.


விதியே என்றிருந்தால்
வியாதிதான்.


அருவியென
அடித்து ஊற்றி
நல் நினைவுகள்
நீர்தெளிக்க
சடுதியில் கழுவப்படும்
மனவழுக்குகள்.


களைகள் களைந்து
கழுவியெடுக்கும்
அருவியதனுக்குப்
பலரும் சூட்டிடும்
பலப்பல பெயர்கள்.


அன்பு
உதவி
ஈகை
நம்பிக்கை
சம்சாரம்
சந்நியாசம்
பக்தி
ப்ரார்த்தனை
.................
.................
 

குறளின் குரல் - 59

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 96. குடிமை
குறள் எண்: 959


நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.


நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்; காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல்.


விளக்கம்:

நிலத்தின் இயல்பை, அந்த மண்ணில் விளைந்த பயிர்கள் காட்டி விடும். அதுபோலவே, நற்குடியில் பிறந்த ஒருவரின் இயல்புகளை அவர்கள் பேசும் சொற்களே காட்டி விடும்.
-------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 599


பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.


பரியது கூர்ங் கோட்டது ஆயினும், யானை
வெரூஉம் புலி தாக்குறின்.


விளக்கம்:


விலங்குகளில் அதிகம் பருமனானதும், கூர்மையான தந்தங்களையும் உடையது யானை. இருப்பினும் அதற்குப் போதுமான அளவு ஊக்கம் இருப்பதில்லை.
எனவே, அதனினும் உருவத்தில் சிறிய, ஆனால் ஊக்கத்தில் பெரிய புலி தாக்குமானால், ஊக்கமற்ற காரணத்தால் யானை அஞ்சி நடுங்கும்.
பிற வலிமைகளைப் பெற்றிருந்தாலும், ஊக்கமின்மையால் ஓர் அரசர், ஊக்கமுடைய பிற அரசர்க்கு அஞ்சுவர்.
----------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 90. பெரியாரைப் பிழையாமை
குறள் எண்: 894


கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல்.


கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.


விளக்கம்:

ஆற்றலில் சிறந்தவர்க்கு, அதிக ஆற்றல் இல்லாதவர்கள் தீங்கு செய்ய எண்ணக் கூடும்.

அது தம் அழிவு காலத்தைத் தாமே வலிந்து கையசைத்து வரவேற்று அழைப்பதற்கு ஒப்பாகும்.

ஆற்றலில் சிறந்தவர்க்குத் துன்பம் விளைவிக்க எண்ணுவது, தமக்குத் தாமே துன்பத்தை வரவழைக்கக்கூடியதாகும்.
------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 99


இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.



இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது.



விளக்கம்:


பிறர் தம்மிடம் இன்சொல் பேசும் போது அது எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று உணர்பவர்கள், பிறரிடத்து இன்சொல்லைப் பேசாமல் வன்சொல் பேசுவது எதற்காகவோ?
---------------------
 
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 84. பேதைமை
குறள் எண்: 835


ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
தான்புக் கழுந்து மளறு.


ஒருமைச் செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு.


விளக்கம்:

தன்னிச்சையாக, ஒருமுகச் சிந்தனையோடு செயல்படுவான் அறிவுத்திறன் அற்ற பேதை; அவன் எக்காலத்திலும் துன்பம் என்னும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும். தன் செயல்களின் மூலமே தன் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவன் அவன்.

Wednesday, October 3, 2012

மங்கி வரும் இளமைக்காலம்


 
மூலம்: - ஷேக்ஸ்பியர் Sonnet 73

வருடத்தின் பருவகாலம் இன்னதென்று
முதிர்ந்து வரும் என்னில் நீ அறியலாம்;

சிதைந்து போன தேவாலயத்தில்
இனிய குரலில் குழுப்பாடல்கள்
பறவைகள இசைக்கும்
இடங்களுக்கு அருகாமையில்
குளிரில் நடுங்கும்
பழுப்பு மஞ்சள் இலைகள்
மிகவும் குறைந்த எண்ணிக்கையில்
கிளைகளில் ஆடும் தருணங்களில்;
அல்லது ஓர் இலை கூடக் கிளைகளில்
இல்லாத தருணங்களில்;


இன்னும் மீதமிருக்கும்
மங்கலான வெளிச்சமதை
மரணம் தழுவ அருகில் வரும்
என்னில் நீ காணலாம்.

சூரியன் மேற்கில்
மறைந்த பிறகான தருணங்களில்;
சடுதியில் கறுப்பு இரவு
ஒளிர் வெளிச்சத்தை
மறைத்துச் செல்லும்
மரிக்கச் செய்யும்
மறையச் செய்யும் தருணங்களில்;

மரணிக்கக் காத்திருக்கும்
இளமை நெருப்பின் மீது படரும்
நீறுபூத்த நெருப்பாய் நான்
தகதகவென்று ஒளிர்கின்றேன்.

மரணப்படுக்கையில்தான்
அனைத்தும் முடிவு காண வேண்டியுள்ளது.


உணவளித்து ஊட்டி வளர்த்த மரத்துண்டுகள்
முழுமையாய் எரிந்து போனதும்
மரித்துப் போகும் நெருப்பது போன்றது வாழ்க்கை.
இளமைச் சக்தி குறைந்ததும்
வாழ்க்கையின் வலுவும் குறைந்து போகும்..

மங்கி வரும் என் இளமையையும்
அதன் ஏக்கங்களையும் தாபங்களையும்
நீ உணர்வாயோ என் அன்பே!

என் இளமை மங்கி மயங்கி வருவதை
நீ அறிவாயோ
பிரியும் தருணம் நெருங்கி வருவதை
நீ அறிவாயோ
அதனால்தான்
அதிக காலம் விரயமாவதற்குள்
உணர்ந்த காதலை
மேலும் வலுப்படுத்துகிறாயோ...
அதீதம் 11 ஆகஸ்ட் 2012 இதழில் வெளிவந்தது.

குறளின் குரல் - 58

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 100. பண்புடைமை
குறள் எண்:991


எண்பதத்தா லெய்த லிளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு.


எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார்மாட்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு.


விளக்கம்:

எல்லோரிடத்திலும் எளிமையாகப் பேசுவதும், பழகுவகும், பண்புடைமை என்னும் சிறப்பான நெறியினை அடையும் வழியாகும் என்பது வழக்கு.
------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 97. மானம்
குறள் எண்: 961


இன்றி யமையாச் சிறப்பின வாயினுங்
குன்ற வருப விடல்.
 
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

விளக்கம்:

மிகவும் முக்கியமான, கட்டாயமாகச் செய்தே ஆக வேண்டிய செயல்கள் என்றாலும் கூட, தம் பெருமையும் தம் குலப்பெருமையும் குன்ற வைக்கும் தன்மை வாய்ந்தவை அச்செயல்கள் என்றால், அத்தகைய செயல்களைச் செய்யாமல் கைவிடுவதே நன்று.
-------------------
 
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகார்ம்: 65, சொல்வன்மை
குறள் எண்: 646


வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்.


வேட்பத்தால் சொல்லிப் பிறர் சொல் பலன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள்.


விளக்கம்:

தான் சொல்லும் கருத்துகள் மற்றவர் விரும்பித் தொடர்ந்து கேட்குமாறு, அவர் மனம் கோணாதவாறு இனிதாகச் சொல்ல வேண்டும்.


பிறர் தமக்குச் சொல்லும் சொல்லின் பயன்களை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவையிரண்டும் கருத்தில் கொள்வது, தமக்குரிய பண்பில் சிறிதும் மாசு குன்றாதவர்களின் கொள்கையாகும்.
-----------------
 
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 84. பேதைமை
குறள் எண்: 833


நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.


நாணாமை, நாடாமை, நார் இன்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில்.


விளக்கம்:

பழி பாவங்கள் நேர்ந்து விடுமே என்று வெட்கப்படாமை
நாடவேண்டியவற்றை நாடிப் பெறாமை
எவரிடத்திலும் அன்பு இல்லாத தன்மை
பேணிக் காக்க வேண்டியவற்றைப் பேணாமை


இவை எல்லாம் பேதைகளுக்கு இயல்பாய் அமைந்த தொழிலாகும். நல்லவற்றை அறியாதவர் பேதைகள்; ஆதலால் இவை அவர்களது 'தொழில்' எனப்பட்டன.
 
நார் - அன்பு, மட்டை முதலியவற்றின் நார், கயிறு, வில்லின் நாண், பன்னாடை, கல்நார்
------------------
 
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 62. ஆள்வினையுடைமை
குறள் எண்: 618


பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்துள்வினை யின்மை பழி.

பொறி இன்மை யார்க்கும் பழி அன்று; அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி.


விளக்கம்:

மெய், வாய், கண், செவி, மூக்கு என்ற ஐம்பொறிகளில் ஒருவருக்குக் குறைகள் இருக்குமெனில் அது குறை என்று பழிக்கப்படாது. அறிய வேண்டியவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, முயற்சி ஏதும் செய்திடாமல் இருப்பதே குறையாகும்.


Tuesday, September 25, 2012

நான் அறிந்த சிலம்பு - 28

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
 சிலம்பின் வரிகள் இங்கே: 1 - 20

சூரியன் உதித்தல்

அலைகள் உடைய
கடல்நீரை ஆடையாகக் கொண்ட,
மலைகளை மார்புகளாகவும்
அம்மார்புகள் மீது தவழும்
முத்து வடங்களாக
மலைகளில் பாயும்
ஆறுகளையும் கொண்ட,
மேகம் அதனைக்
கூந்தலாகக் கொண்ட,
அகன்ற அல்குல் போன்ற
நிலமகளின் உடம்பினை
மறைத்து நின்ற
இருளென்னும் போர்வையை
பெரிய உதயகிரி
எனும் மலைமீதினில் உதித்த சூரியன்
விலக்கியே நின்றிட்டான்.
 
 
 
அக்கதிரவனின் விரிகதிர்கள்
புகார் நகரம் முழுதும் படிந்தது;
பொழுதும் புலர்ந்திட்டது.


(புகார்நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இருபிரிவுகளாக இருந்தது; அதற்கு நடுவே நாள் அங்காடி இருந்தது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் காட்சிகள் சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படுகின்றன.)

மருவூர்ப் பாக்கம் - பகுதி 1:

ஓடு இட்டு வேய்ந்திடாத மாடி வீடும்
பண்டக சாலையும்
மான்கண் போன்ற விசாலமான காற்றோட்டமிக்க
சாளரங்களையுடைய மாளிகைகளும் இருந்தன.

மேற்கொண்டு காட்சிகளைக்
காண இயலாதனவாய்க்
கண்டவர் தம் கண்களைத்
தம்பால் தடுத்து நிறுத்தவல்ல,
பயனுள்ள பொருட்கள் நிறைந்த
யவனர் இருப்பிடங்களும்
துறைமுகப் பகுதிகளில் இருந்தன.

பொருள் ஈட்டவென்று
கருங்கடலில் மரக்கலம் செலுத்தி,
தம்நாடு விட்டுப் புலம்பெயர்ந்து வந்த
பிற இடத்து மக்கள் யாவரும்
ஒரே இடத்தில் ஒரே தேசத்தாரைப் போலக்
கூடி வாழும் பகுதிகள் பலவும்
மருவூர்ப்பாக்கக் கடற்கரைப் பகுதிகளில் இருந்தன.

வண்ணக் குழம்பு சுண்ணப் பொடி
குளிர்விக்கும் சாந்துக்கலவைகள்
நறுமண மலர்கள்
அகில் போன்ற புகைத்தலுக்கான பொருட்கள்
சந்தனம் போன்ற வாசனைக்கான பொருட்கள்
இவையனைத்தும் விற்போர்
திரிகின்றனவாய் நகர வீதிகள் இருந்தன.

பட்டுநூல் எலிமயிர் பருத்தி இவற்றினால்
நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த
ஆடைகள் நெய்யும்
சாலியர் இருப்பிடங்களும் இருந்தன.

அளந்து மதிப்பிட இயலாவண்னம்
மாசறு பட்டு அகில் சந்தனம்
பவளம் முத்து நவமணிகள் பொன்
இன்னும் அளவற்ற பலவளங்களும்
அகன்ற வீதிகளில்
குவிந்தேதான் இருந்தன.
 
வல்லமை 09.07.12 இதழில் வெளிவந்தது.

Thursday, September 20, 2012

உன் கண்களால் நீ தேடிடும் வேளையில்..

ஒரு மெக்ஸிகன் கவிதையின் தமிழாக்கம்
 
ஆங்கிலத் தலைப்பு:  When you search with your eyes
 
 
 
 
உன் கண்களால்
நீ தேடிடும் வேளையில்
ஒருபோதும்
என்னை நீ காண மாட்டாய்;
என் இதயத்துள்ளேயும் கூட
யாருமே இருக்க மாட்டார்கள்...
எந்தப்பாதை நான் தேர்ந்தெடுத்தேன்
எந்த இடத்தில் உன்னை மறந்தேன்
என்று சொல்வதற்கு.

உன் கண்களை நீ திறந்திடும்
அந்த நாளில் ஒருபோதும்
நான் இருந்திட மாட்டேன்;
வேறொரு வழித்தடத்தில்
நான் போயிருப்பேன்;
உன்னை மறந்திருப்பேன்.
என்னை நீ தேடும்
அந்த ஒரு நாளில் ஒருபோதும்
என்னை நீ காண மாட்டாய்.

என்னை நீ தேடுவாய்
வடக்கேயும் தெற்கேயும்;
சூரியன் பிறந்த இடத்தேயும்
சூரியன் மறைந்திடும் இடத்தேயும்.

பாதைகளின் கரங்கள்
குறுக்கும் நெடுக்குமாகப்
போகும் இடங்களில் எல்லாம்
என் பாதச்சுவடுகளைத்
தேடிப் பைத்தியமாய்
நீ அலைந்திடுவாய்.

யாருக்குத் தெரியும்?
எந்தக் காற்று கலைத்தது
எந்த மழை அழித்தது
அச்சுவடுகளை என்று....
 

மூலக்கவிதை: When you search with your eyes
எழுதியவர்: Victor de la Cruz
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: David Shook
 
அதீதம் இதழில் 28.07.12 அன்று வெளிவந்தது.

குறளின் குரல் - 57

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 44. குற்றங்கடிதல்
குறள் எண்: 431


செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.


செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமிதம் நீர்த்து.


விளக்கம்:

செல்வம், பதவி, புகழ் முதலியவற்றால் வரும் செருக்கு,
கடுமையான கோபம்,
பிறர் போற்றாத சிறுமைப்பண்புகள் - இவை இல்லாதவரின் வளர்ச்சி என்பது தடையின்றிப் பெருகிச் செழிக்க வல்ல மேம்பாடு உடையதாகும்.
 
---------------
 

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 98. பெருமை
குறள் எண்: 971
ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்
கஃதிறந்து வாழ்து மெனில்.
 
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
'அஃது இறந்து வாழ்தும்' எனில்.

 
விளக்கம்:
 


செயற்கரிய செயல்கள எல்லாம் தம்மால் செய்ய முடியும் என்று ஊக்கத்துடன் வாழ்வதே ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளி தருவதாகும். அத்தகைய ஊக்கம் இல்லாமல், செயல்களைச் செய்வது தம்மால் இயலாது; ஊக்கம் இன்றியே வாழ்தல் கூடும் என்று கருதுவோரின் வாழ்க்கை இழிவையே காணும்.

------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 67. வினைத் திட்பம்
குறள் எண்: 663


கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி
னெற்றா விழுமந் தரும்.


கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக் கொட்கின்
எற்றா விழுமம் தரும்.


விளக்கம்:

மேற்கொண்ட ஒரு செயல் முடியும் வரை அதை வெளிபடுத்தாமல் தன்னடக்கமாக இருந்து, அச்செயலைத் திறம்படச் செய்து முடித்து, இறுதியில் அனைவருக்கும் வெளிப்படுத்துவதே ஆளும் திறமையாகும்.
இப்படி இல்லாமல், இடையிலேயே பலரும் அறிய வெளிப்படுமாயின், அது அச்செயல் புரிந்தவர்க்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

கொட்க - வெளிப்படுத்த, சுழல, சூழ வர, திரிய
ஆண்மை - ஆளும் தன்மை, ஆண் தன்மை, வெற்றி, வலிமை, அகங்காரம்
விழுமம் - துன்பம், சிறப்பு, தூய்மை


-------------------


பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 80. நட்பாராய்தல்
குறள் எண்: 792


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும்.


ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
.


விளக்கம்:

ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் திரும்பத் திரும்ப ஆராய்ந்து அறிந்து அதன் பின் ஆழ்ந்த நட்புக் கொள்ளாதவருக்கு, தான் சாவதற்குக் காரணமான துன்பம் கூட அந்நட்பின் பொருட்டு விளையக் கூடும். எனவே, ஆராய்ந்து, அறிந்து நட்புக் கொள்வதே உகந்தது.

-------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் எண்: 695


எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை.

எப்பொருளும் ஓரார், தொடரார், மற்று அப் பொருளை
விட்டக்கால் கேட்க, மறை.


விளக்கம்:

அரசர் / ஆளும் பதவியில் இருப்போர், அனைவரின் முன் வெளிப்படையாகப் பேசமுடியாமல் மறைபொருளாகப் பேசும் தருணங்களில், அவற்றை உற்றுக் கவனிக்காமல், ஒட்டுக் கேட்காமல், அது என்ன என்றும் கேள்விகள் கேட்காமல் இருக்க வேண்டும். அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

 



Sunday, September 16, 2012

நான் அறிந்த சிலம்பு - 27

புகார்க்காண்டம் - 04. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 72 -84

வைகறை வரையில் காமன் திரிதல்

அன்னம் போன்ற
மென்னடை;
ஆம்பல் மலர் போன்ற
நறுமணம்;
தேன்நிறைந்த நல்வாசனையுடைய
தாமரை மலர் போன்ற
சிவந்த வாய்;
குளிர்ச்சி பொருந்திய
கருமையான மண்ல் போன்ற
கூந்தல்;

இவை அனைத்தும்
தன்னகத்தே பெற்றவள்
நன்னீர்ப் பொய்கை மகள்.
அவள் விழிப்பதற்கெனப்
பள்ளியெழுச்சி பாடிநின்றன
வண்டுகள்.
பள்ளியெழுச்சி கேட்ட
அவள்தம் குவளை மலர்க்கண்கள்
விழிதெழுந்தன.

பறவைகளின் ஆரவாரச் சத்தம்
முரசொலி போல முழங்கிட,
புள்ளிகள் செறிந்த
சிறகுகள் உடைய
அழகிய சேவல் கூவிட,
முள் போன்ற
கூர்மையான வாயுடைய
சங்கும் ஒலித்து நின்றது.

இங்ஙனம்
தத்தம் முறைமைக்கேற்ப
எழுந்த அதிகாலைக்குரிய
சிறப்பொலிகள்,
துயிலாழ்ந்திருந்த
கடல்போல் பரந்து நின்ற
 புகார் நகரின் மக்களை
எழச் செய்தன.

இருள்மிக்க
இரவுப்பொழுது தொடங்கிப்
புலர்ந்து நின்ற வைகறைப்
பொழுது வரையில்
நொடி ஒன்றும் உறங்காதவனாகத்
தொடர்காவல் நின்றனன்
சற்றும் சோராத மன்மதன்.

மணத்தில் சிறந்த
ஐவகை மலர்களால்
செய்த அம்பினையும்
கரும்பு வில்லையும்
கையில் ஏந்தி
மீன் பொறித்த
வெற்றிக் கொடியுடன்
உலாவிக் கொண்டிருந்தனன்
காவல் காதல் மன்மதன்.

அவன் தம் ஆட்சியில்
காவல் மிக்குச்
சிறந்திருந்தது
பூகார் நகரம்.


வெண்பா

தன்னிடம் உறவு கொண்டார்க்கெல்லாம்
குளிர்ச்சி தந்தருளுமாம்;
பகை கொன்டார்க்கெல்லாம்
வெப்பம் கொண்டு தருமாம்
சிறப்புப் பெற்ற சோழ மன்னனவன்
வெண்கொற்றக் குடையது.
அதனை ஒத்த தன்மைத்து
அந்த நிலவு.

அந்நிலவுதானும்
மலர்கள் இதழ் அவிழ்க்கும்
இரவுப்பொழுதினில்
வானமதில் தவழ்ந்து சென்று....

தலைவனைக் கூடியிருந்த
மாதவிக்கு இன்பத்தையும்
தலைவனைப் பிரிந்துநின்ற
கண்ணகிக்குத் துன்பத்தையும்
தந்து தகித்தது.

(அந்திமாலைச் சிறப்புச்செய் காதை முற்றிற்று. தொடர்வது இந்திரவிழவு ஊர் எடுத்த காதை.)

வல்லமை 25.06.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, September 11, 2012

சில நேரங்களில் சில உணர்வுகள்

மீண்டும் மீண்டும் சிவகாசி விபத்துகள்

ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு குற்ற உணர்வுடன் தான் பட்டாசு ஒலி ஒளி வேடிக்கையை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆபத்தும் விபத்தும் எந்தத் துறையிலும் உண்டுதான் என்றாலும், வருடம் தவறாமல் நிகழும் சிவகாசி விபத்துகள் மனதைப் பிசைகின்றன.

கல்வியைப் பற்றிய புரிந்துணர்வு

நீயா நானா வழங்கி வரும் தரமான விவாதங்களில் கல்வி சம்பந்தப்பட்ட விவாதங்கள் என்றுமே என்னைக் கவர்ந்தவை. சமீபத்திய விவாதம் ஒன்றில் ஒரு மாணவன் கூறியது: எங்களுக்குப் பெற்றோர் சுதந்திரம் கொடுக்கிறார்கள் கல்விப் பிரிவைத் தேர்வு செய்வதில்...ஒன்று இஞ்சினீயருக்குப் படி..அல்லது டாக்டருக்குப் படி..
.
நகைச்சுவை படச் சொன்னாலும் பெரும்பாலான குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆதங்கமும் வெளிப்பட்டது.

நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பதினோராம் வகுப்பில் பொறியியல், மருத்துவம் சார்ந்த பிரிவுகளைத் தேர்ந்தெடுக்காமல், வணிகவியல் அல்லது வேறு துறைகளைத் தேர்ந்தெடுக்கப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. பிள்ளைகளின் விருப்பத்தை அடக்கிவைத்துவிடுகின்றனர். இந்த இரண்டு துறைகளைத் தவிர மற்ற படிப்புகள் எல்லாம் நன்கு மதிப்பெண் வாங்காதவர்களுக்கு என்ற பரவலான எண்ணம் பெற்றோர்க்கு மட்டுமல்லாமல் சமூக எண்ணமாகவே ஆகிவிட்டது.

எந்தப் பிரிவிலும் நன்கு படித்து, அத்துறையில் உச்சத்தை அடைய முடியும் என்பது புரியாமலே போகிறது.

கல்வி பற்றிய புரிந்துணர்வு...விழிப்புணர்வு நாம் காண இன்னும் எவ்வளவு தூரம்தான் செல்ல வேண்டும்?!

சில வாழ்வியல் எதார்த்தங்களுக்காய், உளவியல் எதார்த்தங்களும் உண்மையான ஆசைகளும், இயல்புகளும் பலிகொடுக்கப்படுகின்றன.

ஹவுஸ் ஹஸ்பெண்ட்

இந்தியா வந்திருந்த போது, உறவுக்கார இளைஞனைச் சந்திக்க நேர்ந்தது. பெண் பார்க்கும் படலத்தில் இருக்கிறார்கள் குடும்பத்தினர்.

அவனுடைய எதிர்பார்ப்பு: ஒரு டிகிரி இருந்தால் போதும் - குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிகொடுக்க, படித்த பெண் வேண்டும்தான்...ஓரளவு வெளி உலகம் தெரிந்திருக்கும். வேலை பார்க்கும் பெண் வேண்டாம்..வீட்டைக் கவனிக்க முடியாமல் போகும். என் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போவதால் நானும் தம்பியும் ரொம்பக் கஷடப்பட்டிருக்கிறோம்.

இதையே பெண்ணும் எதிர்பார்த்தால் என்ன செய்வாய்? என்ற கேள்விக்கு அவன் தந்த பதில்: வேலைக்குப் போகாமல் ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்க நான் ரெடி. என்னால் வீட்டைப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் ஹவுஸ் ஹஸ்பெண்டைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யாராவது ரெடியாக இருப்பார்களா?

கேள்வி சரியானதுதான்..பதில் சொல்லத்தான் தெரியவில்லை...

இன்னும் தேடப்படும் நட்புகள்...


முகப்புத்தகத்தின் மூலம் பல முகங்களைத் தேடிப்பிடித்து விடுகின்றோம் என்றாலும், தேடுதலுக்கு அகப்படாத பல நட்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. உலகம் சிறியது என்று சொல்கின்ற போதே இச்சிறிய உலகத்துள் ஒளிந்து கொண்டிருக்கிற சில நட்புகளைத் தேடிப்பிடிக்க முடியாமல் போகின்றதே என்ற ஆதங்கமும் மிகுதியாக இருக்கிறது.

Monday, September 10, 2012

என்னை நான் வெளிப்படுத்துகிறேன்...

ஓர் அரேபியக் கவிதையின் தமிழாக்கம்: ஆங்கிலத் தலைப்பு: I Reveal Myself


நான்...


கடல்வழித் தாக்குதல் நிகழ்த்தும்
மாலுமிகளின் வம்சத்தவள்;
மாவீரன் சாம்சனையே*
வலுவிழக்கச் செய்து வீழ்த்திய
பெண் மகளின் வாரிசு;
அலைகளுக்கும் நினைவுகளுக்கும்
மகளாகி நிற்பவள்;
பழமையின் சேகரிப்பில்
புதியதாக முளைத்திட்டவள்;


நான்...


என் கைகளை  விரிக்கும் தருணத்தில்
இந்தப் பிரபஞ்சம் தொடங்கும்.
சிரிக்கையில் என் கன்னி இதழ்களில்
தேன் ததும்பி நிற்கும்.
எடுத்து வைக்கும் ஓர் அடியில்
இந்தப் புவியே
தன் கட்டுப்பாட்டை இழந்து நிற்கும்.


என் சிரிப்பினில்
பூகம்பம் எதிரொலிக்கும்.
எரிமலைகள் பூமியின் பரப்புகளில்
விசையுடன் பீறிட்டெழும்.


நான்...


அறிவின்மைக்கும் அடக்கத்துக்கும்
மகளாகப் பிறந்தவள்;
துன்மார்க்கத்துக்கும் தூய்மைக்கும்
மகளாகப் பிறந்தவள்;
கறுப்புக்கும் வெள்ளைக்கும்
வாரிசாகி நிற்பவள்;


என் விரல் நுனிகள்
நட்சத்திரங்களைத் தட்டிச் சென்று
அவற்றைத் தடம்புரளச் செய்யும்.

மூடிக் கொண்ட என் கண்களை
நான் திறந்திடும் பொழுது வரை
உலகெங்கும் வியாபித்து நிற்கும்
கிரகண இருட்டு;
என் கண்கள் திறந்திடும் பொழுதினிலோ
உலகையே குளிப்பாட்டி நிற்கும் தங்கத் தகதகப்பு.


என் கூந்தல் கற்றைகளைச் சற்றே சுழற்றி நான்
பின்புறம் தள்ளி விட...
என் பலம் கண்ட இந்தப் பிரபஞ்சம்
அச்சத்தால் நடுநடுங்கி நின்றிடும்.


இன்றையப் பொழுதும் நான் தான்
நாளையப் பொழுதும் நான் தான்
விண்வெளியின் அரியணையில்
முடிசூட்டிக் கொண்ட அரசியும் நான் தான்


ஒரு முறை நான் கண் இமைத்தால் போதும்;
வயல்கள் முழுவதும் பச்சையாய் நுரைத்தெழுந்து
கோதுமைப் பயிர்கள் நிறைத்து நிற்கும்.
கோதுமைப் பயிர்களும் நான் தான்.
பச்சை நிறமும் நான் தான்.
முதல் அறுவடையும் நான் தான்.
இறுதி அறுவடையும் நான் தான்.


குறிப்பு: சாம்சன் பைபிளில் வரும் ஒரு பாத்திரம். அதிக வீரம் கொண்டவனாகக் கடவுளால் படைக்கப்பட்டவன்.
மேலும் செய்திகளுக்கு: http://en.wikipedia.org/wiki/Samson

அரேபிய மொழியில் மூலக்கவிதை:  Fatena Al-Gharra
ஆங்கில மொழிபெயர்ப்பு: Fatena Al-Gharra


அதீதம் இதழில் 22.06.12 அன்று வெளிவந்தது.

Saturday, September 8, 2012

நான் அறிந்த சிலம்பு - 26

புகார்க்காண்டம் - 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 58 - 60
சிலம்பின் வரிகள் இங்கே: 61 - 71

காதலரைப் பிரிந்த மகளிரின் நிலை


தம் காதலரைப் பிரிந்த மகளிர்
காண்பவரெல்லாம் வருந்தும்படி
உலையில் ஊதுகின்ற
துருத்தியதன் மூக்குப் போல்
சூடான தொடர்ந்த பெருமூச்சுடன்
வாடிப் போய்க் கிடந்தனர்.


இளவேனில் பொழுதுக்காகவென அமைந்த
நிலா முற்றத்துக்குச் செல்லாமல்
குளிர்காலத்துக்காகவென அமைக்கப்பட்டிருந்த
மாளிகையின் இடைப்பட்ட பகுதியில்தான் தங்கினர்.


அங்கேயும் கூடத்
தென்றலும் நிலவும் புகுந்து
பிரிவுத் துயர் ஆற்றாது தவிக்கும்
தம்மை மென்மேலும் வாட்டுமோ
என்றஞ்சியே
அவை புகுந்திடாவண்ணம்
சாளரங்களை மூடி வைத்தனர்.


பொதிகைமலையதன் சந்தனமும்
அழகிய முத்தாலான மாலையும்
தம் மார்பில் அணியாது
வருந்தியே இருந்தனர்.


தாழியில் மலர்ந்த குவளைமலர்களும்
செங்கழுநீர் முதலிய குளிர்ந்த மலர்களும்
தூவிவைத்திருந்த படுக்கையது துறந்தனர்.


தன் சேவலொடு கூடி மகிழ்ந்த
அன்னப்பேடையது
கூடலின் மகிழ்வில்தான் உதிர்த்துநின்ற
தூவி கொண்டடைத்த
மென்பஞ்சணை மீதினில் இருந்திடினும்
துயில் கொண்டாரில்லை.


(தூவி - அடிவயிற்று மயிர்)


உற்ற தம் கணவரொடு
முன்பொரு நாள் ஊடிய காலத்தில்
அம்மகளிர் தம் நெடிய கண்கள்
தம்மிடை நின்ற குமிழ்மலர் போன்ற
மூக்கைத் தாக்கியும்
காதிலிருந்த குழைகளை
இப்படியும் அப்படியும் அலைக்கழித்தும்
கணவனின் கலங்கா உள்ளமும் கலங்கும்படி
கடையோரம் சிவந்தும் நின்றன.


ஊடல் இன்பத்தில் துன்பத்தில்
அன்று வருந்தின மகளிர்தம் கண்கள்;
சிவந்தும் இருந்தன.


ஆனால் இன்றோ
தனிமைத் துயரில்
குறுகிப் பிறழ்ந்து
முத்துத் தாரையென
நீர் வார்க்கின்றன.

வல்லமை 18.06.12 இதழில் வெளிவந்தது.

Saturday, August 4, 2012

நான் அறிந்த சிலம்பு - 25

புகார்க்காண்டம் - 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 47 - 57

கணவனைப் பிரிந்து வாழும் கண்ணகியின் துயரநிலை


கணவனைப் பிரிந்த கண்ணகி
இன்புற்றிருக்க வேண்டிய
வேனில் பருவமதனில்
துன்புற்றிருந்தனள்.


அழகிய சிறிய சிவந்த பாதங்களில்
சிலம்புகள் அணியாதிருந்தனள்.


மென் துகிலுடுத்த அல்குல் இடத்து
அணியது சேர்த்திடும்
மேகலை அணியாதிருந்தனள்.


மார்புகளில் அழகுசேர்க்கும் வண்ணம்
குங்குமக் கலவை பூசாதிருந்தனள்.
 

மங்கல அணியது தவிர
வேறொரு அழகணியும் அணியாதிருந்தனள்.


வளைவான குண்டலங்கள் துறந்திட்ட
அவள் காதுகள் தாமும்
வளைந்து தாழ்ந்திருந்தன.


மதிபோன்ற ஒளிமுகத்தில்
 கலவியால் அரும்பிடும்
சிறுவியர்வைத்துளிகள் இல்லாதிருந்தன.


சிவந்த கயல்போன்ற நெடுவிழிகள்
மையது தீட்டுவதைத்தான் மறந்திட்டன.


பவளம் போலும் சிவந்த
ஒளிபொருந்திய நெற்றியது
 திலகமது இழந்திட்டது.


முத்தின் ஒளியது பொருந்திய
முத்தான அவள் புன்னகையைக்
கோவலன் தான் இழந்திட்டான்.


மைபோன்ற கருமையான
அவள் கூந்தலது
நெய் பூச மறந்திட்டது.


செயலற்ற நெஞ்சத்துடன்
கவலையுற்ற மனத்துடன்
கையறு நிலையில்
கலங்கி நின்றனள் கண்ணகி.

18.06.12 வல்லமை இதழில் வெளிவந்தது.

Sunday, July 22, 2012

நான் அறிந்த சிலம்பு - 24

புகார்க்காண்டம் - 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 36-46


காதலரைக் கூடிய மகளிரின் களிமகிழ்வு


மேற்குத் திசையதனில் கிடைத்திடும்
நறுமணத்துக்கெனப் புகைத்திடும்
வெண்மையான கண்டு சருக்கரையோடு


கிழக்குத் திசையதனில் கிடைத்திடும்
கருமையான அகில் முதலியவற்றுடன்
புகைக்கும் புகையைத்
துறந்திட்டனர் மகளிர்
வேனிற்காலம் என்பதாலே.


வடக்குத் திசையதனின் கண்ணமைந்த
இமயமலையினின்று கொண்டு வந்திட்ட
சந்தனம் அரைத்திடும்
ஒளிபொருந்திய வட்டக்கல்லில்


தெற்குத் திசையதனின் கண்ணமைந்த
பொதிகைமலைப் பிறந்த
சந்தனக்கட்டையைச்
சுழற்றி இழைத்திட்டுச்
சந்தனக் குழம்பதனை
மேனியெங்கும் பூசினர்.


அழகிய சுண்ணப்பொடியுடன்
பூக்களும் சிதறிக்கிடந்த
பூம்படுக்கை தன்னில்
மந்த மாருதம் வீசியதில் மயங்கி
நீலோற்பவ மலரின் கண்களை ஒத்த
தம் கண்களைக்
காதலர் தம் மார்பில் பொருத்தியே
காதல் மகளிர் தாமும்
இன்பக்களிப்புடன் துயின்றனர்.


