Sunday, August 2, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 4)

'முடிவேந்தர் மூவருக்கும்
உம் காப்பியம் உரியதாக!
அடிகளே, இயற்றியருளுக!'
வேண்டினர் சாத்தனார்.

இளங்கோவடிகளும்
தன் நூலின் வகைகள்
விளக்கியே கூறினர்.

கோவலன் கண்ணகி மணவிழாவாம்
மங்கலவாழ்த்துப் பாடல்; 1
அவர்தம் இல்லறப்பாங்கில்
மனையறம் படுத்த காதை; 2

நாட்டிய மாதவியின்
நடன அரங்கேற்று காதை; 3
மாலையழகின் மலைப்பில்
அந்திச் சிறப்பு காதை; 4

புகார் நகர்நிகழ்
இந்திரவிழாக் காதை; 5
மக்களனைவரும்
கடலாடிய காதை; 6

கோவலன் மாதவி
ஊடல் மடலவிழ் கானல்வரி; 7
வேனில் கா(ல)தல் தகிப்பில்
மாதவி தவித்த காதை; 8

கண்ணகி தன் தீய
கனாத்திறனுரைத்த காதை; 9
சோழவளம் கண்டுகளித்த
நாடு காண் காதை; 10
பாண்டிமண்டலம் ஏகிக்
காடு காண் காதை; 11
காட்டு வாழ்க்கை
போற்றி நிற்கும்
வேட்டுவ வரி; 12

இதழ்விரி பூமாலையணிந்த
கண்ணகியவள்
மதுரைப் புறத்தே இருந்த
புறஞ்சேரி இறுத்த காதை; 13
கிறங்கடிக்கும் முரசம்
முழங்கி நிற்கும் மதுரை
ஊர் காண் காதை; 14

சீரிய மாதரியிடம்
அடைக்கலம் கண்ட காதை; 15
கொல்லன் சூழ்ச்சியால்
விளைந்த நிகழ்ச்சிகள்..
கொலைக்களக் காதை; 16

ஆடிப்பாடி மகிழ்ந்த
ஆய்ச்சியர் தம் குரவை; 17
தூயமகள்
தீயசெய்தி கேட்டரற்றிய
துன்ப மாலை; 18
நண்பகல் பொழுதில்
காற்சிலம்பைக் கையிலேந்தி
ஊர் வலம் வந்துக்
காண்போரை நடுங்கவைத்த
ஊர் சூழ் வரி; 19

சீர்மிக்க பாண்டியனிடம்
நீதிகேட்டு வழக்குரைத்த காதை; 20
பாண்டியன் உயிர்துறந்தபின்
அவன் தேவியிடம் வஞ்சினமாலை; 21
மாரில் தீப்பிழம்பூட்டிய
அழல் படு காதை; 22

மதுரை மாதெய்வத்தின்
கட்டுரைக் காதை; 23
கோதையர் ஆடிப்பாடிய
குன்றக் குரவை; 24
தம்பதியர் வானவருடன்
விண்ணுலகெய்திய காட்சி; 25

செங்குட்டுவன்
கண்ணகி கோயிலுக்காய்க்
கல்லெடுத்த கால்கோள்; 26
கல்நீராட்டு நீர்ப்படை; 27
பத்தினிக் கோட்டத்தில்
கண்ணகி நடுகல்; 28
மூவேந்தருக்காய்ப்
பத்தினியவள் அருளிய
வாழ்த்து 29
வரம் தரு காதை; 30

ஐந்தாறு மொத்தம்
காதைகள் முப்பது;
இடையிடை உரைநடையுடன்
தொடர்நிலைச் செய்யுள்.

இவ்வாறாய்
இளங்கோவடிகள் அருளிய
காப்பியப் பகுப்புமுறை
அருகிருந்து கேட்டனர்
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

சிலம்பு வரிகள் இங்கே...பதிகம் வரிகள் 61-90

பதிகம் இங்கே முற்றுப் பெறுகிறது. உரைபெறும் கட்டுரையும், அதையடுத்து , காதைகளும் தொடரும். இந்தியப் பயணம் இரண்டு மாதங்களுக்கு...முடியும்போதெல்லாம் தொடர முயலுகிறேன்...

Monday, July 27, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 3)

'முன்வினை விளையும் காலம்
என்றீரே சாத்தனாரே
அவ்வினை விளைவு
ஏதென்று பகர்வீரோ'
வேந்தன் கேட்க
உரைத்தனர் சாத்தனார்.

'வெற்றி வேந்தே! கேள்.
அதிராச் சிறப்புடை
மூதூர் மதுரையில்
கொன்றை மலரணி
சடைமுடியான் கோவில்
வெள்ளியம்பலத்தில்
நள்ளிருள் ஒன்றில்
நான் ஓய்விருந்த வேளை..

மதுரை மாதெய்வமது
வீர பத்தினி
கண்ணகி முன் தோன்றி
உரைத்ததோர் செய்தி
நான் கேட்டேன்;
கேட்ட செய்தி
உமக்குரைப்பேன். '

'கொதி நெருப்பின்
தணல் சீற்றம்
கொங்கையில்
பொங்குவித்தவளே!
நீவிர்
முன் செய்த வினையது
முதிர்ந்து முடிந்து போனது;

முற்பிறவியில்
சிங்கபுரத்து வணிகன்
சங்கமன் மனைவி
நின் கணவனுக்கிட்ட சாபம்
இப்பிறவியில் வந்துற்றது.

நீண்ட கூந்தலாளே!
இன்னும் ஈரேழு நாளில்
இவ்வையகத்து எல்லை நீங்கிய
நின் மணாளன் திருமுகம்
வானவர் வடிவத்தில்
காண்பாயேயன்றி
மானுடர் வடிவத்தில்
கண்டிட மாட்டாய்!'

'அத்தெய்வம் கூறிய
கட்டான உரை
சாத்தன் நான் கேட்டேன்'
என்று கூற..

ஆங்கிருந்த
இளங்கோவடிகளும்
சாத்தன்வழி கேட்ட
கண்ணகி கதையால் தாமுணர்ந்த
முப்பெரும் சேதிகள்
யாதென்று பகர்ந்திட்டார்.

'அரசாட்சியில் தவறிழைத்தோர்க்கு
அறவுருவே எமனுருவாகும்;

கற்பில் சிறந்த மாதரசியை
உலகத்தோர் தேவர்
உயர்ந்தோர் அனைவரும்
போற்றியே புகழ்ந்திடுவர்;

செய்த வினை
ஊழெனத் தொடர்ந்து வந்து
ஊட்டி நிற்கும்
தப்பாது தன் பயன்;

ஒற்றைச் சிலம்பால்
சூழ்ந்த இவ்வினை குறித்துச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
பாட்டுடைச் செய்யுள் ஒன்று
இயற்றிடுவேன் யான்' என்றார்
இளங்கோவடிகள்.

சிலம்பின் வரிகள் இங்கே..பதிகம் வரிகள் 37-60)

Saturday, July 25, 2009

பெண்ணியல் நிர்ணயம்

பூக்கள் ரசித்தவள்
அதன் இதழ்கள்
கிழிக்கிறாள்.

இரவு வானம் ரசித்தவள்
அதன் நொடிகளில்
அஞ்சுகிறாள்.

கவிதைகள் ரசித்தவள்
கவிக் காகிதங்கள்
கசக்கி எறிகிறாள்.

வானவில் ரசித்தவள்
வண்ணங்களையே
வெறுக்கிறாள்.

விதியின் நிர்ணயம்
கடமையின் அளவுகோலில்.

பெண்ணியல் நிர்ணயம்
அவள் துணைவனின்
மனக்கோலத்தில்.

பாரங்கள் சுமந்தாலும்
சுரக்கும் பால்தேடும்
மகவுக்காய்
வாழ்க்கை வலிகள்
வணங்குகிறாள்.

ரசனையின் கருப்பொருள்
அவள் கருவின் பொருளில்
கண்டு மலைக்கிறாள்.

விதியின் நிர்ணயம்
கடமையின் அளவுகோலில்.

பெண்ணியல் நிர்ணயம்
தாய்மையின் வரங்களில்.

Monday, July 20, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 2)

பகுதி - 1

வியப்பிலாழ்ந்த வேந்தனவனும்
விழிகளைச் சுழற்றி
விடை வினவி நிற்க..

ஆங்கேயிருந்த
தமிழ்ப்புலவன் சாத்தனும்,
இவ்வரலாறு
நன்கறிவேன் என்றுரைத்தே
நவிலத் தொடங்கினன்....

ஆத்தி மலர் ஆரம் அணி
சோழன்குடை வரம்பில்
பெரும்புகழ் வாய்ந்த
புகார் நகரில் வாழ்ந்தனன்
பெருவணிகன் கோவலன்.

நாடகக் கணிகை
நாட்டிய மங்கை மாதவியிடம்
நாட்டம் கொண்டு மயங்கியே
கொட்டமடித்துக் களித்து
ஈட்டிய செல்வமனைத்தும்
தோற்றுத் தொலைத்தனன்.

தன் மனைவி கண்ணகி
காலணிச் சிலம்பு கொண்டு
தோற்ற பொருளதனை
வென்றெடுக்கும் முகமாய்...

புலவர் பலரின்
பாடற்சிறப்பில்
ஓங்கி மிளிரும்,
பாண்டிய மன்னனின்
புகழ் பாடி நிற்கும்,
மாடமாளிகைகள்
மலையென உயர்ந்து
மலைக்க வைக்கும்
சீர்பெரும் மாமதுரை
சென்று சேர்ந்தனன்
வணிகனவன்
கண்ணகியவளுடன்.

