Wednesday, October 27, 2010

மாற்றம்

மாற்றம் பலம்
நம்பிக்கை சேர்கையில்

மாற்றம் பலவீனம்
நம்பிக்கை சோர்கையில்

மாற்றம் மலைப்பு
வளரும் பிள்ளை பார்க்கையில்

மாற்றம் சலிப்பு
தோற்க நேர்கையில்

மாற்றம் பூரிப்பு
வெற்றிவாகை சூடுகையில்

மாற்றம் இயல்பு
மணவாழ்க்கை காண்கையில்

மாற்றம் கொடுமை
உறவொன்று மரிக்கையில்

மாற்றம்
செய்யாத தவறுக்கான
அனாவசிய தண்டனை
மொழியின் எழுத்துகள்
சிதையில் சிதைகையில்...

Sunday, October 24, 2010

தமிழ்மணம் மற்றும் அனைத்து வலைஞர்களுக்கும் ஓர் அவசர வேண்டுகோள் - Unicode மாற்றங்கள்...

ஒருங்குறியில் (Unicode)  ஏற்கனவே உள்ள கிரந்த /சமஸ்கிருத எழுத்துகள் அனைவரும் அறிந்தவையே. ஓரளவு பலராலும் உபயோகப்படுத்தக்கூடிய எழுத்துகளான ஜ, ஷ, ஸ போன்றவை தவிர இன்னும் நாம் பார்த்தே அறியாத சில  எழுத்துகளை  ஒருங்குறியில் சேர்க்கும் முயற்சி முழுமை பெற்று இன்னும் இரண்டு நாட்களில் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. சத்தமில்லாமல் ஓர் அநியாயம் நடக்கவிருக்கிறது...

திரு. சர்மாவின் இது குறித்த பரிந்துரை இந்தச் சுட்டியில் காணவும்....
http://www.filefactory.com/file/b3h848d/n/Extended_Tamil_proposal_-_Sharma_1_.pdf


இந்தச் சுட்டி சொடுக்கினால் இதற்கான ஆதாரங்கள் உங்களுக்குப் புரிய வரும்.


http://www.archive.org/stream/bhojacharitrama00sastgoog#page/n30/mode/1up

http://www.infitt.org/pressrelease/UTC_Gantha_Indic_Characters_draft1.pdf


http://www.infitt.org/pressrelease/UTC_Unicode_Grantha_Letters_SMP.pdf


இதைத் தடுத்து நிறுத்த நம்மால் ஆன முயற்சி..நம்முடைய

 எதிர்ப்பைத் தெரிவிப்பதுதான்...

மேலும் பல கிரந்த எழுத்துக்களைத் தமிழ் அட்டவணையில் இணைக்கக் கோரும் கோரிக்கையை,  ஏற்க மறுக்கக் கோரும் தமிழ் அறிஞர் / இந்திய அறிஞர் பட்டியலில் இடம் பெற கீழ்க்கண்ட முகவரிகளில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அஞ்சல் அனுப்பவும்.



unicore@unicode.org,


x3l2@unicode.org

 rick@unicode.org

ed@infitt.org

kaviarasan@yahoo.com

smaniam@pacific.net.sg



உடனடியாக அஞ்சல் அனுப்பவும்...

Friday, October 22, 2010

குறளின் குரல் - 13

பால்: பொருட்பால்

இயல்:அரசியல்
அதிகாரம்: 40. கல்வி
குறள் எண்: 397

யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.


யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால்; என் ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு?


விளக்கம்:

கற்றவனுக்கு எந்த நாடாகும் தன் நாடாகும். எந்த ஊரும் தன் ஊராகும். இந்த உண்மையை நன்றாக அறிந்திருந்தும், இறக்கும் வரையில் கல்வி கற்காமல் காலம் கழிப்பது ஏன்?
-----------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 24. புகழ்
குறள் எண்: 235

நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா தரிது.


நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்,
வித்தகர்க்கு அல்லால் அரிது.


விளக்கம்:

சிலர்தம் துன்பம் புகழைத் தரும் துன்பமாகும். (எ-டு): பொது வாழ்க்கைக்காகத் தம் சொந்த வாழ்க்கைக்கையைத் தியாகம் செய்பவர்களின் துன்பம் கூட அவர்க்குப் புகழையே தரும்.

இது போன்ற சிலர் இறந்தாலும் என்றென்றும் தம் புகழால் வாழ்ந்து வருவர்.

