Monday, March 31, 2008

யார் பித்தன்?

இன்றைக்குக் கொஞ்சம் லேட்டாகிவிட்டது..அய்யோ பஸ் போயிருக்குமோ என்னவோ..அந்த ஆரப்பாளையம் நேர் பஸ்ஸை விட்டு விட்டால் பெரியார் பெருந்து நிலையம் போய் மறுபடியும் வேறு பஸ் பிடித்துப் போவதற்கு நேரமிருந்தாலும், கனகாவுக்கு என்னவோ அது பிடிப்பதில்லை. இதில் போனால் சீக்கிரமாகவே பள்ளிக்குப் போய்விடலாம். அரக்கப் பரக்க ஓட வேண்டிய அவசியமிருக்காது.

வீட்டில் புறப்படும் போது ஒலிக்க ஆரம்பித்த "காதலின் தீபமொன்று" பாடலை நின்று கேட்டு ரசிக்க நேரமில்லை..பருத்திப் புடவை மடிப்புகளைச் சரிசெய்யவென்று 5 நிமிடம் அதிகம் நேரம் ஒதுக்கிய அவகாசத்தில் ஒலித்திருக்கக்கூடாதா அந்தப் பாடல்..காலில் செருப்பைப் போடும் போது ஒலிக்க ஆரம்பித்தது..முனை டீக்கடையில் "..பொன்னிலே பூவையள்ளும் புன்னகை மின்னுதே.."மனதுக்குள் வரிகளை ரசித்தபடி வேக நடை போட்ட கனகாவின் கால்கள் பேருந்து நிறுத்தத்தை நெருங்கியதும் தன்னிச்சையாகத் தயங்கின.

இன்றும் அவன் வருவானோ? அய்யோ..தூரத்தில் இருந்தபடிப் பார்வையை நாலாபுறமும் சுழலவிட்டாள்..நல்லவேளையாகஅவன் அறிகுறி எதுவும் தென்படவில்லை..இதோ சுந்தரமூர்த்தி மாமாவும் வந்துவிட்டார்..அவருக்கும் அதே பஸ்தான்..

"என்னம்மா இன்னிக்கு லேட் போலருக்கே?"

"ஆமாம் மாமா." கடையில் ஒலித்த.."என்னை நான் தேடித்தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்.."பாடலை ரசித்துக் கொண்டே இருக்கையில் அவன் அதோ வந்து விட்டான்..நாக்கு சட்டென்று மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. பயத்துடன் சுந்தரமூர்த்தி அருகில் நெருங்கி நின்று கொண்டாள் கனகா. "வந்துட்டானா" என்று வரவேற்கத் தயாரான முணுமுணுப்புகள் அங்கங்கே..நின்றிருந்த ஒன்றிரண்டு பள்ளிப் பிள்ளைகளும் கனகா போலவே பயந்தனர்.

அவனுக்கு வயது 15 இருக்கும். சற்று மீறிய வளர்ச்சி..மன நலம் சரியில்லாதவன்..
பூக்காரம்மாவின் பையன். பூ வியாபாரம் முடித்து அந்தம்மா இரண்டு மூன்று வீடுகளில் வேலை செய்து பிழைத்து வந்தார். கணவன் இறந்துவிட, இருக்கும் ஒரே பிள்ளையும் இப்படி.

அந்தம்மா அப்படிப் போனதும் இவன் இப்படி வருவது வாடிக்கையான ஒன்றுதான். சில நேரம் அவன் பாட்டுக்கு அமைதியாய் நிற்பான். அல்லது நடந்து கொண்டேயிருப்பான். சிலநேரம் அங்கே இருக்கின்றவர்களிடம் வம்பு செய்வான். காசு கேட்பான்,கொடுத்ததும் வாங்கிக் கொண்டு போய்விடுவான். ஆனால் சமீப காலமாகப் பெண்களைப் பார்த்தால் அசிங்கமான சைகைகள் புரிவது வழக்கமாகிவிட்டது..தர்மசங்கடத்தில் நெளிய வேண்டிய தருணங்கள்..

என்றைக்குத் தான் மாட்ட போகிறோமோ என்ற பயம் கனகாவுக்கு..

