Friday, March 8, 2013

நான் அறிந்த சிலம்பு - 36

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை


சிலம்பின் வரிகள் இங்கே: 141 - 150


சிலம்பின் வரிகள் இங்கே: 151- 156
விழாவின் தொடக்கமும் முடிவும் முரசறைந்து அறிவித்தல்

விழாவின் தொடக்கமும்
என்று எப்போது என்ற விளக்கங்களை
வள்ளுவன் முரசறைந்து அறிவிப்பது வழக்கம்.

அம்மரபதன்படி
வச்சிரக்கோட்டத்து மங்கல முரசை,
அலங்காரம் செய்த கச்சினையணிந்த
யானையின் பிடரியில் ஏற்றி,
தூய வெண்மையான யானை நிற்கும்
இந்திரன் தோட்டத்துச் சென்று
அங்கிருந்தபடியே
விழாவின் தொடக்க நாளும்
முடியும் நாளும்
முரசறைந்து முறையே அறிவிக்கப்பட்டது.

கொடியேற்றம்

இப்பூமியில் இந்திரன் வந்து
தங்கிய இடம் என்ற பெருமை உடைத்து
கற்பகத்தரு நின்ற கோட்டம்;
அக்கோட்டத்துக்குச் சென்று
ஐராவதம் எழுதிய
மங்கல நெடுங்கொடியை
வானின் உயரத்துக்குப்
பறக்குமாறு ஏற்றினர்.

வீதியின் மங்கலத் தோற்றம்

பசும்பொன்னால் அமைக்கப்பட்டிருந்தன
விழாவீதிகளில் இருந்த
பெரிய மாளிகைகளின் திண்ணைகள்.

மரகதமணிகள் வைரமணிகள் இழைத்திருந்த
பவளத்தூண்கள் நின்றிருந்தன
அத்திண்ணைகளில்.

கிம்புரி எனும் பூணுடன் கூடிய கொம்பையும்
முத்துச் சிப்பிகளைப் பிளந்து பெற்ற
ஒளிபொருந்திய முத்துக்களையும்
மங்கலம் பொருந்திய அழகிய ஓவியங்களையும்
மாலை வடிவில் வளைத்து அமைக்கப்பட்ட
மகரத் தோரணங்கள் அலங்கரித்தன
அம்மாளிகைகளின் வாயில் தோறும்.

மாசற்ற பசும்பொன்னால் ஆன
பூரண கும்பங்கள்,
பொலிந்து விளங்கும்
முளைப் பாலிகைகள்,
பாவை விளக்கு,
பசும்பொன்கொடி,
வெண்சாமரம்,
சுந்தரமான சுண்ணம் --
இவையனைத்தும் நெருக்கமாக
வீதியெங்கும் வைக்கப்பட்டு
இந்திரனை வரவேற்கக் காத்திருந்தன.
 

வல்லமை 03.09.12 இதழில் வெளிவந்தது.

Sunday, March 3, 2013

நான் அறிந்த சிலம்பு - 35

புகார்க்காண்டம் - 05, இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 118 - 140
 
 
ஐவகை மன்றங்களில் அரும்பலி இடுதல் - பகுதி 2

கூனர் குள்ளர் ஊமையர் செவிடர்
அழுகும் நிலையிலுள்ள
உடலையுடைய தொழுநோயாளர்
மூழ்கி எழுந்த நிலையிலேயே
உடற்பழுது இல்லாமல் நீங்கி
பார்ப்பதற்கு இனியவராய்க் காட்சியுற்று
ஊர்வலம் வரச் செய்யும்
பொய்கையைக் கொண்ட மன்றம்
இலஞ்சி மன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.

பிறரின் வஞ்சனையதன் காரணமாய்
அவரால் மருந்தூட்டப் பெற்று
மனதில் பித்து ஏறியவர்கள்,
நஞ்சினை உண்டு
நடுங்கவைக்கும் துயர் உற்றவர்கள்,
நெருப்பு நிகர்த்த நஞ்சுடைய
பாம்பின் கூரிய பற்கள்
நன்கு அழுந்தக் கடிப்பட்டவர்கள்,
முழி பிதுங்கிக் காணப்படும்
பேயினால் பிடிக்கப்பட்டுக்
கடுந்துன்பப் பட்டவர்கள் --

இவர் அனைவரும்
ஒருமுறை சுற்றி வந்து
தொழுது நின்|ற அளவிலேயே
அவர்தம் துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் பெருகும்பொருட்டு
ஒளிவீசும் நெடிய கல் நாட்டி நின்ற மன்றம்
நெடுங்கல் மன்றம் என்றே அழைக்கப்பட்டது.

தவக்கோலத்தில் மறைந்து திரியும்
தகாத தன்மையுடைய போலித்துறவிகள்,
கணவன் அறிந்திடாவண்ணம் மறைந்து
தீய ஒழுக்கத்தில் ஈடுபடும்
ஒழுக்கங்கெட்ட பெண்கள்,
தம் அரசனுக்கே உட்பகை
விளைவிக்க எண்ணும் அமைச்சர்கள்,
பிறர் மனைவியை விரும்புபவர்கள்,
பொய்சாட்சி சொல்பவர்கள்,
புறங்கூறித் திரிபவர்கள் --

"இவர்கள் யாவரும் நான் வீசும்
என் கைக்கயிற்றுக்குள் அகப்படுவர்"
என நாற்காததூரமும் கேட்கும்படிக்
கடுங்குரலில் எச்சரித்து,
அவரைத் தரையில் அறைந்து கொன்று உண்ணும்
பூதம் நின்ற மன்றம்
பூத சதுக்கம் என்றேதான் அழைக்கப்பட்டது.

அரசனவன் செங்கோல்
சற்றே தவறிடினும்
அறமது உரைக்கப்படும் அவைதனில்
நீதிநூல் நெறி வழுவ
ஒரு பக்கம் சார்ந்த தீர்ப்பு கூறப்படினும்
தன் நாவால் அத்தவறுகளை நவிலாது
தன் கண்களில் நீர் உகுத்து வருந்தியே
பாவை ஒருத்தி நின்று அழுகின்ற மன்றம்
பாவை மன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.

உண்மையான வாழ்வியல் நெறியை
உணர்ந்த சான்றோரால் போற்றப்படும்
ஐவகை மன்றங்களிலும் அரும்பலி இடப்பட்டது.
 
 
வல்லமை 27.08.12 இதழில் வெளிவந்தது.