காற்சிலம்புகளில் ஒன்றைக்
கையில் ஏந்திக்
கடைவீதி சென்றவன்
பொற்கொல்லன் ஒருவனிடம்
விலைபேசி நின்றனன்.

கண்ணகி சிலம்பின்
கண்கவர் செதுக்கல்
முன்னர் தான் களவாடிய
அரசி கோப்பெருந்தேவியின்
சிலம்பதனை ஒத்திருக்கச்
சடுதியில் தீட்டினன்
சதியொன்றை அக்கொல்லன்.

கோப்பெருந்தேவியன்றி
வேறெவர்க்கும் பொருத்தமில்லை
இக்காற்சிலம்பு
பொறுத்திடுக நல்லவிலை கிட்டுமென்று
காத்திருக்கச் சொல்லிவிட்டுப்
பாண்டியன் தம் அரண்மனை ஏகினன்.

முன்செய்த வினைப்பயன்
பின் தொடர்ந்து எதிர்தேடும்
காலமதனுடன்
கள்வன் பொற்கொல்லன் சதியும்
கைகோர்த்துச் சதிராட..

சினமது கண்மறைக்க
ஆராயும் மனமது காணாமல் போக..
கொல்லன் கதைகேட்ட
கொற்றவன் பகர்ந்தனன்
ஓர் அவசரத் தீர்ப்பு.

அம்மாபெரும் கள்வனைக் கொன்று
கோப்பெருந்தேவி சிலம்பு
மீட்டு வருகவென்று.

செங்கோலின் ஆணை
செவ்வனே நிறைவேறக்
கொலைக்களம் கண்டனன்
வீண்பழி சுமந்த கோவலன்.

தன் காதல் கணவனைக்
காலன் கவர்ந்து சென்றது தாளாமல்
அங்கும் இங்கும் அலைந்து
நிலையின்றித் தவித்தனள்
கண்ணகி.

தம்
நீண்ட கண்களில்
நீரை உகுத்தனள்.

முத்தாரம் தவழ்
முலையொன்றைத்
திருகியெறிந்து
கூடல் மதுரை
கூக்குரலிட
தீக்கிரையாக்கினள்.

பத்தினி சாபத்தால்
பாண்டியன் கேடுற..
மாபெரும் பத்தினி தெய்வம்
இவளென்று
பலரும் புகழும்
பெருமை பெற்றனள்.

இங்ஙனம்
கண்ணகி கோவலன்
வரலாறு
ரத்தினச் சுருக்கமாய்ச்
செப்பினர் சாத்தனார்.


சிலம்பின் வரிகள்.. இங்கே..

Saturday, July 11, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 1)

சிலப்பதிகாரம் என்ற மாபெரும் படைப்பு, பெரும்பாலானோர்க்கு ஒரு தவிர்க்க முடியாத பாதிப்பை உருவாக்கி நிற்பது உண்மை. அத்தகைய பாதிப்பு என்னுள்ளும் இருக்கிறது.சிலம்பின் கதை நம் வாழ்வியல் இலக்கணத்தின் படிமங்கள் பலவற்றைத் தொகுத்துச் சொல்கிறது என்றதொரு எண்ணம் எனக்குண்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பல பாடல்கள் பள்ளிப்
பருவம் தொட்டுப் படித்த போதும், முழுமையாக இதனைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. இப்போது படிக்கவும் தொடங்கிவிட்டேன். எனக்குப் புரிந்ததை என் மனதில் பதிந்ததை வலையில் பதியும் ஆர்வம் வந்தது. இணையம் மூலம் பல செய்திகள் கிடைக்கப்பெற்றன. மேலும் மதுரையில் புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த ப. சரவணன் அவர்களின் 'சிலப்பதிகாரம்' என்னும் எளிய உரையும் இம்முயற்சியில் எனக்கு மிகவும் துணையாக நிற்கிறது.
 
இதோ தொடங்கிவிட்டேன். முக்கிய செய்திகள் மட்டும் தொகுக்கும் நோக்கம் காரணமாய் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தையான விளக்கமாய் இல்லாமல் ஒரு தொகுப்பாய் மட்டுமே இருக்குமென்று நினைக்கிறேன். என்றாலும் விடுபட்ட முக்கிய குறிப்புகளை அவ்வப்போது விளக்கவும்முற்பட்டுள்ளேன்.

பதிகம்

குடதிசைச் சேரமண்ணின்
மன்னன் செங்குட்டுவனும்
குணவாயில் கோயிலில்
துறவுக்கோலம் பூண்ட
அவன் தம்பி இளங்கோவும்
மலைவளம் கண்டு களித்துப்
பெரியாற்றங்கரையில்
பேரோய்வில் ஆழ்ந்திருந்த வேளை...

குன்றக்குரவர்
திரளென வந்து
தந்ததொரு செய்தியது
விந்தையிலும் விந்தை!!

பொன்னிற மலர்நிறை
வேங்கை நிழலில்
தன்னொரு முலையிழந்த
நிலையில் நின்றனள்
மங்கையொருத்தி
மாபெரும் பத்தினி.

அவள்முன் தோன்றினன்
தேவர் தலைவன்
இந்திரன்.
இறையெய்திய அவள்தம்
கணவன் திருமுகம்
அவள் கண்முன் காட்டினன்;
பின்
வானூர்தியில்
மங்கையவளுடன்
விண்னுலகம் சென்றனன்.

மெய்யோ இது பொய்யோ?
இந்த விந்தைதான் எதுவோ?
நல்லதோ? கெட்டதோ?
இதன் விளைவுதான் எதுவோ?
விளக்கம் கேட்டு மன்னனை
வினவி நின்றனர்
குன்றக்குரவர்.

சிலம்பு வரிகள்..இங்கே...

(தொடரும்)

Thursday, July 9, 2009

உவமை உருவகம்


காதல்....
எல்லையற்ற
மகிழ்ச்சிக்கான
இணையற்ற உவமை.
உயிரின் அனைத்து
உணர்ச்சிகளின்
உணர்வுகளின்
இணையற்ற உருவகம்.

Wednesday, June 24, 2009

32 கேள்விகள் 32 பதில்கள்

32 கேள்விகள் தொடர் பதிவுக்கு என்னை அழைத்த கோமதிக்கு நன்றி.

எனது பதில்கள்:

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஜாதகப் பெயர் 'ஹே'யில் தான் வந்ததாம்..தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக மலர்ச்செல்வி என்று வைத்தார்கள் என் அப்பாவும் தாத்தாவும்.

மிகவும் பிடிக்கும். அதிலும் சுருக்கமாக 'மலர்' மிகவும் பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

அய்யோ..தொலைக்காட்சி, சினிமாக் காட்சிகளுக்காய் உணர்ச்சிவசப்பட்டு அடிக்கடி அழுவதுண்டு....கடைசியா Federer சமீபத்திய போட்டியில் ஜெயித்த போது, அவர் அழுத அழுகையில் எனக்கும் அழுகை வந்துவிட்டது..

உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளுக்காய் நான் அழுவது மிக அபூர்வம்...
அந்த வகையில் ஊரிலிருந்து ரியாத் திரும்பி வரும்போது கடைசியாகக் கொஞ்சமாக அழுதேன் என்று நினைக்கிறேன்.


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

நல்ல காய் போட்டு செய்த எந்த வகைக் குழம்பும் மிகவும் பிடிக்கும்..மற்றபடி வழக்கமான சாதம், பொரியல் எதுவாக இருந்தாலும் சரி..

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக வைத்துக் கொள்வேன்.


6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில் குளிக்க மிகவும் பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவர்கள் பழகும் விதம். அதற்கு ஏற்றாற் போல் பழக வேண்டும் என்பதற்காக..


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்த விஷயம்: எளிதில் அனைவரிடமும் பழகுவது;
பிடிக்காத விஷயம்: சோம்பேறித்தனம், கோபம்.


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம்: எந்தப் ப்ரச்னையையும் எளிதாக ஏற்றுக் கொண்டு, எதையும் சமாளிக்கும் பக்குவம்+தைரியம், தோழமையுணர்வு.

பிடிக்காத விஷயம்: சின்ன மற்றும் பெரிய விஷயங்களுக்குத் திட்டமிடாத தன்மை.

10. யார் பக்கத்திலே இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

மறைந்துவிட்ட என் அப்பா...

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அட..எனக்குப் பிடித்த கத்தரிப்பூ வண்ணம்...


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

K Tv யில் காக்கிச்சட்டை படத்தில் கமல்...


13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பேனா என்றால் கத்தரிப்பூ வண்ணம்....மை என்றால் கருப்பு அல்லது பச்சை.

14. பிடித்த மணம்?

மல்லிகைப்பூமணம், ஜாதிப்பூமணம், மண்வாசனை, விபூதி வாசனை.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கிருத்திகா - இன்னும் நேரில் பார்த்ததில்லை..பதிவுகளில்தான் அறிமுகம்...ஓரிரு முறை மட்டுமே chat பண்ணியுள்ளோம்..இருந்தாலும் ஏதோ நீண்ட காலம் பழகிய தோழி போன்ற ஓர் உணர்வு. என்னுடன் ஒத்துப் போகின்ற ஒற்றுமைகள் பிடித்த விஷயம்...இன்னும் கொஞ்சம் இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை என்பதால்..அவரை அழைக்கப் போகிறேன்.

செல்வி ஷங்கர் - நம்ம சீனா சார் மனைவிதான். நேரில் சந்தித்தபோதும் சரி, எழுத்துகளில் சந்தித்த போதும் சரி, வியக்க வைக்கும் விஷயங்கள், கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இவரிடம் உண்டு...இவரைப் பற்றியும் இன்னும் சற்று அதிகமாக அறிந்து கொள்ள ஆசை..

