Friday, September 26, 2014

நான் அறிந்த சிலம்பு - 46

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
 
மாதவியின் அணிகலன்கள்
 
 
முன்கை அணிகள்
 
 
முகப்பில் கட்டிய மாணிக்கக்கற்களுடன்
வயிரங்களும் பதித்துவைத்த
சித்திர வேலைப்பாடமைந்த சூடகம்,
செம்பொன்வளை,
நவமணி வளையாம் பரியகம்
சங்கு வளையாம் வால்வளை
பலவகைப் பவழவளை
ஆகிய அணிகலன்களை
மெல்லிய மயிர்கள் காணப்பெறும்
தன் முன்கைகளில்
பொருத்தமுறவே
மாதவி அணிந்திட்டாள்.
 
 
கைவிரல் அணிகள்
 
 
வாளைமீனின் பிளந்த வாயை ஒத்த
வாயகன்ற முடக்கு வணக்குறு மோதிரம்
செந்நிற ஒளிவீசும் மாணிக்கம் பதித்த
கிளர்மணி மோதிரம்,
சுற்றிலும் ஒளி உமிழும்
வயிரம் சூழ்ந்த மரகதத் தாள்செறி மோதிரம்,
இவ்வகை மோதிரங்களைக்
காந்தள் மலர் போன்ற
தன் விரல்கள் முழுதும் மறையும்படி
மாதவி அணிந்திருந்தாள்.
 
 
கழுத்து அணிகள்
 
 
வீரச்சங்கிலி
நுண்ணியத் தொடர் சங்கிலி
பூணப்படும் சரடு பூண்ஞாண்
புனைவேலைகள் அமைந்த
சவடி, சரப்பளி இவற்றினோடு
முத்தாரம் அதுவும்
அழகிய கழுத்தினில் அணிந்திருந்தாள்.
 
 
பிடரி அணி
 
 
முற்கூறிய சங்கிலிகள் முழுவதையும்
ஒன்றாய் இணைத்துப் பூட்டிய
கொக்கி ஒன்றில் இருந்து
பின்புறமாகச் சரிந்து தொங்கிய,
அழகிய தூயமணிகளால் செய்யப்பட்ட
கோவை அவள் பிடரி மறைத்துக் கிடந்தது.
 
 
காது அணிகள்
 
 
இந்திர நீலக்கற்களுடன்
இடையே பெரிய வயிரங்கள் பதித்த
குதம்பை எனும் அணியை அழகுறத்
தன் இரு காதுகளிலும் அணிந்திருந்தாள்.
 
 
கூந்தல் அணிகள்
 
 
சிறந்த வேலைப்பாடு அமைந்த
செழுநீர், வலம்புரிச்சங்கு,
தொய்யகம், புல்லகம் இவற்றைத்
 
தன் கருத்து நீண்ட கூந்தலில்
அழகுற அணிந்திருந்தாள்.
 
 
அணிகள் பலவும் கொண்டு
அழகுக்கு அணிசேர்த்த மாதவி,
கோவலனுடன் ஊடியும் கூடியும்
மகிழ்வதற்கென்றே அமைக்கப்பட்டிருந்த
பள்ளியறையில் இன்புற வீற்றிருந்தாள்.
 
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 91 -110
 
வல்லமை: 12.11.12 அன்று வெளிவந்தது
 

No comments: