Tuesday, September 25, 2012

நான் அறிந்த சிலம்பு - 28

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
 சிலம்பின் வரிகள் இங்கே: 1 - 20

சூரியன் உதித்தல்

அலைகள் உடைய
கடல்நீரை ஆடையாகக் கொண்ட,
மலைகளை மார்புகளாகவும்
அம்மார்புகள் மீது தவழும்
முத்து வடங்களாக
மலைகளில் பாயும்
ஆறுகளையும் கொண்ட,
மேகம் அதனைக்
கூந்தலாகக் கொண்ட,
அகன்ற அல்குல் போன்ற
நிலமகளின் உடம்பினை
மறைத்து நின்ற
இருளென்னும் போர்வையை
பெரிய உதயகிரி
எனும் மலைமீதினில் உதித்த சூரியன்
விலக்கியே நின்றிட்டான்.
 
 
 
அக்கதிரவனின் விரிகதிர்கள்
புகார் நகரம் முழுதும் படிந்தது;
பொழுதும் புலர்ந்திட்டது.


(புகார்நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இருபிரிவுகளாக இருந்தது; அதற்கு நடுவே நாள் அங்காடி இருந்தது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் காட்சிகள் சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படுகின்றன.)

மருவூர்ப் பாக்கம் - பகுதி 1:

ஓடு இட்டு வேய்ந்திடாத மாடி வீடும்
பண்டக சாலையும்
மான்கண் போன்ற விசாலமான காற்றோட்டமிக்க
சாளரங்களையுடைய மாளிகைகளும் இருந்தன.

மேற்கொண்டு காட்சிகளைக்
காண இயலாதனவாய்க்
கண்டவர் தம் கண்களைத்
தம்பால் தடுத்து நிறுத்தவல்ல,
பயனுள்ள பொருட்கள் நிறைந்த
யவனர் இருப்பிடங்களும்
துறைமுகப் பகுதிகளில் இருந்தன.

பொருள் ஈட்டவென்று
கருங்கடலில் மரக்கலம் செலுத்தி,
தம்நாடு விட்டுப் புலம்பெயர்ந்து வந்த
பிற இடத்து மக்கள் யாவரும்
ஒரே இடத்தில் ஒரே தேசத்தாரைப் போலக்
கூடி வாழும் பகுதிகள் பலவும்
மருவூர்ப்பாக்கக் கடற்கரைப் பகுதிகளில் இருந்தன.

வண்ணக் குழம்பு சுண்ணப் பொடி
குளிர்விக்கும் சாந்துக்கலவைகள்
நறுமண மலர்கள்
அகில் போன்ற புகைத்தலுக்கான பொருட்கள்
சந்தனம் போன்ற வாசனைக்கான பொருட்கள்
இவையனைத்தும் விற்போர்
திரிகின்றனவாய் நகர வீதிகள் இருந்தன.

பட்டுநூல் எலிமயிர் பருத்தி இவற்றினால்
நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த
ஆடைகள் நெய்யும்
சாலியர் இருப்பிடங்களும் இருந்தன.

அளந்து மதிப்பிட இயலாவண்னம்
மாசறு பட்டு அகில் சந்தனம்
பவளம் முத்து நவமணிகள் பொன்
இன்னும் அளவற்ற பலவளங்களும்
அகன்ற வீதிகளில்
குவிந்தேதான் இருந்தன.
 
வல்லமை 09.07.12 இதழில் வெளிவந்தது.

Thursday, September 20, 2012

உன் கண்களால் நீ தேடிடும் வேளையில்..

ஒரு மெக்ஸிகன் கவிதையின் தமிழாக்கம்
 
ஆங்கிலத் தலைப்பு:  When you search with your eyes
 
 
 
 
உன் கண்களால்
நீ தேடிடும் வேளையில்
ஒருபோதும்
என்னை நீ காண மாட்டாய்;
என் இதயத்துள்ளேயும் கூட
யாருமே இருக்க மாட்டார்கள்...
எந்தப்பாதை நான் தேர்ந்தெடுத்தேன்
எந்த இடத்தில் உன்னை மறந்தேன்
என்று சொல்வதற்கு.

