Thursday, February 26, 2009

உட்கார்ந்து யோசித்த போது

திடீர்ச்செயல் முனைதல்

ஒரு செயலுக்காக திடீரென்று முனைகையில் சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அந்தச் செயல் தொடர்கையில் சரி, இது நிரந்தரமல்லவே கொஞ்ச காலம்தானே என்ற சமாதானம் தானாகத் தேடி வரும். கஷ்டங்களை அனுசரிக்கப் பழகிப் போகும். முக்கியமான செயல் என்பதால் செம்மையாக வேறு செய்ய வேண்டும்.

தொடரும் அசௌகரியங்கள்

இவ்வாறு தொடரும் போது முக்கியமான செயல் தடைபடாமல் நடைபெறுமே ஒழிய, பல அசௌகரியங்கள் ஏற்படத்தான் செய்யும். என்னதான் மெனக்கெட்டுச் சமாளித்தாலும் இதுதொடர்ச்சியான அல்லலாகத் தோன்ற, செயலைக் கைவிட எண்ணம் தோன்றும்.

செயல் கைமாற்றம்

செயலைக் கைவிடச் சரியான சந்தர்ப்பத்தை மனம் எதிர்பார்க்கும். செயலைக் கைவிடவும் முடிவு ஏற்படும். செயலைக் கைமாற்ற சரியான நபரைத் தேடவேண்டியிருக்கும்.மனம் இச்செயல் புரியத் தேவையில்லாத, அது தரக்கூடிய அல்லல்கள் களையும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும்.

ஊக்கம்

செயலைச் செவ்வனே செய்தமைக்காகப் பாராட்டுகள் மற்றும் மேலும் சிறப்பாகச் செயலாற்ற ஊக்கமளிப்பும், கைமாற்ற ஆளில்லாத காரணத்தால் செயலை மீண்டும் தொடரவேண்டிய நிலைமையும் ஏற்படும் சிலநேரம். 'நல்லவரே வல்லவரே' ரீதியிலான பாராட்டுகளுக்கு மனம் சற்றே கிறக்கப்படும். கிடைத்த ஊக்கத்தால் அசௌகரியங்கள் சமாளிக்கும் நிலைமை ஏற்படும் என்ற நம்பிக்கையும் தைரியமும் எங்கிருந்தோ வரும்.

செயல் தொடர்ச்சி

மீண்டும் மனம் மாறிச் செயலுடன் ஒன்றிப் போகும். முன்னிருந்த நிலை மாறி மீண்டும் பல புதுத் தீர்மானங்கள் பிறக்கும். வாழ்க்கை மீண்டும் விட்டு விடவேண்டும் என்று நினைத்த இடத்தில் தொடரும்.

இதனால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் மேற்கூறிய அனைத்தும் மீண்டும்............... Money கணக்கு Vs மணிக்கணக்கு Vs (இப்போது கூடவே) மனக்கணக்கும் சேர்ந்து கொள்ளமீண்டும் அவள் ஒரு தொடர்கதை ஆகிப் போனாள்.

(புரியவில்லையென்றால் படிக்க: Money கணக்கு Vs மணிக்கணக்கு)

Monday, February 23, 2009

விஸிட் விஸா

ஷ்..ஷ்..ஷ்...குக்கர் விசில் அடிக்க, 'ஏய் மாலூ குக்கரை
நிறுத்துடி..'குளியலறையில் துணிகளை இயந்திரத்துக்குள் திணித்துக்
கொண்டிருந்த சாந்தி கத்தினாள்.

அடுத்த இரண்டு நொடியில் மீண்டும் 'ஷ்..ஷ்..'இவ என்னிக்கிதான் சொன்ன பேச்சக்கேட்டிருக்கா' முணுமுணுத்தவாறே அடுக்களைக்கு விரைந்து அணைத்தாள். மீண்டும் குளியலறைக்கு விரைய,இப்போது போன்...
இன்னிக்கு என்ன நிம்மதியா ஒரு வேலையை முடிக்க முடியாது போலருக்கே...

'ஹலோ..'

'ஹலோ..வணக்கம் அண்ணி....நா முரளி பேசறேன்..அண்ணன் இருக்காரா...'

'இல்லியே முரளி. ஆபீசுக்குப் போயிட்டார்...மொபைல்ல பேசேன்..'