புகழால் வரும் துன்பம், இறந்தும் வாழும் அமரத்துவம்..இவையிரண்டும் சிறந்த அறிவுத்திறம் உடையவர்க்கு மட்டுமே வாய்க்குமன்றிப் பிறர்க்கு வாய்க்காது.
-------------------
 
பால்: காமத்துப்பால்

இயல்: களவியல்
அதிகாரம்: 114. நாணுத் துறவுரைத்தல்
குறள் எண்: 1140

யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.


யாம் கண்ணின் காண நகுபு, அறிவு இல்லார்;
யாம் பட்ட தாம் பாடாவாறு.

விளக்கம்:

காதலன் பிரிவால் வருந்தும் தலைவியை, அப்பிரிவைக் காணாத தோழியர் கேலி செய்து பேசுகின்றனர்.

வருந்துகின்ற தலைவி கூறுகின்றாள்: நான் பிரிவால் படுகின்ற துன்பத்தை இவர்கள் அனுபவிக்காததால்தான், அறிவில்லாத இவர் நான் கண்ணால் காணும்படி என்னை எள்ளி நகையாடுகின்றனர்.
-------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 24. புலால் மறுத்தல்
குறள் எண்: 256

தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்.


தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின், யாரும்
விலைபொருட்டால் ஊன் தருவார் இல்.


விளக்கம்:

உண்ணும் பொருட்டு உயிர்களை உலகத்தார் கொல்லாமல் இருப்பார்கள் எனில்,விலையின் பொருட்டு ஊனை விற்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

Sunday, October 17, 2010

நான் அறிந்த சிலம்பு - பகுதி 7

கண்ணகியின் குலமும் நலமும்


இப்பெருஞ்சிறப்புடைப்
புகார் நகர் தன்னில்
மழைக்கு நிகராய்
மலைமலையாய்க்
கொடைதரும் கைகள்கொண்ட
மாபெரு வணிகனாம்
மாநாய்கன் குலத்தில்
பொற்கொடியாய்ப்
பொலிந்து திகழ்ந்தாள்
பன்னிரு வயதுப் பெண்ணொருத்தி.

அவள்
தாமரை மலரமர்
திருமகளுக்கு
நிகரான புகழுடைய
பேரழகு வாய்ந்தவள்.

யாதொரு குற்றமில்லா
அருந்ததிக்கு நிகரான
கற்புத்திறத்தினள்..

பெருங்குணங்கள் மீதுள்ள
அளவற்ற காதலின்
திருவுருவானவள்..

ஆதலால்
அம்மாநகர மங்கையரால்
தொழுது போற்றப்படுபவள்.

அவள்தம் திருப்பெயர்தான்
கண்ணகி...

கோவலன் சிறப்பு


அப்புகார்தனில்
வாழ்ந்தனன்
மாசாத்துவான் என்னும்
வணிகன்.


பெரியதொரு நிலவுலகைத்
தனியொருவனாய் நின்றாளும்
சோழமன்னன்
தம் குடிகள் பலவற்றுள்
முதல் குடியாய் வைத்து மதிக்கும்
உயர்ந்தோங்கிய செல்வமுடையவன்.

அவன் தான்
அறநெறியில் ஈட்டிய
பெருஞ்செல்வம் அதனைப்
பலருக்கும் பகிர்ந்தளித்து உதவும்
சீர்குணமுடையவன்.


இருநிதிக் கிழவனென்றும்
சிறப்புப் பெயர்கொண்ட
மாசாத்துவானின் திருமகன்
பதினாறு வயதினன்.

அத்திருமகனும்
பூமியே சிறுத்துக் குறுகும்படிச்
சிறந்த புகழ் வாய்ந்தவன்.

மதி போன்ற முகமுடையோன்;
பாடலின் இனிமையும்
தோற்றுப் போகும்படியான
குரல்மொழிவளம் மிக்கவன்...

அவனைக் கண்டதும்
தம்முள் கிளர்ந்த
காதலால் கன்னிகையர்
'இவன் நாம் வணங்கத்தக்க முருகவேள்'
என்று காதற்குறிப்பைத் தம்
தோழிக்கு உணர்த்தச் செய்யும்
திறம் கொண்டவன்.

அவன்தம் திருப்பெயர்தான்
கோவலன்....

சிலம்பின் வரிகள் இங்கே (23-39)

Sunday, October 10, 2010

குறளின் குரல் - 12

அதிகாரம்: 76. பொருள் செயல்வகை
குறள் எண்: 757

அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ
செல்வச் செவிலியா லுண்டு.



அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும்
செல்வச் செவிலியால், உண்டு.

விளக்கம்:

அன்புத்தாய் பெற்ற, உயிர்களின் துன்பத்தைப் போக்க வல்ல அருள் என்னும் குழந்தை, பொருட்செல்வம் என்னும் செவிலித்தாயால்
வளர்க்கப்படுவது சிறப்பு.

