Saturday, October 13, 2012

நான் அறிந்த சிலம்பு - 29

புகார்க்காண்டம் – 05 இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 21- 30
சிலம்பின் வரிகள் இங்கே: 31 - 39

மருவூர்ப்பாக்கம் – பகுதி – 2

இது இது இன்ன இன்னது
என்று பிரித்தறியச் சுலபமாக,
குவித்து வைக்கப்பட்ட பொருட்களுடன்
கூலவீதிகளில்
எண்வகைத் தானியங்கள்
குவிந்தேதான் இருந்தன.

பிட்டு வணிகர்
அப்ப வணிகர்
கள் வணிகராம் வலைச்சியர்
மீன் வணிகராம் பரதவர்
வெள்ளை உப்பு வணிகராம்
உமணர் உமட்டியர்

கயிறு திரித்து விற்கும் பாசவர்
வெற்றிலை வணிகர்
வாசனைப் பொருள் வணிகர்
பல வகை மாமிச வணிகர்
எண்ணெய் வணிகர்
நிறைந்து காணப்படும்
ஊன்மிக்க வாழிடங்கள் இருந்தன.

வெண்கலத்தில் பாத்திரம் செய்யும் கன்னார்
செப்பு வேலை செய்யும் கொட்டிகள்
மரவேலை செய்யும் தச்சர்
வலிமை மிக்க கைகளுடைய கொல்லர்
ஓவிய வினைஞர்
மண்பாண்டம் செய்யும் குயவர்
பொன் வேலை செய்யும் கொல்லர்
இரத்தின வேலை செய்பவர்

துணிவேலை செய்யும் தையற்காரர்
தோல்பொருள் செய்யும் செம்மார்
துணிகள் கொண்டு
படம் முதலியன செய்வோர்
நெட்டிக் கோரைகள் கொண்டு
விலங்கு பறவை பூங்கொத்து முதலிய
கலைப்பொருள் செய்வோர்
என்று பலவாகக்
குற்றமற்ற கைத்தொழில்
செய்திடுவோர் பலரும்
வாழும் இடங்கள் இருந்தன.

குழல் கொண்டு யாழ் கொண்டு
குரல் முதலான ஏழிசைகளைக்
குற்றமற இசைத்து
அவ்விசைவழி தோன்றும்
திறங்களையும்
திறமையுடன் பாடவல்ல
பெரும்பாணர் வாழிடங்கள் இருந்தன.

சிறு சிறு கைத்தொழில் செய்வார்
பிறர் கட்டளைக்குப் பணிந்து
குற்றேவல் புரிந்து நிற்பவர்
வாழும் இடங்களும் இருந்தன.

கடலதன் பரப்பில்
யவனர் இருக்கை தொடங்கி
நகரதன் வீதிகளில்
பல்பொருள் அங்காடிகள் கொண்டு
பலதரப்பட்ட குடிமக்கள்
வாழும் இடங்களைக் கொண்டு
குற்றமறச் செழித்து நின்றது
மருவூர்ப்பாக்கம்.

வல்லமை 16.07.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, October 9, 2012

மனவறைச் சுத்தம்

மனவறைச் சுத்தம் - 1

சுருட்டிய கூந்தல்
உடைந்திட்ட கேசகவ்வி
ஜோடியற்ற ஒற்றைத்தோடு
காலியான வாசனை திரவியக் குப்பி
வீண் பொருட்கள்
அலங்கார மேசையில்..


எழுதாத பேனா
உதவாத கசங்கிய காகிதம்
உலர் பசை
எழுதிமுடித்த கவிதையின்
ஒத்திகை வரைவுகள்
வீண் பொருட்கள்
எழுது மேசையில்..


களையப்படுகின்றன குப்பைகள்
அறைதோறும் அவ்வப்போதேனும்..


பொறாமை பழியுணர்வு
என்றோ கேட்டதொரு வசவு
எங்கோ பார்த்ததொரு
வேண்டாத காட்சி
யாரோ கிளறிய
குப்பை நினைவு
சினம் ரணம்..


களைய முடியத்தான் இல்லை..
பழையன களை(ழி)யும் முன்னே
மீண்டும் புதிய குப்பைகள்
மனவறை மருங்கினில்..

*********************

மனவறைச் சுத்தம் - 2

கழிவுநீர்த் துளையின்
அடைப்பானில்
பிடிவாதமாய் ஒட்டியிருக்கும்
கழிவுணவுப் பிசுக்குகள்போல்


மரிக்காமல் மனதில்
மேடை போட்டு
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்
கழிவுணர்வுத் துகள்கள்.