'முதல்ல அதுக்குதான் அடிச்சேன்..ஆனா எடுக்கவேல்ல...'

'ஏதும் சொல்லணுமா..'

'ஆமா..அம்மா விசாவுக்காகப் பாக்கச் சொல்லிருந்தாருல்ல...விசா கிடைச்சுருச்சு...கொஞ்சம் சொல்லிருங்க..நானும் அப்புறம் பேசறேன்..'
தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு..அய்யோ..இது வேறயா..'ம்.ம். சரிப்பா..நா சொல்லிர்றேன்..நீ நல்லாருக்கியா..என்னா வீட்டுப் பக்கம் வர்றதே இல்ல..'

'வர்றேன் அண்ணி..நேரம் கிடக்கிறப்ப..அவர்கிட்ட சொல்லிருங்க..வச்சுர்றேன்..'
போனை வைத்தவள் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். என்ன ஒரு தைரியம் இவருக்கு..என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம..

அவர்கள் வசிப்பது ரியாத்தில்.இருவரும் வேலைக்குப் போகிற அவசரம்தான்..இன்று நாலாவது வியாழன் என்பதால் அவளுக்கு விடுமுறை. பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள் சாந்தி. கணவன் மனோகர் ஒரு கணினிப் பொறியாளர். எப்போதும் தலையைப் பிய்க்கிற வேலைதான்..என்ன இருந்தாலும் அவங்கம்மா வருவது சின்ன விஷயமா...இத ஏன் எங்கிட்ட சொல்லாம இருக்கணும்...இங்கே இருக்கிற பரபரப்பில்.. இருக்கிற தலைவலில இது வேறயா..எவ்வளவு செலவாச்சோ...

பிள்ளைகள் படுக்கையறையில் ஒரே சத்தம்...மாலுவுக்கும் பூஜாவுக்கும் சண்டையோ சண்டை...பெரியவள் மாலதி 8வது வகுப்பு..சிறியவள் பூஜா 6ம் வகுப்பு..

ஏ...பரிட்சைக்குப் படிங்களேண்டி...மார்க் குறையட்டும்...கொன்னுர்றேன் ..ஆமா..உங்க முத்துலட்சுமிப் பாட்டி வர்றாங்களாமே..அப்பா ஏதும் சொன்னாரா..'

'ஹை...பாட்டி வர்றாங்களா..ஜாலி..' இருவருக்கும் கொண்டாட்டம்...

'ஆமா..வர்றாங்க...எனக்கு ஒரு வார்த்தை சொன்னாரா உங்கப்பா...'

'மறந்துருப்பார்...இல்லேன்னா சொன்னப்போ நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்கம்மா..'இது மாலு.

'சரி..பாட்டி நம்ம ரூம்ல தங்கட்டும்....' இது பூஜா...

இவளின் அவஸ்தை தெரியாமல் அவர்கள் திட்டமிடத் தொடங்கினார்கள் தங்கள் சண்டையையும் மறந்து...

என்ன இருந்தாலும் ஒரே ரத்தம்..கொண்டாட்டம் வேற இந்தப் பொண்களுக்கு..எனக்குதான் அவஸ்தை..அய்யோ என்றிருந்தது அவளுக்கு...ரியாத் வந்து போன வயதானவர்கள் குறித்த அனுபவங்கள், தோழியரின் கலந்துரையாடல்கள் மனதுக்குள் முண்டியடித்துக் கொண்டு வந்தன..

ஒரு அம்மா சொன்னது...'என்ன ஊருடா இது..அமாவாசைக்குச் சோறு வைக்க ஒரு காக்கா குருவி கண்ல பாக்க முடியுதா...' வெளியே போறதுக்கே பையன் வந்தாதான் முடியும்..இதுல காக்காயாவது குருவியாவது..

இன்னுமொருவர்....என்னமோ போ எப்போ காரை எடுத்தாலும் குறுக்கே ஒரு பூனை போகுது தினம்...'இந்த சாஸ்திரமெல்லாம் இங்கே பாக்க முடியுமா?

