Thursday, October 6, 2011

குறளின் குரல் - 32

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 94. சூது
குறள் எண்: 936

அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னு
முகடியான் மூடப்பட் டார்.


அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட் டார்.

விளக்கம்:

சூது என்னும் தீயசக்தியால் ஆட்கொள்ளப்பட்டவர், வயிறு நிறைய உணவு உண்ணும் வாய்ப்பின்றி வறுமைப்பட்டு, எல்லாத் துன்பங்களுக்கும் ஆளாகி
வருந்துவர்.

இக்குறளுக்கு உரை சொல்ல வந்த பலரும் முகடி - மூதேவி என்றே கூறுகின்றனர். வள்ளுவம் இறைவனைப் பற்றிப் பேசுகிறது / பேசுவதில்லை என்ற வாதம் வருகையில் இக்குறளில் வரும் முகடி என்ற வார்த்தையும் சர்ச்சைக்குள்ளாகிறது.

இவ்விளக்கத்தில் முகடி என்னும் பதத்துக்குத் தீயசக்தி என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

அகடு - வயிறு, உள், நடு, மேடு, நடுவு நிலை, பொல்லாங்கு
முகடி- முகட்டுத்தரத்தில் / மேல்கூரையில் உள்ள பேய், மூதேவி
---------
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 71. குறிப்பறிதல்
குறள் எண்: 707

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்
காயினுந் தான்முந் துறும்.


முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும்?

விளக்கம்:

ஒருவர் மனதில் மகிழ்ச்சியுறும்/விருப்புறும் போதும், சினமுறும்/வெறுப்புறும் போதும், அவ்வுணர்ச்சிய அவருடைய முகம் முந்திக் கொண்டு காட்டி விடுகிறது. அப்படி முன்னறிந்து சொல்லவல்ல முகத்தை விடப் பேரறிவும், அனுபவ அறிவும் வாய்ந்தது வேறேதுவும் உண்டோ?

முதுக்குறை - பேரறிவு, அனுபவம் பெறுதல், பூப்படைதல், பேதைமை
----------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 17. அழுக்காறாமை
குறள் எண்: 165


அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.


அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது.

விளக்கம்:

பொறாமை குணம் உடையவர்க்குத் துன்பம் விளைவிக்க அந்தக் குணம் ஒன்றே போதுமானது. அவர்க்குத் துன்பம் தர வேறு பகைவர்கள் யாரும்
தேவையில்லை. பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் கூட, அப்பொறாமை, அதனை உடையவர்களுக்கே முதலில் தீங்கு விளைவிக்கும்.

அழுக்காறு - பொறாமை
சாலும் - போதும்
ஒன்னார் - பகைவர்
வழுக்கு - கேடு, தோல்வி, சறுக்குகை, மறதி, தவறு, வழுவழுப்பானது
---------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 05. இல்வாழ்க்கை
குறள் எண்: 46

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.


அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்து ஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?

விளக்கம்:

ஒருவன் இல்லற வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு முறைப்படி நடத்தி வாழ்ந்து வந்தால், இல்லறத்திற்கு மாறான வேறு வழிகளில் போய்
அடையும் பயன் தான் என்ன? ஒன்றுமில்லை.

அறநெறி கூடிய இல்வாழ்க்கையால் பெறும் பயனