Monday, May 23, 2011

அவரும் இவரும்


நம் எதிர்பார்ப்பு:
2+2 = 4

அவர் சொன்னார்:
3+2 = 5

இவர் சொல்கிறார்:
2+3 = 5

அவர் குடும்பம்
அசல் ஆலமரம்
விழுதுகளாய் வியாபித்து
விண்ணளவு வளர்ந்து
நீள அகலம்
உயரம் ஆழம்
முடியுமட்டும் அளந்து
ஆர்ப்பரித்தது...

இவர் தோழி நட்பு
போன்சாய் ஆலமரம்
வரவேற்பறையில்
படு சமர்த்தாய்த்
தொட்டிக்குள் அமர்ந்து
எண்பது அடி பலத்தை
எட்டங்குலத்துள் அடக்கி
ஆர்ப்பரிக்கும்...

இருவரிடத்தும்
சமமாய்ச் சீரழியும்
சமச்சீர் கல்வி..

புதிய கோட்டையா
பழைய கோட்டையா
கோட்டைக்கான சர்ச்சையில்
கோட்டைவிடப்படும்
ஆக்கப்பூர்வ திட்டங்கள்..

அவர் எதுகை
இவர் மோனை

அவர் ஏணி என்பார்
இவர் கோணி என்பார்

கட்சி
கொள்கை
மக்கள்

அவருக்கும்
இவருக்கும்
விளையாட்டு பொம்மை...

நாம் மட்டும்
என்றும் மாறாத
சகிப்புத்தன்மையுடன்..

அவரையும் சகிப்போம்
இவரையும் சகிப்போம்...

ஐந்து வருடம்
கழித்து..
இன்னமும்
சகிப்போம்!

குறளின் குரல் - 27

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 31. வெகுளாமை
குறள் எண்: 303

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்.


மறத்தல் வெகுளியை யார் மாட்டும் - தீய
பிறத்தல் அதனால் வரும்.

விளக்கம்:

தம்மைக்காட்டிலும் வலியரோ, மெலியரோ..எவரிடத்தும் கோபம் கொள்வதை மறந்துவிட வேண்டும். ஒருவர்க்கு வருகின்ற தீமையெல்லாம் சினம் கொள்வதால்தான் வருகிறது. சினத்தைத் தவிர்க்க, தீமைகள் விலகும்.
----------------------
பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 28. கூடா ஒழுக்கம்
குறள் எண்: 279

கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.


கணை கொடிது; யாழ் கோடு செவ்விது; ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

விளக்கம்:

அம்பு வடிவத்தால் நேரானது; என்றாலும் பிறரைக் காயப்படுத்தும், கொல்லும் செயலால் கொடுமையானது. யாழ் என்னும் இசைக்கருவியின் கோடுகள் வளைந்து காணப்படுவது; என்றாலும் இசை பொழிந்து பிறரை மகிழ்விக்கும் செயலால் இனிமையானது.

அம்பையும், யாழையும் அவை தரும் பயன்களைக் கொண்டுதான் கொடிது, செவ்விது என்று எடை போடுகின்றோம்.

அதே போல் ஒருவர் செய்யும் செயல்கள் மூலம்தான் அவர் நல்லவரா, கெட்டவரா என்று எடை போட வேண்டும்; புறத்தோற்றத்தைக் கண்டு மயங்கித் தவறாக எடை போடக் கூடாது.

செவ்விது - நேரானது, நன்று
----------------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 68. வினை செயல்வகை
குறள் எண்: 674

வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற்
தீயெச்சம் போலத் தெறும்.


வினை, பகை, என்று இரண்டின் எச்சம் நினையுங்கால்,
தீ எச்சம் போலத் தெறும்.

விளக்கம்:

தீயை முழுவதுமாக அணைக்காமல், அதனால் என்ன ஆகப் போகிறது என்று கவனமின்றி விட்டுவிட்டால், பின் அதுவே பெருநெருப்பாக மாறிப் பேரழிவை விளைவிக்கக் கூடும். அதே போல, ஒரு செயலைச் செய்யத்தொடங்கி அதை முடிக்காமல் பாதியில் விட்டுவிடுதல், பகையை முழுவதுமாக ஒழிக்காமல் எஞ்சியிருக்கும்படி விட்டுவிடுதல் - இவை இரண்டும் பிற்காலத்தில் பெரும் கேடுகளை வரவழைக்க வல்லவை.

முற்றிலும் அணைக்காமல் விட்ட தீ பின் ஆபத்தை வரவழைப்பது போல், முற்றாகச் செய்யாத வினையும், முற்றாக முடிக்காத பகையும் பின்னொரு காலத்தில் பேரழிவைத் தரும்.

எனவே எடுத்த செயலை முற்றிலுமாக முடிக்க வேண்டும்; வளர்ந்த பகையை முற்றிலுமாக அழிக்க வேண்டும்.