விதியே என்றிருந்தால்
வியாதிதான்.


அருவியென
அடித்து ஊற்றி
நல் நினைவுகள்
நீர்தெளிக்க
சடுதியில் கழுவப்படும்
மனவழுக்குகள்.


களைகள் களைந்து
கழுவியெடுக்கும்
அருவியதனுக்குப்
பலரும் சூட்டிடும்
பலப்பல பெயர்கள்.


அன்பு
உதவி
ஈகை
நம்பிக்கை
சம்சாரம்
சந்நியாசம்
பக்தி
ப்ரார்த்தனை
.................
.................
 

குறளின் குரல் - 59

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 96. குடிமை
குறள் எண்: 959


நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.


நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்; காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல்.


விளக்கம்:

நிலத்தின் இயல்பை, அந்த மண்ணில் விளைந்த பயிர்கள் காட்டி விடும். அதுபோலவே, நற்குடியில் பிறந்த ஒருவரின் இயல்புகளை அவர்கள் பேசும் சொற்களே காட்டி விடும்.
-------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 599


பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.


பரியது கூர்ங் கோட்டது ஆயினும், யானை
வெரூஉம் புலி தாக்குறின்.


விளக்கம்:


விலங்குகளில் அதிகம் பருமனானதும், கூர்மையான தந்தங்களையும் உடையது யானை. இருப்பினும் அதற்குப் போதுமான அளவு ஊக்கம் இருப்பதில்லை.
எனவே, அதனினும் உருவத்தில் சிறிய, ஆனால் ஊக்கத்தில் பெரிய புலி தாக்குமானால், ஊக்கமற்ற காரணத்தால் யானை அஞ்சி நடுங்கும்.
பிற வலிமைகளைப் பெற்றிருந்தாலும், ஊக்கமின்மையால் ஓர் அரசர், ஊக்கமுடைய பிற அரசர்க்கு அஞ்சுவர்.
----------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 90. பெரியாரைப் பிழையாமை
குறள் எண்: 894


கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல்.


கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.


விளக்கம்:

ஆற்றலில் சிறந்தவர்க்கு, அதிக ஆற்றல் இல்லாதவர்கள் தீங்கு செய்ய எண்ணக் கூடும்.

அது தம் அழிவு காலத்தைத் தாமே வலிந்து கையசைத்து வரவேற்று அழைப்பதற்கு ஒப்பாகும்.

ஆற்றலில் சிறந்தவர்க்குத் துன்பம் விளைவிக்க எண்ணுவது, தமக்குத் தாமே துன்பத்தை வரவழைக்கக்கூடியதாகும்.
------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 99


இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.



இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது.



விளக்கம்:


பிறர் தம்மிடம் இன்சொல் பேசும் போது அது எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று உணர்பவர்கள், பிறரிடத்து இன்சொல்லைப் பேசாமல் வன்சொல் பேசுவது எதற்காகவோ?
---------------------
 
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 84. பேதைமை
குறள் எண்: 835


ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
தான்புக் கழுந்து மளறு.


ஒருமைச் செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு.


விளக்கம்:

தன்னிச்சையாக, ஒருமுகச் சிந்தனையோடு செயல்படுவான் அறிவுத்திறன் அற்ற பேதை; அவன் எக்காலத்திலும் துன்பம் என்னும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும். தன் செயல்களின் மூலமே தன் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவன் அவன்.

Wednesday, October 3, 2012

மங்கி வரும் இளமைக்காலம்


 
மூலம்: - ஷேக்ஸ்பியர் Sonnet 73

வருடத்தின் பருவகாலம் இன்னதென்று
முதிர்ந்து வரும் என்னில் நீ அறியலாம்;

சிதைந்து போன தேவாலயத்தில்
இனிய குரலில் குழுப்பாடல்கள்
பறவைகள இசைக்கும்
இடங்களுக்கு அருகாமையில்
குளிரில் நடுங்கும்
பழுப்பு மஞ்சள் இலைகள்
மிகவும் குறைந்த எண்ணிக்கையில்
கிளைகளில் ஆடும் தருணங்களில்;
அல்லது ஓர் இலை கூடக் கிளைகளில்
இல்லாத தருணங்களில்;


இன்னும் மீதமிருக்கும்
மங்கலான வெளிச்சமதை
மரணம் தழுவ அருகில் வரும்
என்னில் நீ காணலாம்.