உன் கண்களை நீ திறந்திடும்
அந்த நாளில் ஒருபோதும்
நான் இருந்திட மாட்டேன்;
வேறொரு வழித்தடத்தில்
நான் போயிருப்பேன்;
உன்னை மறந்திருப்பேன்.
என்னை நீ தேடும்
அந்த ஒரு நாளில் ஒருபோதும்
என்னை நீ காண மாட்டாய்.

என்னை நீ தேடுவாய்
வடக்கேயும் தெற்கேயும்;
சூரியன் பிறந்த இடத்தேயும்
சூரியன் மறைந்திடும் இடத்தேயும்.

பாதைகளின் கரங்கள்
குறுக்கும் நெடுக்குமாகப்
போகும் இடங்களில் எல்லாம்
என் பாதச்சுவடுகளைத்
தேடிப் பைத்தியமாய்
நீ அலைந்திடுவாய்.

யாருக்குத் தெரியும்?
எந்தக் காற்று கலைத்தது
எந்த மழை அழித்தது
அச்சுவடுகளை என்று....
 

மூலக்கவிதை: When you search with your eyes
எழுதியவர்: Victor de la Cruz
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: David Shook
 
அதீதம் இதழில் 28.07.12 அன்று வெளிவந்தது.

குறளின் குரல் - 57

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 44. குற்றங்கடிதல்
குறள் எண்: 431


செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.


செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமிதம் நீர்த்து.


விளக்கம்:

செல்வம், பதவி, புகழ் முதலியவற்றால் வரும் செருக்கு,
கடுமையான கோபம்,
பிறர் போற்றாத சிறுமைப்பண்புகள் - இவை இல்லாதவரின் வளர்ச்சி என்பது தடையின்றிப் பெருகிச் செழிக்க வல்ல மேம்பாடு உடையதாகும்.
 
---------------
 

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 98. பெருமை
குறள் எண்: 971
ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்
கஃதிறந்து வாழ்து மெனில்.
 
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
'அஃது இறந்து வாழ்தும்' எனில்.

 
விளக்கம்:
 


செயற்கரிய செயல்கள எல்லாம் தம்மால் செய்ய முடியும் என்று ஊக்கத்துடன் வாழ்வதே ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளி தருவதாகும். அத்தகைய ஊக்கம் இல்லாமல், செயல்களைச் செய்வது தம்மால் இயலாது; ஊக்கம் இன்றியே வாழ்தல் கூடும் என்று கருதுவோரின் வாழ்க்கை இழிவையே காணும்.

------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 67. வினைத் திட்பம்
குறள் எண்: 663


கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி
னெற்றா விழுமந் தரும்.


கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக் கொட்கின்
எற்றா விழுமம் தரும்.


விளக்கம்:

மேற்கொண்ட ஒரு செயல் முடியும் வரை அதை வெளிபடுத்தாமல் தன்னடக்கமாக இருந்து, அச்செயலைத் திறம்படச் செய்து முடித்து, இறுதியில் அனைவருக்கும் வெளிப்படுத்துவதே ஆளும் திறமையாகும்.
இப்படி இல்லாமல், இடையிலேயே பலரும் அறிய வெளிப்படுமாயின், அது அச்செயல் புரிந்தவர்க்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

கொட்க - வெளிப்படுத்த, சுழல, சூழ வர, திரிய
ஆண்மை - ஆளும் தன்மை, ஆண் தன்மை, வெற்றி, வலிமை, அகங்காரம்
விழுமம் - துன்பம், சிறப்பு, தூய்மை


-------------------


பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 80. நட்பாராய்தல்
குறள் எண்: 792


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும்.


ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
.


