Friday, July 12, 2013

வார்த்தைகள்

 
வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
என்னைச் சுற்றிலும் வார்த்தைகள்.
 
 
என்னில் அவை வளர்கின்றன
இலைகளைப் போலவே.
 
 
உள்ளிருந்து
மெல்ல மெல்ல வளரும்
அந்த வார்த்தைகள்
வளர்வது நிறுத்தும்
என்று
எனக்குத் தோன்றவில்லை.
 
 
ஆனால்,
எனக்கு நானே
சொல்லிக் கொள்கிறேன்.
 
வார்த்தைகள் 
தொல்லை தருபவைதான்.
 
 
அவற்றிடம் சற்றுக்
கவனத்துடனும்
எச்சரிக்கையுடனும்
இருந்தாக வேண்டும்.
 
 
அவை...
 
 
பலதரப்பட்ட
விஷயங்களாக
இருக்கக்கூடும்.
 

ஓடுகின்ற கால்கள்
சற்றே இளைப்பாறும்
அகன்ற வெளிகளாய்
இருக்கக்கூடும்.
 
 
உறைந்து நிற்கும்
கடல் அலைகளாய்க்
காட்சி தரக்கூடும்.

 
எரிசூட்டுக் காற்றின்
மிகப்பெரிய வீச்சாய்
வெடிக்கக்கூடும்.
 
 
உன்னுடைய
உயிர்த்தோழமையின் கழுத்தை
மனமுவந்து அறுக்கும்
கத்தியாய் இருக்கக்கூடும்.
 
 
வார்த்தைகள் 
தொல்லை தருபவைதான்.
 
 
ஆனாலும் அவை
மரத்தில் வளர்கின்ற
இலைகள் போல
என்மீது வளர்கின்றன.
 
 
மௌனத்திலிருந்தும்
உள்ளே எங்கேயோ
இனம்புரியாத ஆழத்திலிருந்தும்
முளைத்துக் கிளைத்து வளர்வதை
அவை
நிறுத்துவதாகத் தோன்றவில்லை.
 
 
ஆங்கில மூலம்: Words, Kamala Das
 
அதீதம் இதழில் வெளிவந்தது.

நான் அறிந்த சிலம்பு - 44

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 52 - 73

மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
(அடுத்த ஆறு வகைகள்)
 
 
6. குடைக்கூத்து
 
 
சூரனின் படைவீரர்களாகிய அசுரர்
தாம் போர் செய்யவென
எடுத்த படைக்கலங்களைக்
கீழே போட்டுவிட்டுப்
போர் புரிய இயலவில்லையே என
வருத்தமுற்ற தருணத்தில்,
குடையை அவர் முன் சாய்த்து
முருகப்பெருமான் ஆடிய
குடைக்கூத்து இது பாராய்!
 
 
7. குடக் கூத்து
 
 
வாணன் தன் மகள் உழை காரணமாகக்
காமன் மகன் அநிருத்தனைச்
சிறைப் பிடிக்க,
சிறைமீட்டும் பொருட்டு,
வாணாசுரனது 'சோ' எனும்
பெருநகர வீதியில்,
நீள் நிலத்தைத்
தன் பாதங்களில் தாவியளந்த மாயவன்
மண்ணாலும் உலோகங்களாலும் செய்த
குடங்கள் கொண்டு ஆடிய
குடக்கூத்து இது பாராய்!
 
 
8. பேடி ஆடல்
 
 
அநிருத்தனை மீட்கவென
'சோ' நகர வீதிகளில்
தந்தையவன் காமன்
தன் ஆண்தன்மையினின்று மாறுபட்டுப்
பெண்கோலம் புனைந்து ஆடிய
பேடி ஆடல் இது பாராய்!
 
 
 
9. மரக்கால் கூத்து
 
 
 
கொதிக்கின்ற சினம் கொண்ட
அசுரர்கள் தமது வஞ்சத்தால்
பாம்பு தேள் பூரான் உருக்கொண்டு
போரிட்ட தருணமதில்
அவர்தம் கொடுஞ்செயல் பொறுக்காத
மாயவள் துர்க்கை ஆடிய
மரக்கால் கூத்து இது பாராய்!
 
 
10. பாவைக் கூத்து
 
 
சினந்து போர்க்கோலம் பூண்ட அசுரர்கள்
காமத்தின் வயப்பட்டு,
போரினை மறக்கச் செய்ய
செந்நிறத் திருமகள்
கொல்லிப்பாவை வடிவம் கொண்டு ஆடிய
பாவைக் கூத்து இது பாராய்!
 
 
11. கடையம்

 
வாணர் நகராகிய சோ நகரத்தின்
வடக்கு வாயில் கண்ணுள்ள
வயலிடத்தே நின்று
உழத்தியர் வடிவம் கொண்டு
இந்திராணி ஆடிய
கடையக் கூத்து இது பாராய்!
 
 
 
அன்றொரு நாள்
தாது அவிழ்ப் பூம்பொழிலில்
நான் கூறிய உருப்பசி மரபில் வந்த
மாதவி இவள் நடனம் பாராய்!
அனைத்து தெய்வங்கள்
ஆடிய கூத்தையும்
தக்க மரபுகளுடன்
கூத்தநூல் முறைப்படி ஆடிய
அழகு பாராய்!

 
இங்ஙனம்
நிகழ்வுகளைக் காதலிக்கு விவரித்த
விஞ்சையன், அவன் காதலியுடன்
மண்ணுலக மக்கள் அறிந்திராதபடி
விண்ணுலகத் தேவர்களும் வந்திருந்து
இந்திர விழா நிகழ்வுகளைக்
கண்டுதான் களித்திருந்தனர்.
 
வல்லமை 29.10.12 இதழில் வெளிவந்தது.

நான் அறிந்த சிலம்பு - 43

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 28 - 30
 
சிலம்பின் வரிகள் இங்கே: 31 - 51
 
விஞ்சை வீரன் தன் காதலியுடன் வந்து விழாக் காணுதல்
 
 
உச்சி உயர்ந்த இமயமலையையும்
வளமையான நீருடைய கங்கையாற்றையும்
அழகு பொருந்திய உச்சயினி நகரத்தையும்
விந்திய மலை சூழ்ந்த காட்டையும்
வேங்கடம் என்னும் மலையையும்
நிலம் கொள்ளாத அளவு
பெருவிளைச்சல் காணும்
காவிரி பாயும் சோழநாட்டினையும்
தன் காதலிக்குக் காட்டிய பின்
இதழ்விரி பூக்கள் நிறைந்த
தோட்டங்களை உடைய
புகார்நகரம் அடைந்தனன்
விஞ்சையன்.
 
 
இந்திரனைத் தொழுது,
எல்லா இடங்களையும்
முறைமைப்படியே
அவளுக்குக் காட்டியபின்
வளம் பொருந்திய புகார் நகர்
இந்திரவிழாவினையும்
மாதவியின் ஆடலையும்
காணலுற்றனர்.
 
 
மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
(முதல் ஐந்து வகைகள்)

 
திருமாலைப் புகழும் தேவபாணியும்
வருணப்பூதர் நால்வரைப் புகழும்
நால்வகைத் தேவபாணியும்
பல வகை உயிர்களும் தம் ஒளியால்
நன்மை பெறும் தன்மையுடைய
வானூர்ந்து செல்லும்
நிலவைப் பாடும் தேவபாணியும்
ஆகிய
இசைப்பாடல்களைப் பாடிய பின்னர்
அவதாளம் நீங்கிய
நல் தாளத்தின் இயல்பு பொருந்த
மாதவி புரிந்த நடன வகைகள்
ஒவ்வொன்றையும் தன் காதலிக்குக்
காட்டி மகிழ்ந்தனன்.
 
 
1. கொடுகொட்டி
 
 
பாரதி(பைரவி) ஆடியமையால்
பாரதியரங்கம் எனப்பட்ட சுடுகாட்டில்...
திரிபுரத்தையும் எரியச் செய்ய
தேவர்கள் வேண்டியதால்,
தீயினைத் தலையாய் உடைய
திருமாலாகிய அம்பினை
ஏவிய சிவன்
திரிபுரத்தைச் சாம்பலாக்கினன்.
 
அத்தருணத்தில்
உமையவளைத் தன் ஒருபாகமாகக் கொண்டு
தேவர் யாவரினும் சிறந்த இறைவன்
வெற்றிக் களியில் கைகொட்டி ஆடிய
கொடுகொட்டி ஆடல்
இது பாராய்!
 
 
2. பாண்டரங்கம்
 
 
தன் தேரின் முன்
பாகன் என நின்றிட்ட
நான்முகன் காணும்படி
பாரதி வடிவம் பூண்டு
திருநீறு அணிந்து
சிவபெருமான் ஆடிய
பாண்டரங்கக் கூத்து
இது பாராய்!
 
 
3. அல்லியம்
 
 
கஞ்சனின் வஞ்சனை
வெல்ல நினைத்து
அவன் ஏவி அனுப்பிய
யானையின் கொம்பை ஒடிப்பதற்காக
அஞ்சன வண்ணன் நின்றாடிய
அல்லியக் கூத்து
இது பாராய்!
 
 
4. மல்லாடல்
 
 
கஞ்சன் அவன் ஏவிய
அசுரர்களை வெல்ல
திருமால் ஆடிய
மல்லாடல் எனும் கூத்து
இது பாராய்!
 
 
5. துடிக் கூத்து
 
 
கருமையான கடலது நடுவே
நீர் அலைகளே அரங்கமெனக் கொண்டு
தன்னை எதிர்த்து முன்நின்ற
வஞ்சச் சூரனை
எதிர்த்துக் கொன்ற முருகன்
துடி கொட்டி ஆடிய
துடிக் கூத்து
இது பாராய்!
 
வல்லமை 22.10.12 இதழில் வெளிவந்தது.

Sunday, May 12, 2013

நான் அறிந்த சிலம்பு - 42

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 1- 27


காமக் கடவுளுக்கு விஞ்சை வீரன் விழா எடுத்தல்

பெரிய வெள்ளிமலையில் அமைந்திட்ட
அகன்ற பெரிய வித்தியாதரர் நகரினிலே
தேன் ஒழுகும் மலர்கள் செறிந்த
பூம்பொழில் ஒன்று.

ஆங்கே
நீண்ட கரிய கயல்களை ஒத்த
கயல்விழிக் காதலியோடு இணைந்து
விஞ்சை வீரன் ஒருவன்
காம தேவன் அவனுக்கு
விருந்திட்டே விழாக் கொண்டாடினன்.

இந்திர விழா பற்றியும், புகார்க் காட்சிகள் பற்றியும் விஞ்சை வீரன் தன் காதலிக்கு உரைத்தல்

காமவிருந்து முடியும் தருணம்
தன் காதலியிடன்
உரைத்தனன் இங்ஙனம்.

வடபுலத்தில் உறையும் நாம்
காமவேள் விழாவது கொண்டாடி
முடிக்கும் நாள் இன்று.

இதே நாள்
தென்திசையதனில் வளம்கொழிக்கும்
புகார் நகர் தன்னில்
இந்திர விழாவினுக்கென்று
கால் கோள் கொடியேற்றித் தொடங்கும்
முதல் நாள்.

விழாக்கோலம் பூண்டிருக்கும்
புகார் தன்னில்
காணும் காட்சிகள்தான்
என்னென்னே!!.
நாளங்காடிக் காட்சிகள்


மிக்க வேகமுடன்
நெருங்கி வந்து எதிர்த்து நின்ற
அசுரர் பெருங்கூட்டம்
தோற்றோடிப் போனது..
இந்திரன் நகரைக் காவல்புரிந்த
புலியின் வலிமையுடைய
வீரக்கழல் அணிந்த
முசுகுந்தன் அவனிடம்.
.
எனினும்
வஞ்சனை மிகுதியால்
அசுரர் கூட்டம்.
போகிற போக்கில்
ஏவியே சென்றது
முசுகுந்தன் மீது
இருள்கணை ஒன்றினை.