(மந்த மாருதம் - இளந்தென்றல்)


வல்லமை 11.06.12 இதழில் வெளிவந்தது.

Wednesday, July 18, 2012

ஞாபகக் குறி ஒன்று எடுத்து வருவாயாக

ஓர் உருதுக்கவிதையின் தமிழாக்கம்

ஞாபகக் குறி ஒன்று எடுத்து வருவாயாக.


உன்னிடம்
இறைஞ்சுகிறேன்.


ஒவ்வொரு பயணத்தின் போதும்
ஞாபகக்குறி ஒன்று
எடுத்து நீ வாருவாயாக.
களைத்துப் போய்விட்ட பாதங்களுடன்
பட்டாம்பூச்சியின் சிறகுகளையும்
எடுத்து நீ வருவாயாக.


உன்னுடனான தோழமை பற்றி
எழுதி வருகின்றேன் ஒரு கதை.
உனக்கு முடியுமானால்
நல்ல வார்த்தை ஒன்றை
எடுத்து நீ வருவாயாக.


நான் நம்புகின்றேன்.
நம் அன்பும் அது தரும் நம்பிக்கையும்
நம்மைக் களைத்து போகவிடாது.
நம்மால் முடியும்.
இந்தக் காதலைப்
புதுப்பித்துக் கொண்டே இருக்க .


தேவதைகளின் மாந்திரீக உலகுக்கு
நீ செல்ல நேரும்போது
நிலவொளிரும் அழகு முகமொன்றால்
நீ கவரப்பட்டால்
அதே போன்றதொரு முகம் செதுக்கி
எடுத்து நீ வருவாயாக.


பயணங்களில் உனக்கிருக்கும்
கட்டுக்கடங்காக் காதல்
உன்னை வீட்டிலிருந்து வெளியே
இழுத்துக் கொண்டுதான் செல்கிறது.


பயணப்பைகளில் சுமந்தே வரும்
தூசியது போலவே
வருத்தப் பட வைத்திடும்
எதையும் திரும்பவும்தான்
கொண்டு நீ வந்திடாதே.


வருத்தங்கள் சுமந்துவர நேரினும்
ஆத்மார்த்தமாகச் சுமந்தேதான்
எடுத்து நீ வருவாயாக


விசித்திரமான வேடிக்கையான
சூழல்கள் தன்னில்
வாழ்ந்துதான் வருகின்றோம்.
உன் பயணமது முடியும் தருணம்
காதலை நீ எழுதி வந்திருந்தால்
நனைந்த கண்களைத்தான்
எடுத்து நீ வருவாயாக.


உருது மொழியில் மூலக்கவிதை:  Noshi Gillani (பாகிஸ்தான் பெண் கவிஞர் )
ஆங்கில மொழிமாற்றம்: Noshi Gillani
ஆங்கில மொழிபெயர்ப்பு: Lavinia Greenlaw (லண்டன்)

அதீதம் மே, 2012 இதழில் வெளிவந்தது.

Monday, June 25, 2012

நான் அறிந்த சிலம்பு - 23

புகார்க்காண்டம்: 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை


சிலம்பின் வரிகள் இங்கே..21 - 34


நிலாமுற்றத்தில் கோவலனும் மாதவியும் களித்திருத்தல்

வயதில் இளையவர்கள்தான் என்றாலும்
பகையரசரைத் தோற்றோடச் செய்யும்
மாண்பும் செருக்கும் மிக்கவர்கள்
தென்னவர் குலப் பாண்டிய மன்னர்கள்.

அம்மரபில் முதலானவன்
'சந்திரன்' ஆவான்.


அவன் தானும்
செந்நிற வானில்
வெண்ணிறப் பிறையெனத் தோன்றி
அல்லல்கள் தரும் அந்திமாலையெனும்
பகைவனைத் துரத்தி ஓட்டிவிட்டு
தன் முறைதனில் பிறழ்ந்திடாது
பால்கதிர்களைப் பரப்பிவைத்து
மீன்கள் குவிந்திருந்த
வானத்து மருங்கில்தான்
ஆட்சி செய்திட்டே
தன் ஒளி துலங்கச் செய்தான்.


மனையிடத்து
பூத்திட்ட முல்லையும்
அவிழ்ந்த மல்லிகையும்
இன்னும் பல பூக்களும்
பரந்து தூவிக் கிடந்த
படுக்கையதனில்
பொலிவுடன் தான் வீற்றிருந்தனர்
கோவலனும் மாதவியும்.


பரந்து உயர்ந்த
அல்குலின்மேலிருக்கும்
அழகிய சேலையின்மீதுள்ள
பவள வடமும் மேகலையும்
நிலைகுலைந்திருக்க


நிலவின் பயனைத்
துய்ப்பதற்கென்றே
அமைந்திருந்த
உயர் நிலா முற்றத்திலே
தன் காதலன் கோவலனுக்கு
ஒரு நேரம் ஊடல் இன்பமும்
ஒரு நேரம் கூடல் இன்பமும்
மாறி மாறி அளித்திருந்தனள் மாதவி.


ஆர்வம் கிளர்ந்தெழும்
நெஞ்சத்துடன் கோவலனை எதிர்கொண்டு
அவனைத் தழுவி முயங்கினள்.


அம்முயக்கத்தால்
முன் கலைந்திட்ட ஒப்பனையதனை
கூடலின் பின் அவ்வப்பொழுது சரிசெய்து
அவள் மகிழ்ந்திருந்தனள்.


மாதவியவள் மட்டுமன்றிக்
காதலருடன் கூடியிருந்த
மகளிர் அனைவரும்
களித்தே மகிழ்ந்திருந்தனர்.

வல்லமையில் 04.06.12 அன்று வெளிவந்தது.

Wednesday, June 20, 2012

நான் அறிந்த சிலம்பு - 22

புகார்க்காண்டம் - 4. அந்திமாலை சிறப்புச்செய் காதை


மாலைப்பொழுதின் வரவு


விரிகதிர்கள் பரப்பி
உலகம் முழுவதையும் ஆண்ட
ஒப்பற்ற தனி ஒற்றைச் சக்கரத்
தேரினையுடைய திண்மையாளன்
சூரியன் அவனைக் காண்கிலனே.


அழகிய அகன்ற வானத்தின்கண்
தம் கதிர்களை விரித்து
ஒளிதனைக் கூட்டும்
திங்கள் செல்வன் அந்நிலவு
எங்கேதான் போய் உள்ளானோ?


இவ்வாறெல்லாம்
தன் காதலனைப்பிரிந்த
நிலமடந்தை
அவனைத் தேடியே புலம்பினள்.


திசையாகிய தன் முகத்தில்
பசலையது படர,
செம்மலர்க்கண்கள் தான்
கண்ணீரது வார்த்திட,
உடல் முழுதும்
குளிர்ந்தே நடுங்கிட
கடல் அலையை
ஆடையாய் உடுத்திட்ட
நிலமடந்தையவளும்
தன் கணவனைக் காணாது
அல்லலுற்று நெஞ்சு கலங்கிடும்
இடுக்கண் மாலைப்பொழுது.


கடமையது தவறிடாது
தம் அரசுக்கு வரி செலுத்திடும்
நற்குடிமக்கள் வருந்தும்படி
உட்பகையுடன் நின்றிருந்து
உடனிருந்தே
பகைவர் தமக்குத்
தம் குடிகெடுக்க தாமே உதவி,


வெற்றிகள் குவிக்கும்
தம் புவிமன்னன்
இல்லாத நேரத்து
நாட்டுநலம் அழியும்படி
வந்து நின்று தாக்கி
உட்பகைச் சதியால் வென்று
அங்கேயே தங்கிடும்
குறுநிலமன்னன்போல்


வளமது கொழித்துச் செழிக்கும்
புகார்நகர் தன்னிலே
பகல் முடிந்து ஆரம்பமானது இருள்.


அந்த மாலைப்பொழுதில்
என்னவெல்லாம் நடந்தது?


தம் நெஞ்சில் நீங்காது தங்கியிருக்கும்
கணவரைப் பிரிந்த மகளிர்
சொல்ல முடியாத துயரமுற்றனர்.


தம் காதலர் அவருடன்
கூடியே களித்திட்ட மகளிர்
சொல்ல முடியாத இன்பமுற்றனர்.


வேய்ங் குழலது ஊதியே
ஆயர்களும்
முல்லைப்பண் இசைத்திட்டனர்.


அவருடன் சேர்ந்தே
இளைய வண்டுகள் தாமும்
முல்லைப்பூவின் இதழ்களில்
வாய்வைத்தே ஊதி
இசைச்சூழல் எழுப்பி நின்றன.


அறுகால் அதனைப்
பகைமையாய்க் கருதிட்ட
சிறுகால் அதுவும்
வண்டுகளைத் துரத்திவிட்டு
மலர்களின் வாசம்
முகர்ந்து சென்று
சுமந்து சென்று
வீதியெல்லாம் பரப்பியது.


(அறுகால் - வண்டு; சிறுகால் - தென்றல்)


ஒளிபொருந்திய அழகு வளையல்கள்
அணிந்திட்ட மகளிர்தாமும்
தத்தம் இல்லங்களில்
அழகான் மணிவிளக்குகளை
ஏற்றி வைத்தனர்.


வளமிக்க புகார்நகர்தன்னில்
இங்ஙனம் வந்துற்றது
மாலையதன் பொழுது.

வல்லமை 28.05.12 இதழில் வெளிவந்தது.

Monday, June 18, 2012

நிச்சலனமற்ற பொழுதுகளில்..

வரவு செலவுகள்
பார்த்தான பின்

இன்ப துன்பங்களில்
தோய்ந்தான பின்

களித்துக் களைத்து
ஓய்ந்தான பின்

மீதம் இருப்பது
நிச்சலனமற்ற
இன்றையப் பொழுதின்
இந்தக் கணம் மட்டுமே...

நிச்சலனமற்ற பொழுதுகளில்
கரைகின்ற வாழ்க்கை
சில சமயங்களில்
பிடித்துத்தான் போகிறது!

Sunday, June 17, 2012

நான் அறிந்த சிலம்பு - 21

புகார்க்காண்டம் - 03. அரங்கேற்ற காதை


சிலம்பின் வரிகள் இங்கே: 160 - 179


மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்


காவல் வேந்தன்


அழகுபட ஆடியே
முடித்தனள் மாதவி;
ஆடலது ரசித்திட்டே
அகமகிழ்ந்தனன்
காவல் வேந்தன் .


அவன் தான் அணிந்திருந்த
'பச்சை மாலைப்' பரிசினையும்
கூத்து நெறிகள்
தவறிடாமல் ஆடியதால்
'தலைக்கோலி' பட்டமும்
பெற்றனள் மாதவி.


'முதன்முதலாய் மேடையேறி
முதன்மை பெற்று விளங்கி
அரங்கேற்றம் நிகழ்த்திய
நாடகக் கணிகையர்க்குரிய
பரிசின் அளவு இது'
என்று நூலோர் வகுத்திட்ட
விதியதன் படியே
ஆயிரத்தெட்டு கழஞ்சுப் பொன்னை
மன்னனிடமிருந்து பரிசாகப்
பெற்றனள் மாதவி.


மாதவியின் மாலையைப் பெற்றுக் கோவலன் அவளுடன் இருத்தல்


பத்துப் பத்தாய் அடுக்கிய நூறுடன்
எட்டையும் இணைக்க
மற்ற எதனுக்கும் இல்லாததொரு
சிறப்பில் மேம்பட்ட
பசும்பொன்னால் ஆனது
ஆயிரத்தெட்டு கழஞ்சுப் பொன்மாலை.


