Thursday, June 24, 2010

நான் அறிந்த சிலம்பு - பகுதி 6

புகார்க்காண்டம் - மங்கலவாழ்த்துப்பாடல்


வாழ்த்து, வணக்கம்


திங்களைப் போற்றுவோம்!
திங்களைப்  போற்றுவோம்!
பூந்துகள் மணங்கமழ்
ஆத்திமாலை அணிந்த சோழனின்
குளிர் வெண்கொற்றக்கொடை போல,
அழகிய இவ்வுலகைக்
காத்து நிற்பதால்
திங்களைப் போற்றுவோம்!

கதிரவனைப் போற்றுவோம்!
கதிரவனைப் போற்றுவோம்!
காவிரி மன்னன்
ஆணைச்சக்கரம் போலப்
பொன்னிறம் கொண்ட
உச்சியை உடைய
மேருமலையை வலம் வருதலால்
கதிரவனைப் போற்றுவோம்!

சிறந்த மழையைப் போற்றுவோம்!
சிறந்த மழையைப் போற்றுவோம்!
அச்சம் தரும்
கடல்சூழ் உலகிற்குச்
சோழன் தன் அருள்கொண்டு
காவல் நிற்பது போல்...
கீழிருந்து விண்ணோக்கி
நகர்ந்து நின்று
அருட்காவல் நிற்பதால்..
சிறந்த மழையைப் போற்றுவோம்!

பூம்புகாரைப் போற்றுவோம்!
பூம்புகாரைப் போற்றுவோம்!
செறிந்த கடல்நீரதனை
வேலியாய்க் கொண்ட
இப்பூவலகில்,
சோழர் குலத்தோடு பிறந்து
காலம் காலமாய்ப்
புகழது பரவி
உயர்ந்து சிறந்து நிற்பதால்
பூம்புகாரைப் போற்றுவோம்!

புகார் நகரின் சிறப்பு

பொதிகை மலை,
இமய மலை,
தன்னைவிட்டுப் பெயராத
பழங்குடியினர் நிறைபுகழ்ப்
புகார் நகரம்....
இம்மூன்று இடங்களிலும்
சிறப்புமிக்க உயர்ந்தோர் வாழ்வதால்
அந்நகரம்
நடுக்கமின்றி நிலைபெற்று
வாழுமே தவிர
அழியக்கூடியதன்று....என்பர்
முதிர்ந்த கேள்விஞானம் பெற்ற
சான்றோர் பெருமக்கள்.

அதனால்,
நாகநீள் எனப்படும்
தேவரின் உலகத்தோடும்
நாகநாடு எனப்படும்
நாகர் உலகத்தோடும்
ஒப்பிடத்தக்க
பெருமையும் செல்வமும்
நீண்ட புகழும்
பொலிந்து நிற்கும்
புகார் நகரம்.

சிலம்பின் வரிகள் (1-22) இங்கே...

குறளின் குரல் - 11

அதிகாரம்: 44. குற்றங்கடிதல்
குறள் எண்: 437

செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்.


செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்

விளக்கம்:

செல்வம் தன்வசம் உள்ள போது அதனை உரிய வழிகளில் தேவைக்காகக் கூடப் பயன்படுத்தாமல் சேமித்து வைப்பான் கருமி.

அவனுடைய செல்வம் நிலையற்ற தன்மை கொண்டு, அவனைக் காக்க வேண்டிய நேரத்தில் காத்து நிற்காமல் வீணாக அழிந்து போகும்.

---------------

அதிகாரம்: 23. ஈகை
குறள் எண்: 221

வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாமங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.


வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து

விளக்கம்:

குறி எதிர்ப்பு - அளவு குறித்துக் கொடுத்துத் திரும்ப வாங்கிக் கொள்வது; இது உலக வழக்கு. இது ஈகையாகாது.

வறியவர்க்கு, அவர்களுக்கு உதவுவதற்காக மட்டும், வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்குவதுதான் ஈகையாகும்.

பலன் எதிர்பார்த்து, அளந்து தாம் கொடுப்பது, மீண்டும் தனக்கு வந்து சேரும் என்றெண்ணி வழங்குவது ஈகையாகாது.

-----------

அதிகாரம்: 62. ஆள்வினையுடைமை
குறள் எண்: 614

தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.


தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடி கை
வாள் ஆண்மை போலக் கெடும்.

விளக்கம்:

படையைக் கண்டு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாள் மூலம் வீரமான ஆண்மைச் செயல் எதுவும் தோன்ற வாய்ப்பில்லை.

அது போல, விடாமுயற்சி இல்லாதவன் பிறருக்கு நல்லது செய்கிறேன், உதவுகிறேன் என்று சொல்லவும் வாய்ப்பில்லை.
-------------------
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 626

அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புத றேற்றா தவர்.


'அற்றேம்' என்று அல்லற்படுபவோ 'பெற்றேம்' என்று
ஓம்புதல் தேற்றாதவர்.

விளக்கம்:

செல்வம் வந்த போது, அதை உரிய முறையில் போற்றிக் காத்து நிற்காதவர்கள், வறுமைக் காலத்தில் 'அய்யோ! செல்வம் இழந்தோம்' என்று துன்பப்படுவது ஏனோ?!

----------------

அதிகாரம்: 37. அவா அறுத்தல்
குறள் எண்: 367

அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.


அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

விளக்கம்:

ஒருவன் ஆசைகளை முற்றும் அறுத்து விட்டால்,
அவன் கெடாமல் நல்வாழ்வு வாழ்வதற்கான நல்வினைகள் எல்லாம்
அவன் விரும்பியபடியே எந்தத் துன்பமும் இன்றி
அவனை வந்து சேரும்.

குறளின் குரல் - 10

அதிகாரம்: 89. உட்பகை குறள் எண்:  881

நிழல்நீரு மின்னாத வின்னா தமர்நீரு
மின்னாவா மின்னா செயின்.


நிழல் நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னா ஆம் இன்னா செயின்.

விளக்கம்:

நிழலிலுள்ள நீர்நிலையின் நீரானது, நுகரும் காலத்தில் இன்பம் தருவதாகத்தான் இருக்கும். ஆனால் பிறிதொரு காலத்தில் அதுவே நோய் விளைவிக்கும் தன்மையுடையதாக மாறும்.

அதுபோலத் தீய இயல்புடையவரின் உட்பகை ஆரம்ப காலத்தில் இன்பம் தருவதாகத் தோன்றினாலும், இறுதியில் துன்பமே விளைவிக்கும்.

--------------------

அதிகாரம்: 8. அன்புடைமை
குறள் எண்: 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.


அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் தளிர்த்தற்று.

விளக்கம்:

வன்மையான மேட்டு / பாலை நிலத்தில் உள்ள மரம் காய்ந்து போய், துளிர்க்கும் வழியில்லாது நிலையற்ற தன்மையுடன் தவித்திருக்கும்.

அது போல், அன்பு என்னும் ஈரம் உள்ளத்தில் இல்லாதவரின் வாழ்க்கையும் உலர்ந்த தன்மையுடன் தளிர்க்க இயலாமல் தவித்திருக்கும்.
--------------------

அதிகாரம்: 12. நடுவு நிலைமை
குறள் எண்: 115.

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.


கேடும் பெருக்கம் இல் அல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.

விளக்கம்:

வாழ்வில் செல்வம் அழிவதும், செல்வம் பெருகுவதும் இல்லாதது அல்ல; அனைவருக்கும் ஏற்படுவதுதான்.

செல்வம் நிலையானது அல்ல. அத்தகைய நிலையற்ற ஒன்றுக்காக மனம் தவறி, நடுவுநிலைமை தவறி நடப்பது அழகல்ல.

நெஞ்சத்தில் நடுவுநிலைமை கொண்டு, இடர் வந்த போதும் அந்நெறியிலிருந்து தவறாமல் வாழ்தலே சான்றோர்க்கு அழகாகும்.
--------------------

அதிகாரம்: 4. அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 37

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.


'அறத்து ஆறு இது' என வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

விளக்கம்:

பல்லக்குத் தூக்குபவன் பாவம் செய்தவன்; பல்லக்கில் அமர்ந்திருப்பவன் புண்ணியம் செய்தவன்..

இதெல்லாம் முன்வினைப்பயன் என்றும்,

முன்வினைப்பயன் படி பலன் நுகர்வதுதான் அறவழி என்றும் உணர்த்த வேண்டாம்.

நாம் எல்லோரும் சமம், எவ்வித வேறுபாடும் நமக்குள் கிடையாது என்றுணர்த்துவதே அறவழியாகும்.
-----------------

அதிகாரம்: 22. ஒப்புரவறிதல்
குறள் எண்: 213

புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
யொப்புரவி னல்ல பிற.


புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல் அரிதே-
ஒப்புரவின் நல்ல பிற.

விளக்கம்:

எல்லோருக்கும் பயன் தரும் பொது நன்மைகளைச் செய்யும் ஒப்புரவு மிகவும் நல்லதொரு செயலாகும்.

அதற்கு ஈடான நன்மை தரும் வேறு ஒன்றை இவ்வுலகிலும் பெற முடியாது; தேவருலகிலும் பெற முடியாது.

Friday, June 18, 2010

ஒற்றைச் சிவப்பு ரோஜா


நந்தவனச் சோலையில்
பதமான சூழலில்
இதமான நறுமணத்துடன்
வானவில் நிறத்துடன்
ஆயிரமாயிரமாய்ப்
பூத்து நிற்கும்
ரோஜாக்கூட்டமாய் உறவுகள்..

பாலைவனச் சோலையில்
பதப்படுத்தப்பட்ட சூழலில்
மிதமான மணத்துடன்
சிவப்பு நிறத்துடன்
தனிமையில்
பூத்துச் சிரிக்கும்
ஒற்றை ரோஜாவாய்க் காதல்...

Thursday, June 10, 2010

கொலையாகும் நம்பிக்கைகள்

பஞ்சுப்பொதிதான்....
என்றாலும்
கடலினுள் அமிழ்கையில்
கனக்கத்தான் செய்கிறது.

நினைவு மேகமூட்டங்கள்
இறுதி யாத்திரை செல்ல...
கனவுப் பூந்தோட்ட மலர்கள்
கல்லறையை அலங்கரிக்க...

உண்மைகள்
உயிரைக் குடிக்கும் போது...
நிதர்சனம்
கழுத்தை நெறிக்கும் போது...
மரணிக்கும்
நம்பிக்கைகளுக்கு
மறுபிறவி ஏது?

குறளின் குரல் - 9

அதிகாரம்: 89. உட்பகை
குறள் எண்: 881

நிழல்நீரு மின்னாத வின்னா தமர்நீரு
மின்னாவா மின்னா செயின்.

நிழல் நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னா ஆம் இன்னா செயின்.


விளக்கம்:

நிழலிலுள்ள நீர்நிலையின் நீரானது, நுகரும் காலத்தில் இன்பம் தருவதாகத்தான் இருக்கும். ஆனால் பிறிதொரு காலத்தில் அதுவே நோய் விளைவிக்கும் தன்மையுடையதாக மாறும்.
அதுபோலத் தீய இயல்புடையவரின் உட்பகை ஆரம்ப காலத்தில் இன்பம் தருவதாகத் தோன்றினாலும், இறுதியில் துன்பமே விளைவிக்கும்.

--------------------

அதிகாரம்: 8. அன்புடைமை
குறள் எண்: 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் தளிர்த்தற்று.

விளக்கம்:

வன்மையான மேட்டு / பாலை நிலத்தில் உள்ள மரம் காய்ந்து போய், துளிர்க்கும் வழியில்லாது நிலையற்ற தன்மையுடன் தவித்திருக்கும்.

அது போல், அன்பு என்னும் ஈரம் உள்ளத்தில் இல்லாதவரின் வாழ்க்கையும் உலர்ந்த தன்மையுடன் தளிர்க்க இயலாமல் தவித்திருக்கும்.

--------------------

அதிகாரம்: 12. நடுவு நிலைமை
குறள் எண்: 115.

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

கேடும் பெருக்கம் இல் அல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.

விளக்கம்:

வாழ்வில் செல்வம் அழிவதும், செல்வம் பெருகுவதும் இல்லாதது அல்ல; அனைவருக்கும் ஏற்படுவதுதான்.

செல்வம் நிலையானது அல்ல. அத்தகைய நிலையற்ற ஒன்றுக்காக மனம் தவறி, நடுவுநிலைமை தவறி நடப்பது அழகல்ல.

நெஞ்சத்தில் நடுவுநிலைமை கொண்டு, இடர் வந்த போதும் அந்நெறியிலிருந்து தவறாமல் வாழ்தலே சான்றோர்க்கு அழகாகும்.

--------------------

அதிகாரம்: 21. தீவினை அச்சம்
குறள் எண்: 205

இலனென்று தீயவை செய்யற்க செய்யி
னிலனாகு மற்றும் பெயர்த்து.

'இலன்' என்று தீயவை செய்யற்க; செய்யின்,
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து.

விளக்கம்:

'பொருள் வளம் இல்லாதவன் ஆகிவிட்டேனே' என்று மனம் வருந்தி, பொருள் ஈட்டுவதற்காகத் தீய செயல்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

அவ்வாறு தீயவை செய்ய முற்பட்டால் அனைத்தும் இழந்து மீண்டும் மீண்டும் வறுமையைச் சந்திக்க நேரிடும்.
---------------

அதிகாரம்: 90. பெரியாரைப் பிழையாமை
குறள் எண்: 891

ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாந் தலை.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை, போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

விளக்கம்:

தாம் எடுத்துக்கொண்ட காரியத்தை முடிக்கவல்லவர்களின் துணையை இகழ்ந்து அலட்சியம் செய்து ஒதுக்குதல் கூடாது.

தமக்குத் தீங்கு வரக்கூடாது என்று தற்காத்துக் கொள்பவர்கள் செய்து கொள்ள வேண்டிய காவல்களுள், இதுவே முதாலான, சிறந்த காவலாகும்

குறளின் குரல் - 8

அதிகாரம்: 73. அவையஞ்சாமை
குறள் எண்: 728

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு
ணன்கு செலச்சொல்லா தார்.

பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
நன்கு செலச் சொல்லாதார்.

விளக்கம்:

ஒருவர் பல நூல்களைக் கற்றவராய் இருக்கலாம். ஆனாலும் நல்லவர்கள் நிறைந்த அவையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்துகளை அவரால் கூற இயலாதென்றால், அவரால் எந்தவொரு பயனும் யார்க்கும் இருக்க வாய்ப்பில்லை.

---------------

அதிகாரம்: 66. வினைத் தூய்மை
குறள் எண்: 655

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

எற்று! என்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்,
மற்று அன்ன செய்யாமை நன்று.

விளக்கம்:

ஒருவர் 'அய்யோ! என்ன தவறு செய்து விட்டோம்' என்று நினைத்து நினைத்து வருத்தப்படக் கூடிய செயலைச் செய்யாதிருக்க வேண்டும்.
அவ்வாறு செய்து விட்டாலும், அதை நினைத்து நினைத்து வருத்தப்படாமல், அத்தகைய செயலை மீண்டும் செய்யாமல் தவிர்ப்பது நன்றாகும்.

-----------------

அதிகாரம்: 79. நட்பு
குறள் எண்: 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

நிறை நீர, நீரவர் கேண்மை, பிறை மதிப்
பின் நீர, பேதியார் நட்பு.

விளக்கம்:

இனிமையான பண்புடையோரின் நட்பானது வளர்பிறை போல் நாளுக்கு நாள் வளர்ந்து நிறைவடையும் முழுமதி போன்றதாகும்.

அறிவிலார், இனிய பண்பிலார் நட்பானது அம்முழுமதி நாளுக்கு நாள், படிப்படியாய்க் குறைவடையும் தேய்பிறை போன்றதாகும்.

---------------

அதிகாரம்: 50. இடனறிதல் (இடம், காலமறிந்து வெற்றிக்காகச் செயலாற்றுதல்)
குறள் எண்: 495

நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி
னீங்கி னதனைப் பிற.

நெடும் புனலுள் வெல்லும் முதலை; அடும், புனலின்
நீங்கின், அதனைப் பிற.

விளக்கம்:

ஆழமான நீரில் வாழும் முதலை பிற உயிரினங்களை வெற்றி கொள்ளும்.
நீரை விட்டு வெளியே வந்தால் பிற உயிரினங்கள் முதலையை வெற்றி கொள்ளும்.

ஒருவர் தனக்குப் பொருத்தமான இடத்தில் இருக்கும் போது பகைவரை வெற்றி கொள்வர். பொருத்தமற்ற இடத்தில் இருக்கும் போது பகைவர் அவரை வெற்றி கொள்வர்.

----------------

அதிகாரம்: 20. பயனில சொல்லாமை
குறள் எண்: 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மை உடையார் சொலின்.

விளக்கம்:

நல்ல பண்புடைய பெரியோர் பயனில்லாதவற்றைப் பேசினால்,
அவர்களுடைய மதிப்பும் பெருமையும் சிறப்பும் அவரை விட்டு நீங்கும்.

குறளின் குரல் - 7

அதிகாரம்:90. பெரியாரைப் பிழையாமை
குறள் எண்: 896

எரியாற் சுடப்பனு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்.