பயத்தைப் புரிந்து கொண்டவராய் சுந்தர மூர்த்தி மாமா, " பயப்படாதேம்மா..ஒன்றும் செய்ய மட்டான் " என்று கூறியும் சமாதானமாகவில்லை..ஏதாவது நடந்து விட்டால் எவ்வளவு அசிங்கம்..என்ன இந்த பஸ் இன்னும் வரவில்லையே என்று பார்க்குப் போது, ஒரு வழியாக அன்று சற்றுத் தாமதமாக வந்து சேர்ந்தது பஸ்.

அப்பாடா தப்பித்தோம் என்று பஸ் ஏறி வழக்கமான இடத்தில் உட்கார்ந்தாள் கனகா. என்ன இருந்தாலும் அந்த அம்மா இவனை இப்படி விட்டு விடுப் போகக் கூடாது. என்றைக்கு என்ன செய்வானோ என்ற பயத்துடன் எத்தனை நாள் இருக்க முடியும்..அந்தப் பையன் மீது கோபம் வந்தது..

அம்மாவிடம் சொன்னபோது அம்மா சிரித்தார்கள்.
"பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற நீயே பயப்பட்டா எப்படி.."

அதுவும் சரிதான். அதற்காகப் பயம் இல்லாத மாதிரி நடிக்க வேண்டுமானால் முடியும். பயம் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?

சரியான கிறுக்கன்..கனகாவுக்குக் கோபம் கோபமாய் வந்தது. இப்படிப் பொறுப்பில்லாமல் வெளியே அந்தப் பையனை அனுப்பிய அவன் அம்மா மீது..அவன் நினைவே எரிச்சலை மூட்ட இதே போல் எத்தனை நாள் போகுமோ என்று எண்ணியபடி பள்ளியை அடைந்தாள். வேலைப்பளுவில் சற்றே மறந்தாலும் ஒவ்வொரு காலையிலும் இம்சை தருகின்ற அந்தத் தருணங்கள் மனதின் ஓரம் வந்து வந்து போயின.

அன்று சாயந்திரம் அதே பஸ்ஸில் வீடு திரும்புகையில், அவள் கண்முன் கண்ட காட்சி மனதைப் பற்றியெரிய வைத்தது. அவ்வளவு அதிகமாகக் கூட்டமில்லை. சற்று முன் நின்று கொண்டிருந்த பள்ளிச் சிறுமியின் மீது சாய்வதும், பின் விலகுவதுமாகப் போக்குக் காட்டிக் கொண்டிருந்த நடுத்தர வயது மனிதரைக் கோபத்துடன் வெறித்தாள் கனகா. தற்செயலாக நடப்பது போல் காட்டிக் கொண்டாலும், அந்தப்பாவியின் வக்கிரபுத்தி பார்த்த மாத்திரத்தில் உரைத்தது. அந்தச் சிறுமி பாவம், நகர்ந்து சென்றாலும் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தது அந்த ஜடம்.

ஏதோ ஒரு படத்தில் யாரோ சொன்ன வசனம் நினைவுக்கு வந்தது. "இப்பல்லாம் வயசுப்
பசங்கள விடப் பெரிசுககிட்டதான் ஜாக்கிரதையா இருக்கணும்."

இருக்கையில் இருந்து எழுந்த கனகா அந்தச் சிறுமியிடம் சென்றாள்.

"இங்கே உட்கார்ந்துக்கோம்மா. நான் இறங்கப் போகிறேன்."

"தேக்ஸ் அக்கா." என்றபடி சிறுமி நகர்ந்தாள். அங்கே நின்ற கனகா பார்வையால் அந்த ஆசாமிக்குச் சவால் விட, நெளிந்து குழைந்தார் ஆசாமி. அடுத்த நிறுத்தம் வர, இறங்க வேண்டுமோ அல்லது பயமோ இறங்கிப் போனது அந்த ஜென்மம்.

ஏனோ கிறுக்கனின் முகம் கண்முன் வந்தது. இந்த வக்கிர நடத்தையை அவன் திடீரென்றுதானே தொடர்கிறான்..யாரோ ஒரு விஷமிதான், வக்கிரபுத்திக்காரன் தான் இதைச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். பஸ்ஸில் பார்த்த ஆசாமிக்கும் சித்தம்
சுவாதீனமாகவே இருக்க, அவன் என்ன பித்தனா? கிறுக்கனுக்குச் சைகை செய்யச் சொல்லிக் கொடுத்த ஆசாமிக்கும் மன நலம் நன்றாகவே இருக்க..அவன் பித்தனா? இல்லை எதுவும் புரியாமல் பித்தன் என்று பெயரைச் சுமக்கும் சிறுவன் பித்தனா? யார் பித்தன்?

நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கேறிய தசைநார்கள் நொடியில் இறுக்கம் தளர்ந்து இலகுவாக...சட்டென்று ஒரு நெகிழ்வு பிரவகித்தது மனதில். பெரியப்பா மன நல மருத்துவர்தானே. அந்தப் பையனைக் கூட்டிக் கொண்டு போய் அவரைப் பார்த்தால் என்ன? முதலில் அவன் அம்மாவை பார்த்துப் பேச வேண்டும். சுந்தர மூர்த்தி மாமா இந்நேரம் வந்திருப்பார். அவருக்குதான் அவன் வீடு தெரியும். ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியவளாய் சுந்தரமூர்த்தி வீடு நோக்கி நடக்கலானாள் கனகா. மனதில் இனம் புரியாத அமைதி நிலவியது.

Monday, March 17, 2008

ரசனை மாற்றம் Vs கருத்து வேறுபாடு Vs பலப்பரிட்சை

இட்லிக்கு எந்தச் சட்னி பிடிக்கிறது என்று சமையலில் தொடங்கி சகலமும் ரசனைகளின் அடிப்படையில்தான்..ஏதோவொன்றின் மீது ஏற்படும் பிடித்தம் அல்லது ஈடுபாடு அளவுக்கதிமாகும் போது ரசனையாதல் இயல்பு. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை.

பள்ளிப் பருவத்தில் ரஜினி - கமல், ஸ்ரீதேவி - ஸ்ரீப்ரியா/ரத்தி, யேசுதாஸ் - எஸ்.பி.பி , சுஜாதா - பாலகுமாரன், பாலசந்தர் - பாரதிராஜா ... இது போல் பல விஷயங்களுக்காகவும் கட்சி கட்டிக் கொண்டு செய்த வாக்குவாதங்கள், சண்டைகள்..இதெல்லாம் ரசனையா என்ற அற்பத்தனமான விஷயத்துக்கும் அடாவடியாய்ச் சண்டைகள்..ஒரு முறை வாக்குவாதம் தீவிரமாகி ஒரு தோழியுடன் சில நாட்கள் பேசாமல் இருந்ததெல்லம் நினைத்தால் சிரிப்பாக வருகிறது. வேலைகள்/கவலைகள் அதிகமில்லாத காலத்தில் இப்படியிருப்பது இயல்புதான்.

எப்போதும் வேறுவிதக் கவலையில் இருக்கும் உயர்தர வகுப்பினருக்கு இந்தப் பலப்பரிட்சைகள் விவாதங்கள் என்ற பெயரில் அவசியமில்லை. காரியத்தில் மட்டுமே கண். எப்போதும் வயிற்றுப்பாட்டைப் பற்றிய கவலையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு இதெல்லாம் பொருட்டே இல்லை. நடுவில் ஊசலாடும் வர்க்கத்திடம்தான் அதிகம் கூச்சலும், குழப்பமும்.

இவையெல்லாம் தனி மனித விருப்பத்தைப் பொறுத்த ரசனை மாற்றங்கள். கொள்கைப் பிடிப்புக்காய் மாறும் ரசனைகளும் பல உண்டு.

திரைப்படம்/தொலைக்காட்சி/பத்திரிகை - இந்தத் துறைகளை எடுத்துக்கொண்டால் மக்கள் ரசனைக்காகத் தருகிறோம் என்ற பெயரில் வகை வகையான ரசனைகள் வரிசைப்படுத்தப் படுகின்றன.ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..

மதம் - கேட்கவே வேண்டாம். இதில் ரசனைக்கு இடமில்லைதான். பல சமயம் பிறப்பால், சில சமயம் சுய தேர்வால் ஏற்படுகின்ற ஒரு விஷயம். கொள்கைகளின் அடிப்படையில் ஏற்படும் வேறுபாடுகள் மனிதருக்கு மனிதர் மாறுவதை இங்கும் காணலாம். ஈடுபாடு இல்லாதவர்க்கும் கருத்து வேறுபடு என்ற பெயரில் வாக்குவாதங்களுக்குக் குறைவில்லை. ஆன்மீகத்துக்குப் பல முகமாகிப் போக மதங்கள் மனிதனைக் காப்பாற்றுவதை விட, மனிதன் வரிந்து கட்டிக் கொண்டு மதங்களைக் காப்பாற்ற வேண்டிய பரிதாப நிலை.ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..

அரசியல் - இதிலும், பதவிகளில் இருப்பவர்கள், கட்சித் தலைவர்கள் கூட எல்லா விஷயங்களிலும், எல்லா நேரங்களிலும் அதே முக்கியமான கொள்கைப் பிடிப்பிலிருந்து விலகாமல் நிற்கிறார்களா என்பது சந்தேகமே. தலைவர்கள் இப்படியென்றால் தொண்டர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..

இப்படி ஒவ்வொரு துறையிலும் ரசனை மாற்றங்கள்..கொள்கைப் பிடிப்புகள் கருத்து வேறுபாடுகளாக உருவெடுத்து போட்டியிலும், பலப்பரிட்சையிலும் தொடர்ந்து..ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

ஆனால் அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறைக்கு இதற்கான ஈடுபாடு இவ்வளவு ஆழமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அன்று தொலைக்காட்சி, கணினி எல்லாம் ஏது? இன்றுள்ள சாதனங்கள் பல வேண்டவே வேண்டாம் என்று துரத்த முடியாத அளவுக்கு நம் வீடுகளில் அழுத்தமாய் வந்து அமர்ந்துள்ளது. இன்றைய வளர்ந்து வரும் குழந்தைகளின் பார்வையில் பலவிதமான செய்திகள், துறைகள்,சவால்கள்....
ஒவ்வொன்றுக்கும் ரசனை வளர்த்துக் கொள்வதற்கே நேரமில்லாத போது,கருத்து வேறுபாடுகளும், பலப்பரிட்சைகளும் சற்று பலவீனப்பட்டுப் போகின்றன.

இவர்களின் விவாதங்கள்..ஈடுபாடு இருந்தாலும் / இல்லாவிட்டாலும் இந்த ரீதியில்தான் இருக்கும்..அடுத்தவர் மீது தன் கருத்தைத் திணிப்பதாக இருக்காது என்றே தோன்றுகிறது.

நபர் 1: எனக்குக் கவிதையே பிடிக்காது. (இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 2: எனக்குக் கதையே பிடிக்காது.(இருக்கட்டும்.)

நபர் 1: பின் நவீனத்துவம் எனக்குப் புரிவதில்லை.(புரிய வேண்டாம்.)
நபர் 2: மொக்கை எனக்குப் பிடிப்பதில்லை.(ஏன் பிடிக்கணும்?)

நபர் 1: இந்த மதம்தான் சரியானது.(இருக்கட்டும்.)
நபர் 2: இல்லை. இந்த மதம்தான் சரியானது.(இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 3: கடவுளே இல்லை..இருக்கிறார் என்பவன் முட்டாள்.(இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 4: கடவுளே இல்லை என்று சொல்லும் நீ தான் முட்டாள்.(அதுனால் என்ன குறைஞ்சு போச்சு?)

