Thursday, September 20, 2012

உன் கண்களால் நீ தேடிடும் வேளையில்..

ஒரு மெக்ஸிகன் கவிதையின் தமிழாக்கம்
 
ஆங்கிலத் தலைப்பு:  When you search with your eyes
 
 
 
 
உன் கண்களால்
நீ தேடிடும் வேளையில்
ஒருபோதும்
என்னை நீ காண மாட்டாய்;
என் இதயத்துள்ளேயும் கூட
யாருமே இருக்க மாட்டார்கள்...
எந்தப்பாதை நான் தேர்ந்தெடுத்தேன்
எந்த இடத்தில் உன்னை மறந்தேன்
என்று சொல்வதற்கு.

உன் கண்களை நீ திறந்திடும்
அந்த நாளில் ஒருபோதும்
நான் இருந்திட மாட்டேன்;
வேறொரு வழித்தடத்தில்
நான் போயிருப்பேன்;
உன்னை மறந்திருப்பேன்.
என்னை நீ தேடும்
அந்த ஒரு நாளில் ஒருபோதும்
என்னை நீ காண மாட்டாய்.

என்னை நீ தேடுவாய்
வடக்கேயும் தெற்கேயும்;
சூரியன் பிறந்த இடத்தேயும்
சூரியன் மறைந்திடும் இடத்தேயும்.

பாதைகளின் கரங்கள்
குறுக்கும் நெடுக்குமாகப்
போகும் இடங்களில் எல்லாம்
என் பாதச்சுவடுகளைத்
தேடிப் பைத்தியமாய்
நீ அலைந்திடுவாய்.

யாருக்குத் தெரியும்?
எந்தக் காற்று கலைத்தது
எந்த மழை அழித்தது
அச்சுவடுகளை என்று....
 

மூலக்கவிதை: When you search with your eyes
எழுதியவர்: Victor de la Cruz
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: David Shook
 
அதீதம் இதழில் 28.07.12 அன்று வெளிவந்தது.

6 comments:

ஜீவி said...

//வேறொரு வழித்தடத்தில்
நான் போயிருப்பேன்;
உன்னை மறந்திருப்பேன்.
என்னை நீ தேடும்
அந்த ஒரு நாளில் ஒருபோதும்
என்னை நீ காண மாட்டாய்.//

தொலைந்து போவதில் தான் எவ்வளவு தீவிரம்?.. 'காண மாட்டாய்' என்பதில் தான் எவ்வளவு உறுதி?..

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிந்தனை வரிகளை ரசித்தேன்...

ராமலக்ஷ்மி said...

நல்லதொரு கவிதையை தெரிவு செய்து திறம்பட மொழியாக்கம் செய்துள்ளீர்கள்.

//யாருக்குத் தெரியும்?
எந்தக் காற்று கலைத்தது
எந்த மழை அழித்தது
அச்சுவடுகளை என்று....//

தீர்க்கமான சிந்தனையை வெளிப்படுத்து அழுத்தமான வரிகள்.

பாராட்டுகள் மலர்!

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஜீவி...ஆம்..இந்தத் தீவிரமும் உறுதியும்தான் சில நேரங்களில் விரக்தியின் முடிவாக இருக்கக் கூடும்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி தனபாலன்...வேதனைகள் கவிஞரை வித்தியாசமாகச் சிந்திக்க வைத்திருக்கிறது..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி..இவை எனக்கும் மிகவும் பிடித்த வரிகள்...