இத்தகைய பெருமதிப்புவாய்ந்த
பொன்மாலையதனை
அதிகப் பொன் கொடுத்து
வாங்க வல்லவன்
மாதவியின் மணாளனாக ஏற்றவன்
என்றெண்ணினள்
மாதவியின் தாய் சித்ராபதி.


இவ்வெண்ணத்துடனேயே
பொன்மாலையதனை
மருண்டு நோக்கும் மான்விழிகொண்ட
கூனியொருத்தி கைதனில் கொடுத்தே
நிறுத்திவைத்தனள் 
மாலை விற்பனர் போலவே..
செல்வந்த இளைஞர்கள்
வலமது வந்திடும்
நகரின் பெருவீதிகளில்.


மாமலராம் தாமரை போன்ற
நெடிய கண்களையுடைய
மாதவியள் மாலையை
வாங்கிய கோவலனும்
கூனியவளுடன் தான் சென்று
மாதவியின் மணமனை புகுந்தனன்.


அம்மனைதன்னில்
மாதவியைத் தன்னுடன்
சேர்த்து அணைத்த அப்பொழுதினில்
மதி மறந்தே மயங்கினன்.


அவள்தனை ஒருபோதும்
நீங்கிட முடியாத
பெருவிருப்பினன் ஆயினன்.


குற்றங்கள் ஏதுமற்ற
சிறப்புகள் மட்டுமே பெற்ற
தன் மனை மனைவி
முற்றிலும் மறந்தனன்.


வெண்பா


அனைத்துக் கலைகளின் கருவிகளாம்
கணிதம் இலக்கணம் - இவ்விரண்டு
இயற்றமிழ்ப் பிரிவுகள் ஐந்து
(எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி)
இசைத்தமிழின் பண்கள் நான்கு
நாடகத் தமிழின் கூத்துகள் பதினொன்று -


- இவையனைத்தையும்
தம் ஆடல் பாடல் திறத்தினாலே
புவிவாழ் மக்கள் அனைவரும்
ஆழ்ந்து அறிந்து
அனுபவித்துப் போற்றிடும்படி
நிகழ்த்திக்காட்டினள்
அழகிய புகார் நகரதனில் பிறந்திட்ட
பொன்வளை அணிந்திட்ட
மாதவியெனும் கணிகை.

(அரங்கேற்ற காதை முற்றிற்று.)

வல்லமை 21.05.12 இதழில் வெளிவந்தது.

Wednesday, June 13, 2012

நான் அறிந்த சிலம்பு - 20

புகார்க்காண்டம் - 3. அரங்கேற்ற காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 129 - 159

மாதவியின் நாட்டியம்

மங்கலப்பாடல்


அரசன் முதலான அனைவரும்
தகுதிக்கேற்ப அமைத்த இருக்கைகளில்
அமர்ந்திருந்தனர்.


இசைக்கருவிகளை இசைப்பவர்தாமும்
அவரவர்க்குரிய இடத்தில்
முறைப்படி நின்றனர்.


நடனமாடும் கணிகையவள்
மாதவி தானும்
தன் வலதுகாலை முன்வைத்து
அரங்கம் அதனில் ஏறியே
பொருமுகத்திரை பொருந்திய
வலப்பக்க்த்தூண் அருகே
மரபதன்படி சென்றே நின்றனள்.


ஆடிய அனுபவ முதிர்ச்சி அதிகமுள்ள
தோரிய நடன மகளிர்தாமும்
ஒருமுகத்திரை பொருந்திய
இடபக்கத்தூண் அருகே
மரபதன்படி சென்றே நின்றனர்.


நன்மைகள் பெருகும்படியும்
தீமைகள் நீங்கும்படியும்
தாள இயல்பு பொலிந்திருந்து
அவதாள இயல்புகள் நீங்கியிருந்து
தெய்வப்பாடல்களாம்
ஓரொற்று வாரப்பாடல்களும்
ஈரொற்று வாரப்பாடல்களும்
முறைமையுடனே இசைத்த்னர்.


வாரப்பாடல்கள் முடிகையில்
இசைக்கும் இசைக்கருவிகள்தாமும்
ஒருங்கே இசைத்தன.


இசைக்கருவிகள் ஒலித்த முறை

குழல் வழியே
அதன் அடியொற்றி
யாழது இசைத்தது.


யாழின் வழியே
சிறப்புடன்
தண்ணுமையது இசைத்தது.


தண்ணுமையின் வழியே
இழைவுடன்
முழவது இசைத்தது.


முழவுடன் கூடிநின்று
இடக்கை வாத்தியமாம்
ஆமந்திரிகை இசைத்தது.


அந்தரக் கொட்டு


ஆமந்திரிகையுடன் கூடி
இசைக்கருவிகள் இடைவெளியின்றியே
ஒன்றியிருந்து ஆர்த்து ஒலித்தன.


ஒரு தாளத்திற்கு
இரு கொட்டுகள் கொண்டு (10 பற்றுகள்)
பஞ்ச தாளப் பிரபந்தம்
கட்டப்பட்டது.
அத்துடன் தீர்வு என்பதுவும் சேர்ந்து (1 பற்று)
பற்று பதினொன்று ஆனது.


இங்ஙனம் பதினொறு பற்றாலே
ஆடி முடிப்பது தேசிக்கூத்து என்பது
நாடக நூல்கள் எழுதிய மரபு.
இம்முறை வழுவாது
அந்தரக்கொட்டு ஆடல் ஆடி முடித்தபின்...


தேசிக் கூத்து


பாலைப்பண் என்னும் மங்கலப்பண்ணை
அளவு குன்றாதபடிஆளத்தி செய்து (ஆளத்தி - ஆலாபனை)
உறுப்புகள் நான்கும் (உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை)
மங்கலச் சொற்கள் உடையதாய்க்
குறைபடாமல் சொற்படுத்தி இசைப்படுத்தி


தேசிக்கூத்தின் முறைமைப்படி
மூன்று ஒத்து உடைய அளவில் ஆரம்பித்து
ஓர் ஒத்து உடைய தாளத்தில் முடித்து
அழகிய மண்டில நிலை கொண்டு
ஒற்றித்து ஒத்தல்
இரட்டித்து ஒத்தல் கடைப்பிடித்து
பாட்டும் கொட்டும் கூத்தும்
மாதவி ஆடிய பின்னே........


மார்க்கக் கூத்து


பஞ்ச பிரபந்தங்களாகக் கட்டப்பட்ட
வடுகில் ஒத்து தேசியில் ஒத்து காட்டி
இரட்டிக்கு இரட்டியாக (இரண்டிரண்டு)
மட்ட தாளம் முதல் நிலையாக
ஏக தாளம் இறுதி நிலையாக
வைசாக நிலை கொண்டு
ஆடியே முடித்தனள்.


பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று
வந்திருந்து நடனமாடியது போலவே
அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து
நாட்டிய நூல்கள் சொல்லிவைத்த
முறையது தவறிடாது
அனைவரும் கண்டு இன்புற்றிட
நாட்டிய அரங்கினில் ஆடினள் மாதவி.

வல்லமை 14.05.12 இதழில் வெளிவந்தது.

Monday, May 14, 2012

நான் அறிந்த சிலம்பு – 19

புகார்க்காண்டம் – 3. அரங்கேற்ற காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 114 - 120

சிலம்பின் வரிகள் இங்கே: 121 - 128

தலைக்கோல் அமைதி

பெரும்புகழ் வாய்ந்த மன்னரவர்
போரிட்டுப் பகைவர் வென்று,
அப்பகையரசர் புறமுதுகிட்டுத் தோற்றோட,
அவர்தம் வெண்கொற்றக் குடைக்காம்பதனை
எடுத்தாங்கு வருவர்.

அக்காம்பின் கணுக்கள் முழுதும்
நவமணிகள் இழைத்தே அலங்கரிப்பர்.
கணுக்களின் இடைப்பட்ட பகுதிகளில்
‘சாம்பூநதம்’ எனும் உயர்வகைத் தங்கத் தகட்டை
வலம்புரியாகவும் இடம்புரியாகவும்
வளைத்துக் கட்டி ஒரு கோல் என்றாக்குவர்.

உலகையே தன்
வெண்கொற்றக் குடையின் கீழ்
புரந்திருக்கும்
மன்னவன் அரண்மனையதனில்
அக்கோலினை வைத்து
இந்திரன் புதல்வன் சயந்தன் என
அக்கோலினை வரித்திட்டு
மந்திரங்கள் ஓதி
வந்தனைகள் செய்து
பூசித்தே வழிபடுவர்.
இதுவே தானது
‘தலைக்கோல்’ என்பது.

புண்ணிய நதிகளில்
பொற்குடங்களில் முகர்ந்து வந்த
நன்னீர் கொண்டே தலைக்கோலதனை
நீராட்டிய பின்பு
மாலைகளும் அணிவிப்பர்
முற்கூறிய ஆடலாசிரியன் முதலானோர்.

பொருந்தியதொரு நன்னாளில்
பொன்னால் செய்த ‘பூண்’ மற்றும்
‘முகபடாம்’ எனும் பட்டம்
இவ்விரண்டும் கொண்டிருக்கும்
பட்டத்து யானையின் பெரிய கையதனில்தான்
தலைக்கோலினை வாழ்த்தியே வழங்கிடுவர்.

மும்முரசுகளும் ஆர்த்து ஒலிக்க
அவற்றுடன் சேர்ந்து
இன்னும் பல வாத்தியங்களும் ஆர்ப்பரிக்க
அரசன் அவனும்
தம் ஐம்பெருங்குழுவினர் சூழ வரப்
பட்டத்து யானையது
வீதியில் நின்ற தேரினை வலம்வந்து
தலைக்கோல் அதனைக்
கவிஞனிடம் அளித்துவிடும்.

( ஐம்பெருங்குழுவினர் – அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதுவர் சாரணர் )

அனைவரும் ஒருமித்தே ஊர்வலம் வந்தபின்
தலைக்கோலதனை எதிர்முகமாக வைத்திடுவான்
கவிஞனவன் ஆடல் அரங்கதனில்.

மாதவியின் நாட்டியம்
அரங்கேறவிருந்த அரங்கினிலும்
செப்பிய முறைப்படி
தலைக்கோல் வைக்கப்பட்டது.

வல்லமை 07.05.12 இதழில் வெளிவந்தது.

Monday, May 7, 2012

நான் அறிந்த சிலம்பு - 18‏


புகார்க்காண்டம் - 3. அரங்கேற்ற காதை

 நாட்டிய அரங்கின் அமைப்பு

சிலம்பின் வரிகள் இங்கே: 95 - 113

 நாடக நூலார் சொல்லிவைத்த
இயல்புகளினின்று மாறிடாது
நல்லதொரு நிலத்தைத்
தேர்ந்தே எடுத்தனர்
 நாட்டிய அரங்கத்துக்கென்றே.


புனிதம் வாய்ந்த பெருமலையாம்
பொதிகை மலைப்பக்கங்களில்
நீண்டு வளர்ந்திடும் மூங்கிலதனில்
ஒரு கணுவுக்கும் அடுத்க கணுவுக்கும்
இடைப்பட்டிருந்த ஒரு சாண்
 கொண்டேதான் வந்தனர்
அரங்கது அமைத்திட.


அரங்கமைப்பவன் உத்தமன்
தன் கைப்பெருவிரலில்
இருபத்து நான்கு வரும்படி அளந்து
அம்மூங்கில் வெட்டியே செய்தனன்
அரங்கமைக்கும் கோலினை.