விளக்கம்:

ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் திரும்பத் திரும்ப ஆராய்ந்து அறிந்து அதன் பின் ஆழ்ந்த நட்புக் கொள்ளாதவருக்கு, தான் சாவதற்குக் காரணமான துன்பம் கூட அந்நட்பின் பொருட்டு விளையக் கூடும். எனவே, ஆராய்ந்து, அறிந்து நட்புக் கொள்வதே உகந்தது.

-------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் எண்: 695


எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை.

எப்பொருளும் ஓரார், தொடரார், மற்று அப் பொருளை
விட்டக்கால் கேட்க, மறை.


விளக்கம்:

அரசர் / ஆளும் பதவியில் இருப்போர், அனைவரின் முன் வெளிப்படையாகப் பேசமுடியாமல் மறைபொருளாகப் பேசும் தருணங்களில், அவற்றை உற்றுக் கவனிக்காமல், ஒட்டுக் கேட்காமல், அது என்ன என்றும் கேள்விகள் கேட்காமல் இருக்க வேண்டும். அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

 



Sunday, September 16, 2012

நான் அறிந்த சிலம்பு - 27

புகார்க்காண்டம் - 04. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 72 -84

வைகறை வரையில் காமன் திரிதல்

அன்னம் போன்ற
மென்னடை;
ஆம்பல் மலர் போன்ற
நறுமணம்;
தேன்நிறைந்த நல்வாசனையுடைய
தாமரை மலர் போன்ற
சிவந்த வாய்;
குளிர்ச்சி பொருந்திய
கருமையான மண்ல் போன்ற
கூந்தல்;

இவை அனைத்தும்
தன்னகத்தே பெற்றவள்
நன்னீர்ப் பொய்கை மகள்.
அவள் விழிப்பதற்கெனப்
பள்ளியெழுச்சி பாடிநின்றன
வண்டுகள்.
பள்ளியெழுச்சி கேட்ட
அவள்தம் குவளை மலர்க்கண்கள்
விழிதெழுந்தன.

பறவைகளின் ஆரவாரச் சத்தம்
முரசொலி போல முழங்கிட,
புள்ளிகள் செறிந்த
சிறகுகள் உடைய
அழகிய சேவல் கூவிட,
முள் போன்ற
கூர்மையான வாயுடைய
சங்கும் ஒலித்து நின்றது.

இங்ஙனம்
தத்தம் முறைமைக்கேற்ப
எழுந்த அதிகாலைக்குரிய
சிறப்பொலிகள்,
துயிலாழ்ந்திருந்த
கடல்போல் பரந்து நின்ற
 புகார் நகரின் மக்களை
எழச் செய்தன.

இருள்மிக்க
இரவுப்பொழுது தொடங்கிப்
புலர்ந்து நின்ற வைகறைப்
பொழுது வரையில்
நொடி ஒன்றும் உறங்காதவனாகத்
தொடர்காவல் நின்றனன்
சற்றும் சோராத மன்மதன்.

மணத்தில் சிறந்த
ஐவகை மலர்களால்
செய்த அம்பினையும்
கரும்பு வில்லையும்
கையில் ஏந்தி
மீன் பொறித்த
வெற்றிக் கொடியுடன்
உலாவிக் கொண்டிருந்தனன்
காவல் காதல் மன்மதன்.

அவன் தம் ஆட்சியில்
காவல் மிக்குச்
சிறந்திருந்தது
பூகார் நகரம்.


வெண்பா

தன்னிடம் உறவு கொண்டார்க்கெல்லாம்
குளிர்ச்சி தந்தருளுமாம்;
பகை கொன்டார்க்கெல்லாம்
வெப்பம் கொண்டு தருமாம்
சிறப்புப் பெற்ற சோழ மன்னனவன்
வெண்கொற்றக் குடையது.
அதனை ஒத்த தன்மைத்து
அந்த நிலவு.

அந்நிலவுதானும்
மலர்கள் இதழ் அவிழ்க்கும்
இரவுப்பொழுதினில்
வானமதில் தவழ்ந்து சென்று....

தலைவனைக் கூடியிருந்த
மாதவிக்கு இன்பத்தையும்
தலைவனைப் பிரிந்துநின்ற
கண்ணகிக்குத் துன்பத்தையும்
தந்து தகித்தது.

(அந்திமாலைச் சிறப்புச்செய் காதை முற்றிற்று. தொடர்வது இந்திரவிழவு ஊர் எடுத்த காதை.)

வல்லமை 25.06.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, September 11, 2012

சில நேரங்களில் சில உணர்வுகள்

மீண்டும் மீண்டும் சிவகாசி விபத்துகள்

ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு குற்ற உணர்வுடன் தான் பட்டாசு ஒலி ஒளி வேடிக்கையை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆபத்தும் விபத்தும் எந்தத் துறையிலும் உண்டுதான் என்றாலும், வருடம் தவறாமல் நிகழும் சிவகாசி விபத்துகள் மனதைப் பிசைகின்றன.

கல்வியைப் பற்றிய புரிந்துணர்வு

நீயா நானா வழங்கி வரும் தரமான விவாதங்களில் கல்வி சம்பந்தப்பட்ட விவாதங்கள் என்றுமே என்னைக் கவர்ந்தவை. சமீபத்திய விவாதம் ஒன்றில் ஒரு மாணவன் கூறியது: எங்களுக்குப் பெற்றோர் சுதந்திரம் கொடுக்கிறார்கள் கல்விப் பிரிவைத் தேர்வு செய்வதில்...ஒன்று இஞ்சினீயருக்குப் படி..அல்லது டாக்டருக்குப் படி..
.
நகைச்சுவை படச் சொன்னாலும் பெரும்பாலான குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆதங்கமும் வெளிப்பட்டது.

நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பதினோராம் வகுப்பில் பொறியியல், மருத்துவம் சார்ந்த பிரிவுகளைத் தேர்ந்தெடுக்காமல், வணிகவியல் அல்லது வேறு துறைகளைத் தேர்ந்தெடுக்கப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. பிள்ளைகளின் விருப்பத்தை அடக்கிவைத்துவிடுகின்றனர். இந்த இரண்டு துறைகளைத் தவிர மற்ற படிப்புகள் எல்லாம் நன்கு மதிப்பெண் வாங்காதவர்களுக்கு என்ற பரவலான எண்ணம் பெற்றோர்க்கு மட்டுமல்லாமல் சமூக எண்ணமாகவே ஆகிவிட்டது.

எந்தப் பிரிவிலும் நன்கு படித்து, அத்துறையில் உச்சத்தை அடைய முடியும் என்பது புரியாமலே போகிறது.

கல்வி பற்றிய புரிந்துணர்வு...விழிப்புணர்வு நாம் காண இன்னும் எவ்வளவு தூரம்தான் செல்ல வேண்டும்?!

சில வாழ்வியல் எதார்த்தங்களுக்காய், உளவியல் எதார்த்தங்களும் உண்மையான ஆசைகளும், இயல்புகளும் பலிகொடுக்கப்படுகின்றன.

ஹவுஸ் ஹஸ்பெண்ட்

இந்தியா வந்திருந்த போது, உறவுக்கார இளைஞனைச் சந்திக்க நேர்ந்தது. பெண் பார்க்கும் படலத்தில் இருக்கிறார்கள் குடும்பத்தினர்.

அவனுடைய எதிர்பார்ப்பு: ஒரு டிகிரி இருந்தால் போதும் - குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிகொடுக்க, படித்த பெண் வேண்டும்தான்...ஓரளவு வெளி உலகம் தெரிந்திருக்கும். வேலை பார்க்கும் பெண் வேண்டாம்..வீட்டைக் கவனிக்க முடியாமல் போகும். என் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போவதால் நானும் தம்பியும் ரொம்பக் கஷடப்பட்டிருக்கிறோம்.

