Friday, October 22, 2010

குறளின் குரல் - 13

பால்: பொருட்பால்

இயல்:அரசியல்
அதிகாரம்: 40. கல்வி
குறள் எண்: 397

யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.


யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால்; என் ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு?


விளக்கம்:

கற்றவனுக்கு எந்த நாடாகும் தன் நாடாகும். எந்த ஊரும் தன் ஊராகும். இந்த உண்மையை நன்றாக அறிந்திருந்தும், இறக்கும் வரையில் கல்வி கற்காமல் காலம் கழிப்பது ஏன்?
-----------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 24. புகழ்
குறள் எண்: 235

நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா தரிது.


நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்,
வித்தகர்க்கு அல்லால் அரிது.


விளக்கம்:

சிலர்தம் துன்பம் புகழைத் தரும் துன்பமாகும். (எ-டு): பொது வாழ்க்கைக்காகத் தம் சொந்த வாழ்க்கைக்கையைத் தியாகம் செய்பவர்களின் துன்பம் கூட அவர்க்குப் புகழையே தரும்.

இது போன்ற சிலர் இறந்தாலும் என்றென்றும் தம் புகழால் வாழ்ந்து வருவர்.

புகழால் வரும் துன்பம், இறந்தும் வாழும் அமரத்துவம்..இவையிரண்டும் சிறந்த அறிவுத்திறம் உடையவர்க்கு மட்டுமே வாய்க்குமன்றிப் பிறர்க்கு வாய்க்காது.
-------------------
 
பால்: காமத்துப்பால்

இயல்: களவியல்
அதிகாரம்: 114. நாணுத் துறவுரைத்தல்
குறள் எண்: 1140

யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.


யாம் கண்ணின் காண நகுபு, அறிவு இல்லார்;
யாம் பட்ட தாம் பாடாவாறு.

விளக்கம்:

காதலன் பிரிவால் வருந்தும் தலைவியை, அப்பிரிவைக் காணாத தோழியர் கேலி செய்து பேசுகின்றனர்.

வருந்துகின்ற தலைவி கூறுகின்றாள்: நான் பிரிவால் படுகின்ற துன்பத்தை இவர்கள் அனுபவிக்காததால்தான், அறிவில்லாத இவர் நான் கண்ணால் காணும்படி என்னை எள்ளி நகையாடுகின்றனர்.
-------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 24. புலால் மறுத்தல்
குறள் எண்: 256

தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்.


தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின், யாரும்
விலைபொருட்டால் ஊன் தருவார் இல்.


விளக்கம்:

உண்ணும் பொருட்டு உயிர்களை உலகத்தார் கொல்லாமல் இருப்பார்கள் எனில்,விலையின் பொருட்டு ஊனை விற்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

2 comments:

ராமலக்ஷ்மி said...

வலிமையான கருத்துக்களுக்கு அழகான எளிமையான விளக்கங்கள்! நன்றி பாசமலர். தொடருங்கள்.

கோபிநாத் said...

\\
ராமலக்ஷ்மி said...
வலிமையான கருத்துக்களுக்கு அழகான எளிமையான விளக்கங்கள்! நன்றி பாசமலர். தொடருங்கள்.
\\

ரீப்பிட்டிக்கிறேன் ;)