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

நிலாக்குட்டி பற்றிய எல்லாப் பதிவுகளும்..கோமதி எழுதுவதிலிருந்து கொஞ்சமும் கூடாமல் குறையாமல் இருக்கும் நிலாவின் செயல்கள்...கோமதியின் விவரிப்புத் திறமை பாராட்டுக்குரியது...

17. பிடித்த விளையாட்டு?

உட்கார்ந்து விளையாடுவதில் ரம்மி, பல்லாங்குழி...ஓடி விளையாடுவதைப் பார்க்கப் பிடிக்கும்..குறிப்பாக டென்னிஸ் பார்க்கப் பிடிக்கும்.

18. கண்ணாடி அணிபவரா?

புத்தகம் படிக்கும் நேரம் பார்வைக் கோளாறுக்கான கண்ணாடி, சவுதி வெயிலுக்குக் கறுப்புக் கண்ணாடி.


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

மனதுக்குப் பாரமான முடிவுகள் இருக்கவே கூடாது...இலகுவான கதை..அழுத்தமான காட்சிகள் சில...பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இருக்க வேண்டும்...

20. கடைசியாகப் பார்த்த படம்?

திரையரங்கில் 'தசாவதாரம்' (ஊரில்தான்..ரியாத்தில் ஏதுங்க திரையரங்கம்)
சிடி யில் 'யாவரும் நலம்'.


21. பிடித்த பருவ காலம் எது?

வசந்தம்...

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இப்போதைக்கு 'அடோன்' தமிழ் இலக்கணம்..என் பெண்ணுக்கு இலக்கணம் கற்றுக் கொடுப்பதற்கு உதவியாக இருக்கிறது.
நிறைய இருக்கிறது கைவசம்...நேரம் முழுமையாகக் கிடைக்க இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும்...

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

என் பெண்தான் அவ்வப்போது மாற்றுவாள்..

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: மென்மையான எந்த ஒரு பாடலும்
பிடிக்காதது: அதிரடியான எதுவும்..

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

எகிப்து, கென்யா

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கொஞ்சம் எழுதுவது.


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

சந்தர்ப்பவாத நடிப்பு.


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்கோபம்


29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தளம்?

அயல்நாடுகளில் ..எகிப்து...நம் நாட்டில் ஜெய்ப்பூர்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னில் சில குணங்களை மற்றும் தவிர்த்து நான் நானாகவே இருக்க ஆசை.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அப்படி என்று ஒன்றுமே கிடையாது.


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.

பலவகை அனுபவங்கள் ஏந்திய அழகான அட்சய பாத்திரம்...

Friday, June 19, 2009

காதல் குழல்



வேய்ங்குழலின்

சிறுதுளையில்

நாபிக் காற்றின்

உயிர்த்துளிகள்

விரவி நிற்க

மெல்ல எழும்

இசையின் குரலில்

நம் காதல்.

Sunday, May 24, 2009

சிரித்தோம் சிந்தித்தோம்


ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக கடந்த ஏப்ரல் 30ந் தேதி, ரியாத் இந்திய பெண்கள் பன்னாட்டுப் பள்ளியில் நடந்த 'சிரிப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சி மிக அருமையாக நடந்தேறியது. பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் அவர்களின் சொற்பொழிவை அடுத்து, ரோபோ ஷங்கர், ஈரோடு மகேஷ், ஜெகன் ஆகியோரின் பல்சுவை நிகழ்ச்சி சரியான விருந்து....நகைச்சுவை
மருந்தும்தான்...

நிகழ்ச்சி முடிந்ததும் நகைச்சுவைக் கலைஞர்கள் இந்தியா திரும்பினர். திரு. பெரியார்தாசன் அவர்கள் மேலும் இரண்டு வாரம் இங்கே தங்கியிருந்தார். இரண்டு வாரமும் சற்றும் ஓயாமல், சளைக்காமல் அடுத்தடுத்துப் பலவித நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

குறிப்பாக ரியாத், தமாம் மற்றும் ஜெத்தாவில் பள்ளி மாணவர்களின் சுய முன்னேற்றத்துக்காக அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பாடங்கள் குறித்த திட்டமிடல், மனதை ஒருமுகப்படுத்துதல், படிக்க வேண்டிய சூழல் முதலிய தலைப்புகளில் அவர் கொடுத்த குறிப்புகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

ஒரு பள்ளியில் ஒரு நிகழ்ச்சி என்ற நிலை மாறி அன்றாடம் ஒரு பள்ளி விஜயம் என்றாகிப் போனது. சவுதி அரேபிய மாணவ சமுதாயம் அவரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.

சாதாரணமாக மனிதர்களைத் தாக்கக்கூடிய மனப்பிறழ்வுகள் பற்றிய அவரின் மனோதத்துவத்துறை சார்ந்த சொற்பொழிவுகளும் சரி, இனிய வாழ்க்கைக்கான வழிமுறைகள் குறித்த சொற்பொழிவுகளும் சரி...மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டேயிருந்தன.

ரியாத் எழுத்துக்கூடம் சார்பாக நிகழ்ந்த கவியரங்கத்தில் வெளிப்பட்ட அவரின் கவிதை முகம் பலரையும் மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்தியது. புதுக்கவிதை, மரபுக்கவிதை எல்லாவற்றிலும் புலமை வாய்ந்தவர் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது.

திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியம் நமக்காக வகுத்திருக்கும் வாழ்க்கை நெறிகளில் இருந்து விலகி வேறுவழி செல்வதன் மூலம் எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறோம் என்று அவர் கோடிட்டுக் காட்டியது...நல்மனம் பெறும் குறிப்புகள் தந்தது...என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தனிப்பட்ட முறையில் மனவியல் குறித்த ப்ரச்சனைகளுக்காக சிலருக்கும் சிகிச்சை அளித்தார். அதன் பலனாய் அவர்கள் இன்று நலம் கண்டு முன்னேறி வருவதாகவும் தெரிய வந்தது.

தூய தமிழ், சென்னைத் தமிழ், ஆங்கிலம் என்ற அனைத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் அவருடைய பேச்சாற்றல் தனித்தன்மை வாய்ந்தது.

தன்முனைப்புப் பயிற்சியாளர், பச்சையப்பன் கல்லூரி தத்துவத்துறை உளவியல் பேராசிரியர்(ஓய்வு), 25 ஆண்டுகளாக மனவியல் பயிற்சியாளர், 20 ஆண்டுகளாக மனவியல் சிகிச்சையாளர், பல்வேறு துறைகளில் பல புத்தகங்கள் எழுதியவர், இலக்கியவாதி, சர்வதேச கருத்தரங்குகளில் மனவியல் சிகிச்சை பற்றிய கட்டுரைகள் வழங்கியவர், 'கருத்தம்மா' புகழ் திரைப்பட நடிகர் ..இவ்வாறாயப் பல்முகங்கள் கொண்டவரின் அனைத்துத் துறைத் திறமைகளையும் கண்கூடாகக் காணமுடிந்தது.

எப்பேர்ப்பட்ட எளிமையான மாமனிதர் என்ற வியப்பிலிருந்து இங்கே நான் மட்டுமல்ல, இன்னும் பல நண்பர்களும் விடுபடவேயில்லை.

Tuesday, April 28, 2009

மனிதம்

மனிதம்
மனதின் புனிதம்
தேவை இந்த வேதம்.

மனிதநேயம் மட்டுமே
விதியாய்க் கொண்டு
உயிர்கள் பலவும்
உலவிய காலம்
இது மனிதம் அன்று

மனிதம் மருவி
மதம் என்றாகி
இனம் என்றாகி
பணம் என்றாகி
பதவி என்றாகி............
மதம் பிடித்து
ஆ(ட்)டுகின்றது இன்று..

வாழ்க்கை அகராதியில்
மனிதத்தின் அர்த்தங்கள்
திரும்பத் திரும்பத்
திருத்தி எழுதப்பட்டு
திக்குத் தெரியாமல்
திகைக்கின்றது இன்று.

சாலியன்வாலாபாக்கில்
சக உயிர்கள்
சல்லடையாய்த்
துளைபட்ட போது
துடித்தெழுந்தது மனிதம் அன்று.

இலங்கை தொடங்கி
இஸ்ரேல் வரை
இனங்களின் பிணக்குவியல்களில்..
இதயங்கள் தின்னும்
இரத்த தாகத்தில்
இரை தேடுகின்றது மனிதம் இன்று

அரிய சரித்திரங்கள்
அசாதாரணமான செயல்கள்
அனாயாசமான சாதனைகளாய்..
மனிதமாய் அன்று..

உரிய கடமைகள்
சிறிய உதவிகள்
உயர்ந்த மனிதமாய் இன்று

முதுமையில்
முதியோர் இல்லம் செல்லாமல்
வாரிசுகளுடன் வாழ்க்கை
இது இன்று மனிதம்

உடன்பிறப்புகளுள்
உரசல்கள் இல்லாத
உறவுமுறைகள்
இது இன்று மனிதம்

இன்னும் கைப்பைக்குள்
கைத்துப்பாக்கி கத்தி
சுமக்கவில்லையே நாம்
இது இன்று மனிதம்.

பரிணாமத் தளர்ச்சியில்
பன்முகங்கள் கண்டாலும்
பாழ்பட்டு நின்றாலும்
நல்மனங்களில் இன்னும்
நலியாமல்
நாடிதுடித்து நிற்கிறதே
இதுவும் இன்று மனிதம்.