முசுகுந்தன் ஏவலுக்காய்
இந்திரன்விட்டுச்சென்ற
காவல் பூதம்
வஞ்சக இருளை நீக்கியது.

என்றென்றும் முசுகுந்தன்
மெய்க்காவலாகி நிற்கவென்று
இந்திரன் இட்ட கட்டளைப்படி
முசுகுந்தன் அவனுடன்
புகார் நகர் நாளங்காடி தங்கியே
பலிபெற்று வருகிறது.
காவல் பூதமது.
.

இத்தகைய சிறப்புப் பொருந்திய
நாளங்காடிக் காட்சிகளை
நாம் காண்போம்.

ஐவகைமன்றக் காட்சிகள்

முன்பு அசுரரால் வந்த
இடரது போக்கியே
அமராவதி நகரைக் காத்தமையால்
மகிச்சியுற்ற இந்திரனால்
கைம்மாறாய் அளிக்கப்பட்டு
சோழ மரபினரால் கொண்டுவரப்பட்டு


என்றும் பொய்க்காமல் நிலைபெற்ற
தனித்தன்மையுடன் அழகுடன்
புகார்நகரில் இலங்குகின்றது
ஐவகை மன்றம்.
 
 
அம்மன்றத்தின் சிறப்பினைக்கண்டு
நாம் மகிழ்வோம்.

உருப்பசி /ஊர்வசி வழித்தோன்றலாகிய மாதவியின் ஆடல் காட்சிகள்

அன்றொரு நாள்
இந்திரன் அவையில்
அகத்தியரை வரவேற்க
நாரத முனிவன்
இசையின்பம் சிறக்கப்
பாடும் பாடலும்,
தோரிய மடந்தையர் பாடிய
வாரப் பாடலும்
ஆயிரம் கண்ணுடைய இந்திரன்
செவியை நிறைத்து நின்றிருக்க...

சயந்தன் நினைவில் மயங்கியபடி
நடனமாடிய உருப்பசியின்
குறை பொருந்திய நடன நாடகம்
இந்திரன் செவியை நிறைக்கவில்லை...


இதே காரணத்தால்
பிற வாத்திய இசைகளும்
தளர்ந்தேதான் போய் நிற்க..

அகத்தியர் தாமும்
சாபமிட்டார் இங்ஙனம்
வீணை மங்கலமிழப்பதாக.
இவள் மண்ணுலகில் பிறப்பாளாக

சாபமதன்படி உருப்பசி
மாதவியென்று பிறந்தனள்
கணிகையர் குலத்தில்.


உருப்பசி மாதவியாக....
அவ்வழித்தோன்றலில் வந்த
பாம்பு போன்ற அல்குல் உடையவள்
இன்னுமொரு மாதவி.

அவள் தம் சிறப்பு நடனக்காட்சிகளும்
நாம் காண்போம்.

சிவந்த இதழ்களும்
உடுக்கை போன்ற இடையும்
உடையவளே!


புகார்நகரில் பூசைகொள்ளும்
அமரர் தலைவன்
இந்திரனை நாமும் வணங்குவோம்..
என்றனன் தன் காதலியிடம்
அவ்விஞ்சை வீரன்.
 
வல்லமை 15.10.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, May 7, 2013

நான் அறிந்த சிலம்பு - 41

புகாரக்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை


சிலம்பின் வரிகள் இங்கே: 227 - 240
 
மனைபுகுந்த ஆடவர் தம் மனைவியரின் ஊடலைத் தீர்க்க அறியாமல் நடுங்குதல்

விருந்தினரோடு வீடுதான் புகுந்திட்ட
அகன்ற பெருந்தோள் கணவருடன்
ஊடல் பாராட்ட இயலாமல்
அவருடன் பொருந்தியிருந்து
வந்திட்ட விருந்தினரை
வரவேற்று உபசரித்தனர்
இல்லற மகளிர்.

வழிபாட்டு ஒழுக்கத்தில்
மேலோங்கிச் சிறந்த
அருந்ததி போலும்
கற்பில் சிறந்த
இல்லற மகளிரை
அவர்தம் கணவர் பெருமக்கள்
மதித்தேதான் போற்றினர்.

தம் நெஞ்சத்திடம்
தம் எண்ணம் உரைத்தனர்.

ஒளியும் அழகும் பொருந்திய
இம்மாதர் திருமுகம் கண்டிட்ட
நீலமணி ஒத்த இதழ்களையுடைய
குவளை மலர்கள்
புறங்கொடுத்துப் போயின.

மகளிரின் கரிய கண்களின்
கோபக் கருஞ்சிவப்பு
விருந்தினர் வரவால்
நீங்கியே போயிற்று.

இக்கோபச்சிவப்பு மட்டும்
நீங்காமல் போயிருந்தால்
இந்தப் பரந்த நிலவுலகம்
இவர்தம் ஊடல் நீங்கிட
வேறு ஒரு மருந்தைத்
தர வல்லதோ...

இங்ஙனம் எண்ணி எண்ணிச்
செயலற்று மயங்கினர்
கணவன்மாரும்
விழாவது நடந்திட்ட நாட்களில்..

கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்

இச்சிறப்புடை இந்திரவிழாவின்
நள்ளிரவுப் பொழுதொன்றில்
தன்னுள்ளே இருக்கும்
மணத்தாது மகரந்தங்கள்
தேன் செறிந்து ஊறி உறுத்துவதால்

மேற்பரப்பில் இருக்கும்
கட்டு மெல்லவே அவிழ்ந்து
தேன் சொரியச் சொரிய
நடுநடுங்கும் கழுநீர் மலரைப்போல
உள்ளத்தின் நினைவை
உள்ளே மறைத்துக்
கண்ணீரைச் சொரிந்தன
இரு பெண்களின் கண்கள்.


