Saturday, May 1, 2010

குறளின் குரல் - 5

அதிகாரம்: 84. பேதைமை
குறள் எண்: 833

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

நாணமை நாடாமை நார்இன்மை யாதுஒன்றும்
பேணாமை பேதை தொழில்.

விளக்கம்:

பழிக்கு வெட்கப்படாதிருத்தல், சிந்தித்துச் செயல்படாதிருத்தல், அன்புடையவர் முகம் சுருங்க அவரன்பு முறியப்பேசுதல்,பேண வேண்டிய பொருளைப்பேணிக் காவாதிருத்தல்...

இவை தவிர்த்த வேறு நற்குணங்கள் அறியார் பேதையர்.ஆதலால் இவை மட்டுமே பேதைகளுக்குரிய தொழிலாகும்.
----------

அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 624

மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.
மடுத்த வாய்எல்லாம் பகடு அன்னான்உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

விளக்கம்:

தடைப்படும் இடங்களில் எல்லாம் தளர்ந்து சோர்ந்து விடாமல் பாரவண்டி இழுத்துச் சென்றிடும் எருது;

அது போலக் காரியமது கைவிடாது தொடர்ந்து இறுதிவரை முயன்று வென்றிடும் ஊக்கமுடையவன் தான் கண்டால் துன்பமே துன்புற்று வருந்த நேரிடும்.
-------------------------

அதிகாரம்: 100. பண்புடைமை
குறள் எண்: 1000

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை பாற்றிரிந் தற்று.

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம் தீமையால் திரிந்தற்று.

விளக்கம்:

நல்ல பசுவின் பாலது அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் குற்றமிருந்தால் திரிந்து போகும். அது போலத்தான் முன்செய்த நல்வினையாலே பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் ஒருவருக்கும் பயன்படாமல் கெட்டுப் போகும்.
----------------

அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 153

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

இன்மையுள் இன்மை விருந்து ஒரால், வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

விளக்கம்:

விருந்தைப் போற்றாது புறக்கணித்தல் வறுமையுள் வறுமையாகும்.
அறிவிலார் செய்யும் சிறுமையைப் பொறுத்துக் கொள்ளுதல் வலிமையுள் வலிமையாகும்.
--------------
அதிகாரம்: 46. சிற்றினஞ் சேராமை
குறள் எண்: 451

சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.


சிற்றினம் அஞ்சும் பெருமை, சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

விளக்கம்:

பெருமைமிக்க பெரியோர் சிறியார் இனத்தோடு நட்புக் கொள்ள அஞ்சி ஒதுங்குவர்.

சிறுமை மிக்க சிறியாரோ சிறியாரைக் கண்டவுடன் அவர்களைத் தம் சுற்றமாய் நினைத்துத் தம்முடன் இணைத்துக் கொள்வர்.

No comments: