Friday, April 25, 2008

நிறைமதி காலம்


ஒரு கொடியில்
இரு மலர்கள்

ஒரு கருவில்
இரு சிசுக்கள்

ஒன்று ஆணாய்
ஒன்று பெண்ணாய்
இருந்தால் என்ன
இரண்டும் ஒன்றல்லவா?

ஒன்றுக்குக் கள்ளிப்பால்
ஒன்றுக்குச் சுண்டக் காய்ச்சிய
கள்ளிச் சொட்டாய்ப் பால்;
ஒன்றுக்கு எருக்கம்பால்
ஒன்றுக்கு எருமைப்பால்.
இருபால் என்பதால்
இரு வேறு பால் விதிகள்?!

சுமந்திடும் மாதக்கணக்கு
சுரந்திடும் பால்க்கணக்கு
படித்திடும் செலவுக் கணக்கு
கேளிக்கையின் கழிவுக் கணக்கு

உணர்வுகளின் உயிர்மை
உணர்ச்சிகளின் புணர்ச்சி
உய்யும் வழிமுறை
எய்தும் வகைதொகை
எட்டும் உயரங்கள்
கொட்டும் எண்ணங்கள்
இருபாலர்க்கும் பொதுமையன்றோ?
இரண்டுக்கும் பேதம் காண்பது
இருமுறை வடிகட்டிய
பேதைமையன்றோ?!

ஆணென்றால் வரவாம்,
பரம்பரை வளர்க்கும் வாரிசாம்;
பெண்ணென்றால் செலவாம்,
அடுத்த வீட்டு வாரிசு
சுமக்கும் சுமைதாங்கியாம்.

இரண்டாம் நூற்றாண்டு வழக்கு
இரு பத்து இரு நூறில்
இன்னும் எதற்கு?

அர்த்தநாரித் தொழுகை
ஆலயங்களில்
இருபால் பேதங்கள்
இல்லங்களில்
இரட்டை வேடம்
பூணும் மனசாட்சி
சற்றே மாறினால்
முற்றும் மாறும்
சமுதாயக் காட்சி.

மாறித்தான் வருகிறது
மனதின் காட்சி
மலர்ந்துதான் வருகிறது
சமதள ஆட்சி.
மாறி வரும் மனங்கள்
ஆறி வரும் ரணங்கள்..

மாற்றுப் பாதையில்
வீறு கொண்டு
நிமிரத் தொடங்கிய
நிகழ்காலம்
எழுந்து நிற்கும்
எதிர்காலம்.

இரண்டு கண்ணில்
இரண்டு காட்சி
இரட்டை நிலை
ஏது இன்றைக்கு?
இரண்டும் சமமாகி
இரண்டறக் கலந்து
இயையும் இயல்பு நிலை
காலக் கண்ணாடி
காட்டிடும் நமக்கு.
(வ.வா சங்கத்தின் போட்டிக்கான இரண்டாவது படைப்பு..)

Friday, April 18, 2008

நதியொன்று விதி தேடி..


ஒரு நதி
இரண்டு பங்கீடு

இரண்டு பக்கமும்
இடிவாங்கும் மிருதங்கமாய்
மத்திய அரசு

இரட்டைத் தலைவலியுடன்
இருமாநில அரசு..
மக்கள் நலம்(?!) ஒரு பக்கம்.
கட்சி நலம் மறு பக்கம்.
நாணயத்தின் இரண்டு பக்கம்.

இரட்டை வேடம்
இரு மொழி நடிகர்க்கு..
வாழ வைக்கும் தமிழர்
சொந்த மண்ணின் சொந்தங்கள்
இரண்டு பேரிடமும் நல்ல பெயர்
இரண்டு பத்து ஆண்டுக்காவது
இன்னும் வேண்டும்.

இரண்டு பக்கமும்
திரைப்படங்கள்
வெற்றிவாகை சூட வேண்டும்.
அதற்காகவாவது
இரட்டை வேடமிட்டு
இரண்டு மனதை ஒன்றாக்கி
இரட்டை நாக்கில்
இரட்டிப்பு இரட்டிப்பாய்
வசனம் பேச வேண்டும்.

இருபக்க விவசாயத் தோழர்தான்
இருதலைக் கொள்ளி எறும்பு..
நம்பி விதைப்பதா
நம்பிக் கெடுவதா..
இரட்டைக் குழப்பம்.

மொத்தத்தில் இவ்வழக்கில்
இரு மாநிலத்தின்
இருவேறு தீர்ப்பும்
இப்படியிருந்தால்
எப்படியிருக்கும்?

மழை பெய்கையில்
அணைக்கு இந்தப்பக்கம்
இரட்டைத் தாழ்..

மழை பொய்க்கையில்
அணைக்கு அந்தப்பக்கம்
இரட்டைத் தாழ்..

இரட்டை நிலை மாற
இன்னும் நூற்றாண்டு
இரண்டாவது கழிய வேண்டும்.
அதுவரை காவிரி
இருபக்கமும் அலைபாய்ந்து
விவசாயம் காக்க வேண்டும்.

உலகப் பொறி

விடம் பூசிய அமுதம்
விரலசைத்து அழைக்கப்
பொறியின் இரை தேடி
இரையாகிற எலி.
மரண பயமற்றுச்
சிறை பயமுற்று
விடமுண்டு மரிக்கும்.
பொறியில் சிக்கியே
சடுதியில் மரணிக்கும்.

முலாம் பூசிய
முகவரி தேடி
முகவரி தொலைத்து
வழி தவறி
வலி பெருக்கிச்
சுயநலத் தேடலில்
சுயம் தொலைத்து
பெற்றது இழந்து
இழந்தது பெற்று..




கண்டு கேட்டு
உண்டு ரசித்து
மயங்கி மயக்கி
உருகி உருக்கி
உய்யும் பொருட்டு
உழன்று சுழன்று

உலகப் பொறியில்
உருளும் மனித மனம்
இரை தேடி இரையாகி
மரண பயமுற்றுச்
சிறை பயமற்று
விடமுண்டும் வாழும்.
பொறியில் சிக்கியே
அனுதினம் மனரணம்
மரணிக்கும் வரை
அகமகிழ்ந்து ஏற்கும்.