Sunday, May 12, 2013

நான் அறிந்த சிலம்பு - 42

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 1- 27


காமக் கடவுளுக்கு விஞ்சை வீரன் விழா எடுத்தல்

பெரிய வெள்ளிமலையில் அமைந்திட்ட
அகன்ற பெரிய வித்தியாதரர் நகரினிலே
தேன் ஒழுகும் மலர்கள் செறிந்த
பூம்பொழில் ஒன்று.

ஆங்கே
நீண்ட கரிய கயல்களை ஒத்த
கயல்விழிக் காதலியோடு இணைந்து
விஞ்சை வீரன் ஒருவன்
காம தேவன் அவனுக்கு
விருந்திட்டே விழாக் கொண்டாடினன்.

இந்திர விழா பற்றியும், புகார்க் காட்சிகள் பற்றியும் விஞ்சை வீரன் தன் காதலிக்கு உரைத்தல்

காமவிருந்து முடியும் தருணம்
தன் காதலியிடன்
உரைத்தனன் இங்ஙனம்.

வடபுலத்தில் உறையும் நாம்
காமவேள் விழாவது கொண்டாடி
முடிக்கும் நாள் இன்று.

இதே நாள்
தென்திசையதனில் வளம்கொழிக்கும்
புகார் நகர் தன்னில்
இந்திர விழாவினுக்கென்று
கால் கோள் கொடியேற்றித் தொடங்கும்
முதல் நாள்.

விழாக்கோலம் பூண்டிருக்கும்
புகார் தன்னில்
காணும் காட்சிகள்தான்
என்னென்னே!!.
நாளங்காடிக் காட்சிகள்


மிக்க வேகமுடன்
நெருங்கி வந்து எதிர்த்து நின்ற
அசுரர் பெருங்கூட்டம்
தோற்றோடிப் போனது..
இந்திரன் நகரைக் காவல்புரிந்த
புலியின் வலிமையுடைய
வீரக்கழல் அணிந்த
முசுகுந்தன் அவனிடம்.
.
எனினும்
வஞ்சனை மிகுதியால்
அசுரர் கூட்டம்.
போகிற போக்கில்
ஏவியே சென்றது
முசுகுந்தன் மீது
இருள்கணை ஒன்றினை.

முசுகுந்தன் ஏவலுக்காய்
இந்திரன்விட்டுச்சென்ற
காவல் பூதம்
வஞ்சக இருளை நீக்கியது.

என்றென்றும் முசுகுந்தன்
மெய்க்காவலாகி நிற்கவென்று
இந்திரன் இட்ட கட்டளைப்படி
முசுகுந்தன் அவனுடன்
புகார் நகர் நாளங்காடி தங்கியே
பலிபெற்று வருகிறது.
காவல் பூதமது.
.

இத்தகைய சிறப்புப் பொருந்திய
நாளங்காடிக் காட்சிகளை
நாம் காண்போம்.

ஐவகைமன்றக் காட்சிகள்

முன்பு அசுரரால் வந்த
இடரது போக்கியே
அமராவதி நகரைக் காத்தமையால்
மகிச்சியுற்ற இந்திரனால்
கைம்மாறாய் அளிக்கப்பட்டு
சோழ மரபினரால் கொண்டுவரப்பட்டு


என்றும் பொய்க்காமல் நிலைபெற்ற
தனித்தன்மையுடன் அழகுடன்
புகார்நகரில் இலங்குகின்றது
ஐவகை மன்றம்.
 
 
அம்மன்றத்தின் சிறப்பினைக்கண்டு
நாம் மகிழ்வோம்.

உருப்பசி /ஊர்வசி வழித்தோன்றலாகிய மாதவியின் ஆடல் காட்சிகள்

அன்றொரு நாள்
இந்திரன் அவையில்
அகத்தியரை வரவேற்க
நாரத முனிவன்
இசையின்பம் சிறக்கப்
பாடும் பாடலும்,
தோரிய மடந்தையர் பாடிய
வாரப் பாடலும்
ஆயிரம் கண்ணுடைய இந்திரன்
செவியை நிறைத்து நின்றிருக்க...

சயந்தன் நினைவில் மயங்கியபடி
நடனமாடிய உருப்பசியின்
குறை பொருந்திய நடன நாடகம்
இந்திரன் செவியை நிறைக்கவில்லை...


இதே காரணத்தால்
பிற வாத்திய இசைகளும்
தளர்ந்தேதான் போய் நிற்க..

அகத்தியர் தாமும்
சாபமிட்டார் இங்ஙனம்
வீணை மங்கலமிழப்பதாக.
இவள் மண்ணுலகில் பிறப்பாளாக

சாபமதன்படி உருப்பசி
மாதவியென்று பிறந்தனள்
கணிகையர் குலத்தில்.