நபர் 1: அஜீத் தான் எங்க தல..சூப்பரா கலக்குறாரு..(வச்சுக்கோ)
நபர் 2: இளைய தளபதிதான் என் சூப்பர் ஸ்டாரு..(வச்சுக்கோ)

நபர் 1: எங்க கட்சித் தலைவருக்குதான் நல்ல எதிர்காலம்...வலுவான கொள்கைப்பிடிப்பு..(நல்லா இருக்கட்டும்)
நபர் 2: அதெல்லாம் தலைவர் காலத்துக்கப்புறம் பாப்போம்..என்ன நடக்குதுன்னு..(நல்லாப் பாரு..)
நபர் 3: புதுத் தலைமைதான் தமிழ்நாட்டுக்குத் தேவை..திராவிடம் போதுமப்பா..(புதுசுதான் வந்துட்டுப் போகட்டுமே.என்ன போச்சு?)
நபர் 4: எந்தப் பழைய கட்சியும் வேணாம்ப்பா..ரசிகர் மன்றக் கொடிகள்தான் கட்சிக்கொடியா வரணும்...நாம் நல்லா உருப்படணும்னா..(நல்லா உருப்பட்டுக்கோ..)

நபர் 1: தங்கமனிகளுக்குதான் அதிகம் கஷ்டம்.(அப்படியா?)
நபர் 2: காலத்துக்கும் ரங்கமணிக்குதான் கஷ்டமோ கஷ்டம்.(அய்யோ, அப்படியா)

இப்படி அடைப்புக் குறிக்குள்ள இருக்கிற மனோபாவம் இன்றைய குழந்தைகளிடம் / வளர்ந்து வரும் தலைமுறையிடம் கொஞ்சம் காண முடிகிறது. அஜீத், விஜய்க்காக சண்டை போடுகிற பள்ளிப்பிள்ளைகள் இன்று பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஏதோ புதுப்படம் வெளிவரும் சமயம்..சில கூத்துகள் மட்டும் இன்றும் தொடர..நடிகர்கள்தான் ரசிகர்களை விடப் படங்களில் ஒருவரை ஒருவர் அதிகம் தாக்கிப் பேசுகின்றனர்.

பழையது பிடிக்காது..ஆனாலும் தவிர்க்க முடியாது என்று ரீ மிக்ஸ் கலாசாரத்தைத் திரைத்துறையில் புகுத்தியது போல்..வேண்டியவற்றை, வேண்டிய முறையில் தேர்ந்தெடுக்கும் பக்குவம் இவர்களிடம் நிறையவே உள்ளது.

பலப்பரிட்சையென்ற பெயரில் அர்த்தமில்லாத விவாதங்கள் அளவுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோகாத இந்த இளைய தலைமுறையினர் நம்மைக் காட்டிலும் எதார்த்தவாதிகள்தான்.

Friday, March 14, 2008

காவியப்பாவை ஜீவிதம்

இளவேனில் தினத்துக்கு நின்னை
இணைமொழிய இயலாதன்றோ?
நின் எழில்மென்மை நல்நளினம்
வேனிலினும் வனப்பன்றோ!

சித்தம்கவர் சித்திரைப்பூ மொட்டுகளை
மெத்தனமாய் அளைந்து செல்லும்
வேனிற்தென்றல் அழுத்தமானது;
வேனிலின் வாழ்நாளோ
குத்தகையில் கொஞ்சம் குறைந்திட்டது.

கணப்பொழுது வானின் கண்ணது
சுடர்விட்டுப் பொலிந்திடும்.
மறுகணமே தன் தங்க நிறம்
மங்கலுற்று மயங்கிடும்.

எழிலார்ந்த எந்தவொன்றும்
எழிற்கோலம் சற்றே பிறழ்ந்திடும்.
விதிவசத்தால் சில பொழுது,
வழிமாறாது சென்றிடும்
இயற்கையால் சிலபொழுது.

எனினும் நின் எழில்வேனில்
என்றென்றும் மங்கிடாது,
தனியழகின் தன்மையதனை
ஒருபோதும் இழந்திடாது.

காலத்துக்கும் வாழும்
காவியத்தின் வரிகளில்
வளர்ந்து வரும் நின்னழகை
மரணதேவனும் தன் நிழலில்
வசப்படுத்தல் இயலாது.

மனிதனவன் சுவாசிக்கும் காலம்வரை
கண்களது காட்சிகள் காணும்வரை
இந்தக் கவிதையும் வாழ்ந்திருந்து
நின்னையும் வாழவைக்கும்.

ஷேக்ஸ்பியரின் Sonnet - 18ன் மொழிபெயர்ப்பு முயற்சி/பயிற்சி..
ஏற்கனவே செய்த இந்த முதல் முயற்சி திருப்தியில்லாததால் மீண்டும்...

ஆங்கிலத்தில்:

Shall I compare thee to a summer's day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer's lease hath all too short a date:
Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimmed,
And every fair from fair sometime declines,
By chance, or nature's changing course untrimmed:
But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thou ow'st,
Nor shall death brag thou wander'st in his shade,
When in eternal lines to time thou grow'st,
So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee.

Thursday, March 13, 2008

நீ மரணித்தும் உயிர்த்திருப்பாய்!




இனியவளே!
உன்னை
இளவேனில் தினத்துக்கு
இணையாக்கிப் பாடவா?


நீ அதனினும்
அழகானவள்,
மென்மையானவள்..
நளினமானவள்..

மனம் கவரும்
மே மாத
மலர் மொட்டுகளைச்
சற்றே வீம்பாக
அளைந்து போகும்
அழுத்தமான தென்றல்..
(உன் மென்மைக்கு இணையாகுமா?)

இம்மண்ணில்
வேனில் பருவத்தின்
குத்தகை தினங்கள்
மிகவும் குறைவுதானே.
(உன் அழகு அப்படியா?)

சில பொழுது சுடுவெயிலால்
தங்கப் பொலிவுடன் தகதகக்கும்
வானத்தின் கண்கள்
பல பொழுது மேகமூட்டத்தால்
மங்கித்தான் போகும்.

விபத்தால் சில பொழுது,
மாற்றம் எழுதிச்செல்லும்
இயற்கையின் விளைவால்
சில பொழுது..
எந்தவொரு அழகுமே தன்
அழகு நிலையிலிருந்து
தாழும்..சரியும்.

அன்பே,
உன் அழகு இளவேனில்தான்.
எனினும் என்றென்றும்
மங்கி மறையாத இளவேனில்.

மரண தேவனும்
தன் நிழற்பரப்பினுள்
உன்னை வலித்திழுக்க முடியாது.
உன்னை வசப்படுத்தியதாக
வனப்புமொழி பேசி
எக்காலமும் எக்காளமிட முடியாது.

ஏனெனில் என்னவளே!
நீ மரணித்தும் உயிர்த்திருப்பாய்..
என்றும் வாழும்
என் கவிதையின் வரிகளில்
என்றென்றும் நீ வாழ்ந்திருப்பாய்..
காலங்கள் கடந்தும் உயிர்த்திருப்பாய்..

இப்பூவுலகில்
மனிதனின் சுவாசம் உள்ளவரை
கண்களில் பார்வைகள் உள்ளவரை
என் கவிதையும் வாழ்ந்திருக்கும்..
உன்னையும் உன் அழகையும்
என்றென்றும் வாழ வைத்து
என் கவிதையும் வாழ்ந்திருக்கும்!

(ஷேக்ஸ்பியரின் Sonnet-18 ன் மொழிபெயர்ப்பு முயற்சி/பயிற்சி)

(இதில் அவ்வளவு திருப்தியில்லாததால்
காவியப்பாவை ஜீவிதம் பதிவில் மீண்டும் ஒரு முயற்சி)

ஆங்கிலத்தில்:

Shall I compare thee to a summer's day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer's lease hath all too short a date:
Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimmed,
And every fair from fair sometime declines,
By chance, or nature's changing course untrimmed:
But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thou ow'st,
Nor shall death brag thou wander'st in his shade,
When in eternal lines to time thou grow'st,
So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee.

Monday, March 10, 2008

தேடல்


அத்துவான அகண்ட வெளியில்
ஆழமான அடர் இருட்டில்
சத்தமான நகரச் சந்தையில்
சலசலக்கும் கிராம ஓடையில்
அண்டம் வாழ்
அனைத்து உயிர்களின்
அளப்பரிய தேடல்கள்
அளவளாவும் வாழ்க்கைகள்..

ஐந்தறிவின் தேடல்
அடிப்படையில் உணவுக்காய்
உறையுளுக்காய்
உற்பத்தி இனத்துக்காய்..

ஆறறிவின் தேடல்
அடிப்படை தொடங்கி
அதிரடியாக இறங்கி
அந்தம் கடந்தும்
மந்தம் அடையாது..
உதிர்பருவம் கடந்தும்
முதிர்ச்சியது அடையாது..

மயங்கும் நேரம் மகிழ்ச்சியில்
மகிழும் நேரம் மலர்ச்சியில்
தாழும் நேரம் உயர்வுக்காய்
உயரும் நேரம் உச்சிக்காய்..

சயன நேரம் நயனத்தில்
சலன நேரம் சரசத்தில்
மௌன நேரம் நினைவில்
மயான நேரம் அமைதியில்

இந்தத் தேடல்
நொடி விட்டு நொடி பாயும்
கூடு விட்டுக் கூடு பாயும்..

தேடல் தந்த ஈடாய்க்
கை நிறையப் புதையல்
அள்ளியணைத்துத்
திரும்பிப் பார்த்தால்
அட!
மீண்டுமொரு தேடலா?
ஆம்..
வாழ்க்கை தொலைந்து போனதாம்!

Sunday, March 9, 2008

பூவரசி தாமரை பிறந்த கதை

பூக்களின் அரசியாய்ப்
பூமுடி சூட்டிடப்
பலரும் விரும்பும்
பூவொன்று கேட்டுப்
பூமகளிடம்* வந்தனள்
காதல் தேவதை.*

புலவர்தம் பாக்களில்
புகழ்ப் பாமாலை
பல்லாயிரம் சூடிய
ரோஜாவும் அல்லியும்
நெடுங்காலமாய்ப் போட்டி
பூவரசி பட்டத்துக்காய்..

பூத்தது போராட்டம்
ஆன்மக் கடவுளின்*
அழகு நந்தவனத்தில்..
புயலென மாறிய
பூக்களின் போட்டி.


பூவரசி யார்?
"அழகு தேவதை ஜூனோவின்*
அம்சங்கள் பொருந்தியது அல்லியே!
ரோஜாவுக்கு இந்த
அழகு இல்லையே"
என்றது ஒரு பூக்கூட்டம்..

"அல்லி மட்டும் அழகா என்ன?
ரம்ய சுகந்தம்
அள்ளித்தரும் ரோஜாவுக்குப்
போட்டியா என்ன?"
என்றது ஒரு பூக்கூட்டம்.

எந்தப்பூ?
காதல் தேவதை மயங்கினள்.
சற்றே குழம்பினள்..
பின் தெளிந்தனள்.

ரோஜாவின் காந்த சுகந்தம்
அல்லியின் கம்பீர அழகு
இரண்டும் சரிவர மேவிய
புத்தம் புதிய
பூவொன்று வேண்டினள்.


எந்த நிறம்?
ரோஜாவின் இளஞ்சிவப்பா?
அல்லியின் தூயவெண்மையா?
மயங்கினள் மீண்டும்
காதல் தேவதை.
இரண்டும் இழைத்த
இனிய வண்ணம் வேண்டினள்.

பூமகள் தந்தனள்
புதுமலர் தாமரை
இளஞ்சிவப்பு, தூயவெண்மை
இரண்டும் இணைந்த
புத்தம்புது வண்ணத்தில்
புதுப்பொலிவுடன்
பூவரசி தாமரை!


கொஞ்சம் நம் இந்தியக் கலாசாரத்தையும் ஒத்திருக்கும் கிரேக்க/ரோமானியக் கலாசாரத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுள் உண்டு..

பூமகள் - Flora ......... (Roman Goddess of Flowers)
காதல் தேவதை - Love/Venus (Goddess of Love)
அழகு தேவதை - Juno .......... (A Beautiful Roman Goddess)
ஆன்மக் கடவுள் - Psyche...... (Goddess of the Soul)

Toru Dutt எழுதிய The Lotus என்ற கவிதையின்
மொழிபெயர்ப்பு முயற்சிதான் இது.

