Tuesday, November 27, 2012

நான் அறிந்த சிலம்பு - 30

புகார்க்காண்டம் - 05. இந்திர விழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 40 - 58
 

பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கத்தின்
காட்சிகள் இவை.
மிகவும் பெரிய இராஜ வீதிகள்
கொடிகளையுடைய தேர் ஓடும் வீதிகள்
கடைத்தெரு
பெருங்குடிப் பிறந்த
வாணிகர் வாழ் மாடமாளிகைகள் இருந்தன.

மறை ஓதும் அந்தணர்
அனைவராலும் விரும்பப்படும் உழவர்
ஆயுள் காக்கும் வேத மருத்துவர்
காலம் கணிக்கும் சோதிடர்

இங்ஙனம் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த
பல்வகைப்பட்டவரும்
தனித்தனியே வாழ் இடங்கள் இருந்தன.

முத்துக் கோர்ப்போர்
சங்கை அறுத்து வளையல்கள் செய்வோர்
இவர்கள் வாழ்கின்ற அகன்ற பெருவீதி

அரசனை வணங்கும் சூதர்
புகழ்ந்து பேசும் மாகதர்
வைதாளி ஆட்டமாடும் வேதிகர்
காலம் கணிக்கும் நாழிகைக் கணக்கர்
அழகாய்ப் புனைந்து ஆடி
அனைவரையும் மகிழ்விக்கும் சாந்திக் கூத்தர்


காமக் கிழத்தியராம் பரத்தையர்
கோலத்தார் கூத்தார்
அன்று அன்றே தம் பரிசுகள் பெறும் விலைமகளிர்
ஏவல் தொழில் செய்து வாழ்பவர்
ஆகியோர் வாழும் இடங்கள் இருந்தன.

தொழிற்பயிற்சி சிறப்புறப்பெற்ற
குயிலுவக் கருவியாளர்
படைக்கும் விழவுக்கும்
பல்வகை நிகழ்ச்சிக்கும் வாசிக்கும்
வாத்தியக் கலைஞர்
நகைச்சுவையுடன் பேசும் விதூடகர்
ஆகியோர் வாழும் இடங்கள் இருந்தன.

விரைந்து செல்லும்படி
குதிரைகளைச் செலுத்தும்
குதிரைவீரர்கள்
யானைப்பாகர்
நெடிய தேரைச் செலுத்தும்
தேர்ப்பாகர்
அஞ்சுதல் என்பதறியாத
வீரத்தில் சிறந்த
காலாட்படைத் தலைவர்

இவர்கள் அனைவரும்
அரசனவன் கோட்டையைச்
சூழ்ந்து இருக்கும்படி அமைந்த
வாழ் இடங்கள் இருந்தன.

இன்னும் இன்னும்
பலப்பல பெருமைகள் கொண்டு
சிறப்பு வாய்ந்த சான்றோரால்
புலவர் பெருமக்களால்
வாழ்த்திப் பாடற்குரிய
சிற்ப்புகளும் பெருமைகளும்
பெற்று விளங்கியது பட்டினப்பாக்கம்.
 

வல்லமை 23.07.12 இதழில் வெளிவந்தது.