உருப்பசி மாதவியாக....
அவ்வழித்தோன்றலில் வந்த
பாம்பு போன்ற அல்குல் உடையவள்
இன்னுமொரு மாதவி.

அவள் தம் சிறப்பு நடனக்காட்சிகளும்
நாம் காண்போம்.

சிவந்த இதழ்களும்
உடுக்கை போன்ற இடையும்
உடையவளே!


புகார்நகரில் பூசைகொள்ளும்
அமரர் தலைவன்
இந்திரனை நாமும் வணங்குவோம்..
என்றனன் தன் காதலியிடம்
அவ்விஞ்சை வீரன்.
 
வல்லமை 15.10.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, May 7, 2013

நான் அறிந்த சிலம்பு - 41

புகாரக்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை


சிலம்பின் வரிகள் இங்கே: 227 - 240
 
மனைபுகுந்த ஆடவர் தம் மனைவியரின் ஊடலைத் தீர்க்க அறியாமல் நடுங்குதல்

விருந்தினரோடு வீடுதான் புகுந்திட்ட
அகன்ற பெருந்தோள் கணவருடன்
ஊடல் பாராட்ட இயலாமல்
அவருடன் பொருந்தியிருந்து
வந்திட்ட விருந்தினரை
வரவேற்று உபசரித்தனர்
இல்லற மகளிர்.

வழிபாட்டு ஒழுக்கத்தில்
மேலோங்கிச் சிறந்த
அருந்ததி போலும்
கற்பில் சிறந்த
இல்லற மகளிரை
அவர்தம் கணவர் பெருமக்கள்
மதித்தேதான் போற்றினர்.

தம் நெஞ்சத்திடம்
தம் எண்ணம் உரைத்தனர்.

ஒளியும் அழகும் பொருந்திய
இம்மாதர் திருமுகம் கண்டிட்ட
நீலமணி ஒத்த இதழ்களையுடைய
குவளை மலர்கள்
புறங்கொடுத்துப் போயின.

மகளிரின் கரிய கண்களின்
கோபக் கருஞ்சிவப்பு
விருந்தினர் வரவால்
நீங்கியே போயிற்று.

இக்கோபச்சிவப்பு மட்டும்
நீங்காமல் போயிருந்தால்
இந்தப் பரந்த நிலவுலகம்
இவர்தம் ஊடல் நீங்கிட
வேறு ஒரு மருந்தைத்
தர வல்லதோ...

இங்ஙனம் எண்ணி எண்ணிச்
செயலற்று மயங்கினர்
கணவன்மாரும்
விழாவது நடந்திட்ட நாட்களில்..

கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்

இச்சிறப்புடை இந்திரவிழாவின்
நள்ளிரவுப் பொழுதொன்றில்
தன்னுள்ளே இருக்கும்
மணத்தாது மகரந்தங்கள்
தேன் செறிந்து ஊறி உறுத்துவதால்

மேற்பரப்பில் இருக்கும்
கட்டு மெல்லவே அவிழ்ந்து
தேன் சொரியச் சொரிய
நடுநடுங்கும் கழுநீர் மலரைப்போல
உள்ளத்தின் நினைவை
உள்ளே மறைத்துக்
கண்ணீரைச் சொரிந்தன
இரு பெண்களின் கண்கள்.


கோவலனுடன் கலவியற்ற காரணத்தால்
கருத்திருந்த கண்ணகியின் கருங்கண்ணும் (இடக்கண்ணும்)
பிரிவுத்துயர் தாளாமல்
கண்ணீரைச் சொரிந்திட்டது;
துடிக்கவும் செய்தது.

கோவலனுடன் கலவியால் சிவந்திட்ட
மாதவியவள் செங்கண்ணும் (வலக்கண்ணும்)
ஆனந்தம் தாளாமல்
கண்ணீரைச் சொரிந்திட்டது;
துடிக்கவும் செய்தது.

(குறிப்பு:
  • பெண்ணின் இடக்கண் துடித்தல் - நன்மைக்கு அறிகுறி; கண்ணகி கோவலுடன் இணையும் நன்மையை உணர்த்த அவளின் இடக்கண் துடித்தது.
  • பெண்ணின் வலக்கண் துடித்தல் - தீமைக்கு அறிகுறி; மாதவி கோவலனைப் பிரியும் தீமையை உணர்த்த அவளின் வலக்கண் துடித்தது.)
(இந்திரவிழவு ஊர் எடுத்த காதை முற்றிற்று.
அடுத்து வருவது கடல் ஆடு காதை)
 
வல்லமை 08.10.12 இதழில் வெளிவந்தது