Wednesday, December 14, 2011

தாம்பத்யம் தகிடுதத்தம்

பல சமுதாயப் ப்ரச்னைகள் நமக்குச் சவாலாக இருப்பது கால காலமாகத் தொடர்ந்து வருவதுதான். அரசியல், ஊழல், மதம், இனம், பற்றாக்குறை, கல்வி, வேலைவாய்ப்பின்மை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தனி ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று பிறழ்ந்து காணப்படும் நிலையும் நாம் நன்கறிவோம். ஆனால், சமீப காலமாக இது போன்ற பிறழ்வுகள்  பல தம்பதிகள் வாழ்வில் கண்கூடாகப் பார்த்து வருகிறேம்.

நம் சொந்தம், நட்பு வட்டம், தெரிந்தவர்கள் வாயிலாகக் கேட்பது என்பது சமீப காலமாக தம்பதியருக்குள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதாகும்.
 
  • பிள்ளை பெத்துக்க வீட்டுக்கு வந்தா...அப்புறம் புருஷன் வீட்டுக்குப் போகவே மாட்டேங்கிறா..
  • என்னை என் புருசன் கூட அனுப்பிச்ச உயிரோடவே பாக்க முடியாது.உங்களுக்கு நான் உயிரோட இருக்கணும்னா என்னை அங்கே போகச் சொல்லாதீங்க..
  • என் காலில் நிக்க என்னால் முடியும்...எனக்கு அந்த ஆள் தயவு தேவையில்லை.
  • என்னை அடிக்கக் கை ஓங்கிட்டு வர்ற அந்த ஆளுகூட நா குப்பை கொட்ட மாட்டேன்..உங்களுக்கு நான் இங்க இருப்பது கஷ்டமா இருந்தாச் சொல்லுங்க..நான் ஹாஸ்டலுக்குப் போறேன்..
  • அவளுக்கு என்ன அவ்ள திமிரு..புள்ளய வேணா வச்சுக்கட்டும்...வேணுங்கிறப்போ போய் நா பாத்துக்கிறேன்...
  • என்னை விட அதிகம சம்பாதிக்கிற திமிரு அவளுக்கு...அவள இங்க கூட்டிட்டு வந்தீங்கன்னா நா என் பிரண்ட் ரூமுக்கு போய்ருவேன்..

ப்ரச்னைகள் யாருக்குத்தான் இல்லை? அதை எதிர்கொள்கிற மனப்பான்மைதான் இன்றைய இளைய தலைமுறையினரிடம் குறைந்து கொண்டே வருவது போல் தோன்றுகிறது.


உண்மையான, தீவிரமான காரணங்களால் சகிப்புத்தன்மை இல்லாமல் பாதுகாப்பு கருதிப் பிரிதல் என்பது அவசியமான ஒன்றுதான்.

ஆனால் இன்று அன்றாட நிகழ்வுகளைக் கூடப் ப்ரச்னை என்று சொல்லி, என் பொம்மையை நீ உடைச்சிட்ட....உன் பொம்மையை நான் உடைக்காம விடமாட்டேன்..என்று குழந்தைத்தனமாக மனமுதிர்ச்சியில்லாமல் பிரிந்து வாழும் இவர்கள்....செய்வதறியாது திகைத்து நிற்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள்....

எல்லா வகையிலும் எதார்த்தவாதிகள், So what? என்று பேசும் தன்மை, பெற்றோரின் அளவுக்கதிகமான செல்லம் அல்லது கண்டிப்பு, நீயா நானா என்கிற அகங்காரம், தனியாக வாழும் பலரை முன்மாதிரியாகக் கொள்ளுதல் என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதில் காதல் திருமணம் புரிந்தவர்கள்..பல நாள் பேசிப் புரிந்து கொண்டு பின் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற பெயர் வேறு...மாமியார் மாமனார் இல்லாத் தனிக்குடித்தனம் செய்பவர்களுக்கும் ப்ரச்னைதான்...வரதட்சணைத் தொல்லை போன்ற காரணங்கள் கூட இல்லை..


திருமண வாழ்வுக்கு ஆதாரமான, அடித்தளமான சகிப்புத்தன்மை, புரிந்து கொள்ளுதல், நட்பு உணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான காதல் உணர்வு இல்லாமல் போனது....இப்படிக் காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்...


சமீபத்துத் தமிழகப் பயணத்தின் போது திருமணமான தம்பதிகளை வாழ்த்தலாம் என்று அவர்களைப் பற்றி விசாரித்த போது,  விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்,  தனியாகப் பிரிந்து வாழ்கிறார்கள் என்று கேள்விப்பட அதிர்ச்சியாக இருந்தது...நண்பர்கள், தெரிந்தவர்கள் யார் வழியில் பார்த்தாலும் இந்த ரீதியில் ஏதாவது ஒரு கதை...

பயமாய் இருக்கிறது!!

குறளின் குரல்- 39

பால்: பொருட்பால்

இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 72. அவையறிதல்

குறள் எண்: 720

அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த
ரலார்முற் கோட்டி கொளல்.


அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
அல்லார் முன் கோட்டி கொளல்.


விளக்கம்:

நல்ல சான்றோர்கள், அறிவுத்திறனில் தம் இனத்தவர் அல்லாத பிறர் கூடிய அவையின் முன், ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசுதல் எத்தகையது என்றால், கழிவுநீர் தேங்கியுள்ள தூய்மையற்ற முற்றத்தில் அமிழ்தினைக் கொண்டு வந்து கொட்டியதற்குச் சமமாகும்.

அவையில் உள்ளவர்களின் அறிவுத்திறனை அறிந்துகொண்டு, அவர்க்கு ஏற்பல்லாதவற்றைப் பேசாதிருத்தல் நலம்.

அங்கணம் - முற்றம், சேறு, சாக்கடை, இரு தூண் நடுவிடம், மதகு

உக்க - உகுத்த, சிந்திய, சிதறிய

கணத்தார் - கூட்டத்தார், ஊர்க்காரிய நிர்வாகிகள்

கோட்டி - பேச்சு, குழு, கூட்டம், சபை, துன்பம், பகடி, பைத்தியம், நிந்தை, அழகு, கோபுர வாயில், மனை வாயில், விகடக் கூத்து, ஒருவரோடு கூடியிருத்தல்
-------------------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 27. தவம்
குறள் எண்: 261

உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு.


உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.

விளக்கம்:

பொதுவாக, உடலுக்கு ஏற்படக்கூடிய இடர்களைத் தாங்கும் சக்தி, உண்ணா நோன்பு, காலநிலையின் மாறுபாட்டைத் தாங்கும் சக்தி, செயற்கரிய வித்தைகள் செய்யும், செய்விக்கும் சக்தி..முதலானவற்றைத் தவம் என்று போற்றுவது வழக்கம்.

ஆனால், திருவள்ளுவரின் தவம் குறித்த விளக்கம் முற்றிலும் மாறுபடுகிறது.

ஒருவன் தனக்கு வரக்கூடிய துன்பங்களை, தன் முயற்சியின் திறத்தால் தாங்கி எதிர்நோக்கக்கூடிய வல்லமை, பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாத தன்மை, தனக்குத் துன்பம் செய்த உயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல் - இவைதான் தவத்திற்கு உரு / வடிவம் / இலக்கணம் ஆகும் என்று விளக்குகிறார்.

நோய் - துன்பம், வருத்தம், பிணி, குற்றம், அச்சம், நோவு

நோன்றல் - பொறுத்தல், தள்ளல், நிலை நிறுத்தல், துரத்தல், தவம் செய்தல்

உறுகண்- துன்பம், வறுமை, நோய்

உரு - வடிவம், உருவம், உடல், தெய்வத்திருமேனி, நிரம், அச்சம், பலமுறை சொல்லுகை, தோணி, எலுமிச்சை, இசைப்பாடல், உருவம் உள்ளது.
 
-----------------
 
பால்: பொருட்பால்

இயல்: படையியல்
அதிகாரம்: 78. படைச்செருக்கு
குறள் எண்: 774

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.


கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும்.


விளக்கம்:

போர்க்களத்தில், தன் கையில் இருந்த வேலைத் தன்னைத் தாக்க வந்த யானையின் மீது எறிந்து தாக்கிய வீரன், மேலும் அடுத்த தாக்குதல் பொருட்டு எறிவதற்காய் வேல் ஒன்றைத் தேடி நிற்க, தன் மேல் வீசப்பட்டுத் தன் மார்பில் பதிந்து கிடக்கும் வேலைக் கண்டு, தக்க சமயத்தில் தக்க கருவி கிடைத்துவிட்டதென்று எண்ணி, அதைப் பறித்துக் கையில் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியடைவான். மாபெரும் வீரனின் சிறப்பு இத்தகையது.

----------------
பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 81. பழைமை
குறள் எண்: 801

பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.


'பழைமை எனப்படுவது யாது?' எனின், யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

விளக்கம்:

'பழைமை' என்று சொல்லப்படுவது எது என்று கேட்டால், நீண்ட காலமாகப் பழகி வரும் நண்பர், நட்பின் உரிமை காரணமாக, ஏதாவது பிழையாகச் செய்து விட்டாலும் கூட, அதனைப் புரிந்து பொறுத்துக்கொண்டு, அந்த நட்பைக் கீழ்ப்படுத்தாமல் கைவிடாமல், சிதைக்காமல் தக்கவைத்துக்கொள்வதாகும்.

கிழமை - உரிமை, உறவு, நட்பு, ஆறாம் வேற்றுமைப்பொருல், குணம், முதுமை, வார நாள்

-------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 62. ஆள்வினையுடைமை
குறள் எண்: 611

அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.


அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

விளக்கம்:

எந்த ஒரு காரியத்தையும் 'இது செய்யக்கூடியதன்று; செய்ய இயலாது' என்று தம்மைத் தாமே தாழ்த்திக் கொண்டு மனம் தளராமல், சோர்ந்து விடாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஏன் என்றால் முயற்சியுடைமை அதற்கேற்ற பெருமையை தப்பாமல் தரும். எப்படிப்பட்ட செயலையும் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி உண்டாக்கும்.

அருமை - கடினம், இன்மை, எளிதில் கிடைக்காதது, பெருமை

அசாவாமை - தளராமை
------------------
 
பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 597


சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.


சிதைவிடத்து ஒல்கார், உரவோர்; புதை அம்பின்
பட்டுப் பாடு ஊன்றும் களிறு.


விளக்கம்:

தன் உடல் முழுவதும் துளைத்துப் புதையுண்ட அம்புகளால் தைக்கப்பட்டு வலியால் துன்பப்படும்போதும், யானை தன் மன உறுதியில் தளராது எதிர்த்து நின்று தன் பெருமையை நிலைநிறுத்தும். அது போல் தாம் எடுத்துக்கொண்ட முயற்சிக்குக் கேடு வந்த போதும் ஊக்கமுடையவர் தளராது நின்று, தமது பெருமையை நிலைநாட்டி நிற்பர்.

ஒல்கார் - தளராதவர்

உரவோர் - ஊக்கமுடையவர், வலிமையுடையவர், மூத்தோர்

களிறு - யானை

குறளின் குரல்- 38

பால்: அறத்துப்பால்

இயல்: ஊழ் இயல்
அதிகாரம்: 36. ஊழ்
குரள் எண்: 376

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா, தம.


பரியினும் ஆகாவாம், பால் அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம.

விளக்கம்:

ஒருவன் தனக்கு உரிமையில்லாதவற்றை எவ்வளவுதான் போற்றிப் பாதுகாத்தாலும், ஊழ் / விதி என்பதன் காரணமாக, அப்பொருள் அவனிடம் தங்காமல் போய்விடும். தனக்கு உரிமையானவற்றை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும், ஊழ் / விதி காரணமாய் அவை உரியவரை நீங்கிப் போகாது.
---------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 46. சிற்றினம் சேராமை
குறள் எண்: 454

மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு.


