Thursday, November 27, 2008

சம்சாரம் அது எதார்த்தம்



பேருந்திலிருந்து இறங்கி நடந்தான் மாதவன்..லேசான தூறல்..
'இன்னும் விட்டபாடில்லையே இந்த மழை'
சற்றே வேகமாக நடையைப் போட்டான். பசுமலையில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று இருக்கும் ஒரு மாத பட்ஜெட்டில் அவன் மற்றும் மனைவி காஞ்சனாவின் குடித்தனம். தனிக் குடித்தனம்தான்.


'இன்னும் விசேஷமில்லையா' என்ற அனைவரின் கேள்விக்கும் சிரிப்பும் மழுப்பலும் கலந்து அசடு வழிய ஆரம்பித்துவிட்ட, திருமணமான பத்து மாதங்கள் முடிந்த அந்தக் கால கட்டம். திருச்சி சொந்த ஊரென்றாலும் கடந்த 6 வருடங்களாக பணிநிமித்தம் மதுரை வாசம். தூரத்துச் சொந்தமொன்று திண்டுக்கல்லில் இருந்ததைக் கண்டுபிடித்து உறவு விட்டுப் போகக்கூடாதுன்னு அவன் அப்பா, அம்மா தேர்ந்தெடுத்த பெண்தான் காஞ்சனா.


6 மணிக்கு வீட்டுக்குச் சென்றதும் ஒரு குளியல், 6.15க்கு காபி, 7 மணிக்கு செய்தித்தாள் அலசல், 7.15 க்கு அவர்கள் வீட்டுக்கு வரும் பக்கத்து விட்டுக் குழந்தையுடன் கொஞ்சல், சரியாக 7.30 அளவில் தினமும் ஏதாவது ஒரு சாக்கில் ஆரம்பிக்கும் பக்கத்துவீட்டுச் சண்டை, 8 மணிக்கு டிவி செய்தி,
8.30 க்குக் காஞ்சனா சமைத்துவைத்த சாம்பார், அவரைக்காய் அல்லது பீன்ஸ் எதாவது ஒரு பொரியல்...இதை அள்ளி விழுங்கும் போது

'எப்பதான் ரகம் ரகமாச் சமைக்கக் கத்துக்கப்போற' ன்னு

தொண்டை வரை வந்து காணாமல் போகும் வார்த்தைகள்..8.45 ஆனதும் டிரஸ் மாற்றிக் கொண்டு...முதுகுப்பக்கம் துளைத்தெடுக்கும் மனைவியின்

'கிளம்பியாச்சா' என்கிற வழக்கமான கேள்வி..

'கதவைச் சாத்திக்கோ. சீக்கிரம் வந்துர்றேன்'
சீட்டுக் கச்சேரிக்குப் புறப்பாடு..மதுரை வந்த புதிதில் தனிமையை விரட்டத் தொடங்கிய பழக்கம் இன்னும் தொடர்கிறது அதே நேரம் தினமும் நண்பன் ராம் வீட்டில்.

இதுதான் அவர்கள் வாழ்க்கை அன்றாடம். 'அப்பாடா..மழை வராது இனிமே. வெறிச்சிருச்சு' என்று வீடு நெருங்கியவனுக்குப் பகீரென்றது.

வீட்டு வாசலில் பூட்டு.

'மாமா..அத்தை குடுக்கச் சொன்னாங்க' 7.15 மணிக்கு வரவேண்டிய குழந்தை 6 மணிக்கே வந்தது கையில் ஒரு பேப்பருடன்.

'அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்துச்சு. உங்க போன் லைன் கிடைக்கவேயில்ல..அதான் கிளம்புறேன். நிலமைய எப்டின்னு போன் பண்றேன். மஞ்சு அக்காவைப் பால் வாங்கிக் காச்சி வக்கச் சொல்லிருக்கேன். அடுப்படில சாப்பாடு இருக்கும். போட்டுச் சாப்பிடுங்க. போன் பண்றேன். நீங்களும் பண்ணுங்க. - காஞ்சனா.'