அடுத்தவர்...'இங்கே தங்கமெல்லாம்தான் மலிவாச்சே..உன் தங்கைக்கு ஒரு பிஸ்கட் வேணுமாம்..வரும்போது வாங்கிட்டு வரச்
சொன்னா...'என்னமோ பிரிட்டானியா பிஸ்கட்னு நெனப்பு..

இந்தக் கதையெல்லாம் சொன்ன தோழிகள் தங்கள் இடர்களையும் சொல்லத் தவறவில்லை..

'காலேல எந்திரிச்சு எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டு வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது...நம்ம மட்டும்னா அட்ஜஸ்ட் பண்னிக்கலாம்..வேளாவேளைக்குப் புதுசாச்சமைக்கணுமாம்..யாருக்கு அதுக்கு நேரமிருக்கு..'இது ஒருத்தி.

'ஃப்ரிட்ஜைப் பாத்தாலே எங்க மாமியாருக்கு அலர்ஜியாருக்குது..ஊர் மாதிரி இங்கே சிக்கன், மீன் எல்லாம் புதுசாவா கிடைக்கும்..வாங்கி ஃப்ரிட்ஜ்லதான் வச்சாகணும்..எங்கத்தைஎன்னாடி செத்ததைச் சாகடிச்சுச் சாப்பிடுறீங்கன்னு கேக்கிறாங்க...மாசம் பொறந்தா அனுப்புற காசு மட்டும்தான் தெரியுது..இங்கே வந்தாதானே நம்ம அவஸ்தை புரியும்..'இது ஒருத்தி.

'புரிஞ்சுற கிரிஞ்சுறப் போகுது...உனக்கு நெனப்புதான்..இங்கே கூரையப் பிச்சுகிட்டுத் தெய்வம் கொடுக்குது..நம்ம ஜாலியா இருக்கிறோம்னு அவங்க நினப்பு தான் பெரிசு..நம்ம கஷ்டமெல்லாம்அவங்களுக்கு எங்க தெரியுது..' இது மற்றொருத்தி.

இதுல அனைத்தும் கலந்த கலவையாச்சே நம்ம அத்தை...இந்த மனுஷனுக்கு ஆனாலும் ரொம்ப அழுத்தம்..மூச்சு விட்டிருப்பாரா..மாமாவைத் தனியா விட்டுட்டு எப்படி வருவாங்கன்னு ஒரு நிமிஷமாச்சும் யோசனை வந்ததா அம்மாக்கும் புள்ளைக்கும்...இந்த விஷயம் அத்தை மாமாவுக்குத் தெரியுமா..மாமாவை விட்டுட்டுத் தனியா வருவாங்களா என்ன..ஏன் வராம..அதான் அவரைத்தனியா விட்டுட்டுத்தானே ஊர் சுத்துறாங்க..இதுல வெளிநாடுன்னா கேக்கவா வேணும்..

மவளே உன் பாடு திண்டாட்டம்தான்..இப்பவே படாத பாடு..இந்த ஆம்பளைங்களுக்கெல்லாம் நமக்கு இல்லாத பெத்த பாசம் எப்படித்தான் பொத்துகிட்டு வருதோ..நம்மையுந்தான் ஊட்டி வளத்தாங்க..இவங்களுக்குன்னு விசேஷமா என்னத்தைத்தான் ஊட்டி வளத்தாங்களோ..என்னமோ என் போறாத காலம்..

வீட்டு வேலைகளில் நேரம் போக..இடையிடையே மனோகருக்கு போன் செய்யத் தவறவில்லை அவள்..அவன் எடுத்தால்தானே..சரி சரி வரட்டும் இன்னிக்கு..கச்சேரிதான்..

மாலை 7.30 மனியளவில் வந்தான் மனோகர்...

வாண்டுகள் ரெண்டும் வானொலியாகினர்...'அப்பா பாட்டி வர்றாங்களாம்..'

'ஆமாடா..முரளி உனக்கும் போன் பண்ணானாமே சாந்தி...அத்தைக்குப் போன் பண்ணி இங்க வர்றதுக்கு ரெடியாகச் சொல்லு...குட்டிங்களா..சகுந்தலாப் பாட்டி வந்தா உங்களுக்குதான் ரொம்ப ஜாலி..'

'என்னப்பா சகுந்தலாப் பாட்டியா வராங்க..அம்மா முத்துப் பாட்டின்னுல்ல சொன்னாங்க...நீங்க அம்மாகிட்ட சொல்லலியாமே..'