மனத்து உளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்து உளதாகும் அறிவு.

விளக்கம்:

ஒருவருடைய அறிவு, வெளிப்படையாகப் பார்க்கும் போது, அவரது மனதில் உள்ளது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அவர் சேர்ந்த இனத்தைப் பொறுத்தே அவரது அறிவாற்றல் அமையும்.

அறிவாற்றல் அவரவர் மனதில் இருந்துதான் வெளிப்படுகிறது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். என்றாலும், அவர் சென்று சேரும் இனத்தின் குணநலத்தால், அவர் அறிவாற்றல் கூடவோ குறையவோ செய்கிறது என்பது எதார்த்தம். அவர் இனத்தைப் பொறுத்தே அவர் அறிவு அவர்க்கு நன்மையும், தீமையும் தரும்.

மனதில் உள்ள அறிவு, இப்படித்தான் இனம் சார்ந்த அறிவாகிறது.

இப்படித்தான், இயல்பாக நல்லறிவு இல்லாதவராய் இருந்தாலும், அவர் சேர்ந்த இனத்தின் நற்குணங்களால் அறிவாற்றல் பெற்று நன்மையடைவர்.

இன்னும் பலர் இயல்பாக நல்லறிவு பெற்றிருந்தாலும், அவர் சேர்ந்த இனத்தின் தீய தன்மையால் அறிவிழந்து மதிமயங்கி அவதிப்படுவர்.

நன்மைகள் அடைய நல்லவருடன் சேருங்கள்.

தீமைகள் அடையத் தீயவருடன் சேருங்கள்.

உங்கள் அறிவாற்றல் குறைந்திருந்தாலும், நல்லவர்களின் சேர்க்கையால் அது மிகுதியாகப் பெருகும்.

உங்கள் அறிவின் சிறப்புக்கூட, தீயவரின் சேர்க்கையால் ஒளி குன்றிப்போகும்.
---------------------------

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 94. சூது
குறள் எண்: 931

வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.


வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கியற்று.

விளக்கம்:

மீன் பிடிப்பதற்காகத் தூண்டிலில் வைக்கப்பட்ட இரை அளவில் மிகச் சிறியது, என்றாலும், அதனால் கவரப்பட்ட மீன்கள் தாமாகவே சென்று அந்த இரையை உண்ண எண்ண, தூண்டிலில் மாட்டிக்கொண்டு, தாமாகவே தம் முடிவைத் தேடிக் கொள்ளும்.

சூதாட்டத்தின் மூலம் சிறிய அளவில் பொருள் வந்தவுடனேயே, மேன்மேலும் அதைப் பெருக்க எண்ணி, அச்சூதாட்டத்திலேயே மீண்டும் மீண்டும் தன் உடைமைகளைப் பணயம் வைத்து ஆடுவார்கள். முடிவில் முற்றும் இழந்து அவதிப்படுவார்கள்.

சூதாட்ட வெற்றி, மீனுக்காகத் தூண்டிலின் இரும்பு முள்ளில் வைக்கப்பட்ட இரை போன்றது. ஆபத்து அறியாமல் இரைக்காகச் சென்று மாட்டிக்கொள்ளும் மீனைப் போல, பொருட்கள் அனைத்தையும் இழக்கப்போகும் ஆபத்து அறியாமல், மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று தவறாக எண்ணி உள்ள பொருள் அனைத்தையும் இழந்து நிற்பர்.

அதனால் வெற்றியே பெற்றாலும் கூடச் சூதாட்டத்தை விரும்பாமல் தவிர்க்க வேண்டும்.

பொன் - இரும்பு, தங்கம், மேருமலை, செல்வம், பொலிவு, பசலை, ஒளி, அழகு, ஏற்றம், திருமகள், வியாழன், சூரியன்
------------------------
 
பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 79. நட்பு
குறள் எண்: 781

செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.


செயற்கு அரிய யா உள, நட்பின்? அது போல்
வினைக்கு அரிய யா உள, காப்பு?

விளக்கம்:

நல்லதொரு நட்பினை உருவாக்கிக் கொள்தல் போன்ற செயற்கரிய சிறந்த செயல் உலகில் யாது உள்ளது? எந்த ஒரு செயலுமில்லை.

எந்த ஒரு காரியத்துக்கும் பாதுகாப்பாகவும், துணையாகவும் நிற்கக்கூடிய அத்தகைய நட்பைப் போன்ற சிறந்ததொரு, கிடைத்தற்கு அரியதொரு பாதுகாப்பு இவ்வுலகில் யாது உள்ளது? ஏதுமில்லை.

நல்லதொரு நட்பு வாய்ப்பதென்பது எளிதன்று. எல்லோர்க்கும் வாய்க்கக்கூடியதும் அன்று. அப்படி ஒரு நட்பு வாய்க்கையில், அது போல நம் காரியங்களுக்குப் பாதுகாப்பாக, துணையாக வரக்கூடியது, கைகொடுத்து உதவக்கூடியது வேறு ஏதுமில்லை.
-------------------------
 
பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 93. கள்ளுண்ணாமை
குறள் எண்: 929

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.


களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ் நீர்க்
குளித்தானைத் தீத் துரீஇயற்று.


விளக்கம்:

மது அருந்திக் களித்து மகிழ்ந்து பழகிப்போய்விட்ட ஒருவனை, 'அது தீயது' என்று பல்வேறு காரணங்களை எடுத்துக்காட்டித் தெளிவித்தல், குளத்தின் நீருக்கு உள்ளே போய் மூழ்கிக் குளிக்கின்றவனைத் தீப்பந்தம் ஏந்தித் தேடுவதற்கு ஒப்பானது.

குளத்தின் நீர்ப்பரப்பில் நின்று குளிப்பவனைத் தீப்பந்தம் பிடித்துத் தேடுதல் எளிது. ஆனால், குளத்திற்குள் மூழ்கிக் குளிப்பவனைத் தேடுகிறவனும் மூழ்கித் தேட வேண்டும். மூழ்கியவுடனேயே ஒளியிழந்து பயனற்றுப்போகும் தீப்பந்தம்.

நீருக்கு அடியில் தீப்பந்தத்தின் ஒளிமிகு சுடரும் செயலிழந்து போகும்;

போதைக்கு அடிமையானவன் முன் எடுத்துவைக்கப்படும் நியாயமான காரணங்களும் வலுவிழந்து போகும்.

மதுவின் பழக்கம் அளவுடன் இருக்கும் போது உரிய காரணங்கள் எடுத்துக்கூறித் திருத்துவது சற்றே எளிதான செயலாக இருக்கக் கூடும். ஆனால், அப்பழக்கத்தில் அளவுக்கு அதிகமாய் மூழ்கி, அந்த மகிழ்ச்சியில் / போதையில் திளைத்தவனுக்குக் கூறப்படும் அறிவுரையும், எடுத்துக்காட்டும் காரணங்களும் பயனற்றவை. மதுப்பழக்கம் அளவுக்கு அதிகமாகப் பழகிவிட்டால் திருத்துதல் மிகவும் கடினமாகும்.
---------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 622

வெள்ளத் தனைய யிடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும்.


வெள்ளத்து அனைய இடும்பை, அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

விளக்கம்:

வெள்ளம் போல் பெருகி வரும் துன்பம் அனைத்தும், அறிவுடைய ஒருவன் அத்துன்பங்களைக் கடத்தல் எளிது என்று மனதில் உறுதியுடன் நினைத்த உடனேயே அழிந்து போகும்.

அறிவுடையவன் மனதில் உறுதி உடையவன் ஆகிறான்; உறுதி கொண்டவுடன் நன்கு செயலாற்றும் தன்மை பெற்றுவிடுகிறான்; அத்தகையவனுக்குத் துன்பங்கள் ஒரு பொருட்டல்ல.

Sunday, December 11, 2011

சொல் மயக்கம்

வான வில்லின்
வண்ணங்கள் 
வகைபிரியும்
ஏதோவோர் இழை

நீலக்கடலும்
நீலவானும்
நீளச் சந்திக்கும் கோட்டின்
ஏதோவொரு புள்ளி

முதல் அலையை
முன்னேறும் அலை
முத்தமிட்டுச் செல்லும்
ஏதோவொரு துளி

உனக்குள்ளும்
எனக்குள்ளும்
வெடித்துச் சிதறும்
காதல் பூகம்பத்தின்
ஏதோவொரு துகள்

அனுபவங்களால் மட்டுமே
நுகரப்படுவதாய்...
புலன்களுகெல்லாம்
புலப்படாத புதிராய்..

சொல்லத் தெரியவில்லை;
சொல்லித் தெரிவதில்லை.

முயன்று தோற்று
முடங்கி மடங்கி
மயங்கிப் போகின்றன
சொற்கள்.

குறளின் குரல் - 37

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 59. ஒற்றாடல்
குறள் எண்: 588

ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
ரொற்றினா லொற்றிக் கொளல்.


ஒற்று ஒற்றித் தந்த பொருளையும், மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி, கொளல்.

விளக்கம்:

ஓர் ஒற்றன் உளவறிந்து வந்து செய்தி கூறினாலும், அந்தச் செய்தியை இன்னுமோர் ஒற்றன் மூலம் அறியச் செய்து இரண்டு உளவையும் ஒப்பிட்டுப் பார்த்து, உண்மை அறிந்து கொள்ள வேண்டும்.

ஓர் ஒற்றன் செயலை இன்னுமோர் ஒற்றன் மூலம் கண்காணிக்கும் திறமை இருந்தால், உண்மைச் செய்திகளை உறுதிப் படுத்திக்கொள்ள முடியும். அது மட்டுமில்லாமல், தவறுகள் மற்றும் நம்பிக்கைத் துரோகங்கள் செய்யாமல் இருக்கும் பண்பை ஒற்றர்களிடம் உருவாக்கவும் முடியும்.

-----------------
பால்: பொருட்பால்

இயல்: குடியியல்
அதிகாரம்: 101. நன்றியில் செல்வம்
குறள் எண்: 1004


எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா
னச்சப் படாஅ தவன்.


எச்சம் என்று என் எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாதவன்.

விளக்கம்:

பிறர்க்கு உதவி செய்து வாழாதவனை எவரும் விரும்பமாட்டார்கள். இப்படி ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பின் எஞ்சி நிற்கும் என்று எதனை எண்ணுவானோ?

உதவி செய்து வாழும் போதுதான் அவன் பெற்ற செல்வம் பயனுள்ளதாகிறது. பிறர்க்கு உதவாமல் வாழும் போது அவனை எவரும் விரும்பும் வாய்ப்பில்லை; பிறர் விரும்பாத போது, ஒருவன் தான் இறந்த பின் எஞ்சி நிற்கும் என்று கருதக்கூடிய பொருளோ, புகழோ ஏதுமில்லை.

நன்றியில் செல்வம் - நன்றி இல் செல்வம் - ஈட்டியவருக்கும், பிறருக்கும் பயன்படாத செல்வம்

--------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 61. மடியின்மை
குறள் எண்: 604


குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
மாண்ட வுஞற்றி லவர்க்கு.


குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இல் அவர்க்கு.

விளக்கம்:

சோம்பலில் திளைத்து மூழ்குவதால், ஒருவர் வாழ்க்கையில் முயற்சி செய்யும் தன்மை குன்றிப் போகும். இதனால் சிறப்பு / மாட்சிமை தரக்கூடிய உழைப்பினையும் ஒருவர் கைவிட நேரிடும். இந்த நிலையில், அவர் குடியும் அழிந்து போகும்; குற்றங்களும் பெருகிப்போகும்.

