Showing posts with label சிந்தனையின் சத்தம். Show all posts
Showing posts with label சிந்தனையின் சத்தம். Show all posts

Tuesday, October 9, 2012

மனவறைச் சுத்தம்

மனவறைச் சுத்தம் - 1

சுருட்டிய கூந்தல்
உடைந்திட்ட கேசகவ்வி
ஜோடியற்ற ஒற்றைத்தோடு
காலியான வாசனை திரவியக் குப்பி
வீண் பொருட்கள்
அலங்கார மேசையில்..


எழுதாத பேனா
உதவாத கசங்கிய காகிதம்
உலர் பசை
எழுதிமுடித்த கவிதையின்
ஒத்திகை வரைவுகள்
வீண் பொருட்கள்
எழுது மேசையில்..


களையப்படுகின்றன குப்பைகள்
அறைதோறும் அவ்வப்போதேனும்..


பொறாமை பழியுணர்வு
என்றோ கேட்டதொரு வசவு
எங்கோ பார்த்ததொரு
வேண்டாத காட்சி
யாரோ கிளறிய
குப்பை நினைவு
சினம் ரணம்..


களைய முடியத்தான் இல்லை..
பழையன களை(ழி)யும் முன்னே
மீண்டும் புதிய குப்பைகள்
மனவறை மருங்கினில்..

*********************

மனவறைச் சுத்தம் - 2

கழிவுநீர்த் துளையின்
அடைப்பானில்
பிடிவாதமாய் ஒட்டியிருக்கும்
கழிவுணவுப் பிசுக்குகள்போல்


மரிக்காமல் மனதில்
மேடை போட்டு
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்
கழிவுணர்வுத் துகள்கள்.


விதியே என்றிருந்தால்
வியாதிதான்.


அருவியென
அடித்து ஊற்றி
நல் நினைவுகள்
நீர்தெளிக்க
சடுதியில் கழுவப்படும்
மனவழுக்குகள்.


களைகள் களைந்து
கழுவியெடுக்கும்
அருவியதனுக்குப்
பலரும் சூட்டிடும்
பலப்பல பெயர்கள்.


அன்பு
உதவி
ஈகை
நம்பிக்கை
சம்சாரம்
சந்நியாசம்
பக்தி
ப்ரார்த்தனை
.................
.................
 

Tuesday, September 11, 2012

சில நேரங்களில் சில உணர்வுகள்

மீண்டும் மீண்டும் சிவகாசி விபத்துகள்

ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு குற்ற உணர்வுடன் தான் பட்டாசு ஒலி ஒளி வேடிக்கையை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆபத்தும் விபத்தும் எந்தத் துறையிலும் உண்டுதான் என்றாலும், வருடம் தவறாமல் நிகழும் சிவகாசி விபத்துகள் மனதைப் பிசைகின்றன.

கல்வியைப் பற்றிய புரிந்துணர்வு

நீயா நானா வழங்கி வரும் தரமான விவாதங்களில் கல்வி சம்பந்தப்பட்ட விவாதங்கள் என்றுமே என்னைக் கவர்ந்தவை. சமீபத்திய விவாதம் ஒன்றில் ஒரு மாணவன் கூறியது: எங்களுக்குப் பெற்றோர் சுதந்திரம் கொடுக்கிறார்கள் கல்விப் பிரிவைத் தேர்வு செய்வதில்...ஒன்று இஞ்சினீயருக்குப் படி..அல்லது டாக்டருக்குப் படி..
.
நகைச்சுவை படச் சொன்னாலும் பெரும்பாலான குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆதங்கமும் வெளிப்பட்டது.

நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பதினோராம் வகுப்பில் பொறியியல், மருத்துவம் சார்ந்த பிரிவுகளைத் தேர்ந்தெடுக்காமல், வணிகவியல் அல்லது வேறு துறைகளைத் தேர்ந்தெடுக்கப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. பிள்ளைகளின் விருப்பத்தை அடக்கிவைத்துவிடுகின்றனர். இந்த இரண்டு துறைகளைத் தவிர மற்ற படிப்புகள் எல்லாம் நன்கு மதிப்பெண் வாங்காதவர்களுக்கு என்ற பரவலான எண்ணம் பெற்றோர்க்கு மட்டுமல்லாமல் சமூக எண்ணமாகவே ஆகிவிட்டது.

எந்தப் பிரிவிலும் நன்கு படித்து, அத்துறையில் உச்சத்தை அடைய முடியும் என்பது புரியாமலே போகிறது.

கல்வி பற்றிய புரிந்துணர்வு...விழிப்புணர்வு நாம் காண இன்னும் எவ்வளவு தூரம்தான் செல்ல வேண்டும்?!

சில வாழ்வியல் எதார்த்தங்களுக்காய், உளவியல் எதார்த்தங்களும் உண்மையான ஆசைகளும், இயல்புகளும் பலிகொடுக்கப்படுகின்றன.

ஹவுஸ் ஹஸ்பெண்ட்

இந்தியா வந்திருந்த போது, உறவுக்கார இளைஞனைச் சந்திக்க நேர்ந்தது. பெண் பார்க்கும் படலத்தில் இருக்கிறார்கள் குடும்பத்தினர்.

