Monday, January 28, 2013

நான் அறிந்த சிலம்பு - 33

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே:  89 - 90
 


சிலம்பின் வரிகள் இங்கே:  91 - 105

 
மண்டபத்தில் பலி இடம் - பகுதி 1

தமிழகத்து மருங்கில்
சேரரும் பாண்டியரும்
தம் ஆணைக்கு அடங்கிய நிலையில்,
மேற்கும் தெற்குமாகிய இருதிசைகளிலும்
தம்மை எதிர்த்தே போர்புரியும் மன்னர்
எவருமில்லாத காரணத்தால்
போர்த்தினவும் செருக்கும் நிறைந்தவன்
கரிகால் சோழன்.

அவன் தானும்
புண்ணிய திசையெனப் பெரியவர் போற்றிடும்
வடக்கு திசையது சென்று
அங்கேயாவது பகை பெற வேண்டி
போர்புரிய ஆசைகொண்டே
வாளுடன் குடையும் முரசும்
முன்னே சென்றிட
'எம் வலிமிக்க தோள்கள்
வடதிசையிலாவது பகைவரைப் பெறுக"
என்று தெய்வத்திடம் வழிபட்டேதான்
ஒரு நன்னாள் அதனில் புறப்பட்டனன்.


அங்கே நின்றிட்ட இமயமலை
அவனைத் தடுத்தேதான் நின்றிட்டது.
"குறைந்திடாத என் ஊக்கமதனுக்குத்
தடை விதித்திட்டதே இம்மலை"
எனச் சினந்தனன் கரிகாலன்.


இமையாத கண்கொண்ட தேவர் வாழும்
அவ்விமயமதன் உச்சி தன்னில்
பொறித்து வைத்தனன்
தம் புலிச்சின்னம் அதை.


இமயத்துக்கு அப்பாலும் சென்றிட எண்ணியவன்
எண்ணமதைக் கைவிட்டே
சோழநாடு திரும்பினன்.

(கரிகாலன் சாத்தன் எனும் தெய்வம் தனக்குத் தந்த செண்டு என்னும் படைக்கலத்தால் இமயத்தை அடித்துத் திரித்து அதனையே புலி போலப் பொருத்தினான் என்றொரு வழக்குண்டு.)

திரும்பிய வழியில் திறைகள் பலதந்து
அயல்மன்னர் பகைமன்னர் நட்புமன்னர்
பலரும் மகிழ்ந்தனர்.

கடலை அரணாக உடைய
பகையும் நட்பும் இல்லா அயல்மன்னன்
வச்சிரநாட்டு வேந்தன் தந்தது
முத்துப்பந்தல்;
வாட்போர் வல்லவன்
மகதநாட்டு மன்னன்
போர் புரிந்து தோற்றுத் தந்தது
பட்டி மண்டபம்.
மனம் உவந்த நல் நண்பனாகிய
அவந்தி நாட்டு வேந்தன் தந்தது
அழகிய மிகவும் உயர்ந்த
வேலைப்பாடுகளுடனான
தோரண வாயில்.

பொன்னாலும் மணியாலும்
புனையப்பட்டுப் பொலிந்தன
இப்பரிசில்கள் மூன்றும்.
 
 
வல்லமை 13.08.12 இதழில் வெளிவந்தது.

Wednesday, January 2, 2013

நான் அறிந்த சிலம்பு - 32

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 76 - 88
 
பூதத்திற்கு வீரர்கள் உயிர்ப்பலி கொடுத்தல்

மருவூர்ப்பாக்கத்தின் வீரமிகு மறவரும்
பட்டினப்பாக்கத்தின் படைக்கல வீரரும்
பெரிய பலிபீடமதன் முன்சென்று
"வீரமிக்க எம் மன்னர் தமக்கு
உற்ற துன்பம் ஒழித்திடுக"
என் வேண்டியே நின்றனர்.

"பூதத்துக்குத் தம்மைப்
பலிதானம் புரிந்தவர்
வலிமையின் எல்லையாக விளங்குவர்"
எனச் சூளுரைத்தனர்.

கல்வீசும் கவண்வீரர் சிலரும்
கருந்தோல் கவசம் அணிந்து
வேல்தாங்கிய வீரர் பலரும்
குழுமி நின்றனர் ஆங்கே.
ஆரவாரத்துடன் போர்க்களமதில்
வெற்றிகள் பல கண்ட அவர்
தத்தம் தோள்களைத் தட்டியே
ஆர்ப்பரித்து நின்றனர்.

கண்டவர் அஞ்சும் வண்ணம்
நுனி சிவந்த
சுடுகொள்ளி நிகர்த்த பார்வையுடன்,
"வெற்றி வேந்தன்
வெற்றியென்றும் கொள்க"
என்றே முழங்கித்
தமது கருந்தலையைத்
தம் கைகளாலேயே
நன்மை பொருந்த
வெட்டித்தான் வைத்தனர்
பலிபீடம்தன்னில்.

உயிர்ப்பலி கொண்ட அவ்வேளை
இடிமுழக்கமென ஒலித்தது
நாளங்காடிப் பூதத்தின் குரலது
நாற்றிசை மருங்கிலும்.

பலிபீடத்தில் வெட்டி வைக்கப்பட்ட
தலையற்ற உடல்கள்
வாயினால் உரைக்க இயலாமையால்
தம் தோளில் பூண்டிருந்த
மயிர்கள் நீக்கப்படாத முரசதை அறைந்து
"பலி தந்திட்டோம்; ஏற்றிடுக"
என்றே முழங்கிய ஆரவார ஒலிகளுடன்
முரசின் ஒலியும் சேர்ந்தே ஒலித்தது.
 

வல்லமை 06.08.12 இதழில் வெளிவந்தது.