கோவலனுடன் கலவியற்ற காரணத்தால்
கருத்திருந்த கண்ணகியின் கருங்கண்ணும் (இடக்கண்ணும்)
பிரிவுத்துயர் தாளாமல்
கண்ணீரைச் சொரிந்திட்டது;
துடிக்கவும் செய்தது.

கோவலனுடன் கலவியால் சிவந்திட்ட
மாதவியவள் செங்கண்ணும் (வலக்கண்ணும்)
ஆனந்தம் தாளாமல்
கண்ணீரைச் சொரிந்திட்டது;
துடிக்கவும் செய்தது.

(குறிப்பு:
  • பெண்ணின் இடக்கண் துடித்தல் - நன்மைக்கு அறிகுறி; கண்ணகி கோவலுடன் இணையும் நன்மையை உணர்த்த அவளின் இடக்கண் துடித்தது.
  • பெண்ணின் வலக்கண் துடித்தல் - தீமைக்கு அறிகுறி; மாதவி கோவலனைப் பிரியும் தீமையை உணர்த்த அவளின் வலக்கண் துடித்தது.)
(இந்திரவிழவு ஊர் எடுத்த காதை முற்றிற்று.
அடுத்து வருவது கடல் ஆடு காதை)
 
வல்லமை 08.10.12 இதழில் வெளிவந்தது

Thursday, April 4, 2013

நான் அறிந்த சிலம்பு - 40

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 204 - 210


சிலம்பின் வரிகள் இங்கே: 211 - 227 
 

வீதியில் உலாவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்

அகன்ற அழகிய வானில்
இராகு கேது பாம்புகளுக்கஞ்சிக்
கருமுகில் சுமந்து
முயற்கரை* ஒழித்துத்
திரியும் நிலவது போல்

(முயற்கரை - நிலவிலுள்ள கறை)

கருங்கூந்தல் சுமந்து
கயல்மீனான இருவிழிகளிடைக்
குமிழ்மலர் போன்ற மூக்கினையும் கொண்ட
அழகுப் பரத்தையர்
புகார் வீதிகளில் உலவுகின்றனரோ
என்றெண்ணியே
பரத்தையர் முகம் கண்டு
காமுற்று மயங்கினர் இளைஞர் சிலர்.

முன்பொருமுறை
சிவனால் எரிக்கப்பட்ட
மகரக் கொடி தாங்கிய மன்மதன்
தன் உடம்பினை மீண்டும் பெறுதல் பொருட்டு
ஈரம் நிறைந்த திங்களாகி
பெரிய நிலத்தே உள்ள
அமுதக் கலையின்
சீர்மை பொருந்திய துவலையுடைய
நீரைப் பருகி வளரும்படி
வளர்த்த மின்னல் கொடி ஒன்று
இந்நிலத்தே வந்ததோ...
என்றெண்ணியே
பரத்தையர் இடையழகில்
மயங்கிப் பிதற்றினர்
இன்னும் சில இளைஞர்.

பெருநிலம் ஆள்கின்ற மன்னர்க்குத்
தம் பெருவளம் காட்ட விரும்பிய
திருமகள் இங்குதான் வந்து புகுந்திருப்பாள்
என்றே கருதியது தாமரை மலர்.

அத்தாமரை மலர் எத்தன்மைத்து?!
அழகு நங்கையின்
செந்நிற முகம் ஒத்தது.


எரிதழல் நிறமுடை இலவ மலர்
போன்ற அதரங்களையும்
வெள்ளை நிறமுடை முல்லை அரும்புகள்
போன்ற பற்களையும்
கருமை நி\றமுடை நீள்குவளை மலர்
போன்ற கண்களையும்
குமிழ்மலர்
போன்ற மூக்கையும்
தன்னுள் அடக்கிக் கொண்டு
வேற்று உருவம் தாங்கியே
திருமகளைச் சேரவென்று
அவளைத் தேடியே திரிந்த
கள்ளத் தாமரை
போன்றவள் இவ்வழகுப் பெண்.

ஒரே ஒரு தாமரை மலருக்குப்
பல மலர்களின் குணம் வாய்த்தது போல்
ஒரே ஒரு பெண்ணிடம்
பல்வகைப்பட்ட அழகும் அமைந்திருந்தது
கண்டு மயங்கித் திரிந்தனர்
இன்னும் சில இளைஞர்.

பல உயிர்களையும்
கவர்ந்து செல்லும்
எமன் அவனும்
ஆண் இயல்போடு உருவத்தோடு
தாம் திரிந்தால்
அச்செயல் மன்னனவன்
செங்கோல் மறுத்ததாகும்
பழி நேரும் என்றஞ்சியே


தன் உருவம் மாற்றிக்கொண்டு
நாணமுடைய தோற்றமும்
நகையுடைய முகமும்
திவவினையுடைய*
பண்ணிசைக்கும் யாழின் மொழியையும்
தன்னகத்தே கொண்டு
பெண்ணுருவம் தாங்கி
இவ்வீதியில் திரிகின்றான் போலும்
என்றெண்ணியே
அப்பரத்தையர் அழகில்
தம்முயிர் பறிபோவது போல்
பிதற்றி நின்றனர் இளைஞர் சிலர்.

(திவவு - யாழின் கோட்டிலுள்ள நரம்புக்கட்டு)

உருவம் ஏதுமில்லாக் காமனவன்
ஒப்பற்ற பெருஞ்சேனையெனத்
திகழ்ந்தது பரத்தையர் கூட்டம்.

