Tuesday, May 4, 2010

இன்னுமோர் உலக அதிசயம்!

வார்த்தைகளின் கீறலில்
பதிந்து நிற்கும் ரணங்கள்...

மௌனத்தின் கனத்தில்
சூழ்ந்து சுழலும் பயங்கள்...

சிந்தனைகளின் சத்தத்தில்
உதிர்ந்து விழும் உணர்வுகள்...

நாளதன் ஓட்டத்தில்
நலிந்து மறையும் சினங்கள்...

ஊடல் மடியும் கணத்தில்
வான்வரை வியாபிக்கும் காதல்....

இனிமையான
இன்னுமோர் உலக அதிசயம்!

Monday, May 3, 2010

ஆலங்கட்டி மழை ரியாத்துக்கு வந்தாச்சா...

மதியம் சுமார் 2 மணியிருக்கும்..திடீரென்று சன்னல் வழியே பார்க்கும்போது, குளிர்கால சாயந்திரம் 5 மணி போல் ஒரே கும்மிருட்டு.....யோசித்துக் கொண்டிருக்கும்போதே....

மழையின் சத்தம்..காற்றின் பிளிறல்..கூடவே...டங் டங் என்று உலோகச் சத்தம்...சட்டென்று புரிந்தது...ஆஹா...இது ஆலங்கட்டி மழையாச்சே....நான் ஓரிரு முறை இந்த வளைகுடாப் பகுதியில் இதைப் பார்த்திருந்தலும்..என் மகள் பார்த்திருக்கவில்லை...பயந்த அவளை ஒரு வழியாகச் சமாதனப்படுத்தி இறங்கிப்போய்க் கீழே பார்த்தால் ஒரே வெள்ளம்
ஓடிக் கொண்டிருக்கிறது சாலையில்...

தண்ணீரில் மிதக்கும் ஐஸ் கட்டிகள்....

அடடா...வித்தியாசமான சிலீர் அனுபவம்.....

ஆனாலும் எத்தனை எத்தனை பேர் இங்கே இதனால் கஷ்டப்பட்டார்களோ
தெரியவில்லை...

மழைக்கு முன் வந்த காற்று..
செம்மணல் மண்டலம்....
புகைப்படக்கருவி வழியே...



(மேலே உள்ள புகைப்படங்கள்: நண்பர் விஜயக்குமார் எடுத்தவை..)

(கீழ்க்காணும் புகைப்படங்கள் என் கணவர் அலுவலகத்திலிருந்தபடி வெளித்தோற்றத்தை எடுத்தவை)

தமிழ் மேல் காதல்

இலக்குகளை இயம்பி நின்ற
இலக்கியப்பூக்களால்
இதயங்களில் வேரூன்றிய
தமிழ்க்காதல்,
மனதின் இறுக்கங்கள் தளர்த்திய
இளவேனில் காலமன்று.

தமிழே டாமில் ஆகித்
தன் முகவரி
தானே தேடியலைந்து
தேக்கம் கண்டு வெம்பி நிற்கும்
இலையுதிர்காலமின்று.

பிறநாட்டுச் சாத்திரங்கள்
தமிழில் மொழிபெயர்ப்போம்
என்றதொரு காதல்.

டாடி, மம்மி,
தேங்க்ஸ், ரோடு
எல்லாமே தமிழே
என்பதொரு காதல்.

தாயாம் தமிழை
அன்னை இல்லத்தில் வைத்து
அழகு பார்த்ததொரு காதல்.

முதியோர் இல்லத்தில்
முடக்கிப் பார்க்கும்
இயலாமையில் ஒரு காதல்.

தற்காப்புக் காதலாய்ச்
செதுக்கி நின்றதொரு காதல்.

தற்கொலைப் பாதையில்
சிதைந்து நிற்பதொரு காதல்.

இலையுதிர்காலம் இன்று..
என்றாலும்
இளவேனில் வருமென்று
சற்றும் குறையாத நம்பிக்கையுடன்
முற்றிலும் எம்மை இயக்குகிறது
தணியாத தமிழ்க்காதல்.

குறளின் குரல் - 6

அதிகாரம் - 21. தீவினையச்சம் குறள் எண் - 206

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல் வேண்டா தான்.

தீப் பால தான் பிறர்கண் செய்யற்க-நோய்ப்பால
தன்னை அடல் வேண்டாதான்!

விளக்கம்:

எறிந்த பந்து போலத் தீமை மீண்டும் செய்தவனையே வந்து சேரும்.
துன்பம் / தீவினை தனக்கு வரக்கூடாது, தன்னை வருத்தக்கூடாது என்று விரும்புபவன் அத்தீவினைகளைப் பிறரிடமும் செய்யாதிருக்க வேண்டும்.
---------

அதிகாரம் - 19. புறங்கூறாமை
குறள் எண் - 181

அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது.
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது.

விளக்கம்:

ஒருவன் எந்தவொரு அறமும் செய்யாமல் இருந்தாலும், அவன் பிறரைப் பற்றிப் புறம் கூறாதவனாக இருக்கிறான் என்பது இனியதாகும்.

(புறங்கூறாமை மற்ற அறங்களைத் தானாகவே வரவழைக்கும்.)
-------------

அதிகாரம்: 57. வெருவந்த செய்யாமை

குறள் எண்: 570

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.

கல்லார்ப் பிணிக்கும், கடுங்கோல்; அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
விளக்கம்:

கற்கவேண்டியவற்றைக் கற்காது, எப்போதும் தனக்குத் துணையாக மூடர்களையே சேர்த்துக் கொள்வது கொடுங்கோல் ஆட்சியது;
இந்த ஆட்சி அல்லாமல் பூமிக்குப் பாரம் வேறு எதுவும் இல்லை.
-------------------

அதிகாரம்: 51. தெரிந்து தெளிதல்
குறள் எண்: 501

அறம்பொரு ளின்ப முயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.


அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும்.

விளக்கம்:

ஒருவன் மீது நம்பிக்கை வைக்கும்போது நான்கு இயல்புகளின் அடிப்படையில் ஆராய வேண்டும்.

அறம் தவறாமல் நடப்பவனா, பொருள் மீது பற்றுள்ளவனா, இன்பத்தில் ஆசைமிக்கவனா, உயிருக்கு அஞ்சுபவனா என ஆராய்தல் வேண்டும்.

இவற்றால் மனம் பிறழாமல் இருப்பவனே நம்பத்தகுந்தவன்.
------------------

அதிகாரம்:11. செய்ந்நன்றியறிதல்
குறள் எண்: 105

உதவி வரைத்தன் றுதவி யுதவி
செய்ப்பட்டார் சால்பின் வரைத்து.

உதவி வரைத்து அன்று, உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

விளக்கம்:

ஓர் உதவியின் மேன்மை அந்த உதவியின் அளவைப் பொறுத்தது அன்று.

அது உதவி செய்யப்பட்டவரின் தன்மையை, சிறப்பைப் (சால்பைப்) பொறுத்ததாகும்.

(உதவியைப் பெற்றுக்கொண்டவரின் சிறப்பால் உதவியே பெருமைப்படும்.)
-------------

Saturday, May 1, 2010

குறளின் குரல் - 5

அதிகாரம்: 84. பேதைமை
குறள் எண்: 833

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

நாணமை நாடாமை நார்இன்மை யாதுஒன்றும்
பேணாமை பேதை தொழில்.

விளக்கம்:

பழிக்கு வெட்கப்படாதிருத்தல், சிந்தித்துச் செயல்படாதிருத்தல், அன்புடையவர் முகம் சுருங்க அவரன்பு முறியப்பேசுதல்,பேண வேண்டிய பொருளைப்பேணிக் காவாதிருத்தல்...

இவை தவிர்த்த வேறு நற்குணங்கள் அறியார் பேதையர்.ஆதலால் இவை மட்டுமே பேதைகளுக்குரிய தொழிலாகும்.
----------

அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 624

மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.
மடுத்த வாய்எல்லாம் பகடு அன்னான்உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

விளக்கம்:

தடைப்படும் இடங்களில் எல்லாம் தளர்ந்து சோர்ந்து விடாமல் பாரவண்டி இழுத்துச் சென்றிடும் எருது;

அது போலக் காரியமது கைவிடாது தொடர்ந்து இறுதிவரை முயன்று வென்றிடும் ஊக்கமுடையவன் தான் கண்டால் துன்பமே துன்புற்று வருந்த நேரிடும்.
-------------------------

அதிகாரம்: 100. பண்புடைமை
குறள் எண்: 1000

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை பாற்றிரிந் தற்று.

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம் தீமையால் திரிந்தற்று.