அவனுடைய எதிர்பார்ப்பு: ஒரு டிகிரி இருந்தால் போதும் - குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிகொடுக்க, படித்த பெண் வேண்டும்தான்...ஓரளவு வெளி உலகம் தெரிந்திருக்கும். வேலை பார்க்கும் பெண் வேண்டாம்..வீட்டைக் கவனிக்க முடியாமல் போகும். என் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போவதால் நானும் தம்பியும் ரொம்பக் கஷடப்பட்டிருக்கிறோம்.

இதையே பெண்ணும் எதிர்பார்த்தால் என்ன செய்வாய்? என்ற கேள்விக்கு அவன் தந்த பதில்: வேலைக்குப் போகாமல் ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்க நான் ரெடி. என்னால் வீட்டைப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் ஹவுஸ் ஹஸ்பெண்டைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யாராவது ரெடியாக இருப்பார்களா?

கேள்வி சரியானதுதான்..பதில் சொல்லத்தான் தெரியவில்லை...

இன்னும் தேடப்படும் நட்புகள்...


முகப்புத்தகத்தின் மூலம் பல முகங்களைத் தேடிப்பிடித்து விடுகின்றோம் என்றாலும், தேடுதலுக்கு அகப்படாத பல நட்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. உலகம் சிறியது என்று சொல்கின்ற போதே இச்சிறிய உலகத்துள் ஒளிந்து கொண்டிருக்கிற சில நட்புகளைத் தேடிப்பிடிக்க முடியாமல் போகின்றதே என்ற ஆதங்கமும் மிகுதியாக இருக்கிறது.

Monday, June 18, 2012

நிச்சலனமற்ற பொழுதுகளில்..

வரவு செலவுகள்
பார்த்தான பின்

இன்ப துன்பங்களில்
தோய்ந்தான பின்

களித்துக் களைத்து
ஓய்ந்தான பின்

மீதம் இருப்பது
நிச்சலனமற்ற
இன்றையப் பொழுதின்
இந்தக் கணம் மட்டுமே...

நிச்சலனமற்ற பொழுதுகளில்
கரைகின்ற வாழ்க்கை
சில சமயங்களில்
பிடித்துத்தான் போகிறது!

Monday, April 2, 2012

சில நேரங்களில் சில உணர்வுகள்

இரண்டு திரைப்படங்கள்:

காதலில் சொதப்புவது எப்படி? தலைப்பு ஒரு மாதிரி இருக்கிறதே என்று யோசனையுடன் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், இந்தக் காலகட்டத்துக்கு
மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆணாக ஆணும், பெண்ணாகப் பெண்ணும் யோசிப்பதில் உள்ள சிக்கல்கள், ஈகோப் ப்ரச்னைகளால் வரும் பிரிவுகள், மேட் ஃபார் ஈச் அதர் என்று ஒன்றும் விசேஷமாக இல்லை..அப்படி ஆக்கிக் கொள்வதுதான் விசேஷம் என்ற படிப்பினை..நன்றாக இருக்கிறது.

மூணு 3: ஒய் திஸ் கொலவெறி கொலவெறி?

இளையராஜா, சூர்யா, ரோஜர் ஃபெடரர்

இந்த மூன்று பேருக்கும் பொதுவான ஒரு சிறப்பு இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம். இவர்களால் கவரப்படாதவர்கள் இருக்கலாம். ஆனால், இவர்களைப் பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. என்றும் இளமையான இளையராஜா பாடல்கள், ரோஜர் விளையாடும் தளங்களில் விசிறிகளின் ஆரவாரம், சூர்யாவின் திரைமுகம் மட்டுமல்ல..  'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி...என்னுடைய இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தி நிற்கின்றது. 'அய்யய்யோ...எனக்கு இவரைப் பிடிக்கவே பிடிக்காது' என்று யாருமே சொல்லிவிட மாட்டார்கள் என்றொரு எண்ணம்.

எழுத்தாளர் சுஜாதாவும் இந்தப் பட்டியலில் இருந்தார்..ஆனால் அவரைப் பிடிக்காது என்னும் சிலரைச் சந்திக்க நேர்ந்தது..

ஒரு தகப்பனா இப்படி?

சமீபத்திய செய்தி ஒன்று...தேர்வில் மதிப்பெண்கள் எதிர்பார்ப்புக்கும் குறைவாக வாங்கிய தன் மகளை, கோவில் வாசல் ஒன்றில் தட்டேந்திப் பிச்சையெடுக்கவைத்தாராம் ஓர் அப்பா...என்னவென்று சொல்வது?

ஆசிரியைகளின் அட்டூழியம்

கொஞ்ச காலம் முன், எல்.கே.ஜி குழந்தையிடம் பாலியல் தொந்தரவுகள் செய்த இரண்டு ஆசிரியைகளைப் பற்றிய செய்திகள்..

கடந்த 2 வாரங்களுக்கு முன், ப்ளஸ் டூ மாணவனிடம் தகாத உறவுகொண்டு, 21 வயதானபின் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளக் காத்திருக்கும் 37 வய்து ஆசிரியை...ஓடிப் போன இவர்களைத் தேடிப்பிடித்த மாணவன் அப்பா...