விளக்கம்:

ஒருவன் நெருப்பில் அகப்பட்டுச் சுடப்பட்டாலும் பிழைத்து விட வாய்ப்புண்டு.
ஆனால், வலிமை மிக்க பெரியோருக்கு எதிராய்த் தவறான செயல் புரிபவர்கள் பிழைக்க வழியேயில்லை.
-----------

அதிகாரம்: 101. நன்றியில் செல்வம்
குறள் எண்: 1002

பொருளானா மெல்லாமென் றீயா திவறு
மருளானா மாணாப் பிறப்பு.

பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான், ஆம், மாணாப் பிறப்பு.

விளக்கம்:

பொருளினால் எல்லா நலன்களும் எப்போதும் உண்டாகும் என்றெண்ணி, அதன் மீது மயக்கம் கொண்டு, அதை எவருக்கும் கொடுக்காமல் காத்து வைப்பவனுக்கு, சிறப்பில்லாத இழிபிறப்புதான் தொடர்ந்து உண்டாகும்.
----------------

அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 245

அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி.

அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லன் மா ஞாலம் கரி.

விளக்கம்:

அருள் உடையவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை.
வாரி வழங்கும் காற்றினால் வாழும் உயிர்களே இதற்குச் சான்றாகும்.
(உலகைக் காற்று காப்பது போல், அருளுடையவர்களை அருள் காத்து நிற்கும்.)

--------------------

அதிகாரம்: 47. தெரிந்து செயல்வகை
குறள் எண்: 469

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை.

விளக்கம்:
பிறருக்கு நன்மை செய்வதிலும் தவறு நேரும் வாய்ப்புண்டு. எப்படி? ஒருவருடைய பண்பை, இயல்பை ஆராய்ந்து அறிந்து கொண்ட பின்னே அவர்களுக்கு நன்மை தரக்கூடிய உதவிகள் செய்ய வேண்டும்.

சான்றாக, பொறாமையுணர்வு மற்றும் சுயநலம் கொண்ட ஒருவருக்குச் செய்த உதவியே தவறாகக் கூடிய வாய்ப்புண்டு. பெற்றுக் கொண்ட உதவியால் தாம் முன்னேறிவிட்டு,

ஏதேனும் ஒரு சமயத்தில் தமக்கு உதவி செய்தவருக்கே தீங்கு விளைவிக்க வழி வகுக்கும் அவர் இயல்பு. அவர்கள் இயல்பை ஆராய்ந்து இது போன்ற உதவிகளைத் தவிர்த்து விட வேண்டும்.
----------------------------

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை (தந்நலம் நீத்தார் பெருமை)
குறள் எண்: 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணின் கொண்டற்று.

விளக்கம்:

உலகப்பற்றை விட்டு நீங்கியவரின் பெருமையை அளந்து சொல்வது, பிறந்து இறந்தவர் எண்ணிக்கைக் கணக்கெடுப்பதற்கு ஒப்பாகும்.

பிறந்தார் இறந்தார் கணக்கு எல்லையில்லாது தொடர்ந்து கொண்டேயிருக்கும். அது போலத் துறந்தார் பெருமையும் எல்லையற்றது. அப்பெருமையே சிறந்த பெருமையாகும்.

-------------

Saturday, June 5, 2010

கண்டனம் செய்யப்பட வேண்டிய பதிவுதான்...

என்ன உள்குத்தோ..வெளிக்குத்தோ..புனைவோ..நிஜமோ...நிஜம் சார்ந்த புனைவோ..

இருந்து விட்டுப் போகட்டும்..தம் கருத்தைப் பதிவு செய்வது பதிவர் சுதந்திரம்தான்...ஆனாலும் அதற்கான வார்த்தைப் பிரயோகங்களில் ஒரு வரைமுறை வேண்டும்...

கடந்த சில தினங்களாக என்னவென்றே புரியாத நிலையில் சில பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த வேளையில், சர்ச்சைக்குரிய அந்தப் பதிவை இன்று படிக்க நேர்ந்தது.

இது போன்ற விஷயங்கள்...ஆண், பெண் பதிவர் பாகுபாடின்றி அனவரும் தீவிரமாக எதிர்க்க வேண்டியவை..

வார்த்தைகள் வரம்பு மீறியிருக்கின்றன. என்ன தவறு எங்கே நிகழ்ந்ததோ..புரியவில்லை...

அனைத்துத் தரப்பிலும் நியாயம் / அநியாயம் இருக்கலாம்...

ஆனாலும்...இது தொடராமல் இருக்க பதிவர்கள் அனைவருமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.