(குறிப்பு: அளவை முறை:


அணு எட்டு = தேர்த்துகள்; தேர்த்துகள் எட்டு = இம்மி; இம்மி எட்டு = எள்ளு;
எள்ளு எட்டு = நெல்லு: நெல்லு எட்டு = ஒரு பெருவிரல்


உத்தமன் -  அதிகம் உயரம் இல்லாத, குறைவான உயரம் இல்லாத நடுத்தர உயரமான உத்தமனிடம் பெருவிரல் அளவு எடுக்கப்படும்.


பெருவிரல் இருபத்து நான்கு = ஒரு கோல்)
 

மூங்கிலின்
ஏழுகோல் அகலமும்
எட்டுக்கோல் நீளமும்
 ஒருகோல் உயரமுமாய்
அமைத்திட்டனர் அரங்கதனை.


உத்தரமாய் மேல்நிற்கும் பலகைக்கும்
தளமாய்க் கீழ்நிற்கும் பலகைக்கும்
இடையே இருந்த இடைவெளி
நான்கு கோல்.


அரங்கின்
உள் புக வெளிவரத்
தோதாய் இருந்தன
வாயில்கள் இரண்டு.


இங்ஙனம்
அழகுற அமைந்த அரங்கதன்
மேல்நிலை மாடத்தில்
வருணபூதங்கள் நால்வகை
சித்தரித்து வைத்தனர்
யாவரும் புகழும்படி.


(நால்வகை பூதங்கள்
வச்சிரதேகன், வச்சிரதந்தன், வருணன், இரத்தகேசுவரன்)


ஆங்கிருந்த தூண்களின் நிழல்
அரங்கதன் கண்ணும்
அவையதன் கண்ணும்
வீழ்ந்திடா வண்ண்ம்
மாண்புறு நிலை விளக்குகளை
ஆங்காங்கே வைத்தனர்.


இழுத்திடும் போதினில்
ஒரு பக்கம் செல்லும்
ஒருமுக எழினியையும் (எழினி - திரை )
அரங்கின் பல பக்கங்களிலிருந்து
மேடைக்கு நடுவில்
பொருந்தும் வண்ணமாய்ப்
பொருமுக எழினியையும்
அவிழ்த்துத் தளர்த்துகையில்
மேலிருந்து கீழிறங்கி வரும்
கரந்துவரல் எழினியையும்
பாங்குறவே அமைத்தனர்.


ஓவிய வேலைப்பாடுகளுடன்
மேல் விதானக் கூரைதனை
ஒழுங்குறவே அமைத்தனர்.


புகழ்பெற்ற முத்துமாலை வகைகளாம்
தாமம் வளை மாலைகள்
அரங்கம் முழுதும் தொங்கவிட்டனர்.


புதுமையான அரிய வேலைப்பாடுகளுடன்
பொலிந்தே சிறந்தது நாட்டிய அரங்கது.

வல்லமை 30.04.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, May 1, 2012

நான் அறிந்த சிலம்பு - 17

புகார்க்காண்டம் – 03.அரங்கேற்று காதை

யாழ்ப் புலவன் – சென்ற பகுதியின் தொடர்ச்சி

சிலம்பின் வரிகள் இங்கே 82 – 94:

உச்சத்தில் நிற்கும் தாரம்;
அதன் தாக்கத்தால்
இறுதியில் நின்ற கைக்கிளை முதலாய்
அனைத்து இசைகளும்
நூல் முறைக்கேற்பத் தத்தமக்குப்
பொருந்திய முறையான
திரிபுகள் பெற்றுப் பொலிந்தன.

(உழை இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை
வலமுறை: கைக்கிளை, துத்தம், குரல்
இடமுறை: தாரம், விளரி, இளி)

வலமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி
கைக்கிளை படுமலைப் பாலையாய்
துத்தம் செவ்வழிப் பாலையாய்
குரல் அரும் பாலையாய்த் திரிந்தன.

இடமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி
தாரம் கோடிப் பாலையாய்
விளரி விளரிப் பாலையாய்
இளி மேற்செம் பாலையாய்த் திரிந்தன.

இங்ஙனம்
படுமலைப் பாலை தொடங்கி
மேற்செம் பாலை இறுதியாகத் தொடர்கையில்
நீண்டு கிடக்கும் சுரங்களின் வரிசையுடைத்து
யாழதன் இசை.

ஆதியும் அந்தமுமாய்
நின்றிருக்கும் நரம்புகளைப்
பொருத்தமுறக் கொண்டிருப்பது
யாழதன் இசை.

அரும்பாலை முதலான
இடமுறைப் பாலைகள்
மெலிந்து இசைக்கும்
யாழ் தன்னில்.

கோடிப்பாலை முதலான
வலமுறைப் பாலைகள்
மெலிந்து இசைக்கும்
குழல் தன்னில்.

வலிவு மெலிவு சமம்
இம்மூவகை ஓசைகளின்
நரம்படைவு கெடாத
பண்ணீர்மை குன்றாத
முறையான இயக்கம்
எழுத்து எழுத்தாய்
இசையச் செய்திடவல்ல
யாழ் ஆசிரியன் தானும்…

(வலிவு – மேல் / உச்சம்; தாரம்
மெலிவு – கீழ் /மந்தம்
சமம் – சமன் / மத்திமம்)

ஆடல் ஆசான் தன்னொடு
இசையோன் தன்னொடு
முத்தமிழ்ப் புலவன் தன்னொடு
தண்ணுமை ஆசிரியன் தன்னொடு
குழலோன் தன்னொடு
யாழ்ப் புலவன் தானும்
ஒருமித்திருந்தனன்
நாட்டிய அரங்கதனில்.

வல்லமை 23.04.12 இதழில் வெளிவந்தது.

Monday, April 23, 2012

நான் அறிந்த சிலம்பு - 16

புகார்க்காண்டம் - 03. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே..70-81


யாழ்ப் புலவன்


ஏழிசைதனை
இருவரிசைகளாக்கிச் செய்யப்பட்ட
'செம்முறைக் கேள்வி' என்னும்
சிறப்புப் பெயர் பெற்றது யாழ்.

செம்பாலை முதலிய
எழுபாலைப் பண்களையும்
அவற்றுக்கிடையே தோன்றும்
ஐந்து அந்தரப்பாலைப் பண்களையும்
அவற்றின் இணை நரம்புகளையும்
அணைத்து இசைத்துச் சென்றிடும் யாழ்.

இசைத்தமிழின் இலக்கணங்கள்
இம்மியளவும் குறைந்திடாது
வட்டப்பாலையென இசைத்து
அளவைகளின் அழகோடு
அரங்கேற்றுவது யாழ்.

வட்டப்பாலை முடியும் இடத்து
வன்மையாய் நிற்பது 'தாரம்'.
வட்டப்பாலை தொடங்கும் இடத்து
மென்மையாய் நிற்பது 'குரல்'.

'தாரம்' எனும் இசை அணங்குக்குரியவை
அலகுகள் இரண்டு.
'குரல்' எனும் இசை மகளுக்குரியவை
அலகுகள் நான்கு.
 
தாரம் அதன் அலகுகள்
இரண்டில் ஒன்றையும் (1)
குரல் அதன் அலகுகள்
நான்கில் இரண்டையும் (2)
கூட்டியே (1+2 = 3)
தார நரம்பில்
மூன்று (3) அலகுடைய
இனிய இசையை
உண்டாக்கியவிடத்துத்
தோன்றினள் 'கைக்கிளை ' எனும்
 இசை அணங்கு.

தாரம் எனும்
மெய்க்கிளை நரம்பு
கைக்கிளையாகி நின்றது இங்ஙனம்.

(தாரம் 1 அலகு + குரல் 2 அலகு = கைக்கிளை)

தாரம் என்னும் இசைத்தாய்
 பொலிவுடன் வலிவும் உடையவள்;
தன்னிடம் எஞ்சியிருந்த
ஓர் அலகை
அருகில் இருந்த
'விளரி' என்பாளுக்கு வழங்கினள்;
இவ்வழியே
'விளரி' தன் தன்மையது மாறித்
'துத்தம்' எனும் நரம்பாகிப் போனது.

அதுபோலவே
குரல் இளி உழை முதலான
ஏனைய இசை மகளிரும்
தத்தமக்கு ஏற்ற
கிளைஞர் இடங்களை எய்தினர்.

செம்முறை மாறிப்போய்
இங்ஙனம்
பதினாற் கோவையானது
 யாழ்ப் புலவன் இசைக்கும் போது.
 
உழை இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை
இவை கிளைத்த வழியில்
மென்மையாய் நான்கும்
சமனாய் ஏழும்
வன்மையாய் மூன்றும்
இவை பதினான்கு கோவை.

உழை நின்றது முதல் இடம்.
 கைக்கிளை நின்றது இறுதி இடம்.

இப்புதிய கோவைகளாலே தோன்றின
செம்பாலை முதலிய புதிய பண்கள்
புதியதொரு மரபினிலே
யாழிசை தன்னிலே.

(யாழ்ப் புலவன் தலைப்பில் முதல் தொகுப்பு இது..அடுத்த தொகுப்பு அடுத்த பகுதியில் தொடரும்.)

வல்லமை 16.04.12 இதழில் வெளிவந்தது.

Friday, April 20, 2012

நடுநிசிக்குப் பின் மூன்றாம் ஜாமத்தில்...

ஒரு ஹிந்திக் கவிதையின் தமிழாக்கம்

நான் பார்த்திருந்தேன்
என்னிலிருந்து மிகவும் தூரத்தில்
விண்மீன்களை.

நான் அவற்றைப் பார்த்த அந்தக்கணம்
அவற்றிலிருந்து எனக்கும்கூட
அதே தூரம்தான்.

கண்சிமிட்டிக் கடந்து போகும்
அவ்விண்மீன்கள்
கடந்து செல்லும்
காலமது போலவே.

நடு நிசிக்குப் பின்னான
மூன்றாம் ஜாமத்துப் பொழுது
இரவின் ஆழத்தினூடே
வேட்டையாடி விரட்டிச் செல்கிறது
விடியல்தனை.

முழுமையானதொரு தெளிவுக்கு
வரமுடியவில்லை என்னால்.

முதல் முறையாகத்தான்
இந்த வாழ்க்கையை
நான் வாழ்கிறேனா?
இல்லை,
மீண்டுமொருமுறை
திரும்பத்தான் வாழ்கிறேனா?
வாழ்ந்து கொண்டேயிருக்கையில்
சுவாசத்தின் அந்த முதல் கணத்தை
மறந்துதான் போனேனா?

மீனும்கூடத் தண்ணீரைக் குடித்திடுமா?
சூரியனும்கூட வெப்பமது உணர்ந்திடுமா?
ஒளியும்கூட இருளதனைக் கண்டிடுமா?
மழையும்கூட நனைந்துதான் போயிடுமா?
கனவுகளும்கூட நித்திரை குறித்த
வினாக்களைத்தான் வினவிடுமா
என்னைப் போலவே?

நான் நடந்தேன்
நீளமான மிகவும் நீளமான
நடை நடந்தேன்.

அப்போது நான் பார்த்தேன்.
நான் பார்த்த அந்தக்கணம்
எனக்கு மிக அருகில் விண்மீன்கள்.

இன்றைய பொழுது முழுவதும்
மழையது பொழிந்திட
உந்தன் முகத்திலிருந்து
கழுவப்பட்டுப்போயின வார்த்தைகள்.

அதீதம் ஏப்ரல் 09, 2012 இதழில் வெளிவந்தது...

ஹிந்திக் கவிதை

मैंने तारों को देखा बहुत दूर
जितना मैं उनसे
वे दिखे इस पल में
टिमटिमाते अतीत के पल
अँधेरे की असीमता में,
सुबह का पीछा करती रात में
यह तीसरा पहर

और मैं तय नहीं कर पाता
क्या मैं जी रहा हूँ जीवन पहली बार,
या इसे भूलकर जीते हुए दोहराए जा रहा हूँ
सांस के पहले ही पल को हमेशा !