அப்பொதுமகளிருடன் ஊடி
அவர்களைப் புகழ்ந்து
முன்போலவே ஊடல் வென்று
அவர்களை வேறெங்கும் போகவிடாது
தடுத்து நிறுத்திப் புணர்ந்தனர்.

அத்தருணத்தில்
அம்மகளிர் தோள்களில்
மார்புகளில் எழுதிய
தொய்யில் எனும் வரிக்கோலம்
ஆடவரின் மார்பிலும் தோளிலும்
எழுதப்பட்டது.

புதிதாய்ப் பதிந்திட்ட
இம்முத்திரை குறித்து
மனைவியர் தம்மோடு ஊடுவர்
என்றஞ்சியே
விருந்தினர் சிலருடன்
தம் வீடு சென்றனர் ஆடவர்.
 

வல்லமை 31.09.12 இதழில் வெளிவந்தது.

நான் அறிந்த சிலம்பு - 39

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
 

சிலம்பின் வரிகள் இங்கே: 189 - 203

இளவேனிலும் மலயத் தென்றலும் உலாவும் வீதி

தன்னால் காதலிக்கப்பட்ட
காதல் கணவன்கோவலனைப்
பிரிந்த கண்ணகி
அலர் (பழிச்சொல்) எய்தியவள்;
அங்ஙனம் காதலனைப் பிரிந்து
அலர் எய்தாத,
அழகிய வளைந்த
குழை அணிந்திருந்த
மாதவி மடந்தையோடும்;

இல்லம்தனில் வளர்கின்ற
முல்லை மல்லிகை இருவாட்சி;
தாழியுள் வளர்கின்ற
குவளை மலர்;
வண்டுகள் சூழும்
செங்கழுநீர்ப்பூ;
இவை
ஒருங்கே கொண்டு
நெருங்கத் தொடுத்த
மாலையில் படிந்தும்


காமமாகிய கள்ளினை
உண்டு களித்தும்
நறுமணம் செறிந்த
அழகுப் பூம்பொழிலில்
விளையாட விரும்பியும்
நாள்தோறும் மகிழ்ச்சி
மட்டுமே நிறைந்திருக்கும்
நாளங்காடியதனில்
பூக்கள் விற்கும் இடங்களில்
நறுமணப்பூக்களின்
இடையே புகுந்தும்
நகைத்து விளையாடும்
பெண்கள் கூட்டத்தின்
காமம் வழியும் மொழிகள்
கேட்டுக் களித்தும்


குரல் எனும்
பாட்டிசைக்கும் பாணரோடும்
நகரிலுள்ள பரத்தையரோடும்


இன்புற்று உலா வரும்
கோவலன் அவன் போல்
இளி எனும்
இசை இசைக்கும் வண்டோடும்


இனிமை சுமந்த
இளவேனிலோடும்
பொதிகைமலையில் இருந்து
புறப்பட்ட இளந்தென்றலாம்
மலயமாருதம்
புகார் நகர்தன்னின் வீதிகளில்
புகுந்தேதான் விளையாடியது.
 

வல்லமை 24.09.12 இதழில் வெளிவந்தது.

நான் அறிந்த சிலம்பு - 38

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 

சிலம்பின் வரிகள் இங்கே: 176 - 188
 
 

கடவுளர் திருவிழா

நால்வகைத் தேவருக்கும்
மூவாறு பதினெட்டுவகைக் கணங்களுக்கும்
வேற்றுமைகள் பிரிவுகள் அறிந்து கொண்டு
வகுக்கப்பட்ட வெவ்வேறு தோற்றமுடைய
தனித்தனிக் கடவுளர் பலர்க்கும்
மற்றொரு புறத்தில்
சிறப்பாக விழா எடுக்கப்பட்டது.

நால்வகைத்தேவர்: வசுக்கள் - 8; ஆதித்தர் - 12; உருத்திரர் - 11; மருத்துவர் - 2
நால்வகைப்பட்ட முப்பத்து மூன்று தேவர்.
பதினெட்டுவகைக்கணங்கள்: தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர்,
கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாராகணம்,
ஆகாசவாசிகள், போக பூமியோர்

அறவுரை பகர்தல்

அறவோர் பள்ளியாகிய புத்தர் பள்ளிகளிலும்
அறத்தினைக் காக்கும் அறச்சாலைகளிலும்
மதிற்புறங்களில் உள்ள புண்ணியத்தலங்களிலும்
அறத்தின் கூறுபாடுகள் நன்கறிந்த
சான்றோர் நவிலும் அறவுரைகள்
ஒரு புறத்தில் சிறப்பாக நடைபெற்றன.

சிறைவீடு செய்தல்

கொடியணிந்த தேரினையுடைய
சோழ அரசனுக்குப் பகையாகிச்
சிறைப்படுத்தப்பட்ட அரசர்களின்
கைவிலங்குகளை அகற்றி
அவரைச் சிறையிலிருந்து விடுதலை செய்த
கருணைச்செயல் ஒரு புறம் நிகழ்ந்தது.

இசை முழக்கம்

கூத்தருடன் குயிலுவக் கருவியாளரும்
பண்ணமைத்து யாழ் இசைக்கவல்ல
புலவருடன் இசைபாடும் பாணரும்.....
இவர்களின் அளந்து கூறுவதற்கியலாத
சிறப்பினையுடைய இசைநிகழ்ச்சிகள்
ஒரு புறம் நடந்தேறின.

விழா மகிழ்ச்சி

இரவும் பகலும் இடைவிடாது
தொடர்ந்து நடந்த விழா நிகழ்வுகளால்
முரசுகளும் கூடக் கண்துயிலாது
மாறி மாறி ஒலித்தன.
இங்ஙனம்
குறுந்தெருக்களிலும் பெருவீதிகளிலும்
விழாமகிழ்வில் களித்துத் திளைத்தது
அகன்ற ஊராம் புகார் நகரம்.
 

வல்லமை 17.09.12 இதழில் வெளிவந்தது.