ஏதோவோர் மூலையில்
எரியும் உயிருக்காய்
சுனாமியில் சுருளும்
சகோதரருக்காய்
இனங்கள் அழிகையில்
இறைந்து கிடக்கும்
பிணங்களுக்காய்

இதயங்கள் வடிக்கும்
இரத்தக் கண்ணீரில்....
வலிய வந்து
உதவும் கரங்களில்...
இறக்காமல்இன்னமும் நின்று
இயங்குகின்றது மனிதம்.
இயக்குகின்றது மனிதம்.

Sunday, March 29, 2009

காலத்தின் கட்டாயம்

நித்தமொரு
புத்தம்புது விடியல்

பழகிய நட்புடன்
பகையோ பகை
விலகிய நட்புடன்
இழையோ இழை

நேற்று குலுக்கிய கைகள்
இன்று
நெரிக்கும் கழுத்துகள்

இச்சையாய் அனிச்சையாய்
இதயம் கழற்றி எறிந்து
இங்கிதமின்றி அறிக்கைகள்
இரைப்பை நிறைப்புகள்

பணப்பைக்குப் பண்டமாற்றாய்ப்
பல உயிர்ப்பாதகங்கள்
பலியாடுகள் பொதுமக்கள்

மீண்டும்
தேர்தல் தேர்
உலா வரும் நேரம்..

பழைய பாத்திரங்களுடன்
புதிய சரித்திரம்
புதிய மேடையில்
பழைய நாடகம்
தற்காலிக அரங்கேற்றம்.
தவிர்க்க முடியாத
காலத்தின் கட்டாயம்.

Tuesday, March 10, 2009

ரியாத்தில் மணற்புயல்




இன்று காலை சுமார் 11 மணியளவிலேயே அறிவிப்பு வந்தது..மிக வேகமானதொரு மணற்புயல் ரியாத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக...
ஏதோ ஏப்பை சாப்பைப் புயல் என்று நினைத்திருந்தேன் முதலில்... ஆனால் அடேங்கப்பா...உங்க வீட்டு எங்க வீட்டு மணல் இல்லீங்க...எங்கும் எதிலும் மணல் மூட்டம்....ஊரே அடர்த்தியான கருஞ்சிவப்பு நிறத்தில் இரவு நேரம் மாதிரியாகிவிட்டது நண்பகல் 12 மணி...மாலைவரை தொடர்ந்தது இந்நிலை..இன்னும் கூட காற்றின் வீரியம் குறையவில்லை..
நான் இங்கிருந்த பத்து வருடங்களில் இந்த அளவுக்கு ஒரு மணற்புயலைக் கண்டதில்லை...வித்தியாசமான அனுபவம்தான்..

Thursday, March 5, 2009

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்/ வ(ப)ழக்கமாகிப் போன ஆங்கிலச் சொற்கள்

திகழ்மிளிர் இத்தொடரை எழுதச் சொல்லி நாட்கள் பலவாகிவிட்டன. சரி, பொதுவாக வழக்கில் ஒழிந்து நிற்கும் சொற்களைப் பற்றி எழுதலாம் என்று முதலில் நினைத்தேன். என் வழக்கிலேயே ஒழிந்து போய்விட்ட சொற்களைப் பட்டியலிட்டால் என்ன என்று தோன்றியது.

கடந்த வருடம், ஒரு நண்பர் பொதுவாக நாம் உபயோகிக்க மறந்த தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட்டு, (கிட்டத்தட்ட 100க்கும் மேல்..மேலோட்டமாகப் பட்டியலிட்ட போது)அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் ஆங்கிலச் சொற்கள் இவை என்று சுட்டினார்.

  • பழகிப் போய்விட்டது.
  • மாற்றிக் கொள்ள முடியாது,
  • சமமான தமிழ் வார்த்தை இல்லை,
  • சமமான தமிழ் வார்த்தை இருந்தாலும் உபயோகிப்பது எளிதாக இல்லை,
  • இவ்வார்த்தைகளைப் பேசினால் எல்லோரும் கேலியாகப் பார்க்கிறார்கள்
  • வேற்று மொழி வார்த்தைகளை உபயோகிப்பதில் தவறில்லை என்று தொல்காப்பியரே சொல்லிவிட்டார்
  • தற்போது செந்தமிழ், சுத்தத் தமிழ் என்று பேசுவது நாகரிகமாகிவிட்டது

இப்படி பல சாக்குப் போக்குகள் சொல்லிக் கொண்டாலும் நிறைய வார்த்தைகள் காணாமல் போய்விட்டதுதான் உண்மையான உண்மை.

என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். இந்த முயற்சி செய்யத் தவறவில்லைதான். என்றாலும் முழுமையான முயற்சி செய்யவில்லை. அப்படி ஓர் அலட்சியப் போக்கு இந்த விஷயத்தில். என்ன முயன்றாலும் ஆங்கிலம் கலந்து நிற்கும் வாழ்க்கையாகிப் போய்விட்டது.

ஓர் ஆங்கில ஆசிரியை என்ற முறையில் ஆங்கிலம் பேசும் போது தமிழ் கலக்காமல் இருக்க முடிகிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவள் என்ற முறையில் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேச முடியாமல் போனது வெட்கம், துக்கம்....

அப்படிச் சில வார்த்தைகளை இதோ பட்டியலிடுகிறேன்.

பாத்ரூம், சோப், டவல், மக், பைப், ப்ரஷ், பேஸ்ட், ப்ர்ட், ஆம்லெட், பட்டர், ஜாம், ப்ரெக்ஃபாஸ்ட், ஸ்கூல் பஸ், கேண்டீன், க்ளாஸ், ப்ளேட், டம்ளர், ரோடு, ஸ்டாப், வெய்ட், லஞ்ச் பாக்ஸ், புக், நோட்புக், பென், பென்சில், பேப்பர், க்வஸ்டின், ஆன்ஸர், ப்ளாக், பாஸ்போர்ட், விஸா, குட்மார்னிங், குட் ஈவ்னிங், குட் நைட், இன்டர்வெல், சினிமா, டிவி, ரேடியோ, பெட்ரோல்...........

அம்மாடி..இப்போதைக்கு முடியாது போலிருக்கிறதே..

இதை எழுதும் போது முரண்கள் பலவிதம் ..இதில் எழுதிய என் வரிகள் நினைவுக்கு வருகின்றன..

ஆங்கிலப் பேச்சில்

பிழையென்றால் வெட்கம்.'

டேமில் பேசவே தெரியாது'

சொல்வதற்குப் பெருமிதம்!

தமிழை 'டேமில்' என்று சொல்லுமளவு இன்னும் மோசமாகவில்லைதான்..என்றாலும் இத்தனை சதவிகிதம் தமிழ் பேசுகிறோம் என்ற நிலையில் இருக்கின்றேனே ஒழிய..முழுமையாகப் பேச என்றுதான் முழு முயற்சி செய்யப் போகிறேன்?

Thursday, February 26, 2009

உட்கார்ந்து யோசித்த போது

திடீர்ச்செயல் முனைதல்

ஒரு செயலுக்காக திடீரென்று முனைகையில் சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அந்தச் செயல் தொடர்கையில் சரி, இது நிரந்தரமல்லவே கொஞ்ச காலம்தானே என்ற சமாதானம் தானாகத் தேடி வரும். கஷ்டங்களை அனுசரிக்கப் பழகிப் போகும். முக்கியமான செயல் என்பதால் செம்மையாக வேறு செய்ய வேண்டும்.

தொடரும் அசௌகரியங்கள்

இவ்வாறு தொடரும் போது முக்கியமான செயல் தடைபடாமல் நடைபெறுமே ஒழிய, பல அசௌகரியங்கள் ஏற்படத்தான் செய்யும். என்னதான் மெனக்கெட்டுச் சமாளித்தாலும் இதுதொடர்ச்சியான அல்லலாகத் தோன்ற, செயலைக் கைவிட எண்ணம் தோன்றும்.

செயல் கைமாற்றம்

செயலைக் கைவிடச் சரியான சந்தர்ப்பத்தை மனம் எதிர்பார்க்கும். செயலைக் கைவிடவும் முடிவு ஏற்படும். செயலைக் கைமாற்ற சரியான நபரைத் தேடவேண்டியிருக்கும்.மனம் இச்செயல் புரியத் தேவையில்லாத, அது தரக்கூடிய அல்லல்கள் களையும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும்.

ஊக்கம்

செயலைச் செவ்வனே செய்தமைக்காகப் பாராட்டுகள் மற்றும் மேலும் சிறப்பாகச் செயலாற்ற ஊக்கமளிப்பும், கைமாற்ற ஆளில்லாத காரணத்தால் செயலை மீண்டும் தொடரவேண்டிய நிலைமையும் ஏற்படும் சிலநேரம். 'நல்லவரே வல்லவரே' ரீதியிலான பாராட்டுகளுக்கு மனம் சற்றே கிறக்கப்படும். கிடைத்த ஊக்கத்தால் அசௌகரியங்கள் சமாளிக்கும் நிலைமை ஏற்படும் என்ற நம்பிக்கையும் தைரியமும் எங்கிருந்தோ வரும்.

செயல் தொடர்ச்சி

மீண்டும் மனம் மாறிச் செயலுடன் ஒன்றிப் போகும். முன்னிருந்த நிலை மாறி மீண்டும் பல புதுத் தீர்மானங்கள் பிறக்கும். வாழ்க்கை மீண்டும் விட்டு விடவேண்டும் என்று நினைத்த இடத்தில் தொடரும்.

