Monday, May 14, 2012

நான் அறிந்த சிலம்பு – 19

புகார்க்காண்டம் – 3. அரங்கேற்ற காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 114 - 120

சிலம்பின் வரிகள் இங்கே: 121 - 128

தலைக்கோல் அமைதி

பெரும்புகழ் வாய்ந்த மன்னரவர்
போரிட்டுப் பகைவர் வென்று,
அப்பகையரசர் புறமுதுகிட்டுத் தோற்றோட,
அவர்தம் வெண்கொற்றக் குடைக்காம்பதனை
எடுத்தாங்கு வருவர்.

அக்காம்பின் கணுக்கள் முழுதும்
நவமணிகள் இழைத்தே அலங்கரிப்பர்.
கணுக்களின் இடைப்பட்ட பகுதிகளில்
‘சாம்பூநதம்’ எனும் உயர்வகைத் தங்கத் தகட்டை
வலம்புரியாகவும் இடம்புரியாகவும்
வளைத்துக் கட்டி ஒரு கோல் என்றாக்குவர்.

உலகையே தன்
வெண்கொற்றக் குடையின் கீழ்
புரந்திருக்கும்
மன்னவன் அரண்மனையதனில்
அக்கோலினை வைத்து
இந்திரன் புதல்வன் சயந்தன் என
அக்கோலினை வரித்திட்டு
மந்திரங்கள் ஓதி
வந்தனைகள் செய்து
பூசித்தே வழிபடுவர்.
இதுவே தானது
‘தலைக்கோல்’ என்பது.

புண்ணிய நதிகளில்
பொற்குடங்களில் முகர்ந்து வந்த
நன்னீர் கொண்டே தலைக்கோலதனை
நீராட்டிய பின்பு
மாலைகளும் அணிவிப்பர்
முற்கூறிய ஆடலாசிரியன் முதலானோர்.

பொருந்தியதொரு நன்னாளில்
பொன்னால் செய்த ‘பூண்’ மற்றும்
‘முகபடாம்’ எனும் பட்டம்
இவ்விரண்டும் கொண்டிருக்கும்
பட்டத்து யானையின் பெரிய கையதனில்தான்
தலைக்கோலினை வாழ்த்தியே வழங்கிடுவர்.

மும்முரசுகளும் ஆர்த்து ஒலிக்க
அவற்றுடன் சேர்ந்து
இன்னும் பல வாத்தியங்களும் ஆர்ப்பரிக்க
அரசன் அவனும்
தம் ஐம்பெருங்குழுவினர் சூழ வரப்
பட்டத்து யானையது
வீதியில் நின்ற தேரினை வலம்வந்து
தலைக்கோல் அதனைக்
கவிஞனிடம் அளித்துவிடும்.

( ஐம்பெருங்குழுவினர் – அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதுவர் சாரணர் )

அனைவரும் ஒருமித்தே ஊர்வலம் வந்தபின்
தலைக்கோலதனை எதிர்முகமாக வைத்திடுவான்
கவிஞனவன் ஆடல் அரங்கதனில்.

மாதவியின் நாட்டியம்
அரங்கேறவிருந்த அரங்கினிலும்
செப்பிய முறைப்படி
தலைக்கோல் வைக்கப்பட்டது.

வல்லமை 07.05.12 இதழில் வெளிவந்தது.

Monday, May 7, 2012

நான் அறிந்த சிலம்பு - 18‏


புகார்க்காண்டம் - 3. அரங்கேற்ற காதை

 நாட்டிய அரங்கின் அமைப்பு

சிலம்பின் வரிகள் இங்கே: 95 - 113

 நாடக நூலார் சொல்லிவைத்த
இயல்புகளினின்று மாறிடாது
நல்லதொரு நிலத்தைத்
தேர்ந்தே எடுத்தனர்
 நாட்டிய அரங்கத்துக்கென்றே.


புனிதம் வாய்ந்த பெருமலையாம்
பொதிகை மலைப்பக்கங்களில்
நீண்டு வளர்ந்திடும் மூங்கிலதனில்
ஒரு கணுவுக்கும் அடுத்க கணுவுக்கும்
இடைப்பட்டிருந்த ஒரு சாண்
 கொண்டேதான் வந்தனர்
அரங்கது அமைத்திட.


அரங்கமைப்பவன் உத்தமன்
தன் கைப்பெருவிரலில்
இருபத்து நான்கு வரும்படி அளந்து
அம்மூங்கில் வெட்டியே செய்தனன்
அரங்கமைக்கும் கோலினை.


(குறிப்பு: அளவை முறை:


அணு எட்டு = தேர்த்துகள்; தேர்த்துகள் எட்டு = இம்மி; இம்மி எட்டு = எள்ளு;
எள்ளு எட்டு = நெல்லு: நெல்லு எட்டு = ஒரு பெருவிரல்


உத்தமன் -  அதிகம் உயரம் இல்லாத, குறைவான உயரம் இல்லாத நடுத்தர உயரமான உத்தமனிடம் பெருவிரல் அளவு எடுக்கப்படும்.


பெருவிரல் இருபத்து நான்கு = ஒரு கோல்)
 

மூங்கிலின்
ஏழுகோல் அகலமும்
எட்டுக்கோல் நீளமும்
 ஒருகோல் உயரமுமாய்
அமைத்திட்டனர் அரங்கதனை.


உத்தரமாய் மேல்நிற்கும் பலகைக்கும்
தளமாய்க் கீழ்நிற்கும் பலகைக்கும்
இடையே இருந்த இடைவெளி
நான்கு கோல்.


அரங்கின்
உள் புக வெளிவரத்
தோதாய் இருந்தன
வாயில்கள் இரண்டு.


இங்ஙனம்
அழகுற அமைந்த அரங்கதன்
மேல்நிலை மாடத்தில்
வருணபூதங்கள் நால்வகை
சித்தரித்து வைத்தனர்
யாவரும் புகழும்படி.


(நால்வகை பூதங்கள்
வச்சிரதேகன், வச்சிரதந்தன், வருணன், இரத்தகேசுவரன்)


ஆங்கிருந்த தூண்களின் நிழல்
அரங்கதன் கண்ணும்
அவையதன் கண்ணும்
வீழ்ந்திடா வண்ண்ம்
மாண்புறு நிலை விளக்குகளை
ஆங்காங்கே வைத்தனர்.


இழுத்திடும் போதினில்
ஒரு பக்கம் செல்லும்
ஒருமுக எழினியையும் (எழினி - திரை )
அரங்கின் பல பக்கங்களிலிருந்து
மேடைக்கு நடுவில்
பொருந்தும் வண்ணமாய்ப்
பொருமுக எழினியையும்
அவிழ்த்துத் தளர்த்துகையில்
மேலிருந்து கீழிறங்கி வரும்
கரந்துவரல் எழினியையும்
பாங்குறவே அமைத்தனர்.


ஓவிய வேலைப்பாடுகளுடன்
மேல் விதானக் கூரைதனை
ஒழுங்குறவே அமைத்தனர்.


புகழ்பெற்ற முத்துமாலை வகைகளாம்
தாமம் வளை மாலைகள்
அரங்கம் முழுதும் தொங்கவிட்டனர்.


புதுமையான அரிய வேலைப்பாடுகளுடன்
பொலிந்தே சிறந்தது நாட்டிய அரங்கது.

வல்லமை 30.04.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, May 1, 2012

நான் அறிந்த சிலம்பு - 17

புகார்க்காண்டம் – 03.அரங்கேற்று காதை

யாழ்ப் புலவன் – சென்ற பகுதியின் தொடர்ச்சி

சிலம்பின் வரிகள் இங்கே 82 – 94:

உச்சத்தில் நிற்கும் தாரம்;
அதன் தாக்கத்தால்
இறுதியில் நின்ற கைக்கிளை முதலாய்
அனைத்து இசைகளும்
நூல் முறைக்கேற்பத் தத்தமக்குப்
பொருந்திய முறையான
திரிபுகள் பெற்றுப் பொலிந்தன.

(உழை இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை
வலமுறை: கைக்கிளை, துத்தம், குரல்
இடமுறை: தாரம், விளரி, இளி)

வலமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி
கைக்கிளை படுமலைப் பாலையாய்
துத்தம் செவ்வழிப் பாலையாய்
குரல் அரும் பாலையாய்த் திரிந்தன.

இடமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி
தாரம் கோடிப் பாலையாய்
விளரி விளரிப் பாலையாய்
இளி மேற்செம் பாலையாய்த் திரிந்தன.

இங்ஙனம்
படுமலைப் பாலை தொடங்கி
மேற்செம் பாலை இறுதியாகத் தொடர்கையில்
நீண்டு கிடக்கும் சுரங்களின் வரிசையுடைத்து
யாழதன் இசை.