'.....தாத்தா போனதுக்கப்புறம் பாட்டி தனியா இருக்காங்கள்ல...பாவம் உங்கம்மா சாந்தி...3 மாசம் விஸிட் விசா எடுத்தாச்சு..இப்போதான் எனக்கு நிம்மதியாருக்கு. பாரேன்..பிள்ளைங்களுக்கு என்ன குஷி..ஆமா..நா சொல்லலியா உங்கிட்ட..ஸாரி....மறந்துட்டேன்..விசா அனுப்பிச்சாச்சு..ஸ்டேம்ப்பிங் ஆக 10 நாளாகும்...அத்தைக்குப் போன் பண்ணிடு..லக்கேஜ்லாம் அதிகம் வேணாம்..வர்ற 15ந் தேதி ராம் வர்றான்..அவன் கூட வந்துரலாம்..' மனோகர் சொல்லிக் கொண்டே போக, சாந்திக்குதான் சொல்ல வார்த்தைகளின்றிப் போனது.

Tuesday, February 17, 2009

கூடை நிறையக் கனவுகள்


நறுக்...நஞ்சு பிஞ்ச செருப்பு வழியாக் காலைக் குத்திருச்சு நெருஞ்சி முள். 'அம்மா' என்று வலியோட தலைச்சுமைக் கூடையைக் கீழே போட்டுப்புட்டுக் கீழ உக்காந்தா சீனியம்மா.காயத்தப் பாக்குறதுக்கு முன்னால செருப்பின் கதியப் பாத்தா..'ஆத்தாடி. நல்ல வேள. அந்து போகல..'

ஒரு சொட்டு ரத்தம் வந்துருந்துச்சு. எச்சி தொட்டு அதத் துடைச்சிட்டு செருப்பை மாட்டிக்கிட்டு அண்ணாந்து சூரியனப் பாத்தா..இன்னும் பொழுது சாயக் கொள்ள நேரமிருக்கு..அதுக்குள்ள கொஞ்சமாவது செத்தை பொறக்கிக் கொண்டுபோனாத்தான் நாளைக்கு அடுப்புப் பத்த வக்கலாம்...இன்னும் கொஞ்சம் உள்ளாற போனாச் சின்னச் சின்னச் சுள்ளி கெடைக்கும். ஆனா அதுக்குள்ள இருட்டிருச்சுன்னா..

ஆத்தி..குத்தவச்ச பொட்டப்புள்ள பொழுது சாஞ்சா தனியா இல்ல கெடக்கும்... ஆணி, வெளக்கமாறெல்லாம் கூப்பிடு தூரத்துல வச்சுருக்கோ என்னாவோ..அது ஒரு பொச கெட்ட புள்ள..நெதம் ஞாவகப்படுத்தணும்..
வாக்கப்பட்டுப் போற எடத்துல என்னமாக் குப்ப கொட்டப்போதோ..இன்னும் சின்னப் புள்ளயாட்டம் நொண்டியடிச்சு வெளயாண்டுக்கிட்டு..ஆச்சு 14 கழுத வயசாச்சு..இன்னும் பொறுப்பு வரலியே இந்தப் பொட்டப் புள்ளக்கு..
மாமியாக்காரி ஆத்தாக்காரி வளப்பு சரியில்லன்னு குத்தம் சொல்லப் போறா..ஆமா...அது கூறு இல்லாத புள்ள... விடலப் பயலுக ஊர் சுத்தி வார நேரம் வேற..உள்ளாற போகவேணாம்..இங்கேயே சுள்ளி கெடக்காமயா போகும். தேடிப் பாப்போம்.

'மாயன் வீட்டுத் தோட்டத்துப் பக்கம் கொஞ்சம் காஞ்ச புல்லு வெட்டாமக்கெடக்கு' ன்னு பக்கத்து வீட்டு ராமாயி சொன்னது நெனவு வந்துச்சு அவளுக்கு. வெரசா எட்டி நடையப் போட்டா மாயன் தோட்டத்துக்கு.

'காவக்கார அழகன் மாமா இருப்பாரோ..அந்தாளு வேற கொணம் கெட்ட ஆளு..அவ கை தன்னால மாரப்பச் சரிசெஞ்சுச்சு. ஒவ்வொருத்தியும் சொன்ன கத ஓரொரு ரகமா இருந்துச்சுஅந்தாளப்பத்தி. வேற எங்கிட்டாவது போலாமா..சூரியன் மங்கிருச்சே..சரி என்னா செஞ்சுருவாரு..பாப்போம் ஒரு கை..மாயன் தோட்டத்துக்கே போவோம்.

நெறய்ய புல்லு வளந்து கெடக்க, அய்யோ புல்லறுத்தாக் கட்டக் கயிறு எடுத்தாறலியே..

'அதாரது புள்ள அங்க?'

அய்யோ மனுசன் வந்துட்டாரா..

'நாந்தான் சீனி, மாமா..புல்லு வெட்டிட்டுப் போலாம்னு வந்தேன்..கயிறு எடுத்தாரல...வச்சுருக்கீகளா..'

'ஆமாம்டி..ஓரொருத்தரா வருவீக..நாந்தான் முடிஞ்சு வச்சுருக்கேன் கயிறு..'

பரவால்ல..மனுசன் இன்னும் தண்ணி அடிக்கல போலருக்கு..நல்ல வேளை..
'இந்தா..' கயித்தத் தூக்கிப் போட்டார்.. 'எலே..மேக்குப் பக்கம் தண்ணி இன்னும் சரியாப் பாச்சல..அங்கிட்டுத் திருப்பி விடுடா..''வேலையாளுங்க சத்தமும் தோட்டத்துப் பக்கம் கேக்க...அப்பாடி..தோட்டத்துக்குத் தண்ணி பாச்சுறாக..கொள்ளப்பேரு இருக்காக..இனிப் பயமில்ல...

விரசாப் புல்லை அறுக்க ஆரம்பித்தாள்...

இந்த முத்துப்பய பள்ளிக்கூடத்துலருந்து வந்துருப்பானா..பசி வேற தாங்கமாட்டான்..நீச்சத்தண்ணி ஊத்திக் கொடுப்பாளோ..பராக்குப் பாப்பாளோ இந்தச் சிறுக்கி மவ..கடன ஒடன வாங்கியாவது இந்தப் பயல ஒரு படிப்புப் படிக்க வெச்சுப்புடணும்..டீச்சரம்மாவும் சொல்லிருக்காக ...நல்லாப் படிக்கிறானாம்..ஏதோ அந்தக் காடுவெட்டிக் கருப்புதான் கண்ணத்தொறந்து ஒரு நல்ல வழி காமிக்கணும். .

'நா வர்றதுக்குள்ள வந்துரும்மா வீட்டுக்கு..அப்பா வேற... போட்டு அடிக்கிறாரு...' முத்துப்பய சொல்லிருக்கான்..இந்த நெனப்பு வர அருவா வெரசா புல்லுல எறங்குச்சு.

பாவி மனுசன்..ஒரு நாளயப் போலயே நெதம் குடிச்சுப்புட்டு வந்து போட்டு அடிக்க வேண்டியது..சம்பாரிச்ச காசுல ஒரு காசு குடுக்கத் துப்பில்ல..
பாதகத்தி..என் ஆத்தாக்காரி..தம்பி களுத்துல என்னக் கட்டிவச்சுட்டுப் போய்ச் சேந்துட்டா..பொளப்பு..இதெல்லாம் ஒரு பொளப்பு..சமஞ்ச பொட்டப்புள்ளக்கு ஒரு தோடு வாங்கலாம்னு காசை முடிஞ்சு வச்சா...போன வாரம் பாத்துப்புட்டுக் காலி பண்ணிட்டான் பாவி.

புல்லறுத்துக் கட்டிச் சீலையைச் சும்மாடு கணக்காச் சுருட்டித் தலைல வச்சுக் கூடை மேல புல்லுக் கட்டு வச்சு நடைய எட்டிப் போட்டா சீனி. நாளையப் பொளுதுக்கு அடுப்புப் பத்தவக்க இது போதுமான்கிற நெனப்பும் கூடவே போச்சுது.