விளக்கம்:

நல்ல பசுவின் பாலது அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் குற்றமிருந்தால் திரிந்து போகும். அது போலத்தான் முன்செய்த நல்வினையாலே பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் ஒருவருக்கும் பயன்படாமல் கெட்டுப் போகும்.
----------------

அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 153

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

இன்மையுள் இன்மை விருந்து ஒரால், வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

விளக்கம்:

விருந்தைப் போற்றாது புறக்கணித்தல் வறுமையுள் வறுமையாகும்.
அறிவிலார் செய்யும் சிறுமையைப் பொறுத்துக் கொள்ளுதல் வலிமையுள் வலிமையாகும்.
--------------
அதிகாரம்: 46. சிற்றினஞ் சேராமை
குறள் எண்: 451

சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.


சிற்றினம் அஞ்சும் பெருமை, சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

விளக்கம்:

பெருமைமிக்க பெரியோர் சிறியார் இனத்தோடு நட்புக் கொள்ள அஞ்சி ஒதுங்குவர்.

சிறுமை மிக்க சிறியாரோ சிறியாரைக் கண்டவுடன் அவர்களைத் தம் சுற்றமாய் நினைத்துத் தம்முடன் இணைத்துக் கொள்வர்.

குறளின் குரல் - 4

அதிகாரம்: 68. வினை செயல் வகை
குறள் எண்: 672

தூங்குக தூங்கிச் செயற்பால் தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

விளக்கம்:

காலம் தாழ்த்திச் செய்யக்கூடிய செயல்களை க்காலம் தாழ்த்தியே செய்தல் வேண்டும்; காலம் கடத்தாமல் செய்யக்கூடிய செயல்களை விரைவில் செய்ய வேண்டும்.
---------------

அதிகாரம்: 42. கேள்வி
குறள் எண்: 419நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.


நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.
விளக்கம்:

நுட்பமான கேள்வியறிவில்லாதவர் பணிவான சொற்களைப் பேசுதல் அரிது; கேள்வியறிவு பெறப்பெற பணிவு பெருகும்; செருக்கழியும்.
--------------

அதிகாரம்: 81. பழைமை (பல காலமாய்ப் பழகி வரும் நட்பு)
குறள் எண்: 806
எல்லைக் கணின்றார் துறவார் தொலைவிடத்துத்
தொல்லைக்க ணின்றார் தொடர்பு.


எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.


விளக்கம்: 1

தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் நட்புதானது தொல்லைகள் தந்தாலும் தொடர்பது அழிக்காது தெய்வ நட்பின் எல்லைக்குள் தொடர்ந்தே நிலைபெறுமே.

விளக்கம்: 2

தொன்றுதொட்டுத் தொல்லைகளின் போது தோளது கொடுத்துத் தொடர்ந்துதவிய நட்புதானது தொலைவான எல்லைக்குப் போனாலும்
தொடர்ந்திடுமே மாறிடாது.

(இவ்விரு விளக்கங்களும் சற்றே மாறுபடுகின்றன. என்றாலும் இரண்டுமே பொருத்தமாகத்தான் தோன்றுகின்றன.)
----------------------------------

அதிகாரம்: 65. சொல்வன்மை
குறள் எண்: 641

நாநல மென்னு நலனுடைமை யந்நலம்
யாநலத் துள்ளதூஉ மன்று.


நா நலம் என்னும் நலன் உடைமை; அந் நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று.

விளக்கம்:

நாவன்மை என்பது நலங்களில் மிகச் சிறந்த நலமாகும்; நாநலம் பிற நலத்தினுள், சிறப்பினுள் அடங்காத நன்னலமாய் விளங்கும் தனித்தன்மை
நிறைந்ததாகும்.
---------------

அதிகாரம்: 34. நிலையாமை
குறள் எண்: 334

நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.
நாள்என ஒன்றுபோல் காட்டி, உயிர், ஈரும்
வாள்--அது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்:

நேற்று ஒரு நாள் இன்று ஒரு நாள் என்று நாள்தோறும் நாள் கணக்கு எண்ணி வாழ்கிறோம்;

உண்மையில் அது நாள் அல்ல; நாள் என்ற மாயத் தோற்றத்தை வெளியில் காட்டி உள்ளே உயிரைச்சிறிது சிறிதாகஅறுக்கும் வாள்....

இந்த உண்மை உணர்பவர் பொழுதைப் பயனுள்ளதாகக் கழிப்பர்.