Thursday, February 7, 2013

நான் அறிந்த சிலம்பு - 34

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 106 -117
 
மண்டபத்தில் பலி இடம் - பகுதி 2

பொன்மணி வேலைகளில் சிறந்திருந்தாலும்
பொதுவாகப் பொன்வேலை நுண்ணியமாகச் செய்திடும்
சிறப்புமிக்க கம்மியரால் செய்யப்பட்டன அல்ல
அவ்வழகுப் பரிசில்கள்.

வச்சிரம், மகதம், அவந்தி
இந்நாட்டு அரசர்கள்
முன்னொரு காலத்தில் செய்திட்ட
உதவியதன் கைம்மாற்றாய்
'மயன்' எனும் தெய்வதச்சன்
தாம் செய்து அவ்வரசர்க்கு வழங்கியவை.

இங்ஙனம்
வெவ்வேறு நாடுகளில் வென்ற
திறைப்பொருட்களை ஒன்றாய்ச் சேர்த்து
உயர்ந்தோர் போற்றும் வண்ணம்
புகார்நகர் தன்னில் அமைக்கப்பட்ட
அழகிய மணடபம் தானது
'சித்திர மண்டபம்' எனும் பெயர் பெற்றது.
 
ஐவகை மன்றங்களில் அரும்பலி இடுதல் - பகுதி 1

பிற பகுதிகளிலிருந்து
புகார் நகருக்கு வந்த புதிய மனிதர்கள்
தம் பொருட்கள் பொதிந்த மூட்டைகளில்
பெயர், அளவு, எடை இவற்றைக் குறித்த
குறியீட்டு எழுத்தினை இலச்சினையிட்டு
ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களைக்
குவியலாய்க் குவித்து வைத்திருந்தனர்
பண்டகசாலைகள் தம்மில்.
காவல் புரியவென்று எவருமில்லை
அப்பண்டகசாலைகளின் வாசல்களில்.
வலுவான தாழ்ப்பாள்களும்
நீக்கப்பெற்றிருந்தன கதவுகளில்.
பொருளுக்கு உரிமையானவரும் கூட
உடனில்லை காவலில்.

 
இருப்பினும் அவற்றைக் களவாட
எவரேனும் வரின் அவர்தம் தண்டனை என்ன?
களவாட நினைப்பவர் கழுத்து முறியுமளவு
கனமான பொதிகளை அவர் தலையில் ஏற்றி
ஊர் வலம் வரச் செய்து,
அப்பண்டத்தை அவரிடம் தராமல்
திரும்பப் பெற்றுக் கொள்வர்.

மனதாலே களவை நினைத்தாலே போதும்
நினைப்போரை தண்டனை
நடுநடுங்கச் செய்யும் அப்பண்டகசாலை
வெள்ளிமன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.
 
வல்லமை 20.08.12 இதழில் வெளிவந்தது.