வக்கிரங்கள் ஆசிரியைகளிடமா? இவர்களை என்ன செய்தால் தகும்?

Monday, May 23, 2011

அவரும் இவரும்


நம் எதிர்பார்ப்பு:
2+2 = 4

அவர் சொன்னார்:
3+2 = 5

இவர் சொல்கிறார்:
2+3 = 5

அவர் குடும்பம்
அசல் ஆலமரம்
விழுதுகளாய் வியாபித்து
விண்ணளவு வளர்ந்து
நீள அகலம்
உயரம் ஆழம்
முடியுமட்டும் அளந்து
ஆர்ப்பரித்தது...

இவர் தோழி நட்பு
போன்சாய் ஆலமரம்
வரவேற்பறையில்
படு சமர்த்தாய்த்
தொட்டிக்குள் அமர்ந்து
எண்பது அடி பலத்தை
எட்டங்குலத்துள் அடக்கி
ஆர்ப்பரிக்கும்...

இருவரிடத்தும்
சமமாய்ச் சீரழியும்
சமச்சீர் கல்வி..

புதிய கோட்டையா
பழைய கோட்டையா
கோட்டைக்கான சர்ச்சையில்
கோட்டைவிடப்படும்
ஆக்கப்பூர்வ திட்டங்கள்..

அவர் எதுகை
இவர் மோனை

அவர் ஏணி என்பார்
இவர் கோணி என்பார்

கட்சி
கொள்கை
மக்கள்

அவருக்கும்
இவருக்கும்
விளையாட்டு பொம்மை...

நாம் மட்டும்
என்றும் மாறாத
சகிப்புத்தன்மையுடன்..

அவரையும் சகிப்போம்
இவரையும் சகிப்போம்...

ஐந்து வருடம்
கழித்து..
இன்னமும்
சகிப்போம்!

Wednesday, May 4, 2011

சொர்க்கம் நரகம்

வறுமைக்கோட்டுக்குப்
பல படிகள் மேலே
பண உரிமைக் கோட்டின்
எல்லையும் தாண்டி
உயர்ந்து உயர்ந்து
மேலே மேலே..

வாழும் நாளெல்லாம்
சொர்க்க சுகானுபவங்களில்
ஈடுபட்டுத் திளைக்கும்
அவனுக்கு
அங்கே நரகமாம்....

வறுமைக்கோட்டுக்குப்
பல படிகள் கீழே
பாதாளம் தாண்டியும்
பசியது பாய்ந்திருக்க
தாழ்ந்து தாழ்ந்து
கீழே கீழே...

வாழும் நாளெல்லாம்
நரக வேதனைகளில்
உழன்று சுழலும்
இவனுக்கு
அங்கே சொர்க்கமாம்...

இன்றைய பொழுது
இன்னும் கழியவில்லை..
நாளைய பொழுது
இன்னும் வரவேயில்லை..

கனாக்கள் காண்கிறோம்
காணாப் பொழுது குறித்து..

சொர்க்கமும் நரகமும்
ஒருங்கே கலந்த மேதினியில்..
வாழ்கின்ற நாட்களில்
வழிதொகை ஏதுமின்றி
மனம்போன போக்கில்
உழலும் நமக்கு
மரணித்த பின்
எங்கே இருப்பிடம் என்ற
அற்பப் பயம் எதற்கு?!

மறுமை பயங்களைக்
கொஞ்சம் தள்ளிவை!
இன்றைக்கு என்ன செய்கிறாய்
அதை மட்டும் நினைவில்வை!

இன்று இங்கே
நரகத்தில் உழலும்
நரன் ஒருவனுக்கேனும்
சொர்க்கம் காட்டி
அவன் வாழ்வின்
சுவை கூட்டிவை!

உன் நேரமும் கவனமும்
தேவை என்னும் இதயம்
உன் அருகிலேயே
இருக்கக்கூடும்..

பாசம் வேண்டும் குழந்தையாகவோ
பரிவு வேண்டும் பெற்றோராகவோ
அன்பு வேண்டும் சகோதரமாகவோ
உதவி வேண்டும் நட்பாகவோ
காதல் வேண்டும் துணையாகவோ..

இன்று இங்கே
நரகத்தில் உழலும்
நரன் ஒருவனுக்கேனும்
சொர்க்கம் காட்டி
அவன் வாழ்வின்
சுவை கூட்டிவை!

Tuesday, March 15, 2011

சில நேரங்களில் சில உணர்வுகள்

சுனாமியாஞ்சலி

அலை அழகு
அமைதி அழகு
மாறும் நிறம் அழகு
உதிக்கும் சூரியன் அழகு
மறையும் சூரியன் அழகு
வேக நடை அழகு
மெது ஓட்டம் அழகு
மணல் கோபுரம் அழகு
தளும்பும் மீன்படகு அழகு.

ஆனால்
சுனாமி...சுனாமி..
அழகை மறக்கவைத்த ஆபத்து.

சீறும் சுனாமியே
சீக்கிரம் அமைதியாகுக!