நான் அறிந்த சிலம்பு - 37

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 157 - 175

இந்திரனை நீராட்டுதல்

அரசனின் ஐம்பெருங்குழுவினர்,
எண்பேராயத்தினர்,
அரச குமரர், வணிக குமரர்,
கண்டவர் வியக்கும் வண்ணம்
குதிரைகளை இயக்கும் வீரர்,
யானை மீது ஏறி வரும்
திரள்கூட்டத்தினர்,
விரைவாகச் செல்லும்
குதிரைகள் பூட்டிய தேர்கள் உடையோர்
அனைவரும் ஒன்றாய்க் கூடினர்.

ஐம்பெருங்குழுவினர் - அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர்
எண்பேராயத்தினர் - கரணத்தியலவர், கருமகாரர், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி(குதிரை) மறவர்

அங்கே கூடிய அனைவரும்
தம் அரசனை மேம்படுத்த எண்ணியே
"புகழ்நிறைந்த மன்னன் வெற்றி கொள்வானாக"
என்றே வாழ்த்தினர்.

மிகப்பெரிய இப்புவியின்கண் வாழும்
ஆயிரத்தெட்டு சிற்றரசர்,
தம் வளத்தால் உலகைக்காக்கும்
குளிர்ந்த காவிரியின்
பூந்தாது நிறைந்த
பெரிய சங்கமத்துறையில் இருந்து
புண்ணிய நன்னீரைப்
பொற்குடங்களில் ஏந்தியே வந்து
மண்ணில் இருப்பவர் மருட்சியுறவும்
விண்ணில் இருப்பவர் வியந்துபார்க்கவும்
வானவர்க்கு அரசனாகிய இந்திரனை
ஆயிரத்தெட்டு கலச நீரைக் கொண்டு
திருமஞ்சன நீராட்டினர்.

கோயில்களில் வேள்வி

தாய்வயிற்றில் பிறக்காத
திருமேனியன் மாதவன்
சிவபெருமான் கோயிலிலும்,
ஆறுமுகமும் அழகுறக்கொண்ட
அழகன் முருகன் கோயிலிலும்,
வெள்ளிய சங்கு போன்ற நிறமுடையான்
பலதேவன் திருமால் கோயிலிலும்,
முத்துமாலைகள் அணிசெறிந்த
வெண்கொற்றக்குடையுடைய
இந்திரன் கோயிலிலும்,
யாக ஓம குண்டங்கள் அமைத்து
மிகவும் மூத்த இறைவன் அருளிய
நால்வேதங்கள் ஓதி
யாகத்தீ வளர்த்து
விழா எடுக்கப்பட்டது.
 

வல்லமை 10.09.12 இதழில் வெளிவந்தது.

Friday, March 8, 2013

நான் அறிந்த சிலம்பு - 36

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை


சிலம்பின் வரிகள் இங்கே: 141 - 150


சிலம்பின் வரிகள் இங்கே: 151- 156
விழாவின் தொடக்கமும் முடிவும் முரசறைந்து அறிவித்தல்

விழாவின் தொடக்கமும்
என்று எப்போது என்ற விளக்கங்களை
வள்ளுவன் முரசறைந்து அறிவிப்பது வழக்கம்.

அம்மரபதன்படி
வச்சிரக்கோட்டத்து மங்கல முரசை,
அலங்காரம் செய்த கச்சினையணிந்த
யானையின் பிடரியில் ஏற்றி,
தூய வெண்மையான யானை நிற்கும்
இந்திரன் தோட்டத்துச் சென்று
அங்கிருந்தபடியே
விழாவின் தொடக்க நாளும்
முடியும் நாளும்
முரசறைந்து முறையே அறிவிக்கப்பட்டது.

கொடியேற்றம்

இப்பூமியில் இந்திரன் வந்து
தங்கிய இடம் என்ற பெருமை உடைத்து
கற்பகத்தரு நின்ற கோட்டம்;
அக்கோட்டத்துக்குச் சென்று
ஐராவதம் எழுதிய
மங்கல நெடுங்கொடியை
வானின் உயரத்துக்குப்
பறக்குமாறு ஏற்றினர்.

வீதியின் மங்கலத் தோற்றம்

பசும்பொன்னால் அமைக்கப்பட்டிருந்தன
விழாவீதிகளில் இருந்த
பெரிய மாளிகைகளின் திண்ணைகள்.

மரகதமணிகள் வைரமணிகள் இழைத்திருந்த
பவளத்தூண்கள் நின்றிருந்தன
அத்திண்ணைகளில்.

கிம்புரி எனும் பூணுடன் கூடிய கொம்பையும்
முத்துச் சிப்பிகளைப் பிளந்து பெற்ற
ஒளிபொருந்திய முத்துக்களையும்
மங்கலம் பொருந்திய அழகிய ஓவியங்களையும்
மாலை வடிவில் வளைத்து அமைக்கப்பட்ட
மகரத் தோரணங்கள் அலங்கரித்தன
அம்மாளிகைகளின் வாயில் தோறும்.

மாசற்ற பசும்பொன்னால் ஆன
பூரண கும்பங்கள்,
பொலிந்து விளங்கும்
முளைப் பாலிகைகள்,
பாவை விளக்கு,
பசும்பொன்கொடி,
வெண்சாமரம்,
சுந்தரமான சுண்ணம் --
இவையனைத்தும் நெருக்கமாக
வீதியெங்கும் வைக்கப்பட்டு
இந்திரனை வரவேற்கக் காத்திருந்தன.
 

வல்லமை 03.09.12 இதழில் வெளிவந்தது.

