Friday, July 12, 2013

நான் அறிந்த சிலம்பு - 44

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 52 - 73

மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
(அடுத்த ஆறு வகைகள்)
 
 
6. குடைக்கூத்து
 
 
சூரனின் படைவீரர்களாகிய அசுரர்
தாம் போர் செய்யவென
எடுத்த படைக்கலங்களைக்
கீழே போட்டுவிட்டுப்
போர் புரிய இயலவில்லையே என
வருத்தமுற்ற தருணத்தில்,
குடையை அவர் முன் சாய்த்து
முருகப்பெருமான் ஆடிய
குடைக்கூத்து இது பாராய்!
 
 
7. குடக் கூத்து
 
 
வாணன் தன் மகள் உழை காரணமாகக்
காமன் மகன் அநிருத்தனைச்
சிறைப் பிடிக்க,
சிறைமீட்டும் பொருட்டு,
வாணாசுரனது 'சோ' எனும்
பெருநகர வீதியில்,
நீள் நிலத்தைத்
தன் பாதங்களில் தாவியளந்த மாயவன்
மண்ணாலும் உலோகங்களாலும் செய்த
குடங்கள் கொண்டு ஆடிய
குடக்கூத்து இது பாராய்!
 
 
8. பேடி ஆடல்
 
 
அநிருத்தனை மீட்கவென
'சோ' நகர வீதிகளில்
தந்தையவன் காமன்
தன் ஆண்தன்மையினின்று மாறுபட்டுப்
பெண்கோலம் புனைந்து ஆடிய
பேடி ஆடல் இது பாராய்!
 
 
 
9. மரக்கால் கூத்து
 
 
 
கொதிக்கின்ற சினம் கொண்ட
அசுரர்கள் தமது வஞ்சத்தால்
பாம்பு தேள் பூரான் உருக்கொண்டு
போரிட்ட தருணமதில்
அவர்தம் கொடுஞ்செயல் பொறுக்காத
மாயவள் துர்க்கை ஆடிய
மரக்கால் கூத்து இது பாராய்!
 
 
10. பாவைக் கூத்து
 
 
சினந்து போர்க்கோலம் பூண்ட அசுரர்கள்
காமத்தின் வயப்பட்டு,
போரினை மறக்கச் செய்ய
செந்நிறத் திருமகள்
கொல்லிப்பாவை வடிவம் கொண்டு ஆடிய
பாவைக் கூத்து இது பாராய்!
 
 
11. கடையம்

 
வாணர் நகராகிய சோ நகரத்தின்
வடக்கு வாயில் கண்ணுள்ள
வயலிடத்தே நின்று
உழத்தியர் வடிவம் கொண்டு
இந்திராணி ஆடிய
கடையக் கூத்து இது பாராய்!
 
 
 
அன்றொரு நாள்
தாது அவிழ்ப் பூம்பொழிலில்
நான் கூறிய உருப்பசி மரபில் வந்த
மாதவி இவள் நடனம் பாராய்!
அனைத்து தெய்வங்கள்
ஆடிய கூத்தையும்
தக்க மரபுகளுடன்
கூத்தநூல் முறைப்படி ஆடிய
அழகு பாராய்!

 
இங்ஙனம்
நிகழ்வுகளைக் காதலிக்கு விவரித்த
விஞ்சையன், அவன் காதலியுடன்
மண்ணுலக மக்கள் அறிந்திராதபடி
விண்ணுலகத் தேவர்களும் வந்திருந்து
இந்திர விழா நிகழ்வுகளைக்
கண்டுதான் களித்திருந்தனர்.
 
வல்லமை 29.10.12 இதழில் வெளிவந்தது.

No comments: