இட்லிக்கு எந்தச் சட்னி பிடிக்கிறது என்று சமையலில் தொடங்கி சகலமும் ரசனைகளின் அடிப்படையில்தான்..ஏதோவொன்றின் மீது ஏற்படும் பிடித்தம் அல்லது ஈடுபாடு அளவுக்கதிமாகும் போது ரசனையாதல் இயல்பு. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை.
பள்ளிப் பருவத்தில் ரஜினி - கமல், ஸ்ரீதேவி - ஸ்ரீப்ரியா/ரத்தி, யேசுதாஸ் - எஸ்.பி.பி , சுஜாதா - பாலகுமாரன், பாலசந்தர் - பாரதிராஜா ... இது போல் பல விஷயங்களுக்காகவும் கட்சி கட்டிக் கொண்டு செய்த வாக்குவாதங்கள், சண்டைகள்..இதெல்லாம் ரசனையா என்ற அற்பத்தனமான விஷயத்துக்கும் அடாவடியாய்ச் சண்டைகள்..ஒரு முறை வாக்குவாதம் தீவிரமாகி ஒரு தோழியுடன் சில நாட்கள் பேசாமல் இருந்ததெல்லம் நினைத்தால் சிரிப்பாக வருகிறது. வேலைகள்/கவலைகள் அதிகமில்லாத காலத்தில் இப்படியிருப்பது இயல்புதான்.
எப்போதும் வேறுவிதக் கவலையில் இருக்கும் உயர்தர வகுப்பினருக்கு இந்தப் பலப்பரிட்சைகள் விவாதங்கள் என்ற பெயரில் அவசியமில்லை. காரியத்தில் மட்டுமே கண். எப்போதும் வயிற்றுப்பாட்டைப் பற்றிய கவலையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு இதெல்லாம் பொருட்டே இல்லை. நடுவில் ஊசலாடும் வர்க்கத்திடம்தான் அதிகம் கூச்சலும், குழப்பமும்.
இவையெல்லாம் தனி மனித விருப்பத்தைப் பொறுத்த ரசனை மாற்றங்கள். கொள்கைப் பிடிப்புக்காய் மாறும் ரசனைகளும் பல உண்டு.
திரைப்படம்/தொலைக்காட்சி/பத்திரிகை - இந்தத் துறைகளை எடுத்துக்கொண்டால் மக்கள் ரசனைக்காகத் தருகிறோம் என்ற பெயரில் வகை வகையான ரசனைகள் வரிசைப்படுத்தப் படுகின்றன.ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..
மதம் - கேட்கவே வேண்டாம். இதில் ரசனைக்கு இடமில்லைதான். பல சமயம் பிறப்பால், சில சமயம் சுய தேர்வால் ஏற்படுகின்ற ஒரு விஷயம். கொள்கைகளின் அடிப்படையில் ஏற்படும் வேறுபாடுகள் மனிதருக்கு மனிதர் மாறுவதை இங்கும் காணலாம். ஈடுபாடு இல்லாதவர்க்கும் கருத்து வேறுபடு என்ற பெயரில் வாக்குவாதங்களுக்குக் குறைவில்லை. ஆன்மீகத்துக்குப் பல முகமாகிப் போக மதங்கள் மனிதனைக் காப்பாற்றுவதை விட, மனிதன் வரிந்து கட்டிக் கொண்டு மதங்களைக் காப்பாற்ற வேண்டிய பரிதாப நிலை.ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..
அரசியல் - இதிலும், பதவிகளில் இருப்பவர்கள், கட்சித் தலைவர்கள் கூட எல்லா விஷயங்களிலும், எல்லா நேரங்களிலும் அதே முக்கியமான கொள்கைப் பிடிப்பிலிருந்து விலகாமல் நிற்கிறார்களா என்பது சந்தேகமே. தலைவர்கள் இப்படியென்றால் தொண்டர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..
இப்படி ஒவ்வொரு துறையிலும் ரசனை மாற்றங்கள்..கொள்கைப் பிடிப்புகள் கருத்து வேறுபாடுகளாக உருவெடுத்து போட்டியிலும், பலப்பரிட்சையிலும் தொடர்ந்து..ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
ஆனால் அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறைக்கு இதற்கான ஈடுபாடு இவ்வளவு ஆழமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அன்று தொலைக்காட்சி, கணினி எல்லாம் ஏது? இன்றுள்ள சாதனங்கள் பல வேண்டவே வேண்டாம் என்று துரத்த முடியாத அளவுக்கு நம் வீடுகளில் அழுத்தமாய் வந்து அமர்ந்துள்ளது. இன்றைய வளர்ந்து வரும் குழந்தைகளின் பார்வையில் பலவிதமான செய்திகள், துறைகள்,சவால்கள்....
ஒவ்வொன்றுக்கும் ரசனை வளர்த்துக் கொள்வதற்கே நேரமில்லாத போது,கருத்து வேறுபாடுகளும், பலப்பரிட்சைகளும் சற்று பலவீனப்பட்டுப் போகின்றன.
இவர்களின் விவாதங்கள்..ஈடுபாடு இருந்தாலும் / இல்லாவிட்டாலும் இந்த ரீதியில்தான் இருக்கும்..அடுத்தவர் மீது தன் கருத்தைத் திணிப்பதாக இருக்காது என்றே தோன்றுகிறது.
நபர் 1: எனக்குக் கவிதையே பிடிக்காது. (இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 2: எனக்குக் கதையே பிடிக்காது.(இருக்கட்டும்.)
நபர் 1: பின் நவீனத்துவம் எனக்குப் புரிவதில்லை.(புரிய வேண்டாம்.)
நபர் 2: மொக்கை எனக்குப் பிடிப்பதில்லை.(ஏன் பிடிக்கணும்?)
நபர் 1: இந்த மதம்தான் சரியானது.(இருக்கட்டும்.)
நபர் 2: இல்லை. இந்த மதம்தான் சரியானது.(இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 3: கடவுளே இல்லை..இருக்கிறார் என்பவன் முட்டாள்.(இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 4: கடவுளே இல்லை என்று சொல்லும் நீ தான் முட்டாள்.(அதுனால் என்ன குறைஞ்சு போச்சு?)
நபர் 1: அஜீத் தான் எங்க தல..சூப்பரா கலக்குறாரு..(வச்சுக்கோ)
நபர் 2: இளைய தளபதிதான் என் சூப்பர் ஸ்டாரு..(வச்சுக்கோ)
நபர் 1: எங்க கட்சித் தலைவருக்குதான் நல்ல எதிர்காலம்...வலுவான கொள்கைப்பிடிப்பு..(நல்லா இருக்கட்டும்)
நபர் 2: அதெல்லாம் தலைவர் காலத்துக்கப்புறம் பாப்போம்..என்ன நடக்குதுன்னு..(நல்லாப் பாரு..)
நபர் 3: புதுத் தலைமைதான் தமிழ்நாட்டுக்குத் தேவை..திராவிடம் போதுமப்பா..(புதுசுதான் வந்துட்டுப் போகட்டுமே.என்ன போச்சு?)
நபர் 4: எந்தப் பழைய கட்சியும் வேணாம்ப்பா..ரசிகர் மன்றக் கொடிகள்தான் கட்சிக்கொடியா வரணும்...நாம் நல்லா உருப்படணும்னா..(நல்லா உருப்பட்டுக்கோ..)
நபர் 1: தங்கமனிகளுக்குதான் அதிகம் கஷ்டம்.(அப்படியா?)
நபர் 2: காலத்துக்கும் ரங்கமணிக்குதான் கஷ்டமோ கஷ்டம்.(அய்யோ, அப்படியா)
இப்படி அடைப்புக் குறிக்குள்ள இருக்கிற மனோபாவம் இன்றைய குழந்தைகளிடம் / வளர்ந்து வரும் தலைமுறையிடம் கொஞ்சம் காண முடிகிறது. அஜீத், விஜய்க்காக சண்டை போடுகிற பள்ளிப்பிள்ளைகள் இன்று பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஏதோ புதுப்படம் வெளிவரும் சமயம்..சில கூத்துகள் மட்டும் இன்றும் தொடர..நடிகர்கள்தான் ரசிகர்களை விடப் படங்களில் ஒருவரை ஒருவர் அதிகம் தாக்கிப் பேசுகின்றனர்.
பழையது பிடிக்காது..ஆனாலும் தவிர்க்க முடியாது என்று ரீ மிக்ஸ் கலாசாரத்தைத் திரைத்துறையில் புகுத்தியது போல்..வேண்டியவற்றை, வேண்டிய முறையில் தேர்ந்தெடுக்கும் பக்குவம் இவர்களிடம் நிறையவே உள்ளது.
பலப்பரிட்சையென்ற பெயரில் அர்த்தமில்லாத விவாதங்கள் அளவுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோகாத இந்த இளைய தலைமுறையினர் நம்மைக் காட்டிலும் எதார்த்தவாதிகள்தான்.