சூரியன் மேற்கில்
மறைந்த பிறகான தருணங்களில்;
சடுதியில் கறுப்பு இரவு
ஒளிர் வெளிச்சத்தை
மறைத்துச் செல்லும்
மரிக்கச் செய்யும்
மறையச் செய்யும் தருணங்களில்;

மரணிக்கக் காத்திருக்கும்
இளமை நெருப்பின் மீது படரும்
நீறுபூத்த நெருப்பாய் நான்
தகதகவென்று ஒளிர்கின்றேன்.

மரணப்படுக்கையில்தான்
அனைத்தும் முடிவு காண வேண்டியுள்ளது.


உணவளித்து ஊட்டி வளர்த்த மரத்துண்டுகள்
முழுமையாய் எரிந்து போனதும்
மரித்துப் போகும் நெருப்பது போன்றது வாழ்க்கை.
இளமைச் சக்தி குறைந்ததும்
வாழ்க்கையின் வலுவும் குறைந்து போகும்..

மங்கி வரும் என் இளமையையும்
அதன் ஏக்கங்களையும் தாபங்களையும்
நீ உணர்வாயோ என் அன்பே!

என் இளமை மங்கி மயங்கி வருவதை
நீ அறிவாயோ
பிரியும் தருணம் நெருங்கி வருவதை
நீ அறிவாயோ
அதனால்தான்
அதிக காலம் விரயமாவதற்குள்
உணர்ந்த காதலை
மேலும் வலுப்படுத்துகிறாயோ...
அதீதம் 11 ஆகஸ்ட் 2012 இதழில் வெளிவந்தது.

குறளின் குரல் - 58

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 100. பண்புடைமை
குறள் எண்:991


எண்பதத்தா லெய்த லிளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு.


எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார்மாட்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு.


விளக்கம்:

எல்லோரிடத்திலும் எளிமையாகப் பேசுவதும், பழகுவகும், பண்புடைமை என்னும் சிறப்பான நெறியினை அடையும் வழியாகும் என்பது வழக்கு.
------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 97. மானம்
குறள் எண்: 961


இன்றி யமையாச் சிறப்பின வாயினுங்
குன்ற வருப விடல்.
 
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

விளக்கம்:

மிகவும் முக்கியமான, கட்டாயமாகச் செய்தே ஆக வேண்டிய செயல்கள் என்றாலும் கூட, தம் பெருமையும் தம் குலப்பெருமையும் குன்ற வைக்கும் தன்மை வாய்ந்தவை அச்செயல்கள் என்றால், அத்தகைய செயல்களைச் செய்யாமல் கைவிடுவதே நன்று.
-------------------
 
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகார்ம்: 65, சொல்வன்மை
குறள் எண்: 646


வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்.


வேட்பத்தால் சொல்லிப் பிறர் சொல் பலன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள்.


விளக்கம்:

தான் சொல்லும் கருத்துகள் மற்றவர் விரும்பித் தொடர்ந்து கேட்குமாறு, அவர் மனம் கோணாதவாறு இனிதாகச் சொல்ல வேண்டும்.


பிறர் தமக்குச் சொல்லும் சொல்லின் பயன்களை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவையிரண்டும் கருத்தில் கொள்வது, தமக்குரிய பண்பில் சிறிதும் மாசு குன்றாதவர்களின் கொள்கையாகும்.
-----------------
 
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 84. பேதைமை
குறள் எண்: 833


நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.


நாணாமை, நாடாமை, நார் இன்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில்.


விளக்கம்:

பழி பாவங்கள் நேர்ந்து விடுமே என்று வெட்கப்படாமை
நாடவேண்டியவற்றை நாடிப் பெறாமை
எவரிடத்திலும் அன்பு இல்லாத தன்மை
பேணிக் காக்க வேண்டியவற்றைப் பேணாமை


இவை எல்லாம் பேதைகளுக்கு இயல்பாய் அமைந்த தொழிலாகும். நல்லவற்றை அறியாதவர் பேதைகள்; ஆதலால் இவை அவர்களது 'தொழில்' எனப்பட்டன.
 
நார் - அன்பு, மட்டை முதலியவற்றின் நார், கயிறு, வில்லின் நாண், பன்னாடை, கல்நார்
------------------
 
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 62. ஆள்வினையுடைமை
குறள் எண்: 618


பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்துள்வினை யின்மை பழி.

பொறி இன்மை யார்க்கும் பழி அன்று; அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி.


விளக்கம்:

மெய், வாய், கண், செவி, மூக்கு என்ற ஐம்பொறிகளில் ஒருவருக்குக் குறைகள் இருக்குமெனில் அது குறை என்று பழிக்கப்படாது. அறிய வேண்டியவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, முயற்சி ஏதும் செய்திடாமல் இருப்பதே குறையாகும்.