மடி - சோம்பல்

மாண்ட - மாட்சிமை பொருந்திய, இறந்த

உஞற்று - முயற்சி, ஊக்கம், வழக்கு, தூண்டு, தவறு, முயற்சி செய்
 
-----------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 21. தீவினையச்சம்
குறள் எண்: 208

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று.


தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று.

விளக்கம்:

தீய செயல்களைச் செய்தவர் அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க இயலாது. ஒருவன் மேற்கொண்ட தீய செயல்களால், அவனுக்கு நேரவிருக்கும் துன்பங்களில் இருந்து அவன் தப்பிக்கவே இயலாது.

இது எத்தகையது என்றால், ஒருவன் தன் நிழல் அவன் பாதங்களின் கீழேயே எப்போதும் தங்கும் தன்மையுடையது. அப்படி அவன் பாதங்களின் கீழ் உறையும் நிழல், சமயம் வரும்போதெல்லாம் தவறாமல் வெளிப்பட்டே தீரும்.

நிழல் பாதத்தின் அடியே மறையாது தங்கியிருப்பது போல, தீய செயலால் வரும் துன்பங்களும் விலகாது கூடவே வரும். சமயம் வரும்போது வெளிப்படும் நிழல் போல, தக்க சமயத்தில் தவிர்க்க முடியாத துன்பங்கள் தவறாமல் வந்து சேரும்.

வீயாது - தவறாது, விலகாது, விடாது
--------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 92

அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.


அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்:

மனம் மகிழ்ந்து ஒருவருக்குப் பொருளை ஈவது நல்லதா? முகம் மலர்ந்து ஒருவரிடம் இன்சொல் பேசுவது நல்லதா?

பிறர்க்கு ஈவது என்பது தம்மிடம் இருக்கும் பொருளின் அளவைப் பொறுத்தே அமையக் கூடிய ஒரு சிறப்பாகும். பொருளின் இருப்பைப் பொறுத்து

ஈயும் தன்மை மற்றும் அளவு, சூழலுக்கேற்றாற் போல மாறக் கூடும்.

ஆனால், இன்சொல் என்பது எப்போதும் ஒருவரிடம் இயல்பாய் இருக்க வேண்டிய தன்மையாகும். இது எந்த நிலையிலும் மாறாத இயல்புடன் விளங்கும். எப்போதும் குன்றி விடாமல், இன்சொல் பேசும் தன்மை நிறைந்து இருக்கும்படி பார்த்துக் கொள்வது சிறப்பு.

எனவே இன்சொல் பேசுவது, ஈவதைக் காட்டிலும் சிறந்ததாகும்.
---------------

பால்: இன்பத்துப்பால்

இயல்: கற்பியல்
அதிகாரம்: 126. நிறையழிதல்
குறள் எண்: 1256

செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர்.


செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ
எற்று என்னை உற்ற துயர்?


விளக்கம்:

என் மனதுக்கு நெருக்கமானவர் என்னை பிரிந்து சென்ற பின்னும், அவர் பின் செல்ல விரும்புகிறது என் நெஞ்சம். என்னை வாட்டுகிறது இந்தப் பிரிவுத் துயர். இந்தத் துயரம் எத்தன்மையது? அந்தோ! மிகக் கொடியது. இரங்கத்தக்கது.

நிறையழிதல் - மனதின் இரகசியம் மறைத்து அலை பாயும் மனதை ஒரு நிலைப்படுத்துவது நிறை; பிரிவாற்றாமையால் மனதை நிலைப்படுத்தமுடியாமல், வெளிப்படையாகப் பேசுவது நிறையழிதல்.

எற்று - எத்தன்மையது

அரோ - அசைச்சொல்

சேறல் - செல்லுதல்

செற்று - நெருக்கம்; செற்றவர் - நெருங்கியவர்

குறளின் குரல் - 36

பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 28. கூடாவொழுக்கம்

குறள் எண்: 271


வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும்.


வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

விளக்கம்:

வஞ்சம் நிறைந்த மனம் உடையவர் உண்மையான நல்லொழுக்கத்துடன் செயல்பட இயலாது. அவர் பொய்யொழுக்கம் புறத்தே காண்பித்து ஒழுக்கசீலரைப் போல வேடம் தரிப்பர். அத்தகைய பொய்யர்களைப் பார்த்து அவர் உடம்பில் தங்கியிருக்கும் காற்று, நீர், தீ, நிலம், ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் தம்முள் சிரித்து நிற்கும்.
-----------------------

பால்: இன்பத்துப்பால்

இயல்: களவியல்
அதிகாரம்: 111. புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண்: 1101

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்தொடி கண்ணே யுள.


கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

விளக்கம்:

காண்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது, தீண்டுவது என்று வகைப்படுத்தப்பட்ட ஐம்புலன்களும் ஒளிபொருந்திய வளையல்கள் அணிந்துள்ள இப்பெண்ணிடம் ஒருங்கே நிறைந்துள்ளன. காதல் இன்பத்தின் முழுமை நிலை இங்கு விளக்கப்படுகிறது.

------------------

பால்: அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 03. நீத்தார் பெருமை
குறள் எண்: 25

ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா
னிந்திரனே சாலுங் கரி.


ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி.

விளக்கம்:

(1) ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவனது பெருமை மிகவும் சிறந்தது. ஐம்புலன்களையும் அடக்கித் தன் தவ வலிமையால், அகன்ற வானின் கண் உறைபவர்க்குத் தலைவனாகிய இந்திரனே இதற்கு மிகச் சிறந்த சான்றாவான்.

ஒருவன் தன் தவத்தின் வலிமையால் இந்திர பதவி அடைவான் என்பது வழிவழியாக வரும் நம்பிக்கையாகும்.

அகல் விசும்புளார் கோமான் - அகன்ற வானத்தின் கண் உறைகின்றவர்க்கு அரசன் / தலைவன்

(2) ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவனது பெருமை மிகவும் சிறந்தது. ஐம்புலன்களையும் அடக்கித் தன் தவ வலிமையால், அகன்ற வானம் போன்று, பரந்து விரிந்த பெருமை வாய்ந்த இந்திரனே இதற்கு மிகச் சிறந்த சான்றாவான்.

அகல் விசும்புளார் கோமான் - அகன்ற வானம் போன்று பரந்து விரிந்த புகழ் உள்ளவன்; பெருமையில் சிறந்து விளங்குபவன்

தந்நலம் நீத்தாரின் பெருமைக்கு மிகவும் முக்கியமானது, ஐம்புலன்களை அடக்கியாளும் அவர்களது ஆற்றலே என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

விசும்பு - வானம், தேவலோகம், மேகம், செருக்கு, வீம்பு, திசை

கோமான் - பெருமையிற் சிறந்தவன், அரசன், மூத்தோன், குரு

கரி - சான்று, சாட்சியம், நஞ்சு, மிளகு, அடுப்புக் கரி, யானை, நிலக்கரி, கரிந்தது, பெண்கழுதை, மரவைரம், விருந்தினன், பயிர் தீய்தல்

------------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 79

புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு.


புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு?


விளக்கம்:

உடம்பின் அகத்தே உறையும் உறுப்பான அன்பு என்பது சரிவர இயங்காத போது, புற உறுப்புகள் கை, கால் முதலியன சரிவர இயங்கிப் பயன் ஒன்றும் இல்லை. அகத்து உறுப்பான அன்பு புற உறுப்புகளை இயக்கினால்தான் பயன் பெற முடியும்.

யாக்கை - உடம்பு, கட்டுகை
----------------
 
பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 39. இறைமாட்சி
குறள் எண்: 389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு.


செவி கைப்பச் சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.


விளக்கம்:

அமைச்சர்கள், மக்கள் மற்றும் கடிந்து பேசும் பெரியோர் - இவர்களது சொற்கள் செவிகளையே புண்படுத்தக்கூடியவை என்றாலும், அத்தகைய சொற்கள் தனக்கு ஏற்றவை அல்ல என்றாலும், அவற்றைப் பொறுமையோடு கேட்கும் பண்புடைய வேந்தனின் வெண்கொற்றக்குடையின் / ஆட்சியின் கீழ் இந்த உலகமே நீண்ட நாள் தங்கி மகிழும் வாய்ப்பினைப் பெறும்.

கவிகை - குடை, வளைவு, நன்மை தீமை, தியாகம்

Sunday, December 4, 2011

THE DIRTY PICTURE

எண்பதுகளில் சில்க் புகழின் உச்சகட்டத்தில் இருந்து, பின் 1996 ல்

இறந்த போது ...ஊடக வளர்ச்சி தற்காலம் போல இல்லாத நிலையில், கொலையா தற்கொலையா..தாடிக்காரர் காரணமா என்ற கேள்விகள் எழ விடைகள் கிடைக்கவில்லை. நடிகை என்றாலே தற்கொலை முடிவு என்பதுதானே என்று போய்விட்டது இதுவும் அப்போது.


கவர்ச்சி நடிகை என்றாலும் பெண்களையும் அக்காலத்தில் கவர்ந்தவர் சில்க் என்பதால் என் தோழிகள் முதல் எங்களின் அம்மாக்கள் வரை அப்போது அவர் மரணம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.

இன்று இந்தப் படம் அவர் வாழ்க்கை வரலாறு அல்ல என்றே கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும், இப்படத்தைப் பார்க்கும்போது இவை இவை காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று சில விடைகள் கிடைக்கின்றன.

தோல்வியைத் தாங்க இயலாமை, போட்டி நடிகையின் வரவு, யாருமற்ற தனிமை, கடன் தொல்லை ..பல காரணங்களைத் திரைப்படம் வாயிலாகப் பார்க்கும்போது அவர் மரணம் தற்கொலைதான், கொலையாக இருந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

வித்யா பாலன் தோற்றத்தில் சில்க் பக்கம் கூட நெருங்க முடியவில்லை..என்ற போதும் நடிப்பில் தன் முழுத்திறமையும் பதித்துள்ளார். 'என்னுடன் பேசுவதற்கு யாருமில்லையா' என்று கதறுகிற போதும், பத்திரிகையாளர் வீட்டின் வெளியே ஆட்டம் போடும் போதும், நசுருதீன் ஷாவின் குதர்க்கமான பேச்சுக்குப் பதிலாகத்  தன்வலியைத் தைரியமாக வெளிப்படுத்தும் மன உறுதியிலும், 'நான் சில்க்' என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் போதும்......மிக நேர்த்தியான, அழுத்தமான முகபாவங்கள்..

மறைந்த சில்க் வாழ்க்கையின் பல தெளிவான கோணங்கள்....சன்னல் வழியாகக் குதித்துத் தப்பிக்கும் துணிச்சல் முதல்...தோல்வியால் துவண்டு கோழைத்தனமாக முடிவெடுக்கும் வரை... மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு சிறப்புப் பாராட்டுகள்...

இந்தப் படம் தந்த பாதிப்பையும் சில்க் என்ற பெண்ணின் பாத்திரத்தையும் மறப்பதற்குச் சில நாட்கள் ஆகும்.

குறளின் குரல் - 35

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 54. பொச்சாவாமை / கடமையை மறக்கும் தன்மை
குறள் எண்: 531

இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.


இறந்த வெகுளியின் தீதே - சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.


விளக்கம்:

அளவுக்கு மீறிய கோபம் மிகவும் தீதான ஒன்றாகும். அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்து, தன்னிலை மறந்து, தன் கடமைகள் மறந்து செயலற்று இருப்பது கொடுஞ்சினத்தைக் காட்டிலும் தீயதாகும்.

----------------

பால்: பொருட்பால்

இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 67. வினைத் திட்பம்
குறள் எண்: 669


துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை.


துன்பம் வரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை.


