Saturday, August 4, 2012

நான் அறிந்த சிலம்பு - 25

புகார்க்காண்டம் - 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 47 - 57

கணவனைப் பிரிந்து வாழும் கண்ணகியின் துயரநிலை


கணவனைப் பிரிந்த கண்ணகி
இன்புற்றிருக்க வேண்டிய
வேனில் பருவமதனில்
துன்புற்றிருந்தனள்.


அழகிய சிறிய சிவந்த பாதங்களில்
சிலம்புகள் அணியாதிருந்தனள்.


மென் துகிலுடுத்த அல்குல் இடத்து
அணியது சேர்த்திடும்
மேகலை அணியாதிருந்தனள்.


மார்புகளில் அழகுசேர்க்கும் வண்ணம்
குங்குமக் கலவை பூசாதிருந்தனள்.
 

மங்கல அணியது தவிர
வேறொரு அழகணியும் அணியாதிருந்தனள்.


வளைவான குண்டலங்கள் துறந்திட்ட
அவள் காதுகள் தாமும்
வளைந்து தாழ்ந்திருந்தன.


மதிபோன்ற ஒளிமுகத்தில்
 கலவியால் அரும்பிடும்
சிறுவியர்வைத்துளிகள் இல்லாதிருந்தன.


சிவந்த கயல்போன்ற நெடுவிழிகள்
மையது தீட்டுவதைத்தான் மறந்திட்டன.


பவளம் போலும் சிவந்த
ஒளிபொருந்திய நெற்றியது
 திலகமது இழந்திட்டது.


முத்தின் ஒளியது பொருந்திய
முத்தான அவள் புன்னகையைக்
கோவலன் தான் இழந்திட்டான்.


மைபோன்ற கருமையான
அவள் கூந்தலது
நெய் பூச மறந்திட்டது.


செயலற்ற நெஞ்சத்துடன்
கவலையுற்ற மனத்துடன்
கையறு நிலையில்
கலங்கி நின்றனள் கண்ணகி.

18.06.12 வல்லமை இதழில் வெளிவந்தது.