Thursday, November 11, 2010

குறளின் குரல் - 15

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 242

நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை.


நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க! பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை.

விளக்கம்:

நல்ல வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து, அருளைக் கைகொள்ள வேன்டும். பல வகையாக ஆராய்ந்து தெளிந்து தேடினாலும் அருள் என்னும் அறமே எப்போது துணை நிற்கும்.
----------------
 
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 95. மருந்து
குறள் எண்: 945

மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி
னூறுபா டில்லை வுயிர்க்கு.


மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்,
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

விளக்கம்:

தன் உடலின் இயல்பினையறிந்து, அந்த இயல்பு மாறாதவாறு தனக்குப் பொருத்தமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்டால், அவர்தம் உடல் நலம் சிறிதும் குன்றாது, மாறுபாடு இல்லாது, நோயற்று விளங்கும்.
------------------
 
பால்: காமத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 112
குறள் எண்: 1116

மதியு மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்.


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

விளக்கம்:

இவளுடைய முகம் நிலவை ஒத்திருப்பதால், வானிலுள்ள நிலவையும் பூமியில் உள்ள இவளையும் கண்ட விண்மீன்கள் வேறுபாடு அறிந்து கொள்ள முடியாமல் எது நிலவு என்று குழம்பிப்போய் விழிக்கின்றன.
----------------
 
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 23. ஈகை
குறள் எண்: 230

சாதலி னின்னாத தில்லை மினிததூஉ
மீத லியையாக் கடை.


சாதலின் இன்னாதது இல்லை இனிது, அதூஉம்
ஈதல் இயையாக் கடை.

விளக்கம்:

ஒருவருக்கு இறப்பைவிடத் துன்பமான நிலைமை வேறெதுவும் இல்லை. ஒருவருக்கு ஒரு பொருளை ஈய இயலாத நிலையென்பது இறப்பைவிடத் துன்பம் தருவதாகும். ஈதல் இயலாத நிலையை வருகையில் இறத்தல் கூட இனியதாகும்.
-----------------------
 
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 01. கடவுள் வாழ்த்து
குறள் எண்: 10

பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார்.


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.

விளக்கம்:

பிறவியாகிய பெருங்கடலில் நீந்த இறைவனின் திருவடிகளைச் சேர வேண்டும். அங்ஙனம் சேராதார், பிறவிப் பெருங்கடலில் நீந்த முடியாமல் அதனுள் மூழ்கிப் போய்விடுவர்.

1 comment:

ராமலக்ஷ்மி said...

அருமையான விளக்கங்கள். தொடருங்கள்.