விளக்கம்:

ஒரு செயலை மேற்கொள்ளும் போது துன்பங்கள் அதிகமாக வந்தாலும், அதனால் மனம் தளர்ந்து விடக்கூடாது. துணிவுடன் செயல்பட்டுக் கடினமாக உழைத்து முயன்றால், முடிவில் இன்பம் என்பது தவறாமல் வந்து சேரும்.
----------------------
பால்: பொருட்பால்

இயல்: அரணியல்
அதிகாரம்: 75. அரண்
குறள் எண்: 744

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண்.


சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.


விளக்கம்:

காவல் செய்ய வேண்டிய வாயில் முதலான இடங்கள் சிறிய பரப்பளவில் அமைந்து, சிறிதளவு முயற்சியுடன் காக்கக்கூடியதாய் இருக்க வேண்டும். உட்பகுதியோ பரப்பளவில் அகன்று இருக்க வேண்டும். நெருங்கி வந்து பகைவர் முற்றுகையிட அஞ்சும் வண்ணம் பகைவரின் ஊக்கத்தை அழித்து, அவர்களின் மலைப்பைப் பெருக்கும் வண்ணம் பரந்ததாய் அமைய வேண்டும். அத்தகைய அரணே சிறந்ததாகும்.
----------------------------

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 06. வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 53

இல்லதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
னில்லவள் மாணாக் கடை.


இல்லது என், இல்லவள் மாண்பு ஆனால்? உள்ளது என்,
இல்லவள் மாணாக் கடை?


விளக்கம்:

இல்லறத்தில் இல்லாளின் பண்புகள் மிகவும் முக்கியமானவை. அவள் மாண்பு மிக்கவளாய் இருந்தால் இல்லாதது என்று எதுவும் இல்லை; அவளிடம் மாட்சிமைப் பண்புகள் இல்லையெனில் உள்ளது என்று எதுவும் இல்லை.

------------------

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 74

அன்பீனு மார்வ முடைமை யதுவீனும்

நண்பென்னு நாடாச் சிறப்பு.


அன்பு ஈனும் ஆர்வம் உடைமை; அது ஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.


விளக்கம்:

குடும்பம், உறவு மற்றும் பிறரிடம் கொள்ளும் அன்பு, அனைவரையும் விரும்பத்தக்க பண்பை உள்ளத்தில் உருவாக்கும்; அதுவே அனைவரையும் நட்பாக்கிக் கொள்ளும் பெருஞ்சிறப்பையும் உண்டாக்கும்.

----------------

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 14. ஒழுக்கமுடைமை
குறள் எண்: 132

பரிந்தோம்பிக் காக்க வொழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினு மஃதே துணை.


பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித்
தேரினும் அஃதே துணை.

விளக்கம்:

எத்தகைய துன்பம் வந்து அதனால் வருந்த நேரிட்டாலும், அத்தனை துன்பத்தையும் பொறுத்துக்கொண்டு எப்பாடு பட்டாவது ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும். எந்தெந்த வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும், எப்போதும் மிகவும் சிறந்த துணையாக வருவது ஒழுக்கம் என்பதால் அதனை எப்பாடு பட்டாவது போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும்.

குறளின் குரல் - 34

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 598

உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து
வள்ளிய மென்னுஞ் செருக்கு.


உள்ளம் இலாதவர் எய்தார் 'உலகத்து
வள்ளியம்' என்னும் செருக்கு.

விளக்கம்:

ஊக்கம் இல்லாதவர்கள், 'பிறர்க்கு உதவும் வள்ளல் தன்மை உடையவர் யாம்' என்னும் பெருமையான மன உணர்வைப் பெறுதல் இயலாது.

ஊக்கம் இல்லாத காரணத்தால், பொருள் ஈட்டும் தன்மை குன்றியே காணப்படுவார்கள். அத்தகையவர்கள் பொருள் ஈட்டி, தானும் அனுபவித்து, அடுத்தவர்க்கும் கொடுத்து உதவுவது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.

உள்ளம் - ஊக்கம், முயற்சி, மனம், உள்ளக்கருத்து, ஞானம், ஆன்மா

வள்ளியம் - ஈகைக்குணம், ஊதுகுழல், மரக்கலம், மெழுகு, மிளகு
------------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 45. பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 442

உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

உற்ற நோய் நீக்கி, உறாஅமை முன் காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

விளக்கம்:

ஒருவர்க்கு நேர்ந்துள்ள துன்பத்தைப் போக்கி, இனிமேல் வரக்கூடிய துன்பங்களையும் முன்கூட்டியே அறிந்துகொண்டு, அத்துன்பங்கள் நேராமல் காக்க வல்ல தன்மையுடைய பெரியவர்களைப் போற்றி, அவர்களை நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.

உறாஅமை - இசைநிறையளபெடை
-----------------


பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 37. அவாவறுத்தல்
குறள் எண்: 368


அவாவிலார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்.


அவா இலார்க்கு இல்லாகும் துன்பம்; அஃது உண்டேல்,
தவாஅது மேன்மேல் வரும்.


விளக்கம்:

ஆசைகள் இல்லாதவர்களுக்குத் துன்பம் உண்டாவதில்லை; ஆசைகள் உள்ளவர்க்கு, இடைவிடாது, முடிவில்லாது துன்பம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

---------------

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 07. மக்கட்பேறு
குறள் எண்: 68


தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.


தம்மின், தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது.


விளக்கம்:

தம்மை விடத் தம் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்குவது, அப்பிள்ளைகளின் பெற்றோருக்கு மட்டுமேயன்றி, உலகில் உள்ள அனைவருக்கும் இனிமை தரக்கூடிய ஒன்றாகும்.

-------------------

பால்: இன்பத்துப்பால்

இயல்: கற்பியல்
அதிகாரம்: 125. நெஞ்சொடு கிளத்தல்
குறள் எண்: 1247

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு.


காமம் விடு, ஒன்றோ; நாண் விடு - நல் நெஞ்சே
யானோ பொறேன் இவ்விரண்டு.

விளக்கம்:

என் நல்ல நெஞ்சமே! காமம், நாணம் இவற்றுள் ஒன்றை விட்டுவிடு..ஒன்று காமத்தை விட்டுவிடு..அல்லது அதை வெளிப்படையாக என் காதலரிடம் கூற முடியாமல் தடுக்கும் நாணத்தை விட்டுவிடு..இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை..எனவே இரண்டையும் ஒரே சமயத்தில் பொறுத்துக்கொள்ளும் திறம் எனக்கில்லை.
------------------------

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 95. மருந்து
குறள் எண்: 941


மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர்
வளிமுதலா லெண்ணிய மூன்று.


மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று.


விளக்கம்:

மருத்துவக் குறிப்புகள் அடங்கிய நூல்கள் எழுதியவர்கள், வளியை முதலாகாக் கொண்டு எண்ணிய வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூன்றும் தன் அளவில் குறைந்தாலும், மிகுந்தாலும் உடலில் நோய் ஏற்படும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

வளி - காற்று, வாதம்
பித்தம் - பித்த நீர், சூடு
சிலேட்டுமம் - கபம், குளிர்ச்சி

Thursday, October 6, 2011

அரசியல் மங்காத்தா!!

என்ன ஒரு பரிமாண வளர்ச்சி! டார்வின் கோட்பாடு கூறுவது உடற்கூறு தொடர்பான 'survival of the fittest'...ஆனால் நம் தற்கால..ஏன், வருங்கால அரசியலைக் கருத்தில் கொண்டால், டார்வின் கோட்பாடு உடற்கூற்றைத் தாண்டிய உளவியல் தொடர்பானதாக இருப்பது என்ன பெரிய கொடுமை.... யாரை மிதித்து யார் முன்னேறுவது..இதுவும் உளவியல் தொடர்பான survival of the fittest...

எந்த ஒரு கட்சி மீதும் நம்பிக்கையில்லை...எந்த ஒரு தலைவனுக்கும் / தலைவிக்கும் கொள்கைகளும் இல்லை..கொள்கை பெயரளவில் இருந்தாலும் அதைப் பின்பற்றுவதாக இல்லை...எதில் வேறுபட்டாலும் இதில் மட்டும் அரசியல்வாதிகளுக்குத்தான் என்ன ஒற்றுமை!

உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவது கொஞ்சம் மக்களுக்காக ஏதோ செய்து வந்தார்கள்..இந்த உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறும் அதிசயங்களைப் பார்த்தால், உள்ளூர்த் திட்டங்கள் 10 சதவிகிதமாவது நிறைவேற்றப்படுமா என்று சந்தேகிக்க வைக்கின்றன...

  • வாக்காளர்கள் எண்ணிக்கையோ என்று மலைக்குமளவு வேட்பாளர் எண்ணிக்கை...
  • தேர்தல் அதிகாரி யார் என்று தெரியாத கட்சித் தலைவர்..
  • கூட்டணியை அவ்வப்போது கழற்றி, மீண்டும் சேர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பவாதம்...
  • காசு வாங்கிக்கொண்டு வேட்புமனு திரும்பப் பெறும் வாங்கும் வேட்பாளர்..
  • தன்னையறியாமலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து ஒரு வேட்பாளர்..
  • அதிக வேட்பாளர்கள் உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை சரியானதுதானா என்று நீதிமன்றத்தில் வரப்போகும் வழக்குகள்...
  • இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..

தொலைக்காட்சிச் செய்திகள் பார்ப்பாவர்கள் தொடர்கள் பார்ப்பவர்களைத் தூற்ற...

தொடர்கள் பார்ப்பவர்கள் செய்திகள் பார்ப்பவர்களைத் தூற்ற..

ஆட்சி அரசியலும் சரி..குடும்ப அரசியலும் சரி...

எதுதான் சரியாக இருக்கிறது?

சரிதான்...inky pinky ponky  முறையில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் என்னதான் ஆகப்போகிறது..

அரசியல் மங்காத்தா ஆட்டத்தில் மீண்டும் மீண்டும் இழப்பது மக்கள் மட்டுமே...

குறளின் குரல் - 33

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 99

இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.


இன் சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ
வன் சொல் வழங்குவது?

விளக்கம்:

பிறர் பேசும் இனிமையான சொற்கள் தமக்கு இன்பம் தருகிறது என்று அனுபவித்து அறிந்தவர், ஏன்தான் பிறரிடம் கடுமையான சொற்கள்
பேசுகின்றாரோ?
------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 152

பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று.


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

விளக்கம்:

தீங்கு செய்தவரைப் பற்றி எண்ணிப் பார்க்கும்போது மூன்று நிலைகளாய் வகைப்படுத்தலாம். அவர் செய்த தீங்கை ஒறுத்தல்(தண்டித்தல்), பொறுத்தல், மறத்தல் என்ற மூன்று நிலைகள்தாம் அவை.

ஒருவர் தீங்கு செய்த போது அவரைத் தண்டிக்க முடியும்; என்றாலும் அவ்வாறு செய்யாமல் அத்தீங்கைப் பொறுத்துக்கொள்ளுதல் சிறந்தது. அத்தீங்கை அப்போதே மறந்துவிடுவது என்பது பொறுத்தலை விடச் சிறந்ததாகும்.தண்டித்தலினும் சிறந்தது பொறுத்தல்;பொறுத்தலினும் சிறந்தது மறத்தல்.
----------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 108. கயமை
குறள் எண்: 1077

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு.


ஈர்ங் கை விதிரார், கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு.

விளக்கம்:

கயவர்கள், தம் கன்னத்தை உடைக்கும் அளவு வலிமையான முறுக்கி வளைந்த முரட்டுக் கரங்கள் வாய்க்காதவர்க்கு அல்லாது, வேறு எவர்க்கும் தன் எச்சிற்கையைக் கூட உதறமாட்டார்கள்.