அணு உலைகள் வெடிப்பு
உலகுக்கு அபாய எச்சரிப்பு..

இயற்கையுடன் பகைக்கின்
வேரோடு கெடும்..

பொன்னியின் செல்வன்

அவ்வப்போது அறிவிப்புகள் மாறி மாறி வந்தாலும், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்பது மிகவும் மகிழ்ச்சியானதொரு தகவல். விஜய், அனுஷ்கா, ஆரியா மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அனுஷ்கா குந்தவை, விஜய் ஜோடி என்கிறார்கள். அப்படியானால் விஜய்தான் வந்தியத்தேவன்...மிளிர்வார் என்றுதான் நினைக்கிறேன்..அனுஷ்கா வேடத்துக்குப் பொருத்தம்தான்..பாத்திரத்தில் எவ்வளவு தூரம் ஜொலிப்பார்?! குந்தவையின் குறும்பு வருமா? மிடுக்கு வருமா? கம்பீரம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

விஷால், விக்ரம் பேச்சையே காணோம் இப்போது..


மகேஷ் பாபு, ஆதித்த கரிகாலன்...சூர்யா ராஜராஜ சோழன் என்றால்..ஆரியா யார்?

நந்தினி வேடம் யாருக்கு?

எப்போது படம் வரும் எப்போது பார்ப்போம் என்றிருக்கிறது..

வரும்...ஆனா வராது....

மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைக்காலங்களில் நிலவி வரும் சூழல், சவூதி அரேபியாவிலும் சூடு பிடிக்கக்கூடும் என்ற நிலையில்..மார்ச் 11 கிளர்ச்சி மற்றும் ஊர்வலங்கள் எதிர்பார்க்கப்பட்டன....கண்டிப்பாக இங்கேயும் ப்ரசனை வரும் என்றும், அமைதியை விரும்பும் நாடு என்பதால் அப்படி ஏதும் வராது என்றும் எதிர்பார்க்கப்பட்டது..மார்ச் 11 அமைதியாகவே போனது..

சவூதி இளவரசர் அல் வாலித் சொன்னது போல் இது 'tempest in a tea cup' ... 'Saudi is Saudi ..it is no Egypt, no Tunisia, no Libya'...அமைதி இப்போதைக்கு நிச்சயம்...

எது எப்படியோ காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

சின்னதாய் ஓர் இந்தியப் பயணம்

மார்ச் 16-30 இந்தியப்பயணம்...மிகவும் குறுகிய காலம்..பரபரவென்று பறந்து கொண்டேயிருந்தாலும் ஒவ்வொரு நொடியும் ரசித்து அனுபவிக்கப் போகிறேன்..

Monday, January 24, 2011

சில நேரங்களில் சில உணர்வுகள்


'பொன்னியின் செல்வன்' கனவுகள்

பலரின் நீண்ட நாள் கனவு 'பொன்னியின் செல்வன்' நிகழ்வுகளைத் திரையில் காண வேண்டுமென்பது. மக்கள் தொலைக்காட்சியும் இதற்கான நடிகர் தேர்வுக்கான அறிவுப்புகளை அளித்த வண்ணம் இருக்கிறது. இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தாரும் இப்படத்தை 500 கோடி ரூபாய் செலவில் எடுப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. சங்கர் இயக்குவதாக ஒரு செய்தி சொல்ல, மணிரத்னம் இயக்குவதாகவும் சொல்லப்படுகிறது.

கமல், ரஜினி நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இதற்காகவே காத்திருக்கின்ற பலருள் நானும் ஒருத்தி. பலரின் கனவு கைகூடி வரும் வேளையில், சில பயங்களும் எழாமல் இல்லை. நன்றாகச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

அன்றிலிருந்து ஜெமினி, எம்.ஜி.ஆர், கமல் மற்றும் பலரும் செய்ய நினைத்துக் கைவிட்ட முயற்சி, இத்தனை ஆண்டுகளுக்குப் பின், தொழில்நுட்பரீதியாக பலவகை முன்னேற்றங்கள் உள்ள இக்கால கட்டத்தில் எளிதாகவே இருக்கும்.

பாத்திரங்களின் தேர்வு, காட்சி திரைக்கதை அமைப்பு, வசனம், ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என்று அனைத்துத் தரப்பினருக்கும் சவாலாய் அமையப் போகும் இப்பணி. அவரவர் தனிப்பட்ட கருத்தை, பாணியைத் திணிக்காமல் புத்தக அழகு சற்றும் குறையாமல் கால அவகாசம் சரிவர எடுத்துக் கொண்டு செய்வார்களேயானால்...என்னை போன்ற பலரின் கனவுகள் அழகாய் மெய்ப்பட வாய்ப்புண்டு.

நீயா நானா....இது தகுமா தகுமா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி எவ்வளவு விமரிசனங்கள் வந்தாலும் இவர்கள் திருந்துகின்ற வழியாய்த் தெரியவில்லை. நல்ல நல்ல செய்திகளைத் தரும் நிகழ்ச்சிகள் கூட மூன்றாம் தரத்துக்கு இறங்கிப் போகின்ற கொடுமை.....தாங்கவில்லை.

