Thursday, November 11, 2010

நான் அறிந்த சிலம்பு - பகுதி 8

புகார்க்காண்டம் - கோவலன் கண்ணகி திருமணச் செய்தி அறிவித்தல்


குணத்தில் சிறந்த
கோவலன் கண்ணகி
இருவர்தம் பெற்றோர் பெருமக்கள்
நல்லதொரு திருநாளில்
நங்கைக்கும் நாயகனுக்கும்
நல்மணம் செய்திட விழைந்தனர்.

யானை ஒன்றை அலங்கரித்து
அதன் அம்பாரிமீது
அணிமணிகள் பூண்ட
அம்மணிகளை
அமரச் செய்து
தாம் உறுதிசெய்த
திருமணத் திருநாளை
மாநகர மக்களுக்கு அறிவித்து
அழைத்து மகிழ்ந்தனர்.

கோவலன், கண்ணகி திருமணம்

மணவீடதனில்
முரசுகள் முழங்கின;
மத்தளங்கள் ஆர்ப்பரித்தன;
முறையாக எழுந்தன
சங்கின் ஒலியலைகள்.

அரசனவன்
நகர்வலம் வருகையில்
எழுகின்ற எண்ணற்ற
வெண்கொற்றக்குடைகள் போலவே
இம்மணவுலாவிலும்
எழுந்திட்டன மிகுதியாக....

இவ்வழகு மொத்தமும்
அளவின்றிச் சிறந்தெழ
புகார்நகரம் முழுவதும்
புனைந்திட்டது விழாக்கோலம்.
அதுவோர் மணவிழாக்காலம்.

மணமலர் மாலைகளால்
அலங்கரிக்கப்பட்ட
அழகிய உச்சியதனையும்
வயிரமணித் தூண்களையும்
கொண்டிருந்த மணப்பந்தலது
நீலநிறப் பட்டினாலானது.

வான் தவழ் நிலவது
ரோகிணியைச் சேர்ந்த நன்னாளதனில்
முதிய அந்தணன்
வேதநூல் முறையின்படி
சடங்குகள் செய்திட....

அருந்ததி விண்மீன்போன்ற
கற்புடைய கண்ணகியைக்
கோவலனாம் மணமகன்
திருமணம் புரிந்திட்டுத்
தீவலம் வந்த
திருக்காட்சியைக்
கண்டவர் கண்கள்தாம்
செய்திட்ட தவம் என்னே!

மங்கல வாழ்த்து மற்றும் மங்கல அமளி ஏற்றுதல்

தளிர்மேனியுடைய
மங்கைப் பருவத்து மகளிர்
நறுமணப் பொருட்களையும்
நல்மண மலர்த்தட்டுகளையும்
கைகளில் ஏந்தி
உரைவாயிலாகவும்
பாடல் வாயிலாகவும்
பாராட்டி உடன் நின்றனர்.

ஒதுங்கிய கடைக்கண்பார்வையுடைய
மடந்தைப் பருவத்து மகளிர்
சாந்து, நறும்புகை
மலர்மாலை ஏந்திநின்றனர்.

ஈன்ற குழந்தைக்காய்ப்
பால்சுரந்து தளர்ந்த
இளமுலை கொண்ட
அரிவைப் பருவத்து மகளிர்
இடித்த சுண்ணப்பொடி,
விளக்கு, அணிகலன்கள்,
முளைத்த பாலிகைக் குடங்கள்
தாங்கி வந்தனர்.

பூத்துநிற்கும் புன்முறுவல்கொண்ட
தெரிவைப் பருவத்து மகளிரும்

விரிமலர் சூடிய கூந்தலுடன்
அழகிய பொற்கொடி வடிவுடைய
பேரிளம் பெண்டிரும்
சூழ்ந்து நின்றிருக்க,

செம்முதுபெண்டிரும்
சேர்ந்து நின்று
வாழ்த்தி மகிழ்ந்தனர்
இங்ஙனமே..

கண்ணகியிவள்தாம்
காதலனைத் தன்
கண்ணிலும் மனத்திலும்
பிரியாது வாழ்க!

கோவலன் இவன் தான்
காதலி அவளை
அணைத்து இறுக்கிய
கைகள் நெகிழாமல்
இணைந்து வாழ்க!