ஆதியும் அந்தமுமாய்
நின்றிருக்கும் நரம்புகளைப்
பொருத்தமுறக் கொண்டிருப்பது
யாழதன் இசை.

அரும்பாலை முதலான
இடமுறைப் பாலைகள்
மெலிந்து இசைக்கும்
யாழ் தன்னில்.

கோடிப்பாலை முதலான
வலமுறைப் பாலைகள்
மெலிந்து இசைக்கும்
குழல் தன்னில்.

வலிவு மெலிவு சமம்
இம்மூவகை ஓசைகளின்
நரம்படைவு கெடாத
பண்ணீர்மை குன்றாத
முறையான இயக்கம்
எழுத்து எழுத்தாய்
இசையச் செய்திடவல்ல
யாழ் ஆசிரியன் தானும்…

(வலிவு – மேல் / உச்சம்; தாரம்
மெலிவு – கீழ் /மந்தம்
சமம் – சமன் / மத்திமம்)

ஆடல் ஆசான் தன்னொடு
இசையோன் தன்னொடு
முத்தமிழ்ப் புலவன் தன்னொடு
தண்ணுமை ஆசிரியன் தன்னொடு
குழலோன் தன்னொடு
யாழ்ப் புலவன் தானும்
ஒருமித்திருந்தனன்
நாட்டிய அரங்கதனில்.

வல்லமை 23.04.12 இதழில் வெளிவந்தது.

Monday, April 23, 2012

நான் அறிந்த சிலம்பு - 16

புகார்க்காண்டம் - 03. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே..70-81


யாழ்ப் புலவன்


ஏழிசைதனை
இருவரிசைகளாக்கிச் செய்யப்பட்ட
'செம்முறைக் கேள்வி' என்னும்
சிறப்புப் பெயர் பெற்றது யாழ்.

செம்பாலை முதலிய
எழுபாலைப் பண்களையும்
அவற்றுக்கிடையே தோன்றும்
ஐந்து அந்தரப்பாலைப் பண்களையும்
அவற்றின் இணை நரம்புகளையும்
அணைத்து இசைத்துச் சென்றிடும் யாழ்.

இசைத்தமிழின் இலக்கணங்கள்
இம்மியளவும் குறைந்திடாது
வட்டப்பாலையென இசைத்து
அளவைகளின் அழகோடு
அரங்கேற்றுவது யாழ்.

வட்டப்பாலை முடியும் இடத்து
வன்மையாய் நிற்பது 'தாரம்'.
வட்டப்பாலை தொடங்கும் இடத்து
மென்மையாய் நிற்பது 'குரல்'.

'தாரம்' எனும் இசை அணங்குக்குரியவை
அலகுகள் இரண்டு.
'குரல்' எனும் இசை மகளுக்குரியவை
அலகுகள் நான்கு.
 
தாரம் அதன் அலகுகள்
இரண்டில் ஒன்றையும் (1)
குரல் அதன் அலகுகள்
நான்கில் இரண்டையும் (2)
கூட்டியே (1+2 = 3)
தார நரம்பில்
மூன்று (3) அலகுடைய
இனிய இசையை
உண்டாக்கியவிடத்துத்
தோன்றினள் 'கைக்கிளை ' எனும்
 இசை அணங்கு.

தாரம் எனும்
மெய்க்கிளை நரம்பு
கைக்கிளையாகி நின்றது இங்ஙனம்.

(தாரம் 1 அலகு + குரல் 2 அலகு = கைக்கிளை)

தாரம் என்னும் இசைத்தாய்
 பொலிவுடன் வலிவும் உடையவள்;
தன்னிடம் எஞ்சியிருந்த
ஓர் அலகை
அருகில் இருந்த
'விளரி' என்பாளுக்கு வழங்கினள்;
இவ்வழியே
'விளரி' தன் தன்மையது மாறித்
'துத்தம்' எனும் நரம்பாகிப் போனது.

அதுபோலவே
குரல் இளி உழை முதலான
ஏனைய இசை மகளிரும்
தத்தமக்கு ஏற்ற
கிளைஞர் இடங்களை எய்தினர்.

செம்முறை மாறிப்போய்
இங்ஙனம்
பதினாற் கோவையானது
 யாழ்ப் புலவன் இசைக்கும் போது.
 
உழை இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை
இவை கிளைத்த வழியில்
மென்மையாய் நான்கும்
சமனாய் ஏழும்
வன்மையாய் மூன்றும்
இவை பதினான்கு கோவை.

உழை நின்றது முதல் இடம்.
 கைக்கிளை நின்றது இறுதி இடம்.

இப்புதிய கோவைகளாலே தோன்றின
செம்பாலை முதலிய புதிய பண்கள்
புதியதொரு மரபினிலே
யாழிசை தன்னிலே.

(யாழ்ப் புலவன் தலைப்பில் முதல் தொகுப்பு இது..அடுத்த தொகுப்பு அடுத்த பகுதியில் தொடரும்.)

வல்லமை 16.04.12 இதழில் வெளிவந்தது.

Friday, April 20, 2012

நடுநிசிக்குப் பின் மூன்றாம் ஜாமத்தில்...

ஒரு ஹிந்திக் கவிதையின் தமிழாக்கம்

நான் பார்த்திருந்தேன்
என்னிலிருந்து மிகவும் தூரத்தில்
விண்மீன்களை.

நான் அவற்றைப் பார்த்த அந்தக்கணம்
அவற்றிலிருந்து எனக்கும்கூட
அதே தூரம்தான்.

கண்சிமிட்டிக் கடந்து போகும்
அவ்விண்மீன்கள்
கடந்து செல்லும்
காலமது போலவே.

நடு நிசிக்குப் பின்னான
மூன்றாம் ஜாமத்துப் பொழுது
இரவின் ஆழத்தினூடே
வேட்டையாடி விரட்டிச் செல்கிறது
விடியல்தனை.

முழுமையானதொரு தெளிவுக்கு
வரமுடியவில்லை என்னால்.

முதல் முறையாகத்தான்
இந்த வாழ்க்கையை
நான் வாழ்கிறேனா?
இல்லை,
மீண்டுமொருமுறை
திரும்பத்தான் வாழ்கிறேனா?
வாழ்ந்து கொண்டேயிருக்கையில்
சுவாசத்தின் அந்த முதல் கணத்தை
மறந்துதான் போனேனா?

மீனும்கூடத் தண்ணீரைக் குடித்திடுமா?
சூரியனும்கூட வெப்பமது உணர்ந்திடுமா?
ஒளியும்கூட இருளதனைக் கண்டிடுமா?
மழையும்கூட நனைந்துதான் போயிடுமா?
கனவுகளும்கூட நித்திரை குறித்த
வினாக்களைத்தான் வினவிடுமா
என்னைப் போலவே?

நான் நடந்தேன்
நீளமான மிகவும் நீளமான
நடை நடந்தேன்.

அப்போது நான் பார்த்தேன்.
நான் பார்த்த அந்தக்கணம்
எனக்கு மிக அருகில் விண்மீன்கள்.

இன்றைய பொழுது முழுவதும்
மழையது பொழிந்திட
உந்தன் முகத்திலிருந்து
கழுவப்பட்டுப்போயின வார்த்தைகள்.

அதீதம் ஏப்ரல் 09, 2012 இதழில் வெளிவந்தது...

ஹிந்திக் கவிதை

मैंने तारों को देखा बहुत दूर
जितना मैं उनसे
वे दिखे इस पल में
टिमटिमाते अतीत के पल
अँधेरे की असीमता में,
सुबह का पीछा करती रात में
यह तीसरा पहर

और मैं तय नहीं कर पाता
क्या मैं जी रहा हूँ जीवन पहली बार,
या इसे भूलकर जीते हुए दोहराए जा रहा हूँ
सांस के पहले ही पल को हमेशा !

क्या मछली भी पानी पीती होगी
या सूरज को भी लगती होगी गरमी
क्या रोशनी को भी कभी दिखता होगा अँधकार
क्या बारिश भी हमेशा भीग जाती होगी,
मेरी तरह क्या सपने भी करते होंगे सवाल नींद के बारे में

दूर दूर बहुत दूर चला आया मैं
जब मैंने देखा तारों को - देखा बहुत पास,
आज बारिश होती रही दिनभर
और शब्द धुलते रहे तुम्हारे चेहरे से


After Midnight

I saw the stars far off -
as far as I from them:
in this moment I saw them -
in moments of the twinkling past.
In the boundless depths of darkness,
these hours
hunt the morning through the night.

And I can't make up my mind:
am I living this life for the first time?
Or repeating it, forgetting as I live
the first moment of breath every time?

Does the fish too drink water?
Does the sun feel the heat?
Does the light see the dark?
Does the rain too get wet?
Do dreams ask questions about sleep as I do?