தம் கன்னத்தை உடைத்துவிடுவார்களோ என்று அவர்கள் வலிமைக்குப் பயந்துதான் கீழ்மக்கள் ஈவர். உண்ட எச்சிற்கையில் மிஞ்சக்கூடியது சில
பருக்கைகள்தாம். அதைக்கூட ஈவதற்கு கீழ்மக்கள் விரும்பமாட்டார்கள்.

கயமை - நற்குணங்கள் ஏதுமில்லாத கீழ்மக்களின் தன்மை
கயவர் - கீழ்மக்கள்
கொடிறு - கதுப்பு, கன்னம், யானை மதச் சுவடு, குறடு, பூச நாள்
விதிர்த்தல் - உதறுதல், சிதறுதல், தெறித்தல், அஞ்சுதல், நடுங்குதல், சொரிதல், அசைத்தல்
விதிரார் - உதறமாட்டார், சிதறவிடமாட்டார்

------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 241

அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.


அருட் செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருட் செல்வம்
பூரியார் கண்ணும் உள.

விளக்கம்:

அருளாகிய செல்வமே செல்வங்கள் அனைத்துள்ளும் சிறந்த செல்வமாகும். பொருட்செல்வம் என்பது பண்பற்ற இழிந்தவர்களிடத்தும் காணப்படும்.

ஆனால் அருளாகிய செல்வமோ மனிதப் பண்பில் உயர்ந்து சிறந்தவர்களிடம் மட்டுமே காணப்படும்.

பூரியார் - இழிந்தவர், கீழ்மக்கள், கொடியவர்
----------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 92. வரைவின் மகளிர் / வரைவு இல் மகளிர்
குறள் எண்: 919


வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்க ளாழு மளறு.


வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

விளக்கம்:

எந்தவிதப் பாகுபாடும், வரையறையும் இல்லாது, மாட்சிமை கருதாது, பொருள் கொடுப்பவர்க்கெல்லாம் தம் அழகை விற்கும் அழகிய அணிமணிகளைப் பூண்ட இளம் மகளிரின் மெல்லிய தோள்கள், உயர்வில்லாத இழிந்த கீழ்மக்கள் ஆழ்ந்து மூழ்கும் சேறாகும் / நரகமாகும்.

வரைவு - திருமணம், எல்லை, பிரிவு, அளவு, எழுதுதல்

திருமணம் என்ற பந்தம் ஒருவருக்கே உரியோர் என வரம்பு / எல்லை வகுத்துக் கொள்வதால் வரைவு எனப்படும். அத்தகைய வரைவு
வகுத்துக்கொள்ளாமல், பொருள் தருபவர்களுக்கெல்லாம் பயன்படும் பாலியல் தொழிலில் ஈடுபடும் மகளிரை வரைவு இல்லாத மகளிர் என்பர்.

மாண்- மாட்சிமை, மடங்கு, மாணவன், பிரமசாரி

இழை - அணிகலன், கையில் கட்டும் காப்பு, நூல், நூலிழை

புரை - உயர்ச்சி, பெருமை,குற்றம், குரல் வளை, விளக்கு மாடம், உள்ளோடும் புண், பூமி, கண் நோய் வகை, பொய், களவு, மடிப்பு, கூறுபாடு, ஆசிரமம்,
வீடு, தேவாலயம், அறை, மாட்டுத்தொழுவம், பழைமை, ஒப்பு

பூரியர் - கீழ்மக்கள், இழிந்தவர், கொடியவர்

ஆழும் - அமிழும், மூழ்கும்

அளறு - குழை சேறு, நரகம், குழம்பு நீர்
----------------------------

பால்: பொருட்பால்
இயல்: கூழியல்
அதிகாரம்: 76. பொருள் செயல் வகை
குறள் எண்: 751

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.


பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது, இல்லை பொருள்.

விளக்கம்:

ஒரு பொருளாகக் கூடப் பிறரால் மதிக்கப்படாதவர் இருப்பர்; அவரின் தகுதியையும், பிறர் மதிக்கத்தக்கவராய் மாற்றிக் கொடுக்கக் கூடியது
பொருட்செல்வம் மட்டுமே. இப்படிப்பட்டவரையும் உயர்த்திக் காட்டும் பொருட்செல்வத்தைத் தவிர, ஒருவனுக்குச் சிறந்த பொருள் என்று சொல்லிக் கொள்ளக்கூடியது வேறேதுவும் இல்லை. இவ்வாறு பொருட்செல்வத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.

தகுதியற்றவரையும் தகுதியுடையவராக்கிக் காட்டுவது அவரிடம் உள்ள பணமேயன்றி வேறெதுவும் இல்லை.

குறளின் குரல் - 32

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 94. சூது
குறள் எண்: 936

அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னு
முகடியான் மூடப்பட் டார்.


அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட் டார்.

விளக்கம்:

சூது என்னும் தீயசக்தியால் ஆட்கொள்ளப்பட்டவர், வயிறு நிறைய உணவு உண்ணும் வாய்ப்பின்றி வறுமைப்பட்டு, எல்லாத் துன்பங்களுக்கும் ஆளாகி
வருந்துவர்.

இக்குறளுக்கு உரை சொல்ல வந்த பலரும் முகடி - மூதேவி என்றே கூறுகின்றனர். வள்ளுவம் இறைவனைப் பற்றிப் பேசுகிறது / பேசுவதில்லை என்ற வாதம் வருகையில் இக்குறளில் வரும் முகடி என்ற வார்த்தையும் சர்ச்சைக்குள்ளாகிறது.

இவ்விளக்கத்தில் முகடி என்னும் பதத்துக்குத் தீயசக்தி என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

அகடு - வயிறு, உள், நடு, மேடு, நடுவு நிலை, பொல்லாங்கு
முகடி- முகட்டுத்தரத்தில் / மேல்கூரையில் உள்ள பேய், மூதேவி
---------
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 71. குறிப்பறிதல்
குறள் எண்: 707

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்
காயினுந் தான்முந் துறும்.


முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும்?

விளக்கம்:

ஒருவர் மனதில் மகிழ்ச்சியுறும்/விருப்புறும் போதும், சினமுறும்/வெறுப்புறும் போதும், அவ்வுணர்ச்சிய அவருடைய முகம் முந்திக் கொண்டு காட்டி விடுகிறது. அப்படி முன்னறிந்து சொல்லவல்ல முகத்தை விடப் பேரறிவும், அனுபவ அறிவும் வாய்ந்தது வேறேதுவும் உண்டோ?

முதுக்குறை - பேரறிவு, அனுபவம் பெறுதல், பூப்படைதல், பேதைமை
----------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 17. அழுக்காறாமை
குறள் எண்: 165


அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.


அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது.

விளக்கம்:

பொறாமை குணம் உடையவர்க்குத் துன்பம் விளைவிக்க அந்தக் குணம் ஒன்றே போதுமானது. அவர்க்குத் துன்பம் தர வேறு பகைவர்கள் யாரும்
தேவையில்லை. பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் கூட, அப்பொறாமை, அதனை உடையவர்களுக்கே முதலில் தீங்கு விளைவிக்கும்.

அழுக்காறு - பொறாமை
சாலும் - போதும்
ஒன்னார் - பகைவர்
வழுக்கு - கேடு, தோல்வி, சறுக்குகை, மறதி, தவறு, வழுவழுப்பானது
---------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 05. இல்வாழ்க்கை
குறள் எண்: 46

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.


அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்து ஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?

விளக்கம்:

ஒருவன் இல்லற வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு முறைப்படி நடத்தி வாழ்ந்து வந்தால், இல்லறத்திற்கு மாறான வேறு வழிகளில் போய்
அடையும் பயன் தான் என்ன? ஒன்றுமில்லை.

அறநெறி கூடிய இல்வாழ்க்கையால் பெறும் பயனை, வேறு எந்த வாழ்க்கை நெறியாலும் அடைந்திட இயலாது.

போஒய் - போய் என்பதன் அளபெடை; ஏளனக் குறிப்பாக வந்துள்ளது.
----------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 133. ஊடல் உவகை
குறள் எண்: 1326

உணலினு முண்ட தறலினிது காமம்
புணர்தலி னூட லினிது.


உணலினும் உண்டது அறல் இனிது; காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

விளக்கம்:

உணவு, மேலும் மேலும் உண்பதை விட, உண்டது செரிப்பது இனியதாகும். அது போல், காமத்தில் கூடியிருப்பதைக் காட்டிலும், இடையிடையே
ஊடலில் பிரிந்து நிற்பது மேலும் மேலும் காதலை வளர்த்து இன்பம் தருவதாகும்.

செரித்தபின் உண்டாகும் பசி, உணவின் இன்சுவை அதிகரிக்கும். ஊடலின்பின் வரும் கூடல் காதலின் சுவை அதிகரிக்கும்.

அறல் - இல்லாமல் போதல், கருமணல், நீர், நெறி, அறுதல், திருமணம், விழா
-----------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 106. இரவு (கேட்டுப்பெறுதல் / பிச்சை)
குறள் எண்: 1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி.


இரப்பான் வெகுளாமை வேண்டும்; நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி.

விளக்கம்:

பொருள் வேண்டிப் பிறரிடம் இரந்து நிற்பவன் பொருள் கிடைக்கவில்லையே என்று கோபப்படுதல் கூடாது. வேண்டிய போதெல்லாம் பொருள் கிடைக்காது; செல்வம் தேவையான சமயத்தில் உதவாது என்பதற்கு அவனது வறுமைத் துன்பம் ஒன்றே போதுமான சான்றாகும்.

கரி - சான்று, சாட்சியம், யானை, நஞ்சு, மிளகு, அடுப்புக்கரி, நிலக்கரி, கரிந்தது, பெண் கழுதை, மரவைரம், விருந்தினன், பயிர் தீய்தல்

Wednesday, August 24, 2011

தங்க நிமிடங்கள்



காதல் கைகளின்
உயிர் தொடும் ஸ்பரிசம்

குழந்தைக்காய்த் தாய் மார்
பால் சுரக்கும் தருணம்

உலகத்து இயற்கையின்
மொத்த அழகும்
உச்சி முதல் பாதம்வரை
இட்டுச் செல்லும் பட்டு முத்தம்

வாழ்வின் சுகங்கள்
வழித்துத் தரும் வரம்

வாழ்வின் சோகங்கள்
துடைத்து எறியும் தவம்

சத்த யுத்தத்தின் இடையே
மௌன மோன மயான அமைதி....

சுகமோ சுகம்
இதமோ இதம்

குற்றாலச் சாரலில்
நனையும் தங்க நிமிடங்கள்..

Monday, August 1, 2011

கல்மலைச் சுவடுகள்



இல்லறக் கனவுகள்
உன்னோடு மரிக்க
வீட்டு உறவுகள்
என்னோடு வசிக்க

பெண்பிள்ளையை உன் பெயரில் விளிக்க
கொண்டவளுடன் வாழ்க்கையது நடக்க

நம் காதல் பேசிய இடங்களுக்கு
என் குடும்பத்துடன் போகையில்

சோலைகள் கதை சொல்லிட
கோவில்தூண்கள் கோபம் கொண்டிட
பேருந்து இருக்கைகள் இழப்பை இகழ்ந்திட
திரையரங்குகள் தீண்டல்கள் பேசிட...

அலைமணல் சுவடுகளாய்
அழிந்தே போயின
என்றெண்ணிய நினைவுகள்

மீண்டு வந்தன
மீண்டும் வந்தன
காலத்தால் அழியாத
கல்மலைச் சுவடுகளாய்..

'நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்'
என்றவளே!

இச்சுவடுகள்
மீட்டெடுத்த சுமைகள்
யாரிடம் பேசுவேன்?

உனக்கென்று ஒரு கணவன்
எனக்கென்று ஒரு மனைவி
என்றான பின்..