இதையே பெண்ணும் எதிர்பார்த்தால் என்ன செய்வாய்? என்ற கேள்விக்கு அவன் தந்த பதில்: வேலைக்குப் போகாமல் ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்க நான் ரெடி. என்னால் வீட்டைப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் ஹவுஸ் ஹஸ்பெண்டைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யாராவது ரெடியாக இருப்பார்களா?

கேள்வி சரியானதுதான்..பதில் சொல்லத்தான் தெரியவில்லை...

இன்னும் தேடப்படும் நட்புகள்...


முகப்புத்தகத்தின் மூலம் பல முகங்களைத் தேடிப்பிடித்து விடுகின்றோம் என்றாலும், தேடுதலுக்கு அகப்படாத பல நட்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. உலகம் சிறியது என்று சொல்கின்ற போதே இச்சிறிய உலகத்துள் ஒளிந்து கொண்டிருக்கிற சில நட்புகளைத் தேடிப்பிடிக்க முடியாமல் போகின்றதே என்ற ஆதங்கமும் மிகுதியாக இருக்கிறது.

Monday, September 10, 2012

என்னை நான் வெளிப்படுத்துகிறேன்...

ஓர் அரேபியக் கவிதையின் தமிழாக்கம்: ஆங்கிலத் தலைப்பு: I Reveal Myself


நான்...


கடல்வழித் தாக்குதல் நிகழ்த்தும்
மாலுமிகளின் வம்சத்தவள்;
மாவீரன் சாம்சனையே*
வலுவிழக்கச் செய்து வீழ்த்திய
பெண் மகளின் வாரிசு;
அலைகளுக்கும் நினைவுகளுக்கும்
மகளாகி நிற்பவள்;
பழமையின் சேகரிப்பில்
புதியதாக முளைத்திட்டவள்;


நான்...


என் கைகளை  விரிக்கும் தருணத்தில்
இந்தப் பிரபஞ்சம் தொடங்கும்.
சிரிக்கையில் என் கன்னி இதழ்களில்
தேன் ததும்பி நிற்கும்.
எடுத்து வைக்கும் ஓர் அடியில்
இந்தப் புவியே
தன் கட்டுப்பாட்டை இழந்து நிற்கும்.


என் சிரிப்பினில்
பூகம்பம் எதிரொலிக்கும்.
எரிமலைகள் பூமியின் பரப்புகளில்
விசையுடன் பீறிட்டெழும்.


நான்...


அறிவின்மைக்கும் அடக்கத்துக்கும்
மகளாகப் பிறந்தவள்;
துன்மார்க்கத்துக்கும் தூய்மைக்கும்
மகளாகப் பிறந்தவள்;
கறுப்புக்கும் வெள்ளைக்கும்
வாரிசாகி நிற்பவள்;


என் விரல் நுனிகள்
நட்சத்திரங்களைத் தட்டிச் சென்று
அவற்றைத் தடம்புரளச் செய்யும்.

மூடிக் கொண்ட என் கண்களை
நான் திறந்திடும் பொழுது வரை
உலகெங்கும் வியாபித்து நிற்கும்
கிரகண இருட்டு;
என் கண்கள் திறந்திடும் பொழுதினிலோ
உலகையே குளிப்பாட்டி நிற்கும் தங்கத் தகதகப்பு.


என் கூந்தல் கற்றைகளைச் சற்றே சுழற்றி நான்
பின்புறம் தள்ளி விட...
என் பலம் கண்ட இந்தப் பிரபஞ்சம்
அச்சத்தால் நடுநடுங்கி நின்றிடும்.


