Thursday, June 10, 2010

குறளின் குரல் - 8

அதிகாரம்: 73. அவையஞ்சாமை
குறள் எண்: 728

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு
ணன்கு செலச்சொல்லா தார்.

பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
நன்கு செலச் சொல்லாதார்.

விளக்கம்:

ஒருவர் பல நூல்களைக் கற்றவராய் இருக்கலாம். ஆனாலும் நல்லவர்கள் நிறைந்த அவையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்துகளை அவரால் கூற இயலாதென்றால், அவரால் எந்தவொரு பயனும் யார்க்கும் இருக்க வாய்ப்பில்லை.

---------------

அதிகாரம்: 66. வினைத் தூய்மை
குறள் எண்: 655

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

எற்று! என்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்,
மற்று அன்ன செய்யாமை நன்று.

விளக்கம்:

ஒருவர் 'அய்யோ! என்ன தவறு செய்து விட்டோம்' என்று நினைத்து நினைத்து வருத்தப்படக் கூடிய செயலைச் செய்யாதிருக்க வேண்டும்.
அவ்வாறு செய்து விட்டாலும், அதை நினைத்து நினைத்து வருத்தப்படாமல், அத்தகைய செயலை மீண்டும் செய்யாமல் தவிர்ப்பது நன்றாகும்.

-----------------

அதிகாரம்: 79. நட்பு
குறள் எண்: 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

நிறை நீர, நீரவர் கேண்மை, பிறை மதிப்
பின் நீர, பேதியார் நட்பு.

விளக்கம்:

இனிமையான பண்புடையோரின் நட்பானது வளர்பிறை போல் நாளுக்கு நாள் வளர்ந்து நிறைவடையும் முழுமதி போன்றதாகும்.

அறிவிலார், இனிய பண்பிலார் நட்பானது அம்முழுமதி நாளுக்கு நாள், படிப்படியாய்க் குறைவடையும் தேய்பிறை போன்றதாகும்.

---------------

அதிகாரம்: 50. இடனறிதல் (இடம், காலமறிந்து வெற்றிக்காகச் செயலாற்றுதல்)
குறள் எண்: 495

நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி
னீங்கி னதனைப் பிற.

நெடும் புனலுள் வெல்லும் முதலை; அடும், புனலின்
நீங்கின், அதனைப் பிற.

விளக்கம்:

ஆழமான நீரில் வாழும் முதலை பிற உயிரினங்களை வெற்றி கொள்ளும்.
நீரை விட்டு வெளியே வந்தால் பிற உயிரினங்கள் முதலையை வெற்றி கொள்ளும்.

ஒருவர் தனக்குப் பொருத்தமான இடத்தில் இருக்கும் போது பகைவரை வெற்றி கொள்வர். பொருத்தமற்ற இடத்தில் இருக்கும் போது பகைவர் அவரை வெற்றி கொள்வர்.

----------------

அதிகாரம்: 20. பயனில சொல்லாமை
குறள் எண்: 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மை உடையார் சொலின்.

விளக்கம்:

நல்ல பண்புடைய பெரியோர் பயனில்லாதவற்றைப் பேசினால்,
அவர்களுடைய மதிப்பும் பெருமையும் சிறப்பும் அவரை விட்டு நீங்கும்.

1 comment:

ராமலக்ஷ்மி said...

நடைமுறை வாழ்க்கைக்கு என்றைக்கும் தேவையானவை குறள்கள் என்பதை உணர்த்துகிறது பதிவு. நன்றி பாசமலர்.