I walked a long, long way
and when I saw, I saw the stars close by.
Today it rained all day long and the words were washed away
from your face.


மூலம்: Theesra Pehar   Hindi poem by Mohan Rana
ஆங்கில மொழியாக்கம்: Lucy Rosensteinஆங்கிலக் கவிதையாக்கம்: After Midnight By Bernard O'Donoghue

Sunday, April 15, 2012

நான் அறிந்த சிலம்பு - 15

புகார்க்காண்டம் - 3. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே 56 -60

சிலம்பின் வரிகள் இங்கே 61 - 69

குழலாசிரியன்

இசைநூல் சொல்லிய முறையதன்படி
சித்திரப் புணர்ப்பு வஞ்சனைப்புணர்ப்பு
இவ்விரு கூறுகள் அறிந்தே இசைப்பவன்.
இசையாசிரியன் அவனுக்கு நிகராய்
அறிவுத்திறம் வாய்த்தவன்.

ஏற்றம் இறக்கம் இருவகையுடனே
வர்த்தனைகள் நால்வகையாலே
பண்ணின் மொத்த வகைகள்
மயக்கமின்றி இசைக்க வல்லோன்.
தம்முள் இழைந்திடும்
கூட்டிய இசையாம்
குரல் நரம்பும் இளி நரம்பும்
துல்லியமாய்க் கேட்டுணர்ந்து
தம் இசைநூல் அறிவாலே
இணை நரம்புகளின் வரவும் உணர்ந்து
இசைக்கவல்ல தொழில் வல்லாளன்.

சிறப்பாய்ப் பொருந்திய
பண்ணதனைச் சரியாய் அமைத்து
முழவின் இருகண் நெறிகளுடன்
தாள இயல்புகளின் திறமுமறிந்து
தண்ணுமையாளன் தன்னுடனும்
தக்கவாறு பொருந்தி இசைப்பவன்.

இசையின் இயல்பறிந்து
இசையாசிரியன் பாடுகையில்
இளிநரம்பை முதலாவதாக
யாழின்கண் நிரல்படவைத்து
பண்ணில் வரும் சுரங்கள்
குறைவுபடாது வளர்த்து
பண்ணுக்குரிய சுரங்கள் தவிர
வேற்றுச் சுரங்களின் கலப்பேதுமின்றி
அவற்றோடு ஒற்றியிருந்து,
இன்புற இயக்கி
இசையின் பண்ணிலக்கணத்துடன்
பொருந்திட வைத்துக்
குழலது இசைக்கும் திறமையாளன்.

வாரப்பாடல்களின் இசை
சரிவர நிரம்பச்செய்து
அளவுற அழகுற இசைப்பவன்.

இசைத்திடும் கணமதனில்
வாரப்படலின் இடைத்தோன்றும்
சொல் இசை பொருள் ஒழுங்குகள்
(வாய்ப்பாடல் இசைப்பது போலவே)
இசை எழுத்துருக் கொண்டாற்போல
இயைந்து இசைத்திட
சொற்களின் நீர்மைகள்
சற்றுக்கூடச் சிதைந்திடாமல்
எழுத்து எழுத்தாய்
வழுவின்றி இசைக்கும்
குழலோன் தன்னொடும்..

குறிப்பு::

வர்த்தனை- ஏழிசையைப் படிப்படியாக ஏற்றி இசைத்தல்
நால்வகை வர்த்தனை - ஆயப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை
ஏற்றம் இறக்கம் - ஆரோகணம் அவரோகணம்
பண்ணின் வகைகள் - நூற்று மூன்று வகைகள்
குரல் இளி - சட்சம் பஞ்சமம்
முழவின் இருகண் - இடக்கண், வலக்கண்
நிரல் - வரிசை,ஒப்பு
பண்ணிலக்கணம் - பதினோரு வகை


வல்லமை 09.04.12 இதழில் வெளிவந்தது.

குறளின் குரல் - 56

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 108. கயமை
குறள் எண்: 1080

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.


எற்றிற்கு உரியர் கயவர்? ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து
.

விளக்கம்:

தமக்குத் துன்பம் வந்ததையே காரணமாகக் காட்டி, தம்மை விற்பதற்குக்கூட விரைந்து செல்லும் தன்மையுடையவர் கயவர். இந்த ஒரு செயல் தகுதியைத் தவிர அவர்கள் வேறு எத்தன்மையராயிருப்பதற்கு உரியவர்? பிறரது பொருளையே எதிர்பார்த்து, அவர்களுக்கு அடிமையாக இருப்பார்களே தவிர, முயற்சி செய்யும் தன்மையுடையவர்கள் ஆக மாட்டார்கள்.