நீ அன்று
பேச நினைத்ததைப்
பேச முடியாதவன்..
நீ இன்று
பேசாதது கூடப்
பேசுகின்றேன்..

எங்கேயோ இருக்கும்
நீயும் கூட
நான் பேசுவதைத்தான்
நினைக்கின்றாயோ?

குறளின் குரல் - 31

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 21. தீவினையச்சம்
குறள் எண்: 208

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று.

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று.

விளக்கம்:

தீய செயல்களைச் செய்தவர் அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க இயலாது. ஒருவன் மேற்கொண்ட தீய செயல்களால், அவனுக்கு நேரவிருக்கும் துன்பங்களில் இருந்து அவன் தப்பிக்கவே இயலாது.

இது எத்தகையது என்றால், ஒருவன் தன் நிழல் அவன் பாதங்களின் கீழேயே எப்போதும் தங்கும் தன்மையுடையது. அப்படி அவன் பாதங்களின் கீழ் உறையும் நிழல், சமயம் வரும்போதெல்லாம் தவறாமல் வெளிப்பட்டே தீரும்.

நிழல் பாதத்தின் அடியே மறையாது தங்கியிருப்பது போல, தீய செயலால் வரும் துன்பங்களும் விலகாது கூடவே வரும். சமயம் வரும்போது வெளிப்படும் நிழல் போல, தக்க சமயத்தில் தவிர்க்க முடியாத துன்பங்கள் தவறாமல் வந்து சேரும்.

வீயாது - தவறாது, விலகாது, விடாது
---------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 61. மடியின்மை
குறள் எண்: 604

குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
மாண்ட வுஞற்றி லவர்க்கு.


குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இல் அவர்க்கு.

விளக்கம்:

சோம்பலில் திளைத்து மூழ்குவதால், ஒருவர் வாழ்க்கையில் முயற்சி செய்யும் தன்மை குன்றிப் போகும். இதனால் சிறப்பு / மாட்சிமை தரக்கூடிய உழைப்பினையும் ஒருவர் கைவிட நேரிடும். இந்த நிலையில், அவர் குடியும் அழிந்து போகும்; குற்றங்களும் பெருகிப்போகும்.

மடி - சோம்பல்
மாண்ட - மாட்சிமை பொருந்திய, இறந்த
உஞற்று - முயற்சி, ஊக்கம், வழக்கு, தூண்டு, தவறு, முயற்சி செய்
---------------------
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 92

அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.


அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்:

மனம் மகிழ்ந்து ஒருவருக்குப் பொருளை ஈவது நல்லதா? முகம் மலர்ந்து ஒருவரிடம் இன்சொல் பேசுவது நல்லதா?

பிறர்க்கு ஈவது என்பது தம்மிடம் இருக்கும் பொருளின் அளவைப் பொறுத்தே அமையக் கூடிய ஒரு சிறப்பாகும். பொருளின் இருப்பைப் பொறுத்து ஈயும் தன்மை மற்றும் அளவு, சூழலுக்கேற்றாற் போல மாறக் கூடும்.

ஆனால், இன்சொல் என்பது எப்போதும் ஒருவரிடம் இயல்பாய் இருக்க வேண்டிய தன்மையாகும். இது எந்த நிலையிலும் மாறாத இயல்புடன் விளங்கும். எப்போதும் குன்றி விடாமல், இன்சொல் பேசும் தன்மை நிறைந்து இருக்கும்படி பார்த்துக் கொள்வது சிறப்பு.
எனவே இன்சொல் பேசுவது, ஈவதைக் காட்டிலும் சிறந்ததாகும்.
--------------------
பால்: இன்பத்துப்பால்

இயல்: கற்பியல்
அதிகாரம்: 126. நிறையழிதல்
குறள் எண்: 1256

செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர்.


செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ
எற்று என்னை உற்ற துயர்?

விளக்கம்:

என் மனதுக்கு நெருக்கமானவர் என்னை பிரிந்து சென்ற பின்னும், அவர் பின் செல்ல விரும்புகிறது என் நெஞ்சம். என்னை வாட்டுகிறது இந்தப் பிரிவுத் துயர். இந்தத் துயரம் எத்தன்மையது? அந்தோ! மிகக் கொடியது. இரங்கத்தக்கது.

நிறையழிதல் - மனதின் இரகசியம் மறைத்து அலை பாயும் மனதை ஒரு நிலைப்படுத்துவது நிறை; பிரிவாற்றாமையால் மனதை நிலைப்படுத்தமுடியாமல், வெளிப்படையாகப் பேசுவது நிறையழிதல்.

எற்று - எத்தன்மையது
அரோ - அசைச்சொல்
சேறல் - செல்லுதல்
செற்று - நெருக்கம்; செற்றவர் - நெருங்கியவர்
----------------------------
பால்: அறத்துப்பால்

இயல்: ஊழ் இயல்
அதிகாரம்: 36. ஊழ்
குறள் எண்: 376

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா, தம.


பரியினும் ஆகாவாம், பால் அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம.

விளக்கம்:

ஒருவன் தனக்கு உரிமையில்லாதவற்றை எவ்வளவுதான் போற்றிப் பாதுகாத்தாலும், ஊழ் / விதி என்பதன் காரணமாக, அப்பொருள் அவனிடம் தங்காமல் போய்விடும். தனக்கு உரிமையானவற்றை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும், ஊழ் / விதி காரணமாய் அவை உரியவரை நீங்கிப் போகாது.
--------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 41. கல்லாமை
குறள் எண்: 407

நுண்மா னுழைபுல மில்லா னெழினல
மண்மாண் புனைபாவை யற்று.


நுண் மான் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மான் புனை பாவை அற்று.

விளக்கம்:

நுண்மை மற்றும் மாட்சிமை பொருந்திய பல நூல்களை ஆராய்ந்து கற்காதவனின் புறத்தோற்றம் வேண்டுமானால் அழகாக இருக்கக் கூடும். ஆனால் அகத்துக்கு அழகு தரும் கல்வி ஒளி பெறாத அவன், அழகான வண்ணம் தீட்டப்பெற்ற மண் பொம்மைக்கு ஒப்பானவன்.

அழகிய வண்ணங்கள் அணி சேர்த்தாலும், மண் பொம்மைக்கு உயிரோட்டம் வாய்க்காது. அதே போல் கல்வி என்னும் உள்ளொளி இல்லாதவனின் எழிலான புறத்தோற்றமும் ஆளுமை தராது.

நுழை - புத்திநுட்பம், நுண்மை, பலகணி, குகை, துளை, சிறுவழி
புலம் - அறிவு, நூல், வயல், இடம், திக்கு, பொறி, துப்பு, வேதம்
பாவை - பொம்மை, பதுமை, அழகிய உருவம், கருவிழி, பெண், குரவ மலர், நோன்பு வகை, திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள், இஞ்சிக்கிழங்கு, மதில்

Sunday, July 31, 2011

நான் அறிந்த சிலம்பு - 10

புகார்க்காண்டம் - 2: மனையறம் படுத்த காதை

கண்ணகியும் கோவலனும் இணைந்து இன்புற்றிருத்தல்

வண்டுகள் சுவைக்கும்
வாசனைப் பூம்படுக்கையில்
சென்றமர்ந்தனர்
கண்ணகியும் கோவலனும்.

கோவலன் அவனும்
கண்ணகியவளின்
பெரிய தோள்களில்
வரிக்கோலமாய் எழுதினான்
கரும்பையும் வல்லிக்கொடியையும்...

எத்தகையது அக்காட்சி?
முதிர்ந்த கடல் கொண்ட
உலகம் முழுதையும்
தம் கதிர்களால் ஒளியேற்றும்
கதிரவனும் வெண்மதியும்
ஒருசேர இருந்த
காட்சியை ஒத்திருந்தது..

கண்ணகி சூடியிருந்த
மலர்மாலையில் இருந்த
நிலவையொத்த
வெண்மல்லிகைப்பூக்கள்
வண்டுகளின் பாடல்
செவிமடுத்து
மொட்டவிழ்ந்து திறந்தன...

கோவலன் சூடியிருந்த
மாலையில் இருந்தன
இதழ்முறியாத
செங்கழுநீர்ப்பூக்கள்...
 
மல்லிகைமாலையும்
செங்கழுநீர்த்தாரும்
கலந்து முயங்கின..

செயலற்ற நிலையில்
கலந்து மகிழ்ந்தனர் தம்பதியர்..

தீராத காதலுடன்
கண்ணகியின் திருமுகம் நோக்கிய
கோவலன் தானும்
முன் எப்போதும்
சொல்லப்பட்டிராத
பொருள்நிறை உரையுடன்
கண்ணகி நலம் பாராட்டத் தொடங்கினான்..

கோவலன் கண்ணகியின் நலம்பாராட்டுதல்

தேவர்கள் போற்றும்
சிவன் தான்
சூட்டிய பெருமைக்குரியது
அழகிய இளம்பிறை நிலவது..
உன்னுடன் பிறந்த பிறப்பு என்பதால்
பெருமான் தந்தானோ உனக்கு
அப்பிறையை நெற்றியாக?

போர்க்களத்தில் தம்மை
எதிர்க்கும் பகைவர்க்கும்
படைக்கலன்கள் வழங்கிப்
போர் புரியச் சொல்லும் பண்புண்டு.
அதைப்போலவே
மன்மதன் தானும்
தம் பெரிய கரும்புவில்லை
இரண்டாகப் பிளந்து தந்தானோ
உன் இருபுருவங்களாக?

தேவருண்ணும்
அமிழ்தின் முன்னே பிறந்த
இலக்குமியானவள் நீ என்பதால்
தேவர் கோமான்
இந்திரன் தானும்
வச்சிரப்படையைத் தந்தானோ
உன் அழகிய இடையாக?

ஆறுமுகம் கொண்ட
முருகன் தான்
உனக்குத் தரும்
உரிமையைப் பெற்றிலன்
என்ற போதும்
உன்னைக் கண்டு நான்
துன்புற வேண்டுமென்று
தன் சுடர்நெடு வேல்தனைத் தந்தானோ
கடை சிவந்து
குளிர்ச்சி பொருந்தி நிற்கும்
நின் இரு கண்களாக?


குறளின் குரல் - 30

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 96. குடிமை
குறள் எண்: 957

குடிபிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.


குடிப்பிறந்தார்கண் விளங்கும் குற்றம், விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

விளக்கம்:

நற்குடியில் பிறந்தவரிடம் சிறு குற்றம் கூட இருக்கக் கூடாது. ஆகாயத்தில் இருக்கும் நிலவில் இருப்பது சிறு களங்கம்தான் என்றாலும், அது பலரும் அறியும் வண்ணம் மிகவும் வெளிப்படையாகத் தெரியும். அதே போல், நற்குடியில் பிறந்தவரிடம் இருக்கும் சிறு குற்றமும் பலராலும் அறியப்பட்டுப் பெரிதாகத் தோன்றும்.

விசும்பு - வானம், தேவலோகம், மேகம், செருக்கு, வீம்பு, திசை
மறு - களங்கம், குற்றம், தீமை, அடையாளம், மச்சம்
--------------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 88. பகைத்திறம் தெரிதல்
குறள் எண்: 875

தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.


தன் துணை இன்றால்; பகை இரண்டால்; தான் ஒருவன்
இன் துணையாக் கொள்க, அவற்றின் ஒன்று.

விளக்கம்:

துணைக்கு ஒருவரும் இன்றித் தனித்து நிற்கும் ஒருவனுக்குப் பகையோ இரண்டாக உள்ளது. அந்நிலையில் அப்பகைவருள் ஒருவரைத் தன் இனிமையான துணையாக மாற்றிக் கொள்ள வேண்டிய திறம் ஓர் ஆட்சியாளருக்கு இருக்க வேண்டும்.
-----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 12. நடுவுநிலைமை
குறள் எண்: 111

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.