உடனே போனை எடுத்து அவங்க வீட்டு எண்ணைச் சுழற்ற அடித்துக்
கொண்டேயிருந்தது. மச்சான் எண்ணைச் சுழற்ற அதுவும் கிடைக்கவில்லை.

'சே' என்றிருந்தது அவனுக்கு. முன்னறையில் வழக்கமான ஒழுங்கு இல்லை.கண்ணாடி அருகில் சீப்பில் சுருண்டு கிடந்த காஞ்சனாவின் முடி, கொடியில் தொங்கிய அவளது ஆடைகள்...

'தம்பி..இந்தாங்க பால்..அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லையாம்ப்பா. போன் போட்டுச்சு உனக்கு. கிடைக்கலியாம். நான் வேணா காபி போட்டுத் தரவா?'
மஞ்சு அக்கா.

'இல்லை..வேணாங்க்கா..நா சாப்பாடே சப்பிட்டுக்கிறேன். எத்தனை மணிக்கு போனா?'

'காலேல 10 மணியிருக்கும். சரி. தம்பி. எதுவும் வேணும்னாச் சொல்லிவிடுங்க.'
மஞ்சு போய் விட்டாள்.
பத்து மணிக்கே போயிட்டாளா..


...ஒவ்வொரு இடத்திலும் காஞ்சனாவின் வாசம், சுவாசம் மனதை நெருட சட்டையைக் கூடக் கழற்றாமல் நாற்காலியில் சரிந்தான் மாதவன்..
செய்தித்தாளில், காபியில், டிவியில் மனம் லயிக்கவில்லை. அவள் மெல்லிய கொலுசுச் சத்தம், பூவாசம் எல்லாம் கலந்து நினைவைப் புரட்ட துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு.

'பாவம் அவள். ஒரு வெளியே தெருவே அழைச்சுட்டுப் போனதில்ல. சொல்லிக்கிறாப்புல ஒண்ணு வாங்கிக் கொடுத்ததில்ல. இனிமே இப்டி இருக்கக் கூடாது..' பிசைந்த சாம்பார் சாதம் இன்று புது ருசியுடன் இருந்தது.
ஆனாச் சாப்பிடத்தான் முடியவில்லை.

'இத்தனை நாள் ரொம்பத் தப்புப் பண்ணிட்டேன். யார் கேலி பண்ணாலும் பரவால்ல..இனிமே சீட்டுக் கச்சேரியைக் குறைச்சுக்கணும். அப்பப்ப வெளில கூட்டிட்டுப் போணும். அவளுந்தான் என்னிக்காவது வாயைத் தொறந்து ஒரு குறை சொல்லிருப்பாளா..' மனைவி மேல் காதல் பொங்கி பொங்கி வழிந்தது அவனுக்கு. கண்ணீருந்தான். ஆனா அதற்காக அவன் வெட்கப்படவில்லை. துடைத்துக்கொள்ளவுமில்லை.

மீண்டும் எண்களைச் சுழற்றினான். கிடைச்சால்தானே..ச்சே!
மணி 8.30. வாசலில் ஆட்டோச் சத்தம் கேட்க, காஞ்சனா வந்துவிட்டாள்.

'அத்தைக்கு இப்போ எப்டிருக்கு?'

'இப்ப நல்லாருக்காங்க. வழக்கமா வர்ற மூச்சு இரைப்புதான். உங்க போன் கிடைக்கல. நேரா ஆஸ்பத்திரிக்குப் போனேன். ஆக்ஸிஜன் கொடுத்திருக்காங்க. சாப்பிட்டீங்களா? சாயந்திரம் டிஸ்சார்ஜ் பண்ணிருப்பாங்க. நாந்தான் போட்டது போட்டபடி கிடக்குன்னுட்டு ஓடிவந்துட்டேன்..' பட படவென்று அவள் தொடர,

'கிளம்பியாச்சா' என்ற அவள் கேள்விக்கு முன்...