-----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 02. வான்சிறப்பு
குறள் எண்: 17


நெடுங்கலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலிதான்ல்கா தாகி விடின்.

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின்.


விளக்கம்:

கடலில் முகந்தெடுத்த நீரை மீண்டும் மழையாகப் பொழிந்து அக்கடலுக்கு உதவுகிறது மேகம். அங்ஙனம் மேகம் உதவாவிடில் கடல் வளம் குறையும். மணி, பவளங்கள் விளையாது போகும். கடல் வாழ் உயிரினங்களும் இல்லாது போகும்.

மனித சமுதாயத்திலிருந்து உயர்ந்து வெற்றியும் புகழும் கண்டவர்கள், மீண்டும் இறங்கி வந்து அச்சமுதாயத்திற்கு உதவினால்தான், சமுதாயமும் சிறக்கும்.
நீர்மை- நீரின் தன்மை, எளிமை, அழகு, ஒளி, நிலைமை, ஒப்புரவு
எழிலி - மேகம்
தடிந்து எழிலி - முகந்த நீரை மீண்டும் பொழியும் மேகம்

--------------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 99. சான்றாண்மை
குறள் எண்: 984


கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்து சால்பு.


கொல்லா நலத்தது, நோன்மை; பிறர்தீமை
சொல்லா நலத்து, சால்பு.


விளக்கம்:

பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பது தவம். பிறரின் குற்றங்குறைகளை, அவர் செய்த பழிச்செயலை வாய்விட்டுச் சொல்லாமல் இருப்பது நற்பண்பு.

நோன்மை - தவம், பொறுமை, வலிமை, பெருந்தன்மை
சால்பு - மேன்மை, நற்குணம், தன்மை, கல்வி

--------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 32. இன்னா செய்யாமை
குறள் எண்: 313


செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்.


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்,
உய்யா விழுமம் தரும்.


விளக்கம்:

நாம் பிறர்க்குத் தீங்கு செய்யாத போதும், அவர் நம்மீது கோபம் கொண்டு நமக்குத் தீங்கு செய்ய முற்படுவர். அவர் அங்ஙனம் முற்படுகையில், பதிலுக்கு நாமும் அவர்க்குத் தீங்கு செய்யும் எண்ணம் கொள்ளக் கூடாது. அத்தகைய பழிவாங்கும் என்ணம் நம் மனதில் தோன்றினால், அதனால் மீண்டும் மீண்டும் நேரக்கூடிய துன்பத்திலிருந்து தப்பிக்கும் வழி நமக்கு இல்லாமல் போகும்.

-------------------

பால்: பொருட்பால்
இயல்: அரணியல்
அதிகாரம்: 75. அரண்
குறள் எண்: 741


ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.


ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; அஞ்சித் தற்போற்றுபவர்க்கும் பொருள்.

விளக்கம்:

பகைவர் மீது போர் தொடுத்துச் செல்பவர்க்கும் அரண் பயன்படும் சிறப்பு வாய்ந்தது.  பகைவர்க்கு அஞ்சித் தம்மைத் தற்காத்துக் கொள்ள நினைப்பவர்க்கும் அது பயன்படும் சிறப்பு வாய்ந்தது.

-------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 120. தனிப்படர் மிகுதி
குறள் எண்: 1193


வீழுநர் வீழப் படுவார்க் கமையுமேவாழுந மென்னுஞ் செருக்கு.

வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே,
'வாழுநம்' என்னும் செருக்கு.


விளக்கம்:

தாம் விரும்பும் காதலரால் தாமும் விரும்பப்படுகிறோம் என்று உணரும் மகளிருக்கே,  இணைந்திருக்காமல் பிரிந்திருந்தால் கூட'தாம் இன்புற்று இனிதாய் வாழ்வோம்' என்ற செருக்கு இயல்பாய் அமைந்திருக்கும்.

தற்காலிகமாய்க் காதலர் பிரிந்திருந்தால் கூட, மீண்டும் சீக்கிரம் அவர் வருவார்;கூடி வாழ்வோம் என்ற உறுதியினால் உண்டாகும் செருக்காகும் அது.
வீழுநர் - ஆசைப்படுபவர், நீங்கிச் செல்பவர், வீழ்பவர்