நீயா நானா...நல்லதொரு நிகழ்ச்சி(இனிமேல் அப்படிச் சொல்ல மனம் வரவில்லை.)  பிரபலமாவதற்கும், நல்ல பெயர் எடுப்பதற்கும், சுவாரசியம்(?!) சேர்ப்பதற்கும் சில காட்சிகளைத் திட்டமிட்டு, ஒத்திகையுடன் சித்தரித்து அரங்கேற்றுவதாகக் கேள்விப்பட்டதுண்டு. என்றாலும் அதையெல்லாம் மீறி ஆக்கப்பூர்வமான வாக்குவாதங்கள் வாயிலாக நல்ல செய்திகளையும் பல நேரங்களில் நமக்குத் தந்துள்ளது இந்நிகழ்ச்சி.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் கணவன் - மனைவி விவாதம் என்ற பெயரில் அடித்த கூத்தை என்ன வார்த்தைகளால் விமர்சிப்பது என்றே புரியவில்லை. ஆங்கிலம் பேசத் தெரியாது, கர்னாடக சங்கீதம் ரசிக்கத் தெரியாது, சமையலை ரசித்துச் சப்பிடத் தெரியாது...என்று வார்த்தைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட பாங்கு, போனால் போகிறதென்று மன்னிப்பும் கேட்டு...அடா அடா .....

இவர்களால் எப்படி இது முடிகிறது? இவர்கள் பெற்றோர், உறவினர், பிள்ளைகள், சம்பந்தமேயில்லாத மூன்றாவது மனிதர்கள் என்று அனைவரும் பார்ப்பார்கள் என்ற உணர்வு கொஞ்சம் கூட இன்றி....நாராசம்!

இவர்கள்  பெற்றெடுத்த பிள்ளைகளை எங்ஙனம் வழிநடத்தப் போகிறார்கள்?

Monday, October 4, 2010

வானம் மட்டுமா வசப்படும்?!

மயிலைப் பார்த்து
'வான்கோழியே'
என்று விளிக்குமாம்
வான்கோழி.

வானவில்லைப் பார்த்து
'மயக்கும் மஞ்சள்''
என்று வர்ணிக்குமாம்
காமாலை பூத்த கண்கள்.

மணவீட்டில் மணமகனை
'உயிரில்லாப் பிணம்'
என்று கூறுமாம்
பொறாமையில் குமுறுகின்ற மனம்...

மனித மனங்களை
விமர்சிக்கும் பரிகசிக்கும்
அன்றாடம் ஆயிரம்
மனித நாக்குகள்...

வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு பாதையிலும்
வேகத்தடைகள்...

விமர்சனத்தை விழாவாக்கிப்
பரிகாசத்தைப் பரிசாக்கிக்
குதூகலத்துடன் கொண்டாடு...

தடைகளைப் படிகளாக்கி
வெற்றியோடு முன்னேறு....

வானம் என்ன
பிரபஞ்சமே வசப்படும்!

Sunday, February 15, 2009

முரண்கள் பலவிதம் (2)

எதிர்காலக் கனவுகளில்
வீணாகின்றன
பல நிகழ்கால நிஜங்கள்.

ஊருக்கு உணவு படைத்து
வீட்டுக்கு வந்த
உணவகச் சமையல்காரன்
வீட்டின் அடுப்பில்
தூங்குகிறது பூனை.

'நொடிகள் சேமிப்பது எப்படி?'
மணிக்கணக்கில் பேசினார்
விழாப் பேச்சாளர்.

'ஆண்டவா!
எல்லோரும் நல்லா இருக்கணும்'
ஆலயத்தில் வேண்டிவிட்டு
வெளியே வந்தவர் வேட்டியில்
சேற்றை வாரிச் சென்ற
வாகன ஓட்டுனரைச் சாடினார்..
'நாசமாப் போறவனே!'

'...கிராமத்தில் பால்ய விவாகம்'
செய்தி கேட்டுப்
பாவப்படுகிறாள் பருவக்குமரி.
பொறாமைப்படுகிறாள் முதிர்கன்னி.

போகியன்று
எஜமானி கழித்த
பழைய ஆடைகள்
பொங்கலன்று
வேலைக்காரி வீட்டில்
புத்தாடைகள்.

Tuesday, February 3, 2009

முரண்கள் பலவிதம் (1)

ஆங்கிலப் பேச்சில்
பிழையென்றால் வெட்கம்.
'டேமில் பேசவே தெரியாது'
சொல்வதற்குப் பெருமிதம்!

கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு.

கல்லூரிப்
பேச்சுப் போட்டியில்
'பெண்ணினத்துக்குத்
தீங்கிழைப்பவரைக்
கொளுத்துவோம்'
என்றவளும்
பின்னாளில் கொளுத்தினாள்..
சித்ரவதை செய்த
கணவனை அல்ல..
தன்னைத் தானே.

'தென்றலின் தொடுதலுக்கே
என் தேவதை நோவாள்
பூவை நுகர்ந்தாலே
பூமகள் துவண்டு போவாள்'
கவிதைக் கோலம்
வரைந்தான் கவிஞன்
கற்பனையின் உதவியோடு.
வீட்டுக்கு வந்ததும்
மனைவியின் உடலில்
இட்டான் கோலம்
சிகரெட்டின் உதவியோடு.

உயிருடன் உடல் எரிந்தால்
உணர்வுகள் மட்டு.
உயிர்த் தலைவியின்
உருவ பொம்மையை எரித்தால்
உடனுக்குடன் வைப்பார் குட்டு.

கையில்லாத ரவிக்கை
அணிந்த அழகுக் காரிகை,
இடித்துக் காட்டிய
அன்னையிடம்
'ஆபாசம் ஆடையில் இல்லை
பார்ப்பவர் மனதில் இருக்கிறது'
என்று சொல்லிவிட்டு
ஊர்வலத்தில் போனாள்
பெண்ணியம் பேசும் கூட்டத்தோடு
முதுகற்ற ரவிக்கையணிந்த
நடிகையின் சுவரொட்டி கிழிப்பதற்கு.

...(தொடர்ந்தாலும் தொடரும்)

Friday, October 24, 2008

வேற்றுமையில் ஒற்றுமை

அரசியல் கட்சிகளில்
ஆயிரம் வேற்றுமை


ஆளுங்கட்சி எதிர்க்கட்சி
இலக்கணங்களில்
பதவி பண ஆசைகளில்
கட்சித் தாவலில்
வாக்குறுதி வழங்கலில்
வார்த்தை மீறலில்
இரட்டைநாக்கு மொழிகளில்
அடடா என்ன ஒற்றுமை..


தொலைக்காட்சி அலைவரிசைகளில்
ஆயிரம் வேற்றுமை


நிகழ்ச்சிகளின் நிரலில்
தொடர்களின் தரத்தில்
குடியரசு தினம் தொடங்கி
மதவாரியாய்ப் பண்டிகைகள் வரை
நடிகையின் நாய்க்குட்டியும்
நல்கும் பேட்டிகள்
அடடா என்ன ஒற்றுமை..


வடக்கு தெற்கு என்று
ஆயிரம் வேற்றுமை


பட்டினி பசியில்
குழந்தைத் தொழிலாளர்களின்
குறைந்திடாத எண்ணிக்கையில்
லஞ்ச லாவண்யங்களில்
சுரண்டிப் பிழைக்கும்
சுயலவாதிகளின் சூழ்ச்சியில்
அடடா என்ன ஒற்றுமை..


உலகெங்கும்
மதங்களில் இனங்களில்
ஆயிரம் வேற்றுமை


உட்பிரிவுப் பூசல்களில்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் மோதலில்
விதிகள் மட்டுமே போற்றி நின்று
வீதி வீதியாய்த் தீவிரவாதம்
வளர்த்து நிற்கும் பாங்கினில்
சந்திராயன் காலத்திலும்
சாகாத மூட நம்பிக்கைகளில்
அடடா என்ன ஒற்றுமை..

Wednesday, May 21, 2008

தோள் கொடுக்கிறதா தோழமை?

இயந்திர முலாம் பூசிய செயற்கையான வாழ்க்கைமுறை நடுவில் உறவுகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது கூடப் பல சமயங்களில் இயலாமல் போய்விட்ட ஒன்று. 'வாழ்வு முழுவதும் தொடரும் தோழமை' என்ற கூற்று அர்த்தமற்றதாகி
வருகின்றதோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.

'உயிர் காப்பான் தோழன்', 'உடுக்கை இழந்தவன் கை' என்ற வாக்கியங்கள் இலக்கிய அளவில்மட்டும்..ஏட்டுச் சுரைக்காயாக மட்டும்உலவி வருகின்றன. தோள் கொடுக்கும்
தோழமை தோளை மீண்டும் எதிர்பார்க்கிறது. அதில் தவறில்லை என்றாலும் எதிர்பார்ப்பற்ற தன்னலம் கருதாத நட்பு என்பது அரிதாகி வருகிறதோ என்ற உணர்வு.

உறவுகளுக்குள் நட்பு என்பது அடிக்கடி பேசப்படுகின்ற ஒன்று. ஆனால் நட்பு என்ற உறவு? 'உன் நண்பனைக் காட்டு. உன் குணத்தைச் சொல்கிறேன்' என்பார்கள். இப்போது பலருக்கும், குறிப்பாகக் குழந்தைகள் மட்டும் இளைஞர்கள் பலருக்கு அப்படி ஒரு ஆத்மார்த்தமான நட்பைச் சுட்டிக் காட்ட முடியுமா என்பது சந்தேகம்தான். நட்பு வட்டாரம் என்ற ஒன்று இருக்கின்றது..ஒத்த வயதையுடைய நண்பர் கூட்டம் இருக்கிறது..என்றாலும் எங்கேயோ ஏதோ குறைந்து வருகின்றது..