மணமக்கள் இவர்தாம்
தீதின்றி நெடுங்காலம்
வாழிய வாழியவே!

இவ்வாறெல்லாம்
பொன்மொழிகளுடன்
பூமலர்கள் தூவி
வாழ்த்திசைத்தனர்.

அதன்பின்
அருந்ததி போன்ற
கற்புடைய கண்ணகியை
மங்கல அமளியில்
ஏற்றி மகிழ்ந்தனர்.

'கோபம் பொருந்திய
வேலது கொண்ட
சோழன் கரிகாலன் தன்
வெற்றிக்கு அறிகுறியாய்
இமயத்துக்கு இப்பக்கம்
வென்று பொறித்த
வாளதன் வரிகள் போன்ற
வரிகளுடைய புலிச்சின்னக் கொடியானது
பொன் கோட்டுடைய
இமயத்துக்கு அப்பாலும் சென்று
போரில் வென்று
புகழ்பரப்பி நிற்பானாக!'..

'மாறுபாடற்ற நீதியுடன்
தன் ஆணைச் சக்கரத்தை
உலகின் எந்தப்பக்கமும்
மன்னவனவன் உருட்டுவானாக!'

இங்ஙனம்
மணமக்கள் தம்மோடு
மன்னனையும் வாழ்த்தி நின்றனர்
ஐவகைப் பெண்டிர்.

(ஏழு வகைப் பெண்டிருள், குழந்தைத்தனம் மிகுதியால் பேதைப் பருவத்தினரும், நாணத்தின் மிகுதியால் கன்னிப்பருவத்து பெதும்பைப் பெண்டிரும் இக்குழுவில் இடம்பெறவில்லை என்பது வழக்கு.)

சிலம்பின் வரிகள் இங்கே..40 - 50

சிலம்பின் வரிகள் இங்கே..51 - 68

குறளின் குரல் - 15

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 242

நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை.


நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க! பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை.

விளக்கம்:

நல்ல வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து, அருளைக் கைகொள்ள வேன்டும். பல வகையாக ஆராய்ந்து தெளிந்து தேடினாலும் அருள் என்னும் அறமே எப்போது துணை நிற்கும்.
----------------
 
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 95. மருந்து
குறள் எண்: 945

மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி
னூறுபா டில்லை வுயிர்க்கு.


மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்,
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

விளக்கம்:

தன் உடலின் இயல்பினையறிந்து, அந்த இயல்பு மாறாதவாறு தனக்குப் பொருத்தமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்டால், அவர்தம் உடல் நலம் சிறிதும் குன்றாது, மாறுபாடு இல்லாது, நோயற்று விளங்கும்.
------------------
 
பால்: காமத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 112
குறள் எண்: 1116

மதியு மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்.


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

விளக்கம்:

இவளுடைய முகம் நிலவை ஒத்திருப்பதால், வானிலுள்ள நிலவையும் பூமியில் உள்ள இவளையும் கண்ட விண்மீன்கள் வேறுபாடு அறிந்து கொள்ள முடியாமல் எது நிலவு என்று குழம்பிப்போய் விழிக்கின்றன.
----------------
 
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 23. ஈகை
குறள் எண்: 230

சாதலி னின்னாத தில்லை மினிததூஉ
மீத லியையாக் கடை.


சாதலின் இன்னாதது இல்லை இனிது, அதூஉம்
ஈதல் இயையாக் கடை.

விளக்கம்:

ஒருவருக்கு இறப்பைவிடத் துன்பமான நிலைமை வேறெதுவும் இல்லை. ஒருவருக்கு ஒரு பொருளை ஈய இயலாத நிலையென்பது இறப்பைவிடத் துன்பம் தருவதாகும். ஈதல் இயலாத நிலையை வருகையில் இறத்தல் கூட இனியதாகும்.
-----------------------
 
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 01. கடவுள் வாழ்த்து
குறள் எண்: 10

பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார்.


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.

விளக்கம்:

பிறவியாகிய பெருங்கடலில் நீந்த இறைவனின் திருவடிகளைச் சேர வேண்டும். அங்ஙனம் சேராதார், பிறவிப் பெருங்கடலில் நீந்த முடியாமல் அதனுள் மூழ்கிப் போய்விடுவர்.

