Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Wednesday, February 20, 2008

நிறம் மாறும் விதிகள்

ரம்யாவின் தாயார் ரம்யாவிடம்:

சரி. போற இடத்துல புருஷனுக்கு அனுசரிச்சு நடக்கிறவதான் பொம்பள. புது இடம். கொஞ்சம் அப்டி இப்டித்தான் இருக்கும்.நீதான் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போணும். ஆம்பளைங்க வெளில சுத்திட்டு வருவாங்க..ஆயிரம் டென்ஷன் இருக்கும். பாத்துப்பதமா நடந்துக்கோ..மாமியார், மாமனார்கிட்டயும் அப்படித்தான்..ஏடாகூடமா ஏதாவது பண்ணாத..முக்கியமா அவங்க அப்பா,அம்மா பத்தி உன் புருஷன்கிட்ட குறை சொல்லிட்டே இருக்காத..

ரம்யாவின் தாயார் தன் கணவனிடம்:

என்ன அப்டி முழிக்கிறீங்க? ஆபீஸாம்...டென்ஷனாம்..கத்தரிக்கா..வீட்ல இருந்தா எங்களுக்கு மட்டும் டென்ஷன் இல்லையா..நல்லா வளத்து வெச்சிருக்காங்க புள்ளய உங்க அப்பா, அம்மா எதுக்குமே லாயக்கில்லாம.. அவுங்களத்தான் சொல்லணும்..

** ** ** ** * * ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **

ரம்யாவின் மாமியார் தன் மகள் உமாவிடம்:

ஏண்டி..வரும்போது பீரோவெல்லாம் பூட்டிட்டுத்தான வந்த? குடும்பத்துல அத்தனை பேர் நடமாடுற இடம்..ஏதாவது காணோம்னா யாரைச் சொல்ல முடியும்..பாத்துப் பாத்து வாங்கிக் கொடுத்தது..பத்திரமா வச்சுக்கோடி..


உன் மாமியாருக்கென்ன..கையும் காலும் நல்லாத்தான் இருக்கு..அவ புடவைய நீதான் மடிக்கணுமா..நீ என்ன அவ வீட்டு வேலக்காரியாடி?சும்மா உன்னயவே வேல வாங்கிக்கிட்டு..ஆனாலும் ஒனக்குச் சாமர்த்தியம் பத்தாதுடி..

ஆமா..உன் நாத்தனார்க்காரி இன்னும் அடிக்கடி வந்து டேரா போடுறாளா..போன தரம் உங்க வீட்டுக்கு வந்தப்பவே எனக்குப்பத்திக்கிட்டு வந்துச்சு..உன் மாமியார் வேற மீனை வறு, கறிக்குழம்பு வையி அவளுக்குப் புடிக்கும்னு..நீ ஒருத்தியே எவ்வளவு வேலசெய்ய முடியும்..என்னமோ அவ வீட்ல சமைக்கவே சமைக்காதது மாதிரி..உங்க வீட்டுக்கு வந்தாத்தான் சோத்தையே பாப்பாளோ..

ரம்யாவின் மாமியார் ரம்யாவிடம்:

ஏம்மா ரம்யா..என் நீலக் கலர் புடவையக் காணோம்..துவைச்ச துணியெல்லாம் மடிச்சு ஒழுங்கா வக்கிறதில்லயா..இல்ல ஒரு வேள நாந்தான் மறந்தாப்புல உன் பீரோல வச்சுட்டேனா பாரு..

அப்டியே சிக்கன் 65, முட்டைக் குழம்பு, இறாத் தொக்கு பண்ணிடு..உமாவுக்கு ரொம்பப் புடிக்கும்..கொஞ்சம் தேங்காய்ப்பால்சாதமும் பண்ணிடு..

** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **

ரம்யாவின் கணவன் ரம்யாவிடம்:(கல்யாணமான் புதிதில்)

வயசானவங்க அப்டித்தான் இருப்பாங்க..இன்னும் எத்தன காலம் இருக்கப் போறாங்க..அதுவரைக்கும் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயேன்..படிச்ச பொண்ணுதானே நீ..சும்மா சும்மா ஒப்பாரி வச்சுக்கிட்டு..நல்லா வளத்து வச்சுருக்காங்க..
தொட்டாச்சிணுங்கி..

ரம்யாவின் கணவர் ரம்யாவிடம்:(தன் மகளுக்கு வரன் தேடுகையில்)

மாமியார் மாமனார் இருக்கிற இடமெல்லாம் வேணாம்..கூடவே இருந்து என் பொண்ணு உயிர வாங்கறதுக்கா? வர்றவனும் என் பொண்ண எப்டிப் பாத்துக்குவானோ? இப்பக் காலம் இருக்குற இருப்புல..இவ்ள படிக்க வச்சுப் பாத்துப் பாத்து வளத்து வச்சுருக்கேன்..கண் கலங்காமப் பாத்துக்குவான்னு என்ன நிச்சயம்..நம்ம பார்வையிலேயே இருக்குறதுதான் நல்லது..பேசாம வீட்டோட மாப்பிள்ளையாப் பாத்துற வேண்டியதுதான்..

ரம்யா: ????!!!!