क्या मछली भी पानी पीती होगी
या सूरज को भी लगती होगी गरमी
क्या रोशनी को भी कभी दिखता होगा अँधकार
क्या बारिश भी हमेशा भीग जाती होगी,
मेरी तरह क्या सपने भी करते होंगे सवाल नींद के बारे में

दूर दूर बहुत दूर चला आया मैं
जब मैंने देखा तारों को - देखा बहुत पास,
आज बारिश होती रही दिनभर
और शब्द धुलते रहे तुम्हारे चेहरे से


After Midnight

I saw the stars far off -
as far as I from them:
in this moment I saw them -
in moments of the twinkling past.
In the boundless depths of darkness,
these hours
hunt the morning through the night.

And I can't make up my mind:
am I living this life for the first time?
Or repeating it, forgetting as I live
the first moment of breath every time?

Does the fish too drink water?
Does the sun feel the heat?
Does the light see the dark?
Does the rain too get wet?
Do dreams ask questions about sleep as I do?

I walked a long, long way
and when I saw, I saw the stars close by.
Today it rained all day long and the words were washed away
from your face.


மூலம்: Theesra Pehar   Hindi poem by Mohan Rana
ஆங்கில மொழியாக்கம்: Lucy Rosensteinஆங்கிலக் கவிதையாக்கம்: After Midnight By Bernard O'Donoghue

Sunday, April 15, 2012

நான் அறிந்த சிலம்பு - 15

புகார்க்காண்டம் - 3. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே 56 -60

சிலம்பின் வரிகள் இங்கே 61 - 69

குழலாசிரியன்

இசைநூல் சொல்லிய முறையதன்படி
சித்திரப் புணர்ப்பு வஞ்சனைப்புணர்ப்பு
இவ்விரு கூறுகள் அறிந்தே இசைப்பவன்.
இசையாசிரியன் அவனுக்கு நிகராய்
அறிவுத்திறம் வாய்த்தவன்.

ஏற்றம் இறக்கம் இருவகையுடனே
வர்த்தனைகள் நால்வகையாலே
பண்ணின் மொத்த வகைகள்
மயக்கமின்றி இசைக்க வல்லோன்.
தம்முள் இழைந்திடும்
கூட்டிய இசையாம்
குரல் நரம்பும் இளி நரம்பும்
துல்லியமாய்க் கேட்டுணர்ந்து
தம் இசைநூல் அறிவாலே
இணை நரம்புகளின் வரவும் உணர்ந்து
இசைக்கவல்ல தொழில் வல்லாளன்.

சிறப்பாய்ப் பொருந்திய
பண்ணதனைச் சரியாய் அமைத்து
முழவின் இருகண் நெறிகளுடன்
தாள இயல்புகளின் திறமுமறிந்து
தண்ணுமையாளன் தன்னுடனும்
தக்கவாறு பொருந்தி இசைப்பவன்.

இசையின் இயல்பறிந்து
இசையாசிரியன் பாடுகையில்
இளிநரம்பை முதலாவதாக
யாழின்கண் நிரல்படவைத்து
பண்ணில் வரும் சுரங்கள்
குறைவுபடாது வளர்த்து
பண்ணுக்குரிய சுரங்கள் தவிர
வேற்றுச் சுரங்களின் கலப்பேதுமின்றி
அவற்றோடு ஒற்றியிருந்து,
இன்புற இயக்கி
இசையின் பண்ணிலக்கணத்துடன்
பொருந்திட வைத்துக்
குழலது இசைக்கும் திறமையாளன்.

வாரப்பாடல்களின் இசை
சரிவர நிரம்பச்செய்து
அளவுற அழகுற இசைப்பவன்.

இசைத்திடும் கணமதனில்
வாரப்படலின் இடைத்தோன்றும்
சொல் இசை பொருள் ஒழுங்குகள்
(வாய்ப்பாடல் இசைப்பது போலவே)
இசை எழுத்துருக் கொண்டாற்போல
இயைந்து இசைத்திட
சொற்களின் நீர்மைகள்
சற்றுக்கூடச் சிதைந்திடாமல்
எழுத்து எழுத்தாய்
வழுவின்றி இசைக்கும்
குழலோன் தன்னொடும்..

குறிப்பு::

வர்த்தனை- ஏழிசையைப் படிப்படியாக ஏற்றி இசைத்தல்
நால்வகை வர்த்தனை - ஆயப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை
ஏற்றம் இறக்கம் - ஆரோகணம் அவரோகணம்
பண்ணின் வகைகள் - நூற்று மூன்று வகைகள்
குரல் இளி - சட்சம் பஞ்சமம்
முழவின் இருகண் - இடக்கண், வலக்கண்
நிரல் - வரிசை,ஒப்பு
பண்ணிலக்கணம் - பதினோரு வகை


வல்லமை 09.04.12 இதழில் வெளிவந்தது.

குறளின் குரல் - 56

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 108. கயமை
குறள் எண்: 1080

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.


எற்றிற்கு உரியர் கயவர்? ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து
.

விளக்கம்:

தமக்குத் துன்பம் வந்ததையே காரணமாகக் காட்டி, தம்மை விற்பதற்குக்கூட விரைந்து செல்லும் தன்மையுடையவர் கயவர். இந்த ஒரு செயல் தகுதியைத் தவிர அவர்கள் வேறு எத்தன்மையராயிருப்பதற்கு உரியவர்? பிறரது பொருளையே எதிர்பார்த்து, அவர்களுக்கு அடிமையாக இருப்பார்களே தவிர, முயற்சி செய்யும் தன்மையுடையவர்கள் ஆக மாட்டார்கள்.

-----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 02. வான்சிறப்பு
குறள் எண்: 17


நெடுங்கலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலிதான்ல்கா தாகி விடின்.

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின்.


விளக்கம்:

கடலில் முகந்தெடுத்த நீரை மீண்டும் மழையாகப் பொழிந்து அக்கடலுக்கு உதவுகிறது மேகம். அங்ஙனம் மேகம் உதவாவிடில் கடல் வளம் குறையும். மணி, பவளங்கள் விளையாது போகும். கடல் வாழ் உயிரினங்களும் இல்லாது போகும்.

மனித சமுதாயத்திலிருந்து உயர்ந்து வெற்றியும் புகழும் கண்டவர்கள், மீண்டும் இறங்கி வந்து அச்சமுதாயத்திற்கு உதவினால்தான், சமுதாயமும் சிறக்கும்.
நீர்மை- நீரின் தன்மை, எளிமை, அழகு, ஒளி, நிலைமை, ஒப்புரவு
எழிலி - மேகம்
தடிந்து எழிலி - முகந்த நீரை மீண்டும் பொழியும் மேகம்

--------------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 99. சான்றாண்மை
குறள் எண்: 984


கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்து சால்பு.


கொல்லா நலத்தது, நோன்மை; பிறர்தீமை
சொல்லா நலத்து, சால்பு.


விளக்கம்:

பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பது தவம். பிறரின் குற்றங்குறைகளை, அவர் செய்த பழிச்செயலை வாய்விட்டுச் சொல்லாமல் இருப்பது நற்பண்பு.

நோன்மை - தவம், பொறுமை, வலிமை, பெருந்தன்மை
சால்பு - மேன்மை, நற்குணம், தன்மை, கல்வி

--------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 32. இன்னா செய்யாமை
குறள் எண்: 313


செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்.


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்,
உய்யா விழுமம் தரும்.


விளக்கம்:

நாம் பிறர்க்குத் தீங்கு செய்யாத போதும், அவர் நம்மீது கோபம் கொண்டு நமக்குத் தீங்கு செய்ய முற்படுவர். அவர் அங்ஙனம் முற்படுகையில், பதிலுக்கு நாமும் அவர்க்குத் தீங்கு செய்யும் எண்ணம் கொள்ளக் கூடாது. அத்தகைய பழிவாங்கும் என்ணம் நம் மனதில் தோன்றினால், அதனால் மீண்டும் மீண்டும் நேரக்கூடிய துன்பத்திலிருந்து தப்பிக்கும் வழி நமக்கு இல்லாமல் போகும்.

-------------------

பால்: பொருட்பால்
இயல்: அரணியல்
அதிகாரம்: 75. அரண்
குறள் எண்: 741


ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.


ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; அஞ்சித் தற்போற்றுபவர்க்கும் பொருள்.

விளக்கம்:

பகைவர் மீது போர் தொடுத்துச் செல்பவர்க்கும் அரண் பயன்படும் சிறப்பு வாய்ந்தது.  பகைவர்க்கு அஞ்சித் தம்மைத் தற்காத்துக் கொள்ள நினைப்பவர்க்கும் அது பயன்படும் சிறப்பு வாய்ந்தது.

-------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 120. தனிப்படர் மிகுதி
குறள் எண்: 1193


வீழுநர் வீழப் படுவார்க் கமையுமேவாழுந மென்னுஞ் செருக்கு.

வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே,
'வாழுநம்' என்னும் செருக்கு.


விளக்கம்:

தாம் விரும்பும் காதலரால் தாமும் விரும்பப்படுகிறோம் என்று உணரும் மகளிருக்கே,  இணைந்திருக்காமல் பிரிந்திருந்தால் கூட'தாம் இன்புற்று இனிதாய் வாழ்வோம்' என்ற செருக்கு இயல்பாய் அமைந்திருக்கும்.

தற்காலிகமாய்க் காதலர் பிரிந்திருந்தால் கூட, மீண்டும் சீக்கிரம் அவர் வருவார்;கூடி வாழ்வோம் என்ற உறுதியினால் உண்டாகும் செருக்காகும் அது.
வீழுநர் - ஆசைப்படுபவர், நீங்கிச் செல்பவர், வீழ்பவர்

Sunday, April 8, 2012

நான் அறிந்த சிலம்பு - 14

புகார்க்காண்டம் - 3. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே 37 - 55

முத்தமிழ்ப் புலவன்

அலையோசைமிகு
கடல்சூழ் புவிதனில்
தமிழ் நாடு வாழ்
மக்கள் அறிந்த தன்மையன்;
முத்தமிழ் முற்றும் அறிந்தவன் .

வேத்தியல் பொதுவியல் என்றிரு
நாட்டிய நாடக நூல்களின்
விதிக்கூறுகள் நன்கறிந்து
அந்நெறிகள் தவறிடாமல்
கடைப்பிடிப்பவன்.

இசைப்புலவன் வரித்து வைத்திட்ட
நீர்மைகளின் நியதிகளின்
போக்கறிந்தவன்.

இசைப்புலவன் தாளத்தில்
எய்துவைத்த அழகனைத்தும்
தம் கவியதனில்
அறிந்தது அறிந்த வண்னம்
மரபுகள் மீறாமல்
வடித்து வைக்கும்
கவிஞன் தானாவன்.

பகைவர்கள் பேசிவைத்த
வசைமொழிகளின் வகையறிந்து,
தாம் இயற்றும் கவியதனில்
அவ்வசைமொழிகள் வாராமல்
நாடகக்கவி செய்யவல்ல
நன்மைதரு நாவுடையன்.

நல்ல நூலை வழங்கவல்ல
நூலறிவு வாய்ந்தவன்
கவிப்புலவன் அவனொடும்...

தண்ணுமை ஆசிரியன்

(தண்ணுமை - மத்தளம்)

ஆடல் பாடல் இசை வகைகள்
மூவகைத் தமிழ்,
பண்வகைகள்,
இருவகைத்தாளங்கள்,
எழுவகைத்தூக்கு,
இவற்றில் உண்டாகும் குற்றங்கள்,
தமிழில் வழங்கும்
நால்வகைச் சொற்கள்,
நுண்ணிய தெளிவுடன்
கற்றுத் தேர்ந்தவன்.