இதற்குக் காரணங்கள் பல: ஒரே இடத்தில் நீண்ட நாள் குடியிருக்கும் வாய்ப்பு இல்லாத நிலைமை, பலவித படிப்பு மற்றும் அலுவல்களால் நட்புக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலைமை, தொலைக்காட்சி, கணினி போன்ற சாதனங்களின் நட்பு மயக்கம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தெரு முனைகளில் தவறாமல் கூடும் நண்பர்கள், கெக்கே பிக்கே என்று ஏதாவது பேசிச் சிரிக்கும் பெண்கள் கூட்டம், குடும்பத்தினரிடம் கூடப் பேச முடியாத பல விஷயங்களைத் தங்களுக்குள் பேசித் தீர்வு, ஆறுதல் காண்கிற மனங்கள் அரிதாகி வருகின்றன.

நாம் அனுபவித்த, இன்னும் கூட அனுபவித்து வருகின்ற நட்பின் அருமை பெருமைகள் பலவற்றை நம் குழந்தைகள் அனுபவிக்கிறார்களா? என்னவென்றே அறியாமல் அவர்கள் தொலைத்த பலவித சந்தோஷங்களுள், உரிமைகளுள் இதுவும் ஒன்று.

காரணங்கள் புரிந்தாலும் காரியமாற்ற முடியாத ஒரு நிலைமையில் தள்ளப்பட்டுதான் நிற்கிறோம்.

Monday, March 17, 2008

ரசனை மாற்றம் Vs கருத்து வேறுபாடு Vs பலப்பரிட்சை

இட்லிக்கு எந்தச் சட்னி பிடிக்கிறது என்று சமையலில் தொடங்கி சகலமும் ரசனைகளின் அடிப்படையில்தான்..ஏதோவொன்றின் மீது ஏற்படும் பிடித்தம் அல்லது ஈடுபாடு அளவுக்கதிமாகும் போது ரசனையாதல் இயல்பு. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை.

பள்ளிப் பருவத்தில் ரஜினி - கமல், ஸ்ரீதேவி - ஸ்ரீப்ரியா/ரத்தி, யேசுதாஸ் - எஸ்.பி.பி , சுஜாதா - பாலகுமாரன், பாலசந்தர் - பாரதிராஜா ... இது போல் பல விஷயங்களுக்காகவும் கட்சி கட்டிக் கொண்டு செய்த வாக்குவாதங்கள், சண்டைகள்..இதெல்லாம் ரசனையா என்ற அற்பத்தனமான விஷயத்துக்கும் அடாவடியாய்ச் சண்டைகள்..ஒரு முறை வாக்குவாதம் தீவிரமாகி ஒரு தோழியுடன் சில நாட்கள் பேசாமல் இருந்ததெல்லம் நினைத்தால் சிரிப்பாக வருகிறது. வேலைகள்/கவலைகள் அதிகமில்லாத காலத்தில் இப்படியிருப்பது இயல்புதான்.

எப்போதும் வேறுவிதக் கவலையில் இருக்கும் உயர்தர வகுப்பினருக்கு இந்தப் பலப்பரிட்சைகள் விவாதங்கள் என்ற பெயரில் அவசியமில்லை. காரியத்தில் மட்டுமே கண். எப்போதும் வயிற்றுப்பாட்டைப் பற்றிய கவலையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு இதெல்லாம் பொருட்டே இல்லை. நடுவில் ஊசலாடும் வர்க்கத்திடம்தான் அதிகம் கூச்சலும், குழப்பமும்.

இவையெல்லாம் தனி மனித விருப்பத்தைப் பொறுத்த ரசனை மாற்றங்கள். கொள்கைப் பிடிப்புக்காய் மாறும் ரசனைகளும் பல உண்டு.

திரைப்படம்/தொலைக்காட்சி/பத்திரிகை - இந்தத் துறைகளை எடுத்துக்கொண்டால் மக்கள் ரசனைக்காகத் தருகிறோம் என்ற பெயரில் வகை வகையான ரசனைகள் வரிசைப்படுத்தப் படுகின்றன.ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..

மதம் - கேட்கவே வேண்டாம். இதில் ரசனைக்கு இடமில்லைதான். பல சமயம் பிறப்பால், சில சமயம் சுய தேர்வால் ஏற்படுகின்ற ஒரு விஷயம். கொள்கைகளின் அடிப்படையில் ஏற்படும் வேறுபாடுகள் மனிதருக்கு மனிதர் மாறுவதை இங்கும் காணலாம். ஈடுபாடு இல்லாதவர்க்கும் கருத்து வேறுபடு என்ற பெயரில் வாக்குவாதங்களுக்குக் குறைவில்லை. ஆன்மீகத்துக்குப் பல முகமாகிப் போக மதங்கள் மனிதனைக் காப்பாற்றுவதை விட, மனிதன் வரிந்து கட்டிக் கொண்டு மதங்களைக் காப்பாற்ற வேண்டிய பரிதாப நிலை.ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..

அரசியல் - இதிலும், பதவிகளில் இருப்பவர்கள், கட்சித் தலைவர்கள் கூட எல்லா விஷயங்களிலும், எல்லா நேரங்களிலும் அதே முக்கியமான கொள்கைப் பிடிப்பிலிருந்து விலகாமல் நிற்கிறார்களா என்பது சந்தேகமே. தலைவர்கள் இப்படியென்றால் தொண்டர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..