Sunday, March 3, 2013

நான் அறிந்த சிலம்பு - 35

புகார்க்காண்டம் - 05, இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 118 - 140
 
 
ஐவகை மன்றங்களில் அரும்பலி இடுதல் - பகுதி 2

கூனர் குள்ளர் ஊமையர் செவிடர்
அழுகும் நிலையிலுள்ள
உடலையுடைய தொழுநோயாளர்
மூழ்கி எழுந்த நிலையிலேயே
உடற்பழுது இல்லாமல் நீங்கி
பார்ப்பதற்கு இனியவராய்க் காட்சியுற்று
ஊர்வலம் வரச் செய்யும்
பொய்கையைக் கொண்ட மன்றம்
இலஞ்சி மன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.

பிறரின் வஞ்சனையதன் காரணமாய்
அவரால் மருந்தூட்டப் பெற்று
மனதில் பித்து ஏறியவர்கள்,
நஞ்சினை உண்டு
நடுங்கவைக்கும் துயர் உற்றவர்கள்,
நெருப்பு நிகர்த்த நஞ்சுடைய
பாம்பின் கூரிய பற்கள்
நன்கு அழுந்தக் கடிப்பட்டவர்கள்,
முழி பிதுங்கிக் காணப்படும்
பேயினால் பிடிக்கப்பட்டுக்
கடுந்துன்பப் பட்டவர்கள் --

இவர் அனைவரும்
ஒருமுறை சுற்றி வந்து
தொழுது நின்|ற அளவிலேயே
அவர்தம் துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் பெருகும்பொருட்டு
ஒளிவீசும் நெடிய கல் நாட்டி நின்ற மன்றம்
நெடுங்கல் மன்றம் என்றே அழைக்கப்பட்டது.

தவக்கோலத்தில் மறைந்து திரியும்
தகாத தன்மையுடைய போலித்துறவிகள்,
கணவன் அறிந்திடாவண்ணம் மறைந்து
தீய ஒழுக்கத்தில் ஈடுபடும்
ஒழுக்கங்கெட்ட பெண்கள்,
தம் அரசனுக்கே உட்பகை
விளைவிக்க எண்ணும் அமைச்சர்கள்,
பிறர் மனைவியை விரும்புபவர்கள்,
பொய்சாட்சி சொல்பவர்கள்,
புறங்கூறித் திரிபவர்கள் --

"இவர்கள் யாவரும் நான் வீசும்
என் கைக்கயிற்றுக்குள் அகப்படுவர்"
என நாற்காததூரமும் கேட்கும்படிக்
கடுங்குரலில் எச்சரித்து,
அவரைத் தரையில் அறைந்து கொன்று உண்ணும்
பூதம் நின்ற மன்றம்
பூத சதுக்கம் என்றேதான் அழைக்கப்பட்டது.

அரசனவன் செங்கோல்
சற்றே தவறிடினும்
அறமது உரைக்கப்படும் அவைதனில்
நீதிநூல் நெறி வழுவ
ஒரு பக்கம் சார்ந்த தீர்ப்பு கூறப்படினும்
தன் நாவால் அத்தவறுகளை நவிலாது
தன் கண்களில் நீர் உகுத்து வருந்தியே
பாவை ஒருத்தி நின்று அழுகின்ற மன்றம்
பாவை மன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.

உண்மையான வாழ்வியல் நெறியை
உணர்ந்த சான்றோரால் போற்றப்படும்
ஐவகை மன்றங்களிலும் அரும்பலி இடப்பட்டது.
 
 
வல்லமை 27.08.12 இதழில் வெளிவந்தது.

Thursday, February 7, 2013

நான் அறிந்த சிலம்பு - 34

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 106 -117
 
மண்டபத்தில் பலி இடம் - பகுதி 2

பொன்மணி வேலைகளில் சிறந்திருந்தாலும்
பொதுவாகப் பொன்வேலை நுண்ணியமாகச் செய்திடும்
சிறப்புமிக்க கம்மியரால் செய்யப்பட்டன அல்ல
அவ்வழகுப் பரிசில்கள்.

வச்சிரம், மகதம், அவந்தி
இந்நாட்டு அரசர்கள்
முன்னொரு காலத்தில் செய்திட்ட
உதவியதன் கைம்மாற்றாய்
'மயன்' எனும் தெய்வதச்சன்
தாம் செய்து அவ்வரசர்க்கு வழங்கியவை.

இங்ஙனம்
வெவ்வேறு நாடுகளில் வென்ற
திறைப்பொருட்களை ஒன்றாய்ச் சேர்த்து
உயர்ந்தோர் போற்றும் வண்ணம்
புகார்நகர் தன்னில் அமைக்கப்பட்ட
அழகிய மணடபம் தானது
'சித்திர மண்டபம்' எனும் பெயர் பெற்றது.
 
ஐவகை மன்றங்களில் அரும்பலி இடுதல் - பகுதி 1

பிற பகுதிகளிலிருந்து
புகார் நகருக்கு வந்த புதிய மனிதர்கள்
தம் பொருட்கள் பொதிந்த மூட்டைகளில்
பெயர், அளவு, எடை இவற்றைக் குறித்த
குறியீட்டு எழுத்தினை இலச்சினையிட்டு
ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களைக்
குவியலாய்க் குவித்து வைத்திருந்தனர்
பண்டகசாலைகள் தம்மில்.
காவல் புரியவென்று எவருமில்லை
அப்பண்டகசாலைகளின் வாசல்களில்.
வலுவான தாழ்ப்பாள்களும்
நீக்கப்பெற்றிருந்தன கதவுகளில்.
பொருளுக்கு உரிமையானவரும் கூட
உடனில்லை காவலில்.

 
இருப்பினும் அவற்றைக் களவாட
எவரேனும் வரின் அவர்தம் தண்டனை என்ன?
களவாட நினைப்பவர் கழுத்து முறியுமளவு
கனமான பொதிகளை அவர் தலையில் ஏற்றி
ஊர் வலம் வரச் செய்து,
அப்பண்டத்தை அவரிடம் தராமல்
திரும்பப் பெற்றுக் கொள்வர்.

மனதாலே களவை நினைத்தாலே போதும்
நினைப்போரை தண்டனை
நடுநடுங்கச் செய்யும் அப்பண்டகசாலை
வெள்ளிமன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.
 