குறளின் குரல் - 14

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 64. அமைச்சு
குறள் எண்: 637

செயற்கை யறிந்த கடைத்து முலகத்
தியற்கை யறிந்து செயல்.


செயற்கை அறிந்தக் கடைத்தும், உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

விளக்கம்:

ஆட்சி செய்யும் போது, முன்னர் ஒரு காலம் எழுதப்பட்ட நூல்களின் மூலம் சட்டதிட்டம் அறிந்து கொண்டாலும், அன்றைய காலகட்டத்திற்கேற்ப உலக நடைமுறையை அறிந்து கொண்டு, நிகழ்காலத்தின் இயற்கைக்கேற்பச் செயல்பட, செயல்படுத்த வேண்டும்.

ஆட்சி செய்வதற்கு மட்டுமல்லாமல் எந்தவொரு செயலைச் செய்வதற்கும் இக்குறள் பொருந்தும். செயலைச் செய்யும்போது, நூற்கல்வி மட்டும் துணைகொள்ளாமல், அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ற உலக நடைமுறையையும் மனதில் கொண்டு செயல்பட, செயல்படுத்த வேண்டும்.
 
------------
 
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 06. வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 58

பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு.


பெற்றாற்பெறின் பெறுவர், பெண்டிர், பெருஞ் சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

விளக்கம்:

நற்குணத்தில் சிறந்த தன்னை மனைவியாகப் பெற்ற கணவனும், அதே நற்பண்புகள் கொண்டவனாய் அமையப் பெற்று இணைந்து வாழ்ந்தால், இவ்வுலகில் மட்டுமல்லாது, தேவருலகிலும் பெருஞ்சிறப்புப் பெறுவர் பெண்கள்.
------------------
 
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 49. காலமறிதல்
குறள் எண்: 486

ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.


ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

விளக்கம்:

போரிடும் இயல்புடைய ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகக் காலைப் பின்வாங்கித் தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்து பின் தாக்கும். அதே போல், வலிமையுடவர்கள் பகைவர்களை வெல்வதற்கான காலத்துக்காய்க் காத்திருந்து அக்காலம் வரும்போது தாக்குவர்.
-------------------

பால்: பொருட்பால்
இயல்: படையியல்
அதிகாரம்: 88. பகைத்திறம் தெரிதல்
குறள் எண்: 877

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து.


நோவற்க, நொந்தது அறியார்க்கு, மேவற்க
மென்மை, பகைவரகத்து.

விளக்கம்:

தமக்கு ஒரு துன்பம் நேர்ந்தபோது, அதைப்பற்றி அறியாதவர்க்கு அத்துன்பத்தை வெளிப்படுத்தக்கூடாது. தம்முடைய மென்மையை, வலிமையின்மையைத் தம் பகைவர்களுக்கு வெளிப்படுத்தவும் கூடாது. இவ்வாறு நடந்து கொள்வதால் பகை தலையெடுக்காமல் தவிர்க்கலாம்.
---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 07. மக்கட்பேறு
குறள் எண்: 63

தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்.


தம் பொருள் என்ப தம் மக்கள்; அவர் பொருள்
தம் தம் வினையால் வரும்.

விளக்கம்:

தமக்கே உரிய செல்வம், சொத்து, உரிமை என்று போற்றி மதிக்கத்தக்கவை தாங்கள் பெற்ற பிள்ளைகள்தாம். மற்ற பொருள் எல்லாம் தத்தம் வினைப்பயனால், உழைப்பின் பயனால் வருவனவாகும்.

Monday, November 1, 2010

சீனா தம்பதியர்க்கு வாழ்த்துகள்!

வாழ்த்துகள்...



ஓய்வென்பது
அலுவலகப்பணிகளில் மட்டுமே...

இல்லறக் கடமைகள்
நின் குடும்பத்துகாய்
இன்னமும் உண்டு..

சமுதாயப் பணிகள்
வலையுலகின் பணிகள்
வளர்ந்து கொண்டே போகும் நன்று..

மணியான தம்பதியர்க்கு
மணிவிழா வாழ்த்துகள்!



உங்களை வாழ்த்தும்
உன்னத வேளையில்
உங்களின் ஆசி
வேண்டி நிற்கிறோம்!