தகுதி என ஒன்று நன்றே - பகுதியான
பாற்பட்டு ஒழுகப்பெறின்.

விளக்கம்:

நட்பு, பகைமை என்று பேதம் பார்க்காமல், வேண்டியவர் வேண்டாதவர் என்று ஒரு பகுதியின் பால் சார்ந்து நிற்காமல், அவரவர்க்குரிய முறைமைப்படி நடந்து கொள்வதே நல்லறமான நடுவுநிலைமை என்னும் தகுதியாகும்.
---------------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 109. தகையணங்குறுத்தல்
குறள் எண்: 1082

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தனைக்கொண் டன்ன துடைத்து.


நோக்கினான் நோக்கு எதிர் நோக்குதல் - தாக்கு அணங்கு
தானைக் கொண்டன்னது உடைத்து.

விளக்கம்:

அவளை நான் பார்க்கும்போது எதிர்ப்பார்வை பார்க்கிறாள் அவள். இயல்பாகப் பார்க்கும் போதே தன் பார்வையால் வருத்தக்கூடிய ஒரு பெண் எதிர்ப்பார்வை பார்ப்பது, தான் மட்டும் வராமல் தன்னுடன் ஒரு பெரும்படையைச் சேர்த்துக் கொண்டு வந்து தெய்வப்பெண்ணொருத்தி தாக்குவதைப் போல் உள்ளது.

அணங்கு - தெய்வப்பெண், பத்திரகாளி, தேவர்க்கு ஆடும் கூத்து, அழகு,
அச்சம், விருப்பம், மயக்க நோய், வருத்தம், கொலை, கொல்லிப்ப்பாவை, பெண்

தகை - அழகு

அணங்குறுத்தல் - காதல் துன்பத்தை உண்டாக்குதல்
------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 24. புகழ்
குறள் எண்: 239


வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.


வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம்.

விளக்கம்:

நல்ல விளைச்சல் தரும் நிலமே பயன் தருவதில் சிறந்ததாகும். அத்தகைய நிலம், புகழ் இல்லாமல் வாழ்பவரின் உடலைச் சுமக்கும் போது, வசைகள் குற்றங்கள் இல்லாதது என்ற தன் புகழில் இருந்து குறைந்து போகும். நல்ல புகழ்வாய்ந்தவர்கள் வாழும் நிலத்தில் மட்டுமே விளைச்சலின் பலன் அதிகமாக இருக்கும் என்ற செய்தியும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.
------------------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 73. அவையஞ்சாமை
குறள் எண்: 727

பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்.


பகையகத்துப் பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல்.

விளக்கம்:

போர்க்களத்தில் பகைவரின் நடுவில் நின்றிருக்கும், மனதில் துணிவற்ற கோழையின் கையில் ஒளி பொருந்திய வாள் இருந்தாலும், அவன் வீரன் இல்லை என்பதால் அந்த வாளால் ஒரு பயனும் இல்லை.

அதே போல் ஒருவன் எவ்வளவுதான் சிறந்த நூல்களைக் கற்றிருந்தாலும், பலரும் கூடியிருக்கும் அவைக்கு நடுவில் தான் கற்றவற்றைச் சொல்லத் துணிவில்லாமல் அஞ்சினான் என்றால், அந்த நூல் தந்த கல்வியால் யாதொரு பயனும் இல்லை.

இரண்டுமே பிறரின் நகைப்புக்கு வழிவகுக்குமேயன்றி ஒரு பயனையும் தருவதற்கு வாய்ப்பில்லை.

Sunday, July 10, 2011

மறைமலையடிகளாரை நினைவுகூர்ந்த போது..

கடந்த வெள்ளியன்று ரியாத்தில் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மறைமலையடிகளார் விழா நடந்தேறியது. அப்போது, மறைமலையடியகளார் குறித்த என்னுரை..




வாழ்க்கையில் ஏற்படும் தேவைகளைப் பல வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் முக்கியமானவை இரண்டு - அவை சமுதாயத் தேவைகள், தனி நபரின் தேவைகள்...தேவைகளுக்கும் வரலாறு என்பதற்கும் தொடர்பு உண்டு..நேற்று, இன்று, நாளை என்ற சுழற்சியே காலத்தின் சுழற்சி..நேற்று என்பது வரலாறு..இன்று என்பது நடைமுறை..நாளை என்பது நேற்றும் இன்றும் கூடி நிர்ணயிப்பது...

நேற்று முடிந்துவிட்டதே..அந்த வரலாறு..அது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? தனிநபர் தேவைக்கும் வரலாற்றுக்கும் தொடர்புண்டு...சான்றாக, தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவனைத் தந்தையார் திட்ட, 'இவர் வாங்கிய மதிப்பெண் மட்டும் அதிகமோ? இவர் என்ன மருத்துவராகவா இன்று இருக்கிறார்'? என்று பிள்ளை நினைக்க...இது தந்தை குறித்த வரலாறு...அது அந்தக் குடும்பம் மட்டுமே கருத வேண்டிய..அல்லது கருத வேண்டாத ஒரு நிகழ்வு..

ஆனால் சமுதாயத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நாம் காணவேண்டிய, புரட்டிப் பார்க்க வேண்டிய, பெருமைப்பட வேண்டிய வரலாறுகள் சில என்றென்றும் உயிரோட்டமானவை. மொழி அதன் வளர்ச்சி, மாற்றம், வளர்சிதை மாற்றம்..இப்படியாகப் பல பிரிவுகள்... மொழி என்பது தனி நபரின் சொத்தல்ல; அது பலரின் பொது உடைமை; உரிமை...மொழி என்பது சமுதாய நோக்கில் காணப்பட வேண்டிய, பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வரலாறு..

மொழி என்பது ஒருவருடன் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கட்டும் என்ற காரணத்தினால் உருவான ஒன்று மட்டுமல்ல; ஒரு முகவரியாக, ஓர் அடையாளமாக விளங்குவது மொழி...சங்க காலத்தில் வழங்கப்பட்டது தூய தமிழ்மொழி...அத்தகைய தமிழ்மொழி பிறமொழிக் கலப்பால் சிதைந்த போது..அது எந்த வளர்ச்சிக்கும் வழி காட்டாமல் உள்ள மொழியை, அதன் சிறப்பைக் குழி தோண்டிப் புதைக்கும் வண்ணம் அந்த மொழிக் கலவை அமைந்த போது...அம்மொழியைக் காக்கும் உணர்வின் உறுதியால் தனித் தமிழ் இயக்கம் ஆரம்பித்துப் போராட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது நம் மொழி..

தமிழுடன் சமக்கிருத மொழியைக் கலந்து பேசிய மணிப்பிரவாள நடை கொடிகட்டிப் பறக்க..தமிழ் வார்த்தைகள் மெல்ல மெல்லச் சிதைந்து...வேற்று மொழிச் சொற்கள் தமிழ் வார்த்தைகளின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட போது..நிலைமையைச் சரிப்படுத்த முனைந்த பலருள் மிகவும் முக்கியமானவர், மறைமலை அடிகளார்.

மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். 1950 ஆம் செப்டம்பர் 15 ஆம் நாளில் மறைந்தார். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். இவரது இயர்பெயர் வேதாசலம். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்டார்.

மறைமலைஅடிகள், நாகையில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால், தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார்.சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.

சென்னைக்கு வந்த பின்னர்க் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்கரின் கொள்கைப்படி 1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.

தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.

செய்யுள், புதினம், நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி போன்ற பல துறைகளிலும் அடிகளார் நூல்களைப் படைத்துள்ளார். தமிழ், தமிழர் வாழ்வு, உணவுமுறை, இலக்கிய ஆய்வு, வாழ்வியல், மறைப்பொருள் ஆய்வு, சைவ சித்தாந்த நெறிமுறைகள்..இவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இவர் இயற்றிய நூல்கள் இன்றும் பெரும்புகழோடு விளங்குகின்றன.

தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர் மனதில் தோன்றியதற்கு முக்கிய காரணம் இவருடைய மகள் நீலாம்பிகை அம்மையார்.

ஒரு நாள் தோட்டத்தில் அவர் நீலாம்பிகையுடன் நடந்து கொண்டிருந்தார். தமிழ்ப் பாடல்களை இசைக்கவும் வல்லவர் அவர். அப்படித்தான் அன்று, மகளிடம் வள்ளலாரின் பாடலைப் பாடிக் கொண்டிருந்த போது அப்பாடலில் தேகம் என்ற வார்த்தை வந்தது. அடிகள் சொன்னார்: தேகம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாக யாக்கை என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாமே என்று மகளிடம் கூறினார்.

நம் தமிழ் மொழியிலேயே எண்ணற்ற வார்த்தைகள் இருக்க, வடமொழிச் சொற்கள் தமிழின் இடத்தைப் பிடித்துக் கொள்ள எப்படி முடிந்தது? எதனால் இப்படி நடந்தது? தமிழில் வார்த்தைகளுக்குப் பஞ்சமா? இல்லையில்லை..நம் மொழியை அதன் அழகிய வடிவத்துடன் காக்க வேண்டும் என்ற எண்ணத்துக்குத்தான் பஞ்சம்...

தனித்தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்று உறுதி பூணவேண்டியது நம் கடமை என்று தோன்றியது அடிகளாரின் மகளான நீலாம்பிகைக்கு..மகளின் எண்ணம் தந்தையாரையும் தொற்றிக்கொண்டது. தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்கும் எண்ணம் அவர் மனதில் அன்று தோன்றியது; அது முதல் அடிகளாரின் எல்லாத் தமிழ்ப்பணிகளுக்கும் துணைநின்று அவரை ஊக்குவித்தவர் அவர் தம் மகளே..மொழியை அவரவர் விருப்பபடியெல்லாம் மாற்றிக்கொள்ளும்படியான நிலை இருக்கக்கூடாது.....அதற்கென்று ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்று அடிகளார் வலியுறுத்தினார். அப்படி 1916 ஆம் ஆண்டு தோன்றியதுதான் தனித்தமிழ் இயக்கம்.

இன்று தேகம் என்ற சொல்லைத் தமிழ் என்று கருதுகிறோம் நாம்; யாக்கை என்ற தூய தமிழ்ச்சொல் ஏதோ வேற்று மொழியாகத் தோன்றுகிறது. இது போன்ற சொற்கள் ஆயிரமாயிரம்.. இச்சொற்கள் தமிழ் மொழிக்குள் புகுந்து இன்று தூய தமிழ்ச்சொற்களை தூரமாய்ப் போகும்படி துரத்திவிட்டுவிட்டன. நாம் எழுதுவது தூய தமிழ் என்று நினைக்கிறோம்..ஆனால் வேற்று மொழிச் சொற்களையும் தமிழ்ச்சொற்கள் என்று தவறாக நினைக்கிறோம். தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் மறுக்கிறோம்.

தன் வாழ்க்கையிலும், தன் பழக்கவழக்கங்களிலும் ஒழுக்கநெறியைக் கொண்டு வாழ்ந்தவர் அடிகளார். குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயரிடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அடிகளாருக்குத் தமிழின் மீது இருந்த பற்று அவர் குடும்பத்தினரையும் தாக்கம் செய்யத் தவறவில்லை. அடிகளாரது திருக்குமாரரான திருநாவுக்கரசு, மற்றும் பேரன் தாயுமானவன் எழுதிய நூல்களின் மூலம் அடியாரது வாழ்க்கைக் குறிப்புகள் அறியப்பெறுகிறோம்.