கூடை நிறையக் கனவுகள்

மகளுக்குத் தோடு
மகனுக்குக் கல்வி
மதுவை மறந்த கணவன்
சுள்ளி சுமக்கும்
கூடை நிறைய
அள்ளியெடுத்த கனவுகள்.
மங்கிய சூரியன் உரைத்த நிஜம்
எடுத்த சுள்ளி
அடுப்புக்குப் போதுமா?

(இணணயத்தில் ஒரு கிராமத்துப் பெண் தலையில் கூடை வைத்திருந்த புகைப்படம் கொடுத்து அதைப்பற்றி கவிதைப்போட்டி அறிவித்திருந்தார்கள்..
மிகவும் குறைந்த வரிகள் இருக்க் வேண்டும் என்ற நிபந்தனையோடு...
அதற்காகக் கடந்த வருடம் எழுதிய கவிதை இது (சின்ன மாற்றங்களுடன்) அப்போது ஒரு நண்பர் சிறுகதைக்கான நல்ல கரு என்று விமர்சிக்க, அப்போது சிறுகதை எழுதாத காலம்...இப்போது அதையும்
முயற்சி செய்ததன் விளைவு..)

Sunday, February 15, 2009

முரண்கள் பலவிதம் (2)

எதிர்காலக் கனவுகளில்
வீணாகின்றன
பல நிகழ்கால நிஜங்கள்.

ஊருக்கு உணவு படைத்து
வீட்டுக்கு வந்த
உணவகச் சமையல்காரன்
வீட்டின் அடுப்பில்
தூங்குகிறது பூனை.

'நொடிகள் சேமிப்பது எப்படி?'
மணிக்கணக்கில் பேசினார்
விழாப் பேச்சாளர்.

'ஆண்டவா!
எல்லோரும் நல்லா இருக்கணும்'
ஆலயத்தில் வேண்டிவிட்டு
வெளியே வந்தவர் வேட்டியில்
சேற்றை வாரிச் சென்ற
வாகன ஓட்டுனரைச் சாடினார்..
'நாசமாப் போறவனே!'

'...கிராமத்தில் பால்ய விவாகம்'
செய்தி கேட்டுப்
பாவப்படுகிறாள் பருவக்குமரி.
பொறாமைப்படுகிறாள் முதிர்கன்னி.

போகியன்று
எஜமானி கழித்த
பழைய ஆடைகள்
பொங்கலன்று
வேலைக்காரி வீட்டில்
புத்தாடைகள்.

Tuesday, February 3, 2009

முரண்கள் பலவிதம் (1)

ஆங்கிலப் பேச்சில்
பிழையென்றால் வெட்கம்.
'டேமில் பேசவே தெரியாது'
சொல்வதற்குப் பெருமிதம்!

கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு.

கல்லூரிப்
பேச்சுப் போட்டியில்
'பெண்ணினத்துக்குத்
தீங்கிழைப்பவரைக்
கொளுத்துவோம்'
என்றவளும்
பின்னாளில் கொளுத்தினாள்..
சித்ரவதை செய்த
கணவனை அல்ல..
தன்னைத் தானே.

'தென்றலின் தொடுதலுக்கே
என் தேவதை நோவாள்
பூவை நுகர்ந்தாலே
பூமகள் துவண்டு போவாள்'
கவிதைக் கோலம்
வரைந்தான் கவிஞன்
கற்பனையின் உதவியோடு.
வீட்டுக்கு வந்ததும்
மனைவியின் உடலில்
இட்டான் கோலம்
சிகரெட்டின் உதவியோடு.

உயிருடன் உடல் எரிந்தால்
உணர்வுகள் மட்டு.
உயிர்த் தலைவியின்
உருவ பொம்மையை எரித்தால்
உடனுக்குடன் வைப்பார் குட்டு.

கையில்லாத ரவிக்கை
அணிந்த அழகுக் காரிகை,
இடித்துக் காட்டிய
அன்னையிடம்
'ஆபாசம் ஆடையில் இல்லை
பார்ப்பவர் மனதில் இருக்கிறது'
என்று சொல்லிவிட்டு
ஊர்வலத்தில் போனாள்
பெண்ணியம் பேசும் கூட்டத்தோடு
முதுகற்ற ரவிக்கையணிந்த
நடிகையின் சுவரொட்டி கிழிப்பதற்கு.

...(தொடர்ந்தாலும் தொடரும்)