Tuesday, March 4, 2008

சின்னப் பெண்ணான போதிலே - கண்மணி tag

பள்ளிக்கூடப் பாட்டுப் போடச் சொன்ன கண்மணி தொடர் விளையாட்டுக்காக..




அம்மா இங்கே வா வா!
ஆசை முத்தம் தா தா!
இலையில் சோறு போட்டு,
ஈயைத் தூர ஓட்டு!



நிலா நிலா ஓடி வா!
நில்லாமல் ஓடி வா!
மலை மேலே ஏறி வா!
மல்லிகைப்பூ கொண்டு வா!




கைவீசம்மா கைவீசு!
கடைக்குப் போகலாம் கைவீசு!
மிட்டாய் வாங்கலாம் கைவீசு!
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு!



பிஸ்கெட் பிஸ்கெட்
ஜாம் பிஸ்கெட்
என்ன ஜாம் கோஜாம்
என்ன கோ டிகோ
என்ன டி பன்ரொட்டி!


கீரை விதைப்போம்
கீரை விதைப்போம்
வாடா கண்ணா வா!
கீரை விதைத்தால்
கோழி கிளறும்
போடா வர மாட்டேன்!





Sunday, March 2, 2008

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஐன்ஸ்ட்டின்:

ஒருவர் தான் தவறுகளே செய்யவில்லை என்று நம்புவாராயின், அவர் தன் வாழ்வில் புதிய முயற்சி எதுவுமே மேற்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

சுவாமி விவேகானந்தர்:

பிரச்னைகளை எதிர்கொள்ளாத நாள் என்று ஒன்று இருந்தால், நீங்கள் தவறான பாதையில்
செல்கிறீர்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.

ஆப்ரஹாம் லிங்க்கன்:

எல்லோரையும் நம்பும் குணம் ஆபத்தானது. ஒருவரையுமே நம்பாத குணம் அதைவிட
ஆபத்தானது.

அடால்ஃப் ஹிட்லர்:

நீ பெற்ற வெற்றியை விவரிக்க வேண்டிய அவசியமில்லை..உன் தோல்வியை விவரிக்க நீ இருப்பதே அவசியமில்லை.

தாமஸ் எடிசன்:

ஆயிரம் முறை தோற்றுவிட்டதாக நான் சொல்லமாட்டேன். தோல்வியை ஏற்படுத்தும்
ஆயிரம் வழிகளைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றுதான் சொல்வேன்.

ஆலன் ஸ்ட்ரைக்:

இந்த உலகத்தில் ஒருவரோடும் உன்னை ஒப்பிட்டுப் பேசாதே. அப்படி ஒப்பிடுவது உன்னையே நீ அவமானப்படுத்திக் கொள்வதற்குச் சமம்.

அன்னை தெரசா:

பிறரை ஆராய முற்பட்டால், அவர்களிடம் அன்பு செலுத்த நேரமில்லாமல் போய்விடும்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வெற்றிக்கான மூன்று வாக்கியங்கள்:
  • அடுத்தவரை விட அதிகம் தெரிந்து கொள்வது.
  • அடுத்தவரை விட அதிகம் உழைப்பது.
  • அடுத்தவரை விடக் குறைவாக எதிர்பார்ப்பது.

போனி(Bonnie) ப்ளேர்:

வெற்றி என்பது முதலிடம் என்று எப்போதும் அர்த்தம் ஆகாது. வெற்றி என்பது, முன் நீ செய்ததை விடச் சிறப்பாகச் செய்திருக்கிறாய் என்றும் பொருள்படும்.

சார்லஸ்:

உடைக்கக் கூடாத நான்கு விஷயங்கள் - நம்பிக்கை, சத்தியம், உறவு மற்றும் இதயம்(அன்பு). இவை உடைந்தால் அதிகம் சத்தம் உண்டாவதில்லை, ஆனால் அதிகம் வலிகள் உண்டாகும்.

லியோ டால்ஸ்டாய்:

உலகத்தை மாற்ற வேண்டும் என்று அனைவரும் எண்ணுகிறார்கள். தங்களை மாற்றிக் கொள்ள எண்ணுவதில்லை.

(மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வந்தது..என் மொழிபெயர்ப்புப் பயிற்சிக்கு உதவியது)