-------------

அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 630

இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்த
னொன்னார் விழையுஞ் சிறப்பு.


இன்னாமை இன்பம் எனக் கொளின், ஆகும், தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.

விளக்கம்:

ஒரு செயலுக்காய் முயற்சிக்கும் போது துன்பங்கள் வரும். தன் செயலே முக்கியமெனக் கருதுபவன் அத்துன்பத்தையும் இன்பம் என்று கொள்வான்.
அந்த மனப்பக்குவம் இருப்பதால் பகைவரும் விரும்பும் சிறப்பை அடைவான்.

-----------------

அதிகாரம்: 07. மக்கட்பேறு
குறள் எண்: 68

தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.

தம்மின், தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது.

விளக்கம்:

தம்மைவிடத் தம் மக்களைச் சிறந்த அறிவுடையவராக வளர்ப்பது, இச்சமுதாய வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அத்தகைய சிறப்பு,
பெற்றோருக்கு மட்டுமல்லாமல், இந்தப் பெரிய உலகிலுள்ள உயிர்கட்கெல்லாம் இனிமை தரும்.

------------

அதிகாரம்: 78. படைச்செருக்கு

குறள் எண்: 776

விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து.


விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து.

விளக்கம்:

சிறந்த வீரன் ஒருவன் தன் வாழ்நாட்களை நினைவுகூர்ந்து கணக்கிட்டுப் பார்க்கையில், தன் மார்பில் விழுப்புண் படாத நாட்கள் எல்லாம்
பயனற்று வீணாய்க் கழித்த நாட்கள் என்று எண்ணிக் கொள்வான்.

--------------

அதிகாரம்: 05. இல்வாழ்க்கை
குறள் எண்: 44

பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியஞ்ச லெஞ்ஞான்று மில்.


பழி அஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின், வாழ்க்கை
வழி அஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

விளக்கம்:

உலகில் பழி வந்து நம்மைச் சேர்வதற்கான சூழல்களே பலவாகும். அத்தகைய பழிக்குப் பயந்து அது சேராமல் பார்த்துக் கொண்டு,
உள்ளதைப் பிறருடன் பகுத்துண்டு வாழ்ந்தால், வாழ்க்கையில் ஒரு போதும் குறைகள் நேராதிருக்கும்..

----------------------------

Wednesday, October 6, 2010

ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களின் கவனத்திற்கு...

CBSE பாடத்திட்டம் எப்போதும் எந்தப் பாடத்தையும் சற்றே அதிகமான விளக்கங்களுடன் வழங்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது, மாற்றியைமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் விதம் மிக நேர்த்தியாக உள்ளது. பாடத்தின் எந்தவொரு வரியிலிருந்தும் கேள்விகள் வரக்க்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பாடத்தின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ள செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடத்தையும் வரிவிடாமல் படிப்பது எளிதான செயலல்ல.

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் என் மகளுக்கு உதவுவதற்காக, சமூக அறிவியல், மற்றும் அறிவியல் பாடத்தின் ஒவ்வொரு வரியிலிருந்தும் கூடுமான வரையில் எதையும் விட்டுவிடாமல் கேள்விகள் தயாரித்து வருகிறேன்.

அதை வலையில் பதிந்து வைக்கத் தோன்றியது. புதிய வலைப்பு ஒன்றில் பதிந்துள்ளேன்.

http://malar-studyroom.blogspot.com/

இரண்டாம் பருவத்திற்கான அறிவியல், சமூக அறிவியல் பாடக் கேள்விகள் இதில் இடம்பெறும்.

Monday, October 4, 2010

வானம் மட்டுமா வசப்படும்?!

மயிலைப் பார்த்து
'வான்கோழியே'
என்று விளிக்குமாம்
வான்கோழி.

வானவில்லைப் பார்த்து
'மயக்கும் மஞ்சள்''
என்று வர்ணிக்குமாம்
காமாலை பூத்த கண்கள்.

மணவீட்டில் மணமகனை
'உயிரில்லாப் பிணம்'
என்று கூறுமாம்
பொறாமையில் குமுறுகின்ற மனம்...

மனித மனங்களை
விமர்சிக்கும் பரிகசிக்கும்
அன்றாடம் ஆயிரம்
மனித நாக்குகள்...

வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு பாதையிலும்
வேகத்தடைகள்...

விமர்சனத்தை விழாவாக்கிப்
பரிகாசத்தைப் பரிசாக்கிக்
குதூகலத்துடன் கொண்டாடு...

தடைகளைப் படிகளாக்கி
வெற்றியோடு முன்னேறு....

வானம் என்ன
பிரபஞ்சமே வசப்படும்!