அவருடைய தனித்தமிழ் இயக்கம் ஆற்றிய பணிகள்தான் என்ன? வ.சுப.மாணிக்கனார் தனித்தமிழ் இயக்கத்தின் சிறப்பு பற்றி இவ்வாறு கூறுகின்றார்...,"அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் தமிழ்த்தாயின் நெஞ்சு புரையோடாதும், தமிழர் அறைபோகாதும் காத்தது. தமிழின் வயிற்றிலிருந்து முன்பு பல திராவிட மொழிகள் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியது போல மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழைக் குன்றிக் குலையாதவாறு தடுத்தது" என்று உரைக்கிறார்.

தமிழைத் தமிழாக இருக்க விடுங்கள் என்று அடிகளார் வலியுறுத்தியது கேட்டு எள்ளி நகையாடியவர் பலர்..கலிகாலக்கொடுமை என்றும் இகழ்ந்தனர். அவர்களுக்கெல்லாம் சிரித்தவாறே அடிகளார் அளித்த பதில்...இதுதான்..


நம் தனித் தமிழ்த்தாயைப் பிறமொழிச் சொற்கள்
என்னும் கோடாரியினுள் நுழைந்து கொண்டு,
இத்தமிழ்ப் புதல்வர் வெட்டிச் சாய்க்க
முயல்வதுதான் கலிகாலக் கொடுமை!
இத்தீவினை புரியும் இவர்தம்மைத் தடுத்து,
எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்க முன்நிற்கும்
எம்போல்வாரது நல்வினைச் செயல்
ஒருகாலும் கலிகாலக்கொடுமை ஆகாது என்று
உணர்மின்கள், நடுநிலையுடையீர்"!

என் மொழியை என் விருப்பத்துக்குப் பேசுவது என் உரிமை. வேற்று மொழிச் சொற்கள் கலந்தும் பேசுவேன்; இருக்கின்ற சொற்களை மாசு படுத்தியும் பேசுவேன் என்று சொன்னவர்கள் / சொல்பவர்கள் உண்டு. அதற்கும் தகுந்த சரியான மறுமொழி மலர்ந்தது அடிகளாரிடமிருந்து...

மொழியின்றி மக்களும், மக்களின்றி மொழியும் உயிர்வாழ்தல் இயலாது. ஒவ்வொருவரும் தம் விருப்பத்துக்கு மொழியில் கலப்படம் செய்தும், திரித்தும் பேசினால் குறுகிய காலத்துக்குள்ளேயே பேரழிவு வந்து சேரும். சிறிய அளவில் ஒரு கூட்டம் கூடினால் கூட, ஒவ்வொருவரும் அவர் விருப்பத்துக்கு மொழியை மாற்றிப் பேசினால், அவர்களுக்குள்ளேயே தொடர்பு அறுந்து போகும். ஒவ்வொரு சிறு கூட்டத்திற்கும் ஒவ்வொரு மொழி தோன்றும். காலந்தோறும் ஒவ்வொரு புது மொழி உருவாகி அக்கூட்டங்களை ஒன்று சேரவிடாமல் பிரித்துவிடும்.

தமிழ் மொழி நெறியை மதிக்காதவர் நடத்திய கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் மிகச் சிறப்பும் பெருமையும் வாய்ந்த பெரியோரிடமிருந்து அழைப்பு வந்த போதெல்லாம், 'உங்கள் பணிகளைப் பாராட்டும் அதே வேளையில், தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை என்று உறுதியாகவும், துணிச்சலாகவும் நேருக்கு நேர் உரையாடி அவ்வழைப்புகளை மறுத்தவர் அடிகளார்.

இத்தகைய மாமனிதர்கள் கட்டிக்காக்க முற்பட்டும் கூட இன்று எந்த நிலையில் இருக்கிறது நம் தமிழ்மொழி என்று சிந்தித்துப் பார்க்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். துறைதோறும் தமிழ்ச்சொற்கள் அதிகமாக நம் கைவசமே இருக்க, தமிழில் சொற்களே இல்லை, அதனால்தான் வேற்றுமொழிச்சொற்கள் பயன்படுத்துகிறோம் என்பார் சிலர்.

பல மொழிகளைக் கற்பதற்குத் தடையாக நம் முன்னோர்கள் இருந்தார்கள் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது. வேற்றுமொழித் திணிப்பைதான் எதிர்த்தார்களேயன்றி, எந்த ஒரு மொழியையும் எதிர்க்கவில்லை.எந்த மொழி பயின்றாலும் அதற்குரிய தனி அழகோடு, சிறப்போடு வேற்று மொழிச்சாயல்கள் தவிர்த்துப் பயிலுவதுதான் சிறந்தது.

இணையத்தில் இன்று ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக, அதிகம் எழுதப்படுவது தமிழ்மொழி; அறிவியல் துறைகள் சார்ந்த சொற்களுக்கு ஈடாக ஏற்கனவே இருக்கின்ற தமிழ்ச் சொற்களை எடுத்துக்காட்டியும், புதிதாகச் சொற்கள் பல படைத்தும் தமிழ்த்தொண்டாற்றி வருகின்றனர் அறிஞர் பலர்.சமீபத்தில்..ஆரிய மொழி ஆர்வலர்கள் தமிழுக்குச் செய்யத் துணிந்த துரோகங்கள் தமிழ் அறிஞர்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஓராண்டுக்கு முன் நடந்த நிகழ்வு..

இத்தகைய சிறப்புகள் நம் தமிழ் மொழியில் இன்றும் காண முடிகிறது. இந்தப் பெருமை அழிந்துவிடாமல் தக்கவைத்துக் கொள்வதே தமிழுக்கும், தமிழறிஞருக்கும், நாளைய சமுதாயத்திற்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஆகும்.

இன்று குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோரும்...என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்...பிறமொழிக்கலப்பின்றி எத்தனை வாக்கியங்கள்..பேசமுடிகின்றது? இந்தத் தவறைத் தெரிந்தே செய்து வருகிறோம்..அதில் பெருமையும் கொள்கிறோம்...அன்று மணிப்பிரவாளம்..இன்று தமிங்கிலம்...

தமிழ் நெறியைக் காக்கப் பேசும் பேச்சுக்கள் எல்லாம் கேலி கிண்டலுக்குள்ளாகி, தமிழ் வெறி என்று முத்திரை குத்தப்பட்டுப் பழிக்கப்படுகின்றன.

உணவில் கலப்படம்...அது உடலுக்குக் கேடு..
பொருள்களில் கலப்படம்...அது வணிகத்துக்குக் கேடு..
கொள்கைகளில் கலப்படம்..அது அரசியலார்க்குக் கேடு..
பழக்க வழக்கங்களில் கலப்படம்...அது பண்பாட்டுக்குக் கேடு..
மொழியில் கலப்படம்....காலத்தின் இயல்பான சுழற்சிக்குக் கேடு..

சிந்திப்போம்...தவறுகளைத் திருத்த முற்படுவோம்.

குறளின் குரல் - 29

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 96. குடிமை
குறள் எண்: 957

குடிபிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.


குடிப்பிறந்தார்கண் விளங்கும் குற்றம், விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

விளக்கம்:

நற்குடியில் பிறந்தவரிடம் சிறு குற்றம் கூட இருக்கக் கூடாது. ஆகாயத்தில் இருக்கும் நிலவில் இருப்பது சிறு களங்கம்தான் என்றாலும், அது பலரும் அறியும் வண்ணம் மிகவும் வெளிப்படையாகத் தெரியும். அதே போல், நற்குடியில் பிறந்தவரிடம் இருக்கும் சிறு குற்றமும் பலராலும் அறியப்பட்டுப் பெரிதாகத் தோன்றும்.

விசும்பு - வானம், தேவலோகம், மேகம், செருக்கு, வீம்பு, திசை

மறு - களங்கம், குற்றம், தீமை, அடையாளம், மச்சம்

--------------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 88. பகைத்திறம் தெரிதல்
குறள் எண்: 875

தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.


தன் துணை இன்றால்; பகை இரண்டால்; தான் ஒருவன்
இன் துணையாக் கொள்க, அவற்றின் ஒன்று.

விளக்கம்:

துணைக்கு ஒருவரும் இன்றித் தனித்து நிற்கும் ஒருவனுக்குப் பகையோ இரண்டாக உள்ளது. அந்நிலையில் அப்பகைவருள் ஒருவரைத் தன் இனிமையான துணையாக மாற்றிக் கொள்ள வேண்டிய திறம் ஓர் ஆட்சியாளருக்கு இருக்க வேண்டும்.

-----------------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 12. நடுவுநிலைமை
குறள் எண்: 111

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.


தகுதி என ஒன்று நன்றே - பகுதியான
பாற்பட்டு ஒழுகப்பெறின்.

விளக்கம்:

நட்பு, பகைமை என்று பேதம் பார்க்காமல், வேண்டியவர் வேண்டாதவர் என்று ஒரு பகுதியின் பால் சார்ந்து நிற்காமல், அவரவர்க்குரிய முறைமைப்படி நடந்து கொள்வதே நல்லறமான நடுவுநிலைமை என்னும் தகுதியாகும்.

---------------------------
பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 109. தகையணங்குறுத்தல்
குறள் எண்: 1082

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தனைக்கொண் டன்ன துடைத்து.


நோக்கினான் நோக்கு எதிர் நோக்குதல் - தாக்கு அணங்கு
தானைக் கொண்டன்னது உடைத்து.

விளக்கம்:

அவளை நான் பார்க்கும்போது எதிர்ப்பார்வை பார்க்கிறாள் அவள். இயல்பாகப் பார்க்கும் போதே தன் பார்வையால் வருத்தக்கூடிய ஒரு பெண் எதிர்ப்பார்வை பார்ப்பது, தான் மட்டும் வராமல் தன்னுடன் ஒரு பெரும்படையைச் சேர்த்துக் கொண்டு வந்து தெய்வப்பெண்ணொருத்தி தாக்குவதைப் போல் உள்ளது.

அணங்கு - தெய்வப்பெண், பத்திரகாளி, தேவர்க்கு ஆடும் கூத்து, அழகு, அச்சம், விருப்பம், மயக்க நோய், வருத்தம், கொலை, கொல்லிப்ப்பாவை, பெண்
தகை - அழகு
அணங்குறுத்தல் - காதல் துன்பத்தை உண்டாக்குதல்

------------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 24. புகழ்
குறள் எண்: 239

வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.


வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம்.

விளக்கம்:

நல்ல விளைச்சல் தரும் நிலமே பயன் தருவதில் சிறந்ததாகும். அத்தகைய நிலம், புகழ் இல்லாமல் வாழ்பவரின் உடலைச் சுமக்கும் போது, வசைகள் குற்றங்கள் இல்லாதது என்ற தன் புகழில் இருந்து குறைந்து போகும். நல்ல புகழ்வாய்ந்தவர்கள் வாழும் நிலத்தில் மட்டுமே விளைச்சலின் பலன் அதிகமாக இருக்கும் என்ற செய்தியும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

------------------------------
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 73. அவையஞ்சாமை
குறள் எண்: 727

பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்.


பகையகத்துப் பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல்.

விளக்கம்:

போர்க்களத்தில் பகைவரின் நடுவில் நின்றிருக்கும், மனதில் துணிவற்ற கோழையின் கையில் ஒளி பொருந்திய வாள் இருந்தாலும், அவன் வீரன் இல்லை என்பதால் அந்த வாளால் ஒரு பயனும் இல்லை.

அதே போல் ஒருவன் எவ்வளவுதான் சிறந்த நூல்களைக் கற்றிருந்தாலும், பலரும் கூடியிருக்கும் அவைக்கு நடுவில் தான் கற்றவற்றைச் சொல்லத் துணிவில்லாமல் அஞ்சினான் என்றால், அந்த நூல் தந்த கல்வியால் யாதொரு பயனும் இல்லை.

இரண்டுமே பிறரின் நகைப்புக்கு வழிவகுக்குமேயன்றி ஒரு பயனையும் தருவதற்கு வாய்ப்பில்லை.