இதனால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் மேற்கூறிய அனைத்தும் மீண்டும்............... Money கணக்கு Vs மணிக்கணக்கு Vs (இப்போது கூடவே) மனக்கணக்கும் சேர்ந்து கொள்ளமீண்டும் அவள் ஒரு தொடர்கதை ஆகிப் போனாள்.

(புரியவில்லையென்றால் படிக்க: Money கணக்கு Vs மணிக்கணக்கு)

Monday, February 23, 2009

விஸிட் விஸா

ஷ்..ஷ்..ஷ்...குக்கர் விசில் அடிக்க, 'ஏய் மாலூ குக்கரை
நிறுத்துடி..'குளியலறையில் துணிகளை இயந்திரத்துக்குள் திணித்துக்
கொண்டிருந்த சாந்தி கத்தினாள்.

அடுத்த இரண்டு நொடியில் மீண்டும் 'ஷ்..ஷ்..'இவ என்னிக்கிதான் சொன்ன பேச்சக்கேட்டிருக்கா' முணுமுணுத்தவாறே அடுக்களைக்கு விரைந்து அணைத்தாள். மீண்டும் குளியலறைக்கு விரைய,இப்போது போன்...
இன்னிக்கு என்ன நிம்மதியா ஒரு வேலையை முடிக்க முடியாது போலருக்கே...

'ஹலோ..'

'ஹலோ..வணக்கம் அண்ணி....நா முரளி பேசறேன்..அண்ணன் இருக்காரா...'

'இல்லியே முரளி. ஆபீசுக்குப் போயிட்டார்...மொபைல்ல பேசேன்..'

'முதல்ல அதுக்குதான் அடிச்சேன்..ஆனா எடுக்கவேல்ல...'

'ஏதும் சொல்லணுமா..'

'ஆமா..அம்மா விசாவுக்காகப் பாக்கச் சொல்லிருந்தாருல்ல...விசா கிடைச்சுருச்சு...கொஞ்சம் சொல்லிருங்க..நானும் அப்புறம் பேசறேன்..'
தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு..அய்யோ..இது வேறயா..'ம்.ம். சரிப்பா..நா சொல்லிர்றேன்..நீ நல்லாருக்கியா..என்னா வீட்டுப் பக்கம் வர்றதே இல்ல..'

'வர்றேன் அண்ணி..நேரம் கிடக்கிறப்ப..அவர்கிட்ட சொல்லிருங்க..வச்சுர்றேன்..'
போனை வைத்தவள் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். என்ன ஒரு தைரியம் இவருக்கு..என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம..

அவர்கள் வசிப்பது ரியாத்தில்.இருவரும் வேலைக்குப் போகிற அவசரம்தான்..இன்று நாலாவது வியாழன் என்பதால் அவளுக்கு விடுமுறை. பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள் சாந்தி. கணவன் மனோகர் ஒரு கணினிப் பொறியாளர். எப்போதும் தலையைப் பிய்க்கிற வேலைதான்..என்ன இருந்தாலும் அவங்கம்மா வருவது சின்ன விஷயமா...இத ஏன் எங்கிட்ட சொல்லாம இருக்கணும்...இங்கே இருக்கிற பரபரப்பில்.. இருக்கிற தலைவலில இது வேறயா..எவ்வளவு செலவாச்சோ...

பிள்ளைகள் படுக்கையறையில் ஒரே சத்தம்...மாலுவுக்கும் பூஜாவுக்கும் சண்டையோ சண்டை...பெரியவள் மாலதி 8வது வகுப்பு..சிறியவள் பூஜா 6ம் வகுப்பு..

ஏ...பரிட்சைக்குப் படிங்களேண்டி...மார்க் குறையட்டும்...கொன்னுர்றேன் ..ஆமா..உங்க முத்துலட்சுமிப் பாட்டி வர்றாங்களாமே..அப்பா ஏதும் சொன்னாரா..'

'ஹை...பாட்டி வர்றாங்களா..ஜாலி..' இருவருக்கும் கொண்டாட்டம்...

'ஆமா..வர்றாங்க...எனக்கு ஒரு வார்த்தை சொன்னாரா உங்கப்பா...'

'மறந்துருப்பார்...இல்லேன்னா சொன்னப்போ நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்கம்மா..'இது மாலு.

'சரி..பாட்டி நம்ம ரூம்ல தங்கட்டும்....' இது பூஜா...

இவளின் அவஸ்தை தெரியாமல் அவர்கள் திட்டமிடத் தொடங்கினார்கள் தங்கள் சண்டையையும் மறந்து...

என்ன இருந்தாலும் ஒரே ரத்தம்..கொண்டாட்டம் வேற இந்தப் பொண்களுக்கு..எனக்குதான் அவஸ்தை..அய்யோ என்றிருந்தது அவளுக்கு...ரியாத் வந்து போன வயதானவர்கள் குறித்த அனுபவங்கள், தோழியரின் கலந்துரையாடல்கள் மனதுக்குள் முண்டியடித்துக் கொண்டு வந்தன..

ஒரு அம்மா சொன்னது...'என்ன ஊருடா இது..அமாவாசைக்குச் சோறு வைக்க ஒரு காக்கா குருவி கண்ல பாக்க முடியுதா...' வெளியே போறதுக்கே பையன் வந்தாதான் முடியும்..இதுல காக்காயாவது குருவியாவது..

இன்னுமொருவர்....என்னமோ போ எப்போ காரை எடுத்தாலும் குறுக்கே ஒரு பூனை போகுது தினம்...'இந்த சாஸ்திரமெல்லாம் இங்கே பாக்க முடியுமா?

அடுத்தவர்...'இங்கே தங்கமெல்லாம்தான் மலிவாச்சே..உன் தங்கைக்கு ஒரு பிஸ்கட் வேணுமாம்..வரும்போது வாங்கிட்டு வரச்
சொன்னா...'என்னமோ பிரிட்டானியா பிஸ்கட்னு நெனப்பு..

இந்தக் கதையெல்லாம் சொன்ன தோழிகள் தங்கள் இடர்களையும் சொல்லத் தவறவில்லை..

'காலேல எந்திரிச்சு எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டு வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது...நம்ம மட்டும்னா அட்ஜஸ்ட் பண்னிக்கலாம்..வேளாவேளைக்குப் புதுசாச்சமைக்கணுமாம்..யாருக்கு அதுக்கு நேரமிருக்கு..'இது ஒருத்தி.

'ஃப்ரிட்ஜைப் பாத்தாலே எங்க மாமியாருக்கு அலர்ஜியாருக்குது..ஊர் மாதிரி இங்கே சிக்கன், மீன் எல்லாம் புதுசாவா கிடைக்கும்..வாங்கி ஃப்ரிட்ஜ்லதான் வச்சாகணும்..எங்கத்தைஎன்னாடி செத்ததைச் சாகடிச்சுச் சாப்பிடுறீங்கன்னு கேக்கிறாங்க...மாசம் பொறந்தா அனுப்புற காசு மட்டும்தான் தெரியுது..இங்கே வந்தாதானே நம்ம அவஸ்தை புரியும்..'இது ஒருத்தி.

'புரிஞ்சுற கிரிஞ்சுறப் போகுது...உனக்கு நெனப்புதான்..இங்கே கூரையப் பிச்சுகிட்டுத் தெய்வம் கொடுக்குது..நம்ம ஜாலியா இருக்கிறோம்னு அவங்க நினப்பு தான் பெரிசு..நம்ம கஷ்டமெல்லாம்அவங்களுக்கு எங்க தெரியுது..' இது மற்றொருத்தி.

இதுல அனைத்தும் கலந்த கலவையாச்சே நம்ம அத்தை...இந்த மனுஷனுக்கு ஆனாலும் ரொம்ப அழுத்தம்..மூச்சு விட்டிருப்பாரா..மாமாவைத் தனியா விட்டுட்டு எப்படி வருவாங்கன்னு ஒரு நிமிஷமாச்சும் யோசனை வந்ததா அம்மாக்கும் புள்ளைக்கும்...இந்த விஷயம் அத்தை மாமாவுக்குத் தெரியுமா..மாமாவை விட்டுட்டுத் தனியா வருவாங்களா என்ன..ஏன் வராம..அதான் அவரைத்தனியா விட்டுட்டுத்தானே ஊர் சுத்துறாங்க..இதுல வெளிநாடுன்னா கேக்கவா வேணும்..

மவளே உன் பாடு திண்டாட்டம்தான்..இப்பவே படாத பாடு..இந்த ஆம்பளைங்களுக்கெல்லாம் நமக்கு இல்லாத பெத்த பாசம் எப்படித்தான் பொத்துகிட்டு வருதோ..நம்மையுந்தான் ஊட்டி வளத்தாங்க..இவங்களுக்குன்னு விசேஷமா என்னத்தைத்தான் ஊட்டி வளத்தாங்களோ..என்னமோ என் போறாத காலம்..

வீட்டு வேலைகளில் நேரம் போக..இடையிடையே மனோகருக்கு போன் செய்யத் தவறவில்லை அவள்..அவன் எடுத்தால்தானே..சரி சரி வரட்டும் இன்னிக்கு..கச்சேரிதான்..

மாலை 7.30 மனியளவில் வந்தான் மனோகர்...

வாண்டுகள் ரெண்டும் வானொலியாகினர்...'அப்பா பாட்டி வர்றாங்களாம்..'

'ஆமாடா..முரளி உனக்கும் போன் பண்ணானாமே சாந்தி...அத்தைக்குப் போன் பண்ணி இங்க வர்றதுக்கு ரெடியாகச் சொல்லு...குட்டிங்களா..சகுந்தலாப் பாட்டி வந்தா உங்களுக்குதான் ரொம்ப ஜாலி..'