வல்லமை 20.08.12 இதழில் வெளிவந்தது.

Monday, January 28, 2013

நான் அறிந்த சிலம்பு - 33

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே:  89 - 90
 


சிலம்பின் வரிகள் இங்கே:  91 - 105

 
மண்டபத்தில் பலி இடம் - பகுதி 1

தமிழகத்து மருங்கில்
சேரரும் பாண்டியரும்
தம் ஆணைக்கு அடங்கிய நிலையில்,
மேற்கும் தெற்குமாகிய இருதிசைகளிலும்
தம்மை எதிர்த்தே போர்புரியும் மன்னர்
எவருமில்லாத காரணத்தால்
போர்த்தினவும் செருக்கும் நிறைந்தவன்
கரிகால் சோழன்.

அவன் தானும்
புண்ணிய திசையெனப் பெரியவர் போற்றிடும்
வடக்கு திசையது சென்று
அங்கேயாவது பகை பெற வேண்டி
போர்புரிய ஆசைகொண்டே
வாளுடன் குடையும் முரசும்
முன்னே சென்றிட
'எம் வலிமிக்க தோள்கள்
வடதிசையிலாவது பகைவரைப் பெறுக"
என்று தெய்வத்திடம் வழிபட்டேதான்
ஒரு நன்னாள் அதனில் புறப்பட்டனன்.


அங்கே நின்றிட்ட இமயமலை
அவனைத் தடுத்தேதான் நின்றிட்டது.
"குறைந்திடாத என் ஊக்கமதனுக்குத்
தடை விதித்திட்டதே இம்மலை"
எனச் சினந்தனன் கரிகாலன்.


இமையாத கண்கொண்ட தேவர் வாழும்
அவ்விமயமதன் உச்சி தன்னில்
பொறித்து வைத்தனன்
தம் புலிச்சின்னம் அதை.


இமயத்துக்கு அப்பாலும் சென்றிட எண்ணியவன்
எண்ணமதைக் கைவிட்டே
சோழநாடு திரும்பினன்.

(கரிகாலன் சாத்தன் எனும் தெய்வம் தனக்குத் தந்த செண்டு என்னும் படைக்கலத்தால் இமயத்தை அடித்துத் திரித்து அதனையே புலி போலப் பொருத்தினான் என்றொரு வழக்குண்டு.)

திரும்பிய வழியில் திறைகள் பலதந்து
அயல்மன்னர் பகைமன்னர் நட்புமன்னர்
பலரும் மகிழ்ந்தனர்.

கடலை அரணாக உடைய
பகையும் நட்பும் இல்லா அயல்மன்னன்
வச்சிரநாட்டு வேந்தன் தந்தது
முத்துப்பந்தல்;
வாட்போர் வல்லவன்
மகதநாட்டு மன்னன்
போர் புரிந்து தோற்றுத் தந்தது
பட்டி மண்டபம்.
மனம் உவந்த நல் நண்பனாகிய
அவந்தி நாட்டு வேந்தன் தந்தது
அழகிய மிகவும் உயர்ந்த
வேலைப்பாடுகளுடனான
தோரண வாயில்.

பொன்னாலும் மணியாலும்
புனையப்பட்டுப் பொலிந்தன
இப்பரிசில்கள் மூன்றும்.
 
 
வல்லமை 13.08.12 இதழில் வெளிவந்தது.

Wednesday, January 2, 2013

நான் அறிந்த சிலம்பு - 32

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 76 - 88
 
பூதத்திற்கு வீரர்கள் உயிர்ப்பலி கொடுத்தல்

மருவூர்ப்பாக்கத்தின் வீரமிகு மறவரும்
பட்டினப்பாக்கத்தின் படைக்கல வீரரும்
பெரிய பலிபீடமதன் முன்சென்று
"வீரமிக்க எம் மன்னர் தமக்கு
உற்ற துன்பம் ஒழித்திடுக"
என் வேண்டியே நின்றனர்.

"பூதத்துக்குத் தம்மைப்
பலிதானம் புரிந்தவர்
வலிமையின் எல்லையாக விளங்குவர்"
எனச் சூளுரைத்தனர்.

கல்வீசும் கவண்வீரர் சிலரும்
கருந்தோல் கவசம் அணிந்து
வேல்தாங்கிய வீரர் பலரும்
குழுமி நின்றனர் ஆங்கே.
ஆரவாரத்துடன் போர்க்களமதில்
வெற்றிகள் பல கண்ட அவர்
தத்தம் தோள்களைத் தட்டியே
ஆர்ப்பரித்து நின்றனர்.

கண்டவர் அஞ்சும் வண்ணம்
நுனி சிவந்த
சுடுகொள்ளி நிகர்த்த பார்வையுடன்,
"வெற்றி வேந்தன்
வெற்றியென்றும் கொள்க"
என்றே முழங்கித்
தமது கருந்தலையைத்
தம் கைகளாலேயே
நன்மை பொருந்த
வெட்டித்தான் வைத்தனர்
பலிபீடம்தன்னில்.

உயிர்ப்பலி கொண்ட அவ்வேளை
இடிமுழக்கமென ஒலித்தது
நாளங்காடிப் பூதத்தின் குரலது
நாற்றிசை மருங்கிலும்.

பலிபீடத்தில் வெட்டி வைக்கப்பட்ட
தலையற்ற உடல்கள்
வாயினால் உரைக்க இயலாமையால்
தம் தோளில் பூண்டிருந்த
மயிர்கள் நீக்கப்படாத முரசதை அறைந்து
"பலி தந்திட்டோம்; ஏற்றிடுக"
என்றே முழங்கிய ஆரவார ஒலிகளுடன்
முரசின் ஒலியும் சேர்ந்தே ஒலித்தது.
 

வல்லமை 06.08.12 இதழில் வெளிவந்தது.