இரட்டித்து இசைக்கும் இசையை
இசையாசிரியன் மேலும் இரட்டிப்பாக்க
இசை நெகிழாது நிரம்ப நிறைத்து
வகுத்துப் பிரித்து
இசையாசிரியன் இரட்டித்த
இசையதனை
அவன் பகுத்தவாறே
கூட்டிக் குறைத்துத்
தொகுக்கத் தெரிந்தவன்.

யாழுடன் குழலும்
வாய்ப்பாட்டும்
இழைந்து இசைக்க
கேட்பவர் செவிதனில்
இன்பம் சேர்க்க
விரல்களைச் சரிவர அசைத்து
மத்தளம் இசைக்க வல்லவன்.

பிற கருவிகளின்
குறைந்த ஒலியை நிரப்பியும்
மிகுத்த ஒலியை அடக்கியும்
ஈடுகள் செய்திடும் திறனுடையவன்.

மத்தள இசையை
வலிதாக ஆக்குமிடத்தும்
மெலிதாக அடக்குமிடத்தும்
பிற கருவிகளின் இசை
நலிந்திடா வண்ணம்
அதிகமாய் ஒலிக்காமல்
அளவோடு இசைப்பவன்.

இங்ஙனம்
இசையில் பிழை நேராதவாறு
தம் அருந்தொழிலை அழகுறச் செய்யும்
தண்ணுமை ஆசிரியன் அவனொடும்..

வல்லமை 02.04.12 இதழில் வெளிவந்தது..

குறளின் குரல் - 55

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 67. வினைத்திட்பம்
குறள் எண்: 669


துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை.


துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை.


விளக்கம்:
முடிவில் இன்பம் தரக்கூடிய எந்தவொரு செயலையும் செய்யும்போது, எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் பொருட்படுத்தாது, துணிவுடன் செயல்பட்டுச் செய்துமுடிக்க வேண்டும்.

------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 113. காதற் சிறப்புரைத்தல்
குறள் எண்: 1124


வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத
லதற்கன்ன னீங்கு மிடத்து.


வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து.


விளக்கம்:

ஆராய்ந்து அறிந்து அணிகலன்கள் அணிந்த இவள் என்னுடன் கூடியிருக்கும்போது, உடலுடன் ஒன்றிய உயிர் போல் ஆகிறாள்; அதனால் உயிராகிறாள். என்னைவிட்டு நீங்கும் போது, உடலைப் பிரிந்த உயிர் போலாகிறாள்; என் உயிரைக் கொல்லும் சாவாகிறாள்.

ஆயிழை - தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகலன்கள் அணிந்தவள், பெண், கன்னியாராசி

-----------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 48. வலியறிதல்
குறள் எண்: 476


நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க் கிறுதி யாகி விடும்.


நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும்.


விளக்கம்:

மிகவும் வலுவற்றது ஒரு மரத்தின் நுனிக்கொம்பு. மரம் ஏறுபவர் மேலும் மேலும் நுனிக்கொம்பைப் பிடித்துக்கொண்டே ஏற நினைத்தால், அது ஒடிந்து வீழ்ந்து அவர் உயிருக்கே கூட ஊறு விளைவிக்கக்கூடும்.
அது போலவே, தன் எல்லைகளை, வலிமைதனை உணர்ந்து செயலாற்றாதவருக்கும் ஊறுகள் நேர்ந்திடக் கூடும்.

-----------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 100. பண்புடைமை
குறள் எண்: 1000


பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.


பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்தற்று
.

விளக்கம்:

குறையுள்ள பாத்திரத்தில் ஊற்றிவைக்கப்பட்ட பால், கெட்டுப்போகும். பாலில் குற்றமில்லையென்றாலும், கலத்தின் குற்றத்தால் கெட்டுப்போகும்.
சிறந்த பண்புகள் இல்லாதவர் பெற்ற செல்வமும் அத்தன்மைத்தே. நற்பண்பில்லாதவர் செல்வம் யாருக்கும் பயன்படாமல் அழிந்து போகும். பயன் தரும் செல்வம் என்றாலும், அதை உடையவர் பண்பற்றவர் என்பதால் அச்செல்வத்தால் எந்தவொரு பயனுமில்லை.

----------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 105. நல்குரவு
குற்ள் எண்: 1043


தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக
நல்கு ரவென்னு நசை.


தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.


விளக்கம்:

நல்குரவு என்பது ஒருவனுக்குத் தொன்றுதொட்டு இருந்து வரும் குடிப்பெருமையைக் கெடுக்கும். அவனுடைய புகழையும்கூடக் கெடுத்து நிற்கும். குடிச்சிறப்புக்குப் பொருந்தாத இழிவும், அவச்சொல்லும் உண்டாக்கும்.
ஆசையுள்ள இடத்தே வறுமையும் இருக்கும் என்பது ஒரு வழக்கு. இந்தக்குறளில் நல்குரவு என்பது ஆசையையும் குறிக்கிறது. நசை உள்ள இடத்து வறுமை உள்ளது. எனவே நசை என்பதே நல்குரவு ஆகும்.

நல்குரவு- நுகர்வதற்கு ஏதுமின்றி வருந்தும் வறுமை
தொல்வரவு - தொன்றுதொட்டு வரும் குடிச்சிறப்பு
தோல் - நற்பேறின்மை, புகழ், சருமம், உடம்பின் மேலுள்ள தோல், கேடகம், துருத்தி, அழகு, சொல், யானை உடம்பு, தோல்வி, பக்கரை, மூங்கில்

--------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 114. நாணுத் துறவுரைத்தல்
குறள் எண்: 1131


காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி.


காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம
மடல் அல்லது இல்லை, வலி.


விளக்கம்:

காமத்தால் துன்புற்று, காதலை நிறைவேற்றிக்கொள்ளவும் வழியில்லாமல் காத்திருக்கும் இளைஞருக்கு மடலூர்வதைத் தவிர வலிமையான துணை வேறொன்றும் இல்லை.

மடலேறுதல் அல்லது மடலேற்றம் என்பது காதலில் தோல்வியுற்ற சங்கத் தலைவன் ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்களாய்த் தங்களை எண்ணிப் பாடிய ஆழ்வார்கள் சிலர் பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர்.

ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான். (விக்கிப்பீடியா)

குறளின் குரல் - 54

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 28. கூடாவொழுக்கம்
குறள் எண்: 276

நெஞ்சிற் றுவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.


நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.


விளக்கம்:

மனத்தால் பற்றுகளைத் துறந்து வாழ்வதே உண்மையான துறவாகும். மனதிலுள்ள பற்றுகளைத் துறக்காமல், துறந்துவிட்டது போல் வேடம் இட்டுக்கொண்டு, பிறரை ஏமாற்றி வாழ்பவர்களைப் போன்ற கொடியவர்கள் வேறு யாரும் இலர்.
-- ---------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 112. நலம்புனைந்துரைத்தல்
குறள் எண்: 1115


அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.


அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள்; நுசுப்பிற்கு
நல்ல படாஅ, பறை.


விளக்கம்:

தன் மென்மை அறியாதவளாய், அனிச்சப்பூவைக் காம்பு நீக்காமல் அணிந்து கொண்டுவிட்டாள் இவள்; இனி இவள் இடைக்கென மங்கல இசையைப் பறைகள் ஒலிக்காது போய்விடும்.

காம்புடன் சூடிய பூவின் எடை தாங்காமல் இடை ஒடியப் போகிறது என்பது குறிப்பு. ஒடிந்து வாடிய நிலையில் மங்கல வாத்தியம் ஒலித்திட வாய்ப்பில்லை.

கால் - பூவின் காம்பு, நாலில் ஒரு பகுதி,எழுத்தின் நெடிலைக் குறிக்கும் கால் எழுத்து, "வ" என்ற குறியுடைய பின்ன வகை எண், அடிப்பாகம், தூண், தேருருள், வண்டி, கோல், வழி, குறுந்தறி, நெசவுத்தறியின் மிதி, கைப்பிடி, மரக்கன்று, மகள், பிறப்பிடம், வாய்க்கால், பிரிவு, நடை, மரக்கால், பாதம், அளவு, கதிர், மழைக்கால், காற்று, செவ்வி, தடவை, காலன்
களைதல் - நீக்குதல், ஆடையணி கழற்றுதல், அரிசி கழுவுதல், கூட்டி முடித்தல், பிடுங்கி எறிதல்
பெய்தல் - அணிதல், பொழிதல், வார்த்தல், இடுதல், கொடுத்தல், அணிதல், கட்டுதல், தூவுதல்
நுசுப்பு - இடை, இடுப்பு, வயிறு
படா - ஓயாது ஒலிக்கும்
பறை - தோற்கருவி, தப்பு, சொல், வட்டம், விரும்பிய பொருள், மரக்கால், நூல்வகை, கூத்துவகை, குகை, பறவை இறகு, பறவை
-----------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 18. வெஃகாமை
குறள் எண்: 178


அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.


"அஃகாமை செல்வத்திற்கு யாது?"எனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப் பொருள்
.

விளக்கம்:

ஒருவருடைய செல்வம் சுருங்கிக் குறைந்து விடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பிறருக்கு உரிய பொருளை அபகரித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படாமல் இருத்தல் வேண்டும்.
அஃகாமை -  சுருங்காமை, குறையாமை, வற்றாமை, கழியாமை, குறுகாமை,
வெஃகாமை - பிறர் பொருளை விரும்பாமை, அவாவின்மை, வெறுப்பு
--------------------

பால்: பொருட்பால்
இயல்: அரணியல்
அதிகாரம்:  74. நாடு
குறள் எண்: 735

பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல்குறும்பு மில்லது நாடு.

பல் குழுவும்,  பாழ்செய்யும் உட்பகையும், வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு.

விளக்கம்:

சாதி, மத இன்னும் பிற அமைப்புகளால் வேறுபட்டுப் பிரிந்து  நிற்கும் பல குழுக்களும், 
கூட இருந்தே குழிபறிக்கும் உட்பகையும்,
அரசாள்பவர்களை அலைக்கழிக்கும் வண்ணம் கொலை போன்ற பாதகம்  செய்யும்  பொல்லாதவரின்  செயல்களால் விளையும் கேடுகளும்
இல்லாதிருப்பதே நாடாகும். 

---------------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 93. கள்ளுண்ணாமை
குறள் எண்: 925


கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.


கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய் அறியாமை கொளல்
.

விளக்கம்:

தன்னிடமுள்ள பொருளை விலையாகக் கொடுத்து, போதை தரும் பொருளை வாங்குவது, போதைப் பொருளை நுகர்ந்து தன்னிலை மயங்கும் தன்மையடைவது, தாம் என்ன செய்கிறோம், உலகில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதே அறியாத அறிவற்ற நிலையாகும்.

------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 57. வெருவந்த செய்யாமை
குறள் எண்: 564


இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்.


'இறை கடியன்' என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லைக் கெடும்
.

விளக்கம்:

'நம் அரசன் கொடியவன்; அவன் செலுத்தும் ஆட்சி கொடுமையானது;' என்று குடிமக்கள் மனம் நொந்து இன்னாத சொல் பேசும் நிலையைத் தருவிக்கும் எந்தவொரு அரசனின் / தலைவனின் ஆட்சியும், தனது காலமும் பெருமையும் குறைந்து விரைவில் அழியும்.

உறை - இருப்பிடம், பெருமை, நீளம், உயரம், பொருள், மருந்து, உணவு, வெண்கலம்,ஆயுதவுறை, நீர்த்துளி, மழை, காரம், இருப்பிடம், போர்வை, உறுப்பு, பாலிடுபிரை, வாழ்நாள், துன்பம், கிணற்றில் பொருந்த்தும் வளையம், பொன், பாம்பின் நச்சுப்பை
கடுகி - விரைவில், கடிதில்
ஒல்லை - விரைவு, வேகம், தொந்தரவு, பழைமை