'கதவச் சாத்திக்கோ. சீக்கிரம் வந்துர்றேன்' மாதவனின் வழக்கமான புறப்பாடு..
*அப்பாடா..ரொம்ப நாளா நம்ம திவ்யா மாதிரிப் படத்தோட கதை போடணும்கிற ஆசை அரைகுறையாவாவது நிறைவேத்தியாச்சு...
* இது ஓ ஹென்றியின் 'The Pendulum' என்கிற ஆங்கிலச் சிறுகதையின் தழுவல்..

Saturday, November 22, 2008

சாதனையாளர் முனைவர் மாசிலாமணி






புற்று நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த திருமதி. அனுராதா அவர்களைப் நம்மால் மறக்க முடியாது. இந்நோய் ஒரு கொடிய நோயாக இன்னும் இருந்து வருகின்ற போதும் பலவித சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் பலரையும் நாம் பார்க்கிறோம்.

இத்துறையில் தமிழர்க்கு மகுடம் சூட்டும் வண்ணம் ரியாத்வாழ் தமிழர், முனைவர் பேராசிரியர் மாசிலாமணி அவர்கள் அரும்பணி ஆற்றியுள்ளார். இந்நோயின் ஆரம்பகட்ட காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக அவரது கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. இவர் ரியாத்திலுள்ள கிங் சவுத் பல்கலைக்கழகத்தில் பௌதிகத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சென்னையிலும் இவர் நிறுவிய 'தென்றல்' மையம் மூலம் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து அதில் உள்ள உயிர்மூலக் கூறுகளை லேசர் ஒளி மூலம் பகுத்தெடுத்து, காலையில் எடுக்கப்படும் முதல் சிறுநீர்த்துளியின் மூலக்கூறுகளையும் பகுத்தெடுத்துச் சோதனைகள் செய்தார். இவைகளை ஆய்வுக்குட்படுத்திய போது நோயற்றவர்களிடம் இல்லாத சில மூலக்கூறுகள் புற்றுநோய் உள்ளவர்களிடம் அளவுக்கு மீறி இருந்தது தெரியவர, இதைக் கொண்டு புதிதாக மாசிலா புற்றுநோய் ஆய்வு (Masila Cancer Diagnostic) என்ற புதிய நுட்பத்தைக் கொண்டுவந்தார்.

இதன் மூலம் வெறும் 5 மி.லி இரத்தமும் 5 மி.லி சிறுநீரும் கொண்டு ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா இல்லையா, இருந்து குணமாகி விட்டதா அல்லது மீண்டும் வந்திருக்கிறதா, வர வாய்ப்பிருக்கிறதா என்பன போன்ற பல விஷயங்களை கணிக்கமுடியும். இந்தப் புதிய முறை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் (ICMR) தர நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறையின் தொடர் ஆராய்ச்சி காரணமாக நுரையீரல் புற்று நோயை மட்டும் தனித்துக் காட்டும் புது உயிர்மூலக்கூறு பற்றியும் கண்டுபிடித்தார். இந்த முறையின் நம்பகத்தன்மை 80% என்பதும், இதுவரையில் இத்தகைய Biomarker நுரையீரல் புற்றுநோய்க்கு கண்டுபிடிக்கப்படவில்லையென்பதும் மிகச் சிறப்பு வாய்ந்த செய்திகளாகும்.

இந்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை மற்றும் இதர வியாதிகளை எளிதில் கண்டறிவது போல, புற்றுநோயின் அறிகுறிகளையும் அறிந்து தற்காத்துக் கொள்ள முடியும்.சமீப காலமாகத் தமிழகத்தின் பல கிராமங்களிலும் இச்சோதனை முகாம் இவர் நடத்திய போது, பலர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், வருங்காலத்தில் பாதிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது என்பதும் அறிய வந்தது. அவர்களுக்கு அடுத்த கட்ட மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இவர் சிறந்த இலக்கியவாதியும் கூட. தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
இவரது சேவையைப் பாராட்டும் முகமாகக் கடந்த வாரம், சவூதி இளவரசர் நாயிஃபா பரிசும் பட்டயமும் அளித்துக் கௌரவித்துள்ளார். அரபு நாடுகளில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் கௌரவம் இது. முதன் முதலில் இதைப் பெற்றவர் ஒரு தமிழக விஞ்ஞானி என்பது மிகவும் பெருமைப்படத் தக்கதொரு விஷயம்.