'என்னப்பா சகுந்தலாப் பாட்டியா வராங்க..அம்மா முத்துப் பாட்டின்னுல்ல சொன்னாங்க...நீங்க அம்மாகிட்ட சொல்லலியாமே..'

'.....தாத்தா போனதுக்கப்புறம் பாட்டி தனியா இருக்காங்கள்ல...பாவம் உங்கம்மா சாந்தி...3 மாசம் விஸிட் விசா எடுத்தாச்சு..இப்போதான் எனக்கு நிம்மதியாருக்கு. பாரேன்..பிள்ளைங்களுக்கு என்ன குஷி..ஆமா..நா சொல்லலியா உங்கிட்ட..ஸாரி....மறந்துட்டேன்..விசா அனுப்பிச்சாச்சு..ஸ்டேம்ப்பிங் ஆக 10 நாளாகும்...அத்தைக்குப் போன் பண்ணிடு..லக்கேஜ்லாம் அதிகம் வேணாம்..வர்ற 15ந் தேதி ராம் வர்றான்..அவன் கூட வந்துரலாம்..' மனோகர் சொல்லிக் கொண்டே போக, சாந்திக்குதான் சொல்ல வார்த்தைகளின்றிப் போனது.

Tuesday, February 17, 2009

கூடை நிறையக் கனவுகள்


நறுக்...நஞ்சு பிஞ்ச செருப்பு வழியாக் காலைக் குத்திருச்சு நெருஞ்சி முள். 'அம்மா' என்று வலியோட தலைச்சுமைக் கூடையைக் கீழே போட்டுப்புட்டுக் கீழ உக்காந்தா சீனியம்மா.காயத்தப் பாக்குறதுக்கு முன்னால செருப்பின் கதியப் பாத்தா..'ஆத்தாடி. நல்ல வேள. அந்து போகல..'

ஒரு சொட்டு ரத்தம் வந்துருந்துச்சு. எச்சி தொட்டு அதத் துடைச்சிட்டு செருப்பை மாட்டிக்கிட்டு அண்ணாந்து சூரியனப் பாத்தா..இன்னும் பொழுது சாயக் கொள்ள நேரமிருக்கு..அதுக்குள்ள கொஞ்சமாவது செத்தை பொறக்கிக் கொண்டுபோனாத்தான் நாளைக்கு அடுப்புப் பத்த வக்கலாம்...இன்னும் கொஞ்சம் உள்ளாற போனாச் சின்னச் சின்னச் சுள்ளி கெடைக்கும். ஆனா அதுக்குள்ள இருட்டிருச்சுன்னா..

ஆத்தி..குத்தவச்ச பொட்டப்புள்ள பொழுது சாஞ்சா தனியா இல்ல கெடக்கும்... ஆணி, வெளக்கமாறெல்லாம் கூப்பிடு தூரத்துல வச்சுருக்கோ என்னாவோ..அது ஒரு பொச கெட்ட புள்ள..நெதம் ஞாவகப்படுத்தணும்..
வாக்கப்பட்டுப் போற எடத்துல என்னமாக் குப்ப கொட்டப்போதோ..இன்னும் சின்னப் புள்ளயாட்டம் நொண்டியடிச்சு வெளயாண்டுக்கிட்டு..ஆச்சு 14 கழுத வயசாச்சு..இன்னும் பொறுப்பு வரலியே இந்தப் பொட்டப் புள்ளக்கு..
மாமியாக்காரி ஆத்தாக்காரி வளப்பு சரியில்லன்னு குத்தம் சொல்லப் போறா..ஆமா...அது கூறு இல்லாத புள்ள... விடலப் பயலுக ஊர் சுத்தி வார நேரம் வேற..உள்ளாற போகவேணாம்..இங்கேயே சுள்ளி கெடக்காமயா போகும். தேடிப் பாப்போம்.

'மாயன் வீட்டுத் தோட்டத்துப் பக்கம் கொஞ்சம் காஞ்ச புல்லு வெட்டாமக்கெடக்கு' ன்னு பக்கத்து வீட்டு ராமாயி சொன்னது நெனவு வந்துச்சு அவளுக்கு. வெரசா எட்டி நடையப் போட்டா மாயன் தோட்டத்துக்கு.

'காவக்கார அழகன் மாமா இருப்பாரோ..அந்தாளு வேற கொணம் கெட்ட ஆளு..அவ கை தன்னால மாரப்பச் சரிசெஞ்சுச்சு. ஒவ்வொருத்தியும் சொன்ன கத ஓரொரு ரகமா இருந்துச்சுஅந்தாளப்பத்தி. வேற எங்கிட்டாவது போலாமா..சூரியன் மங்கிருச்சே..சரி என்னா செஞ்சுருவாரு..பாப்போம் ஒரு கை..மாயன் தோட்டத்துக்கே போவோம்.

நெறய்ய புல்லு வளந்து கெடக்க, அய்யோ புல்லறுத்தாக் கட்டக் கயிறு எடுத்தாறலியே..

'அதாரது புள்ள அங்க?'

அய்யோ மனுசன் வந்துட்டாரா..

'நாந்தான் சீனி, மாமா..புல்லு வெட்டிட்டுப் போலாம்னு வந்தேன்..கயிறு எடுத்தாரல...வச்சுருக்கீகளா..'

'ஆமாம்டி..ஓரொருத்தரா வருவீக..நாந்தான் முடிஞ்சு வச்சுருக்கேன் கயிறு..'

பரவால்ல..மனுசன் இன்னும் தண்ணி அடிக்கல போலருக்கு..நல்ல வேளை..
'இந்தா..' கயித்தத் தூக்கிப் போட்டார்.. 'எலே..மேக்குப் பக்கம் தண்ணி இன்னும் சரியாப் பாச்சல..அங்கிட்டுத் திருப்பி விடுடா..''வேலையாளுங்க சத்தமும் தோட்டத்துப் பக்கம் கேக்க...அப்பாடி..தோட்டத்துக்குத் தண்ணி பாச்சுறாக..கொள்ளப்பேரு இருக்காக..இனிப் பயமில்ல...

விரசாப் புல்லை அறுக்க ஆரம்பித்தாள்...

இந்த முத்துப்பய பள்ளிக்கூடத்துலருந்து வந்துருப்பானா..பசி வேற தாங்கமாட்டான்..நீச்சத்தண்ணி ஊத்திக் கொடுப்பாளோ..பராக்குப் பாப்பாளோ இந்தச் சிறுக்கி மவ..கடன ஒடன வாங்கியாவது இந்தப் பயல ஒரு படிப்புப் படிக்க வெச்சுப்புடணும்..டீச்சரம்மாவும் சொல்லிருக்காக ...நல்லாப் படிக்கிறானாம்..ஏதோ அந்தக் காடுவெட்டிக் கருப்புதான் கண்ணத்தொறந்து ஒரு நல்ல வழி காமிக்கணும். .

'நா வர்றதுக்குள்ள வந்துரும்மா வீட்டுக்கு..அப்பா வேற... போட்டு அடிக்கிறாரு...' முத்துப்பய சொல்லிருக்கான்..இந்த நெனப்பு வர அருவா வெரசா புல்லுல எறங்குச்சு.

பாவி மனுசன்..ஒரு நாளயப் போலயே நெதம் குடிச்சுப்புட்டு வந்து போட்டு அடிக்க வேண்டியது..சம்பாரிச்ச காசுல ஒரு காசு குடுக்கத் துப்பில்ல..
பாதகத்தி..என் ஆத்தாக்காரி..தம்பி களுத்துல என்னக் கட்டிவச்சுட்டுப் போய்ச் சேந்துட்டா..பொளப்பு..இதெல்லாம் ஒரு பொளப்பு..சமஞ்ச பொட்டப்புள்ளக்கு ஒரு தோடு வாங்கலாம்னு காசை முடிஞ்சு வச்சா...போன வாரம் பாத்துப்புட்டுக் காலி பண்ணிட்டான் பாவி.

புல்லறுத்துக் கட்டிச் சீலையைச் சும்மாடு கணக்காச் சுருட்டித் தலைல வச்சுக் கூடை மேல புல்லுக் கட்டு வச்சு நடைய எட்டிப் போட்டா சீனி. நாளையப் பொளுதுக்கு அடுப்புப் பத்தவக்க இது போதுமான்கிற நெனப்பும் கூடவே போச்சுது.

கூடை நிறையக் கனவுகள்

மகளுக்குத் தோடு
மகனுக்குக் கல்வி
மதுவை மறந்த கணவன்
சுள்ளி சுமக்கும்
கூடை நிறைய
அள்ளியெடுத்த கனவுகள்.
மங்கிய சூரியன் உரைத்த நிஜம்
எடுத்த சுள்ளி
அடுப்புக்குப் போதுமா?

(இணணயத்தில் ஒரு கிராமத்துப் பெண் தலையில் கூடை வைத்திருந்த புகைப்படம் கொடுத்து அதைப்பற்றி கவிதைப்போட்டி அறிவித்திருந்தார்கள்..
மிகவும் குறைந்த வரிகள் இருக்க் வேண்டும் என்ற நிபந்தனையோடு...
அதற்காகக் கடந்த வருடம் எழுதிய கவிதை இது (சின்ன மாற்றங்களுடன்) அப்போது ஒரு நண்பர் சிறுகதைக்கான நல்ல கரு என்று விமர்சிக்க, அப்போது சிறுகதை எழுதாத காலம்...இப்போது அதையும்
முயற்சி செய்ததன் விளைவு..)

Sunday, February 15, 2009

முரண்கள் பலவிதம் (2)

எதிர்காலக் கனவுகளில்
வீணாகின்றன
பல நிகழ்கால நிஜங்கள்.