தெறுதல் - அழித்தல், கோபித்தல், வருந்துதல், தண்டனையளித்தல், பகைத்தல், கொல்லுதல்

தெறும் - அழிக்கும்
------------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 31. வெகுளாமை
குறள் எண்: 309

உள்ளிய வெல்லா முடனெய்து முள்ளத்தா
லுள்ளான் வெகுளி யெனின்.


உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

விளக்கம்:

ஒருவன் தன் மனத்தாலும் சினத்தை நினைக்காதவன் என்றால், அவன் அடைய விரும்பும் நன்மைகள் எல்லாவற்றையும் உடனுக்குடன் அடைந்து பயன் பெறுவான். சினம் இருக்கும் உள்ளத்துக்கு நினைத்ததை அடையும் ஆற்றல் இல்லை. சினம் இல்லாத இடத்தில் நன்மைகள் தேடி வந்து சேர்ந்து தக்க பயனைத் தரும்.
---------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 19. புறங்கூறாமை
குறள் எண்: 182

அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை.


அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே -
புறன் அழீஇப் பொய்த்து நகை.

விளக்கம்:

அறம் என்ற ஒன்றே இல்லையென்று அறைகூவிப் பாவச்செயல்களையே செய்தல் தீது; அதை விடத் தீது எதுவென்றால், ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பழித்துப் பேசிவிட்டு, அவர் இருக்கும் இடத்தில் அவரைப் பொய்யாய்ப் புகழ்ந்து, பொய்யாய்ப் புன்னகைப்பது.
-------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 57. வெருவந்த செய்யாமை
குறள் எண்: 564

இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்.


'இறை கடியன்' என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லைக் கெடும்.

விளக்கம்:

'இந்த அரசன் / தலைவன் கொடியவன்' என்று ஒரு நாட்டின் மக்கள் பழித்துக்கூறும் கொடுங்குணம் உள்ள அரசன் / தலைவன், தன் நாடு, பெருமை, ஆயுட்காலம், பதவி - இச்சிறப்புகளில் படிப்படியாய்க் குறைந்து போவதுடன், மிக விரைவில் தானும் அழிந்து கெடுவான்.

உறை - பெருமை, இருப்பிடம், வாழ்நாள், பொருள், நீளம், உயரம், மருந்து, கிணற்றில் பொருத்தும் வளையம், உணவு, வெண்கலம், ஆயுதவுறை, நீர்த்துளி, காரம், பொன், பாம்பின் நச்சுப்பை, மழை

கடுகி - குறைந்து, சிறுத்து

ஒல்லை - விரைவு, வேகம், பழைமை, தொந்தரவு

வெரு - அச்சம்

Wednesday, May 4, 2011

சொர்க்கம் நரகம்

வறுமைக்கோட்டுக்குப்
பல படிகள் மேலே
பண உரிமைக் கோட்டின்
எல்லையும் தாண்டி
உயர்ந்து உயர்ந்து
மேலே மேலே..

வாழும் நாளெல்லாம்
சொர்க்க சுகானுபவங்களில்
ஈடுபட்டுத் திளைக்கும்
அவனுக்கு
அங்கே நரகமாம்....

வறுமைக்கோட்டுக்குப்
பல படிகள் கீழே
பாதாளம் தாண்டியும்
பசியது பாய்ந்திருக்க
தாழ்ந்து தாழ்ந்து
கீழே கீழே...

வாழும் நாளெல்லாம்
நரக வேதனைகளில்
உழன்று சுழலும்
இவனுக்கு
அங்கே சொர்க்கமாம்...

இன்றைய பொழுது
இன்னும் கழியவில்லை..
நாளைய பொழுது
இன்னும் வரவேயில்லை..

கனாக்கள் காண்கிறோம்
காணாப் பொழுது குறித்து..

சொர்க்கமும் நரகமும்
ஒருங்கே கலந்த மேதினியில்..
வாழ்கின்ற நாட்களில்
வழிதொகை ஏதுமின்றி
மனம்போன போக்கில்
உழலும் நமக்கு
மரணித்த பின்
எங்கே இருப்பிடம் என்ற
அற்பப் பயம் எதற்கு?!

மறுமை பயங்களைக்
கொஞ்சம் தள்ளிவை!
இன்றைக்கு என்ன செய்கிறாய்
அதை மட்டும் நினைவில்வை!

இன்று இங்கே
நரகத்தில் உழலும்
நரன் ஒருவனுக்கேனும்
சொர்க்கம் காட்டி
அவன் வாழ்வின்
சுவை கூட்டிவை!

உன் நேரமும் கவனமும்
தேவை என்னும் இதயம்
உன் அருகிலேயே
இருக்கக்கூடும்..

பாசம் வேண்டும் குழந்தையாகவோ
பரிவு வேண்டும் பெற்றோராகவோ
அன்பு வேண்டும் சகோதரமாகவோ
உதவி வேண்டும் நட்பாகவோ
காதல் வேண்டும் துணையாகவோ..

இன்று இங்கே
நரகத்தில் உழலும்
நரன் ஒருவனுக்கேனும்
சொர்க்கம் காட்டி
அவன் வாழ்வின்
சுவை கூட்டிவை!