இன்றையப் பொழுதும் நான் தான்
நாளையப் பொழுதும் நான் தான்
விண்வெளியின் அரியணையில்
முடிசூட்டிக் கொண்ட அரசியும் நான் தான்


ஒரு முறை நான் கண் இமைத்தால் போதும்;
வயல்கள் முழுவதும் பச்சையாய் நுரைத்தெழுந்து
கோதுமைப் பயிர்கள் நிறைத்து நிற்கும்.
கோதுமைப் பயிர்களும் நான் தான்.
பச்சை நிறமும் நான் தான்.
முதல் அறுவடையும் நான் தான்.
இறுதி அறுவடையும் நான் தான்.


குறிப்பு: சாம்சன் பைபிளில் வரும் ஒரு பாத்திரம். அதிக வீரம் கொண்டவனாகக் கடவுளால் படைக்கப்பட்டவன்.
மேலும் செய்திகளுக்கு: http://en.wikipedia.org/wiki/Samson

அரேபிய மொழியில் மூலக்கவிதை:  Fatena Al-Gharra
ஆங்கில மொழிபெயர்ப்பு: Fatena Al-Gharra


அதீதம் இதழில் 22.06.12 அன்று வெளிவந்தது.

Saturday, September 8, 2012

நான் அறிந்த சிலம்பு - 26

புகார்க்காண்டம் - 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 58 - 60
சிலம்பின் வரிகள் இங்கே: 61 - 71

காதலரைப் பிரிந்த மகளிரின் நிலை


தம் காதலரைப் பிரிந்த மகளிர்
காண்பவரெல்லாம் வருந்தும்படி
உலையில் ஊதுகின்ற
துருத்தியதன் மூக்குப் போல்
சூடான தொடர்ந்த பெருமூச்சுடன்
வாடிப் போய்க் கிடந்தனர்.


இளவேனில் பொழுதுக்காகவென அமைந்த
நிலா முற்றத்துக்குச் செல்லாமல்
குளிர்காலத்துக்காகவென அமைக்கப்பட்டிருந்த
மாளிகையின் இடைப்பட்ட பகுதியில்தான் தங்கினர்.


அங்கேயும் கூடத்
தென்றலும் நிலவும் புகுந்து
பிரிவுத் துயர் ஆற்றாது தவிக்கும்
தம்மை மென்மேலும் வாட்டுமோ
என்றஞ்சியே
அவை புகுந்திடாவண்ணம்
சாளரங்களை மூடி வைத்தனர்.


பொதிகைமலையதன் சந்தனமும்
அழகிய முத்தாலான மாலையும்
தம் மார்பில் அணியாது
வருந்தியே இருந்தனர்.


தாழியில் மலர்ந்த குவளைமலர்களும்
செங்கழுநீர் முதலிய குளிர்ந்த மலர்களும்
தூவிவைத்திருந்த படுக்கையது துறந்தனர்.


தன் சேவலொடு கூடி மகிழ்ந்த
அன்னப்பேடையது
கூடலின் மகிழ்வில்தான் உதிர்த்துநின்ற
தூவி கொண்டடைத்த
மென்பஞ்சணை மீதினில் இருந்திடினும்
துயில் கொண்டாரில்லை.


(தூவி - அடிவயிற்று மயிர்)


உற்ற தம் கணவரொடு
முன்பொரு நாள் ஊடிய காலத்தில்
அம்மகளிர் தம் நெடிய கண்கள்
தம்மிடை நின்ற குமிழ்மலர் போன்ற
மூக்கைத் தாக்கியும்
காதிலிருந்த குழைகளை
இப்படியும் அப்படியும் அலைக்கழித்தும்
கணவனின் கலங்கா உள்ளமும் கலங்கும்படி
கடையோரம் சிவந்தும் நின்றன.


ஊடல் இன்பத்தில் துன்பத்தில்
அன்று வருந்தின மகளிர்தம் கண்கள்;
சிவந்தும் இருந்தன.


ஆனால் இன்றோ
தனிமைத் துயரில்
குறுகிப் பிறழ்ந்து
முத்துத் தாரையென
நீர் வார்க்கின்றன.

வல்லமை 18.06.12 இதழில் வெளிவந்தது.