ஊருக்கு உணவு படைத்து
வீட்டுக்கு வந்த
உணவகச் சமையல்காரன்
வீட்டின் அடுப்பில்
தூங்குகிறது பூனை.

'நொடிகள் சேமிப்பது எப்படி?'
மணிக்கணக்கில் பேசினார்
விழாப் பேச்சாளர்.

'ஆண்டவா!
எல்லோரும் நல்லா இருக்கணும்'
ஆலயத்தில் வேண்டிவிட்டு
வெளியே வந்தவர் வேட்டியில்
சேற்றை வாரிச் சென்ற
வாகன ஓட்டுனரைச் சாடினார்..
'நாசமாப் போறவனே!'

'...கிராமத்தில் பால்ய விவாகம்'
செய்தி கேட்டுப்
பாவப்படுகிறாள் பருவக்குமரி.
பொறாமைப்படுகிறாள் முதிர்கன்னி.

போகியன்று
எஜமானி கழித்த
பழைய ஆடைகள்
பொங்கலன்று
வேலைக்காரி வீட்டில்
புத்தாடைகள்.

Tuesday, February 3, 2009

முரண்கள் பலவிதம் (1)

ஆங்கிலப் பேச்சில்
பிழையென்றால் வெட்கம்.
'டேமில் பேசவே தெரியாது'
சொல்வதற்குப் பெருமிதம்!

கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு.

கல்லூரிப்
பேச்சுப் போட்டியில்
'பெண்ணினத்துக்குத்
தீங்கிழைப்பவரைக்
கொளுத்துவோம்'
என்றவளும்
பின்னாளில் கொளுத்தினாள்..
சித்ரவதை செய்த
கணவனை அல்ல..
தன்னைத் தானே.

'தென்றலின் தொடுதலுக்கே
என் தேவதை நோவாள்
பூவை நுகர்ந்தாலே
பூமகள் துவண்டு போவாள்'
கவிதைக் கோலம்
வரைந்தான் கவிஞன்
கற்பனையின் உதவியோடு.
வீட்டுக்கு வந்ததும்
மனைவியின் உடலில்
இட்டான் கோலம்
சிகரெட்டின் உதவியோடு.

உயிருடன் உடல் எரிந்தால்
உணர்வுகள் மட்டு.
உயிர்த் தலைவியின்
உருவ பொம்மையை எரித்தால்
உடனுக்குடன் வைப்பார் குட்டு.

கையில்லாத ரவிக்கை
அணிந்த அழகுக் காரிகை,
இடித்துக் காட்டிய
அன்னையிடம்
'ஆபாசம் ஆடையில் இல்லை
பார்ப்பவர் மனதில் இருக்கிறது'
என்று சொல்லிவிட்டு
ஊர்வலத்தில் போனாள்
பெண்ணியம் பேசும் கூட்டத்தோடு
முதுகற்ற ரவிக்கையணிந்த
நடிகையின் சுவரொட்டி கிழிப்பதற்கு.

...(தொடர்ந்தாலும் தொடரும்)

Tuesday, January 27, 2009

தாய்மை விதி


என்ன இவளை இன்னும் காணவில்லை..கடிகாரத்தைப் பார்த்தாள் சுவாதி..மணி காலை 7.15..7.16..அதோ அரக்கப் பரக்க ஓடி வருகிறாளே..


பாவம்.. வாடகை குறைவென்பதால் மூன்றாவது மாடியில் மொட்டைமாடி வீட்டில் இருந்து 40 நாள் குழந்தையையும் அதற்கான மூட்டைகள்,

இவளுக்கான மூட்டைகள் சுமந்து இறங்கி வந்து குழந்தையை நாலு தெரு தள்ளி இருக்கும் ஒரு பெண்ணிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ரியாத்

காலை நேரப் போக்குவரத்து நெரிசலில் நீந்தி வருவதென்றால் சும்மாவா..


வழியில் இருந்த மேற்பார்வையாளரைப் பார்த்துச் சமாளித்து வகுப்பிற்குள் வந்தாள் வந்தனா.


'வந்து ரொம்ப நேரமாச்சா சுவாதி?'


'ம்ம்..6.50க்கு வந்தேன்..என்ன இன்னிக்கும் சிவப்புப் புள்ளிதானா ரிஜிஸ்தர்ல?'


'ஆமா..5 சிவப்புப் புள்ளி வந்தாச்சு 15 தேதிக்குள்ள..இப்பவே ஒரு நாள் சம்பளம் அம்பேல்..கொஞ்சம் இரு வந்திர்றேன்' ..வகுப்பறையில் நுழைந்த வந்தனா குழந்தைகளுக்குக் காலை வணக்கம் சொல்லிப் பணியைத் துவங்கினாள்.


நர்சரி வகுப்பின் இரண்டாவது வாரம்..ஒரே கூச்சலும் குழப்பமும் குவிந்த அறை..மலர்ந்தும் மலராத கண்களுடன் தூக்கத்தில் மலங்க மலங்க விழித்தபடி சில, புரியாத மழலை அரபியில் முனகிக் கொண்டு சில, அழுது தேம்பியபடி சில..இருந்தாலும் ஆசிரியையைக் கண்டதும் ஒரு மலர்ச்சி..ஒரு குழந்தையின் மூக்கைத் துடைத்து, பழச்சாறு குடிக்க முறபட்ட குழந்தையைச் சமாதானப்படுத்தி அதை உள்ளே வைத்து..ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாய்ச் சமாளித்து அவர்களுக்கான படிப்பு மற்றும் விளையாட்டுக் கருவிகளை ஒவ்வொரு குழந்தையின் முன் எடுத்து வைத்தபடியே பேசினாள் வந்தனா..


'இன்னிக்கே தமாம் போகணுமா என்ன..ஒரு நாள் இருந்துட்டுப் போயேன்..'


'இல்ல. ராகுல் தனியா இருப்பானே.'


'கூட்டிட்டு வந்திருக்கலாம்ல அவனையும்..'


'உடனே திரும்பணுமே. அதான் கூட்டிட்டு வரலை. அவனும் பள்ளிக்கு லீவே

போடமாட்டான். பக்கத்து வீட்ல இருப்பான். உன்னைப் பாக்கலாமேன்னு

நான் வந்தேன். ராத்திரிக்குள்ளதான் போய்ருவோமே...'


இருவரும் பள்ளிப்பிராயத்துத் தோழிகள். கல்யாணமாகி வெளிநாடு வந்தும் நட்பு தொடரும் கொடுப்பினை வாய்த்தவர்கள். ரியாத்திலேயே இருந்தவர்கள்தான். ஆனால் இப்போது சுவாதியின் கணவனுக்கு தமாம் மாற்றலாகிவிட்டது.


முதலில் இந்தப் பள்ளியில்தான் சுவாதியும் வேலை செய்தாள். ஆனால் இந்தியப் பிரிவில். வந்தனா வேலையில் இருப்பது அரேபியப் பிரிவில்.


அலுவலகப் பணிநிமித்தம் ரியாத் வரவேண்டியதால் இன்று இங்கே..


'இன்னும் இந்தியப் பிரிவிக்கு மாறலியா வந்தனா?'


'எங்கே..இதுல பழகியாச்சு..கொஞ்சம் அரபியும் பேச ஆரம்பிச்சுட்டேன்.. வேற யாரும் கிடைக்கல..அதான்..எங்கே மாத்தப் போறாங்க..'


'என்னக் கேட்டா இந்த நர்சரி, மர்றும் கே.ஜி. வகுப்பாசிரியர்களுக்குத்தான் சம்பளம் அதிகம் இருக்கணும். அதிகாரம் என் கையில் இருந்தா நான் அதான் பண்ணுவேன்..'


பேச்சும் வேலையுமாய்ப் போய்க் கொண்டிருக்கையில்..


சட்டென்று முகம் மாறினாள் வந்தனா. வலி பொறுக்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டாள்.


'இரு வர்றேன்..' போய்விட்டு அவள் திரும்பியபோது முகத்தில் வேதனை கொஞ்சம் குறைந்திருந்தது.


'இன்னும் பள்ளியில் குழந்தைகள் காப்பகம் வக்கலியா வந்தனா..'


'இடம் பத்தலன்னுதான் சொல்றாங்க இன்னும்..'


வேலையை விடவும் முடியாது. அவள் கணவனுக்குக் குறைவான சம்பளம், வீட்டு வாடகை, சாப்பாடு இத்தனை செலவையும் சமாளிக்க வேண்டுமே. குழந்தைக்குப் பாலூட்ட முடியாத கொடுமைதான்..


'என்னமோ போடி..கஷ்டமாருக்கு..உன் வீட்டுக்காரருக்கு நல்ல வேலை இன்னும் கிடைச்ச பாடில்லயா..'


'எங்கே..அங்கங்கே சொல்லி வச்சுருக்கு..கிடைக்கும்னு நினைக்கிறேன்..'


ஒரு குழந்தை ஓடி வந்து இன்னொரு குழந்தையைக் காட்டி அரபியில்

ஏதோ சொல்ல இவள் சென்று சமாதானப்படுத்தி வந்தாள்.


'அடுத்த மாசம் ஊருக்குப் போறேன், வந்தனா. அம்மாவைப் பாத்துட்டு வர்றேன்..ஏதும் கொடுக்கணுமா அவங்களுக்கு..'


'இல்ல..நா நல்லாருக்கேன்னு சொல்லு..வேற எதுவும் சொல்ல வேணாம். வீணாக் கஷ்டப்படுவாங்க..வெளிநாட்டுல மக நல்ல வாழ்க்கை ஏகபோகமா வாழ்றான்னு நெனச்சுக்கட்டும்..'