குறளின் குரல் - 26


பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.


மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்
தகுதியான் வென்றுவிடல்.

விளக்கம்:

ஆணவத்தால், செருக்கால் பிறர் தமக்குத் தீங்கு செய்ய நேரிடும். அந்த நேரத்தில், நாம் அவரினும் அதிகமான தகுதியான பொறுமையை மேற்கொண்டு அவரை வென்றிட வேண்டும்.

செருக்கைச் செருக்கால் வெல்வது இயலாத ஒன்று; அது மேலும் மேலும் பகையை வளர்த்து நிற்கும். பொறுமையால் வெல்வதுதான் நன்மை தரும்.

--------------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 53. சுற்றந்தழால்
குறள் எண்: 525

கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.


கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும்.

விளக்கம்:

ஒருவன் தன் சுற்றத்தார்க்குத் தம்மிடம் உள்ள பொருளைக் கொடுத்தும், அவரிடத்து இனிமையான சொல் பேசியும் வாழ்ந்து வருவானாயின், அவன் பல்வகைப்பட்ட சுற்றங்கள் எல்லாவற்றாலும் சூழப்படுவான்.

அடுக்கிய சுற்றம் - தன் சுற்றம், பின் சுற்றத்துக்குச் சுற்றம்...என்று அடுக்கி வருவது...

தழால் - சேர்த்துக்கொள்ளுதல், தழுவுதல்

----------------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 94. சூது
குறள் எண்: 939

உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து
மடையாவா மாயங் கொளின்.


உடை, செல்வம், ஊண், ஒளி, கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.

விளக்கம்:

சூதாட்டத்தில் ஈடுபடுபவர் உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி என்ற ஐந்து செல்வங்களையும் அடையமாட்டார். இச்செல்வங்கள் அனைத்தும் ஏற்கனவே அடையப் பெற்றிருந்தாலும் சூதாட்டம் என்ற செயலால் அச்செல்வங்கள் அவரிடம் தங்காமல் விலகிப் போகும்.

ஆயம் - சூதாட்டம், வருத்தம், மேகம், தோழியர் கூட்டம், 34 அங்குல அகலமுள்ள குழி, வருவாய், கடமை, மக்கள் தொகுதி, பசுத்திரள், நீளம், பொன்

--------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 63. ஆள்வினையுடைமை
குறள் எண்: 614

தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.


தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாள் ஆண்மை போலக் கெடும்.

விளக்கம்:

மனவலிமையும், முயற்சியும் இல்லாதாவன் பிறருக்கு உதவுவது என்பது, வீரம் இல்லாத கோழை தன் கையில் வாள் ஏந்திப் போரில் போரிடுவது போல எதற்கும் உதவாமல் போகும்.

பேடி கையில் உள்ள வாளினால் ஆகும் பயன் ஒன்றுமில்லை. ஊக்கமில்லாதவர் உதவியால் ஆகும் நன்மை ஏதுமில்லை.

தாளாண்மை - ஊக்கமுடைமை, முயற்சியுடைமை

வேளாண்மை - உதவி, தொண்டு, பணி

ஆண்மை - வலிமை, வெற்றி, ஆண்தன்மை, ஆளும் தன்மை, அகங்காரம்

-----------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 117. படர்மெலிந்திரங்கல்
குறள் எண்: 1161

மறைப்பேன்மேனி யானிஃதோ நோயை யிறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்.


மறைப்பேன்மன் யான், இஃதோ, நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

விளக்கம்:

தலைவனைப் பிரிந்து இருப்பதால், துன்பத்தால் வருந்துகிறேன். அத்துன்பத்தைப் பிறர் அறியாமல் மறைக்கத்தான் நினைக்கிறேன். ஆனால், இறைக்க இறைக்கப் பெருக்கெடுத்து வரும் ஊற்றுநீர் போல, என் பிரிவுத்துயரை மறைக்க மறைக்க என் காதல் நோயும் பெருகிக் கொண்டே போகிறது.

படர் - நினைவு, நோய், வருத்தம், வழி, ஒழுக்கம், மேடு, துகிற்கொடி, படைவீரர், ஏவல் செய்வோர், தேமல், தொடர்

------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 61. மடியின்மை
குறள் எண்: 606

படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்
மாண்பய னெய்த லரிது.


படி உடையார் பற்று அமைந்தக்கண்ணும், மடி உடையார்
மாண் பயன் எய்தல் அரிது.

விளக்கம்:

உலகையே அரசாளும் அரசர் / தகுதிவாய்ந்த மேன்மக்கள் - இவர்கள் துணையும், உதவியும் கிடைக்கப்பெற்றாலும், அதன் மூலம் சோம்பல் உடையவர்கள் எந்தவொரு பயனையும், சிறப்பையும் அடைந்து விட முடியாது. சோம்பல் உடையவர்க்கு அவர் சோம்பலே பகை; தடை. அதனால் அவர்கள் எத்தகைய வலிமையான துணையைப் பெற்றிருந்தாலும் பயன் ஒன்றும் இல்லை.