இப்படி ஒவ்வொரு துறையிலும் ரசனை மாற்றங்கள்..கொள்கைப் பிடிப்புகள் கருத்து வேறுபாடுகளாக உருவெடுத்து போட்டியிலும், பலப்பரிட்சையிலும் தொடர்ந்து..ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

ஆனால் அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறைக்கு இதற்கான ஈடுபாடு இவ்வளவு ஆழமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அன்று தொலைக்காட்சி, கணினி எல்லாம் ஏது? இன்றுள்ள சாதனங்கள் பல வேண்டவே வேண்டாம் என்று துரத்த முடியாத அளவுக்கு நம் வீடுகளில் அழுத்தமாய் வந்து அமர்ந்துள்ளது. இன்றைய வளர்ந்து வரும் குழந்தைகளின் பார்வையில் பலவிதமான செய்திகள், துறைகள்,சவால்கள்....
ஒவ்வொன்றுக்கும் ரசனை வளர்த்துக் கொள்வதற்கே நேரமில்லாத போது,கருத்து வேறுபாடுகளும், பலப்பரிட்சைகளும் சற்று பலவீனப்பட்டுப் போகின்றன.

இவர்களின் விவாதங்கள்..ஈடுபாடு இருந்தாலும் / இல்லாவிட்டாலும் இந்த ரீதியில்தான் இருக்கும்..அடுத்தவர் மீது தன் கருத்தைத் திணிப்பதாக இருக்காது என்றே தோன்றுகிறது.

நபர் 1: எனக்குக் கவிதையே பிடிக்காது. (இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 2: எனக்குக் கதையே பிடிக்காது.(இருக்கட்டும்.)

நபர் 1: பின் நவீனத்துவம் எனக்குப் புரிவதில்லை.(புரிய வேண்டாம்.)
நபர் 2: மொக்கை எனக்குப் பிடிப்பதில்லை.(ஏன் பிடிக்கணும்?)

நபர் 1: இந்த மதம்தான் சரியானது.(இருக்கட்டும்.)
நபர் 2: இல்லை. இந்த மதம்தான் சரியானது.(இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 3: கடவுளே இல்லை..இருக்கிறார் என்பவன் முட்டாள்.(இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 4: கடவுளே இல்லை என்று சொல்லும் நீ தான் முட்டாள்.(அதுனால் என்ன குறைஞ்சு போச்சு?)

நபர் 1: அஜீத் தான் எங்க தல..சூப்பரா கலக்குறாரு..(வச்சுக்கோ)
நபர் 2: இளைய தளபதிதான் என் சூப்பர் ஸ்டாரு..(வச்சுக்கோ)

நபர் 1: எங்க கட்சித் தலைவருக்குதான் நல்ல எதிர்காலம்...வலுவான கொள்கைப்பிடிப்பு..(நல்லா இருக்கட்டும்)
நபர் 2: அதெல்லாம் தலைவர் காலத்துக்கப்புறம் பாப்போம்..என்ன நடக்குதுன்னு..(நல்லாப் பாரு..)
நபர் 3: புதுத் தலைமைதான் தமிழ்நாட்டுக்குத் தேவை..திராவிடம் போதுமப்பா..(புதுசுதான் வந்துட்டுப் போகட்டுமே.என்ன போச்சு?)
நபர் 4: எந்தப் பழைய கட்சியும் வேணாம்ப்பா..ரசிகர் மன்றக் கொடிகள்தான் கட்சிக்கொடியா வரணும்...நாம் நல்லா உருப்படணும்னா..(நல்லா உருப்பட்டுக்கோ..)

நபர் 1: தங்கமனிகளுக்குதான் அதிகம் கஷ்டம்.(அப்படியா?)
நபர் 2: காலத்துக்கும் ரங்கமணிக்குதான் கஷ்டமோ கஷ்டம்.(அய்யோ, அப்படியா)

இப்படி அடைப்புக் குறிக்குள்ள இருக்கிற மனோபாவம் இன்றைய குழந்தைகளிடம் / வளர்ந்து வரும் தலைமுறையிடம் கொஞ்சம் காண முடிகிறது. அஜீத், விஜய்க்காக சண்டை போடுகிற பள்ளிப்பிள்ளைகள் இன்று பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஏதோ புதுப்படம் வெளிவரும் சமயம்..சில கூத்துகள் மட்டும் இன்றும் தொடர..நடிகர்கள்தான் ரசிகர்களை விடப் படங்களில் ஒருவரை ஒருவர் அதிகம் தாக்கிப் பேசுகின்றனர்.

பழையது பிடிக்காது..ஆனாலும் தவிர்க்க முடியாது என்று ரீ மிக்ஸ் கலாசாரத்தைத் திரைத்துறையில் புகுத்தியது போல்..வேண்டியவற்றை, வேண்டிய முறையில் தேர்ந்தெடுக்கும் பக்குவம் இவர்களிடம் நிறையவே உள்ளது.

பலப்பரிட்சையென்ற பெயரில் அர்த்தமில்லாத விவாதங்கள் அளவுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோகாத இந்த இளைய தலைமுறையினர் நம்மைக் காட்டிலும் எதார்த்தவாதிகள்தான்.