Wednesday, November 19, 2008

வேலூர் பொற்கோவில்..அம்மன் Vs அம்மா

பொதுவாகவே கோவில்களுக்குப் போவதென்றால் எனக்கு மிகவும் விருப்பம். ..எந்த மதக் கோவிலாக இருந்தாலும் விரும்பிப் போவது என் வழக்கம். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதனுடன் இணைந்து பரிமளிக்கும் வரலாற்றுச் சிறப்பு, கட்டடக்கலையின் அழகு, அங்கு நெரிசல் கூச்சல் நடுவிலும் பரிமளிக்கும் ஓர் அமைதி..இவற்றை ரசிப்பதற்காகவே கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என்று வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தவறாமல் பார்த்துவிடுவேன். (சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மதினாவைப் பார்க்க இயலாததும் ஒரு பெரிய வருத்தந்தான்.)

சமீபத்தில் இந்தியா வந்த போது வேலூர் பொற்கோவிலைப் பார்க்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. நிறைய எதிர்பார்ப்பு கூடி வர ஆகஸ்ட் 15 அன்று மாலை 5 மணியளவில் போனோம்.
திருப்பதி போல் கூண்டு கூண்டாக அமைக்கப்பட்டிருந்தது. கூட்டம் சுமாராக இருந்தும் ஏனோ அன்று ஒரு கூண்டு மட்டும் திறந்திருந்தார்கள்.

அதிக நேரம் காத்திருக்க வேண்டுமோ என்று எண்ணிய பயந்த போது..சடாரென்று கதவு திறக்க...சர சரவென்று நகர்ந்த வரிசையில் வேகமாக முன்னேறினோம். கொஞ்ச தூரம் போனதும் பாதுகாப்பு சோதனை..

நடந்து உள்ளே போனபோது முதலில் தோன்றியது பிரமிப்புதான்.. போகப்போக ஒரு புறம் அம்மனின் படமும், மறுபுறம் 'அம்மா'வின் படமும்..அம்மா என்று அவர்கள் குறிப்பிட்டது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதரை...காவி உடையில் சாந்தமாகக் காட்சியளித்தது அவர் முகம்..பின் 'அம்மா' என்ற வயதான பெண்மணியும் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

நான் மட்டுமல்லாமல் என்னுடன் வந்த உறவினர்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். எங்கும் எதிலும் அம்மா..அம்மா..அம்மன் படம் ஒரு மூலையில் தேமே என்று இருந்தது. வளைந்து, நெளிந்து சென்ற பாதையில் செயற்கையாகப் படைக்கப்பட்ட
இயற்கைக்காட்சியமைப்பையும் ரசித்தபடி, எழுதப்பட்டிருந்த பொன்மொழிகள், நன்கொடை விபரங்கள் படித்தபடி ஒருவழியாக சன்னிதிக்கு வரும் போது..ஒரு வேளை வடக்கத்திப் பாணியில் குட்டியூண்டு உருவமாக லட்சுமி நாராயணி இருந்து விடுவாளோ என்று பயந்தேன். ஆனால் நம் பக்கம் போல அளவில் சற்றே பெரியதாக மிகவும் அழகாக ஆபரணங்களோடு ஜொலித்த அம்மனைப் பார்க்கையில் சற்றே ஆறுதல்.

மாலை 6 மணி நெருங்கிவிட்ட படியால், மின்சாரவிளக்குகள் எரியத் தொடங்க, தகதக என்று ஜொலித்தது மிக அழகு.

திரும்பி வந்த பாதை நல்லவேளையாக சீக்கிரம் வெளியே கொண்டுவிட்டது. அப்பாடா என்று நான் நினைத்த வேளை, என் உறவினர்களுக்கு ஒரு சந்தேகம்..அங்கே வெளியே வரும் வழியில் இருந்தது அம்மனின் பாதமா..அம்மாவின் பாதமா....

மொத்ததில் பொற்கோவில் என் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை..நம்ம ஊரிலும் பொற்கோவில் என்ற சாதனை படைத்துவிட்ட சந்தோஷம்..விஜிபி தோட்டத்தின் நடுவில் ஒரு கோவில் இருந்தால் எப்படியிருக்கும்..மைசூர் அரண்மனையில் தங்க நிறப் பெயிண்ட் பூசப்பட்ட ஒரு மண்டபம் இருக்குமே அதைப் பார்த்தால் எப்படியிருக்கும்.. ..அப்படியிருந்தது எனக்கு..நல்ல பரவசமான அனுபவம்..

Sunday, November 16, 2008

என்று புலரும் பொழுது?

பூக்களின் மடியில்
புலர்ந்த பொழுதுகள்
புலம்பெயர்ந்து போனதெங்கே?

புல்வெளித் தரையில்
பகிர்ந்த பொழுதுகள்
புதைந்துதான் போனதெங்கே?

கள்ளத் தோணியில்
கடல் தாண்டிப் போன
மாமன் தருவான்
நல்லதொரு செய்தி..

குண்டெய்தி அவன்
மாண்ட செய்தி
அறிந்திடாத மடமகள் மனதில்
மலையளவுக் கேள்விகள்
வந்து போயின சடுதி..

தலைவாரிப் பூச்சூட்டித்
தாயவள் அனுப்பிய செல்வமகள்
மணியோசை கேட்டு
வகுப்பில் நுழைவாளோ..
வெடியோசை கேட்டுக்
குழியில் பதுங்குவாளோ..

பயத்தின் சுவடுகள்
பாரமாய் அழுத்த
நினைவலைகள் ஓயுமுன்னே
பறந்துவந்து குடிசையில்
பாய்ந்த குண்டு
நெருப்பலைகள் வாரியிறைக்கக்
கருகி மடிந்தது தாயவள் தேகம்.

உருவாகும் முன்னே
உடைந்து சிதறியது
கனவுகளின் கோலம்.

மெல்ல அழிந்து வரும்
எம் இனமே!
திருத்தியெழுதிய தீர்வு கண்டு
உமை மீட்டிட இங்கு யாருண்டு?

Tuesday, November 4, 2008

ஆஹா..அடச்சீ..ஐயோ..அப்பாடா..

பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த பொன்முடி கொடுத்த அதிரடி பதில் அறிக்கை படிக்கையில் ஏதோவொரு சந்தோஷம்...ஆஹான்னு...ஏன்?

ரஜினி பேட்டி பார்த்தபோது..நான் வந்தாலும் வருவேன், வராட்டியும் இருப்பேன் என்று நம் வானிலை அறிக்கை மாதிரிப் பேசிய போது அட....போங்கய்யா...நீங்களும் உங்க ரசிகர் மன்ற சந்திப்பும்...வருத்தம் தெரிவித்தாராம் மன்னிப்புக் கேட்கவில்லையாம்...எதார்த்தம் துளிக் கூட எட்டிப் பார்க்காத அப்படி ஒரு சந்திப்பு... ஏதோவோர் சலிப்பு..அடச்சீன்னு..ஏன்?

என்னதான் இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை, நடிகர்கள் உண்ணாவிரதம், நன்கொடை வசூலிப்பு என்று ஆயிரம் இருந்தும்....No peace of mind...இதெல்லாம் எவ்வளவு தூரம், எத்தனை காலம் என்ற நெருடலும் ஆதங்கமும்...நிஜமான அமைதி என்று கிட்டும் என்ற எதிர்பார்ப்பும்....ஐயோன்னு..ஏன்?

என்னதான் கும்ப்ளே நல்ல ஆட்டக்காரர் என்றாலும், இதே போல் முடிவெடுத்துச் சீக்கிரம் பெரிசுங்களும் இளசுங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை (நப்பாசை?)...அப்பாடான்னு..ஏன்?