'ஊருக்காவது ஒரு நடை போயிட்டு வாயேன்..குழந்தையைப் பாக்க அங்க எல்லாருக்கும் ஆசையா இருக்குமில்ல..'


'போகணும்..'என்று வாய் சொல்ல இயலாமையில் மனம் தளும்பியது. 'நீயும் தமாம்ல வேற வேலை இவருக்கு முயற்சி பண்ணு..ரிலீஸ் கொடுப்பாங்க கம்பெனில..விசா மாத்தறது ப்ரச்னை இருக்காதாம். இவர் சொன்னார்..'


'கண்டிப்பா..ஏற்கனவே நல்ல வேலையாத்தான் உன் கணவருக்காகப் பாத்திட்டிருக்கார் இவர்..'


சுவாதியின் கைபேசி அவள் கணவர் வரவை அறிவிக்க விடைபெற்றுச் சென்றாள் அவள்.


குழந்தைகளுடன் பணியில் மூழ்கிப் போனாள் வந்தனா.


மீண்டும் வலி ....மீண்டும் ஓய்வறைக்குச் செல்லுதல்..என்று இது தொடர்ந்தது 3 முறை...


பள்ளி முடிந்து தனியார் வாகனத்தில்தான் செல்ல வேண்டும். அவள் கணவனால் மதியம் வர முடியாது..அந்தப்பெண்ணின் வீட்டுக்குப் போனாள்..


'இன்று என்னமோ கரைத்த பாலை இவ குடிக்கவே இல்ல..'என்றாள் அந்தப் பெண்.


சட்டென்று ரவிக்கை நனைந்ததைக் கருப்பு பர்தாவுக்குள் உணர முடிந்தது அவளால்.


'குட்டிம்மா..கொஞ்சம் இருங்க..இதோ வீட்டுக்குப் போய்ரலாம்...அப்புறம் வயிறு முட்டக் குடிக்கலாம்..'


மீண்டும் போக்குவரத்து நெரிசல்..இன்னும் அரை மணி தாமதம்..வழியில் அத்தனை குழந்தைகளையும் இறக்கி விட்டு வீடு வருவதற்குள் குழந்தை தூங்கிப் போய்விட்டது பசி மயக்கத்தில்..


படியேறிக் கதவைத் திறக்கையில் நெஞ்சு வலித்தது.


மீண்டும் அழ ஆரம்பித்தது குழந்தை.


....பைகளை விசிறிவிட்டுக் கருப்பு பர்தவைக் கழற்றிவிட்டுக் குழந்தையை வாரியணைத்துப் பாலூட்ட முற்பட்டாள்....பால் கட்டிக் கொண்டுவிட என்ன முயன்றும் முடியாமல் போக...


அதுவரை தொண்டை வரையில் அடைபட்டிருந்த தாழ்கள் திறந்து துக்கம் பீரிட மடிந்து சரிந்து அழ ஆரம்பித்தாள் வந்தனா.
பத்து மாதம் சுமக்க வேண்டும்
தாய்மை விதி..
பாலூட்டி வளர்க்க வேண்டும்
தாய்மை விதி..
இது என்ன விதி?

Sunday, January 25, 2009

குடியரசு.....வல்லரசு


பிறப்பு
கல்வி
உழைப்பு
திருமணம்
இனப்பெருக்கு
பிள்ளை வளர்ப்பு
இறப்பு
-தனிமனிதப் பெருங்கவலை.

நதி நிலம்
சாதி மதம்
இனம் பணம்
மொழி மாநிலம்
முரண்பாடுகள்
வன்முறைகள்
-பொது வாழ்க்கைப் பெருந்தொல்லை.

ஈடேற்ற நேரமில்லா
இல்லத்தரசு.
குடியுரிமையே
கேள்விக்குறியாய்
குடியரசு.

மாற்றுக் கட்சிக்கு
மறுமொழி புகன்றே
மலைத்துக் களைக்கும்
மாநில அரசு.
நலம் பல நல்கவியலா
நடுவண் அரசு.

இதில்..
எங்கே
எப்போது
என்று
எப்படி
யார் காண முடியும்
வல்லரசு?!

என்றாலும்
இதுவும் க(ந)டந்து போம்
என்று
நம்பிக்கையுடன் நம்புவோம்!

குடியரசு தின வாழ்த்துகள்!

Saturday, January 24, 2009

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது

இது வலைப்பூவுக்குப் பூ தொடர்ந்து செல்லும் பட்டாம்பூச்சி விருது.
என் வலைப்பூவிற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்த திவ்யாவுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.


இவ்விருதினை நான் இவர்களுக்குக் கொடுக்க விரும்புகின்றேன்.


கிருத்திகா: இவரின் படைப்புகளில் உள்ள நேர்த்தி மற்றும் தனி அழகு என்னை மிகவும் கவர்ந்தது. கவிதை, கட்டுரை, புத்தக விமர்சனம், என்று பல தரப்பட்ட படைப்புகள் இவர் வலைப்பூவில் காணலாம். எல்லாமே அனுபவங்களை அழகாக வடித்துக் கொடுக்கும் படைப்புகள்.


ரத்னேஷ்: இவரின் வலைப்பூவில் இவர் அலசாத விஷயங்கள் மிகவும் குறைவு. அரசியல் முதல் இலக்கியம் வரை மிகவும் அனாயாசமாக இருக்கும் இவர் அலசல். எந்தவொரு கருத்தையும் தயங்காமல் முன்வைக்கும் இவரது பதிவுகள். அடிக்கடி பதிவிடும் இவரின் பதிவுகள் ஏனோ சமீபகாலமாகக் காணப்படவில்லை. வேலைப் பளு அதிகம் என்று நினைக்கிறேன்.


ராமலக்ஷ்மி: சமீபகாலமாகத்தான் இவரது பதிவுகள் படிக்க ஆரம்பித்தேன். இவரது கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவ்வப்போதைய செய்திகளைக் கவிதை வடிவில் தரும் இவர் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்.(இதில் இவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.) சிறுகதைகளில் தவழும் எதார்த்தமும், வட்டார வழக்கும் மிகவும் சிறப்பாக இருக்கும்.


திகழ்மிளிர்: இவரின் வலைப்பூவின் அமைப்பே மிகச் சிறப்பாக இருக்கும். இவரது கவிதைகளில் மிளிரும் தனியழகு கற்பனைச்செறிவு மற்றும் சுருக்கமான அழகான சொல்லடுக்கு எனக்கு மிகவும் பிடித்தவை.


என். கணேசன்: ஆனந்த விகடன் மற்றும் பல பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள் எழுதியுள்ளவர். இவரது கட்டுரைகள் படித்ததும் ஒரு புத்துணர்ச்சி பூத்துக் கிளம்பும். சிறுசிறு கதைகள் மூலம் இவர் கூறும் நல்ல கருத்துகளில் கற்றுக் கொள்ளும்படியான விஷயங்கள் ஏராளம் இருக்கும்.


இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:


1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

Wednesday, January 14, 2009

பூவின் சிதறல்

மரணம் என்பது வாழ்க்கையின் முடிவுதான்..ஒவ்வொருவரும் அதை நோக்கி அடுத்த அடி எடுத்து வைத்தபடி இருக்க எங்கோ யாருக்கோ அது நேர்கின்ற போது பத்தோடு பதினொன்று ஆகி நிற்க, நம்முடன் வாழ்ந்த நம்மில் ஒருவராய் வாழ்ந்த நண்பருக்குத் திடீரென்று நேர்கையில் அந்த இழப்பு, அதன் பாதிப்பு இவ்வளவுதான் என்று அளவுகோலிட முடியாத அளவுக்கு அமைந்து விடுகிறது.

அப்படிப்பட்ட ஒரு துயரத்தில்தான் ரியாத்வாழ் தமிழ் நெஞ்சங்கள் அநேகர் இருக்கிறோம். ஜனவரி 6 அன்று பொழுது விடிகையில் யாருமே நினைத்துப் பார்க்கவில்லை திரு. திருமாவளவனின் (35 வயது) முடிவைக் கூவி இப்படி விடியுமென்று. அவரின் மரணச் செய்தி எழுதிப் புலர்ந்த பொழுது அவரது மனைவி, ஒன்பது மற்றும் நான்கு வயது மகள்களுடன் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என்று அனைவரையும் ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.

நிமிடத்தில் புரட்டிப் போடப்பட்டது அவர் குடும்பத்தினர் வாழ்க்கை. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரது மனைவி, மக்கள் மற்றும் சுற்றம் அனைத்து பலங்களும் சீக்கிரம் பெறட்டும்.

விதியின் வலிய கைகள்
எழுதிச் செல்லும் மரணக்கதை..
மீண்டும் ஒரு முறை
தன் சரிதம் எழுதி நிற்க

ஊழிக்காற்றின் உல்லாசத்தில்
உருக்குலைந்த பூவொன்று
வெடித்துச் சிதற

அசையாத வேரும்
ஆட்டம் கண்டிட
கிளையும் இலையும்
தளர்ந்து சோர்ந்திட

பூவது உதிர்ந்தாலும்
காற்றில் கலந்துவிட்ட
அதன் வாசமது
வேருக்குச்
சுவாசமாய் அமைந்திட
வேரின் அடித்தளம்
பற்றியே காத்திட

கிளையும் இலையும்
துளிர்த்துத் தழைத்திட
நம்பிக்கைப் பூவாய்
மீண்டும் பூத்திட
வாழ்த்துகளுடன்
என் அஞ்சலிகள்
சமர்ப்பணம்.