Sunday, August 2, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 4)

'முடிவேந்தர் மூவருக்கும்
உம் காப்பியம் உரியதாக!
அடிகளே, இயற்றியருளுக!'
வேண்டினர் சாத்தனார்.

இளங்கோவடிகளும்
தன் நூலின் வகைகள்
விளக்கியே கூறினர்.

கோவலன் கண்ணகி மணவிழாவாம்
மங்கலவாழ்த்துப் பாடல்; 1
அவர்தம் இல்லறப்பாங்கில்
மனையறம் படுத்த காதை; 2

நாட்டிய மாதவியின்
நடன அரங்கேற்று காதை; 3
மாலையழகின் மலைப்பில்
அந்திச் சிறப்பு காதை; 4

புகார் நகர்நிகழ்
இந்திரவிழாக் காதை; 5
மக்களனைவரும்
கடலாடிய காதை; 6

கோவலன் மாதவி
ஊடல் மடலவிழ் கானல்வரி; 7
வேனில் கா(ல)தல் தகிப்பில்
மாதவி தவித்த காதை; 8

கண்ணகி தன் தீய
கனாத்திறனுரைத்த காதை; 9
சோழவளம் கண்டுகளித்த
நாடு காண் காதை; 10
பாண்டிமண்டலம் ஏகிக்
காடு காண் காதை; 11
காட்டு வாழ்க்கை
போற்றி நிற்கும்
வேட்டுவ வரி; 12

இதழ்விரி பூமாலையணிந்த
கண்ணகியவள்
மதுரைப் புறத்தே இருந்த
புறஞ்சேரி இறுத்த காதை; 13
கிறங்கடிக்கும் முரசம்
முழங்கி நிற்கும் மதுரை
ஊர் காண் காதை; 14

சீரிய மாதரியிடம்
அடைக்கலம் கண்ட காதை; 15
கொல்லன் சூழ்ச்சியால்
விளைந்த நிகழ்ச்சிகள்..
கொலைக்களக் காதை; 16

ஆடிப்பாடி மகிழ்ந்த
ஆய்ச்சியர் தம் குரவை; 17
தூயமகள்
தீயசெய்தி கேட்டரற்றிய
துன்ப மாலை; 18
நண்பகல் பொழுதில்
காற்சிலம்பைக் கையிலேந்தி
ஊர் வலம் வந்துக்
காண்போரை நடுங்கவைத்த
ஊர் சூழ் வரி; 19

சீர்மிக்க பாண்டியனிடம்
நீதிகேட்டு வழக்குரைத்த காதை; 20
பாண்டியன் உயிர்துறந்தபின்
அவன் தேவியிடம் வஞ்சினமாலை; 21
மாரில் தீப்பிழம்பூட்டிய
அழல் படு காதை; 22

மதுரை மாதெய்வத்தின்
கட்டுரைக் காதை; 23
கோதையர் ஆடிப்பாடிய
குன்றக் குரவை; 24
தம்பதியர் வானவருடன்
விண்ணுலகெய்திய காட்சி; 25

செங்குட்டுவன்
கண்ணகி கோயிலுக்காய்க்
கல்லெடுத்த கால்கோள்; 26
கல்நீராட்டு நீர்ப்படை; 27
பத்தினிக் கோட்டத்தில்
கண்ணகி நடுகல்; 28
மூவேந்தருக்காய்ப்
பத்தினியவள் அருளிய
வாழ்த்து 29
வரம் தரு காதை; 30

ஐந்தாறு மொத்தம்
காதைகள் முப்பது;
இடையிடை உரைநடையுடன்
தொடர்நிலைச் செய்யுள்.

இவ்வாறாய்
இளங்கோவடிகள் அருளிய
காப்பியப் பகுப்புமுறை
அருகிருந்து கேட்டனர்
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

சிலம்பு வரிகள் இங்கே...பதிகம் வரிகள் 61-90

பதிகம் இங்கே முற்றுப் பெறுகிறது. உரைபெறும் கட்டுரையும், அதையடுத்து , காதைகளும் தொடரும். இந்தியப் பயணம் இரண்டு மாதங்களுக்கு...முடியும்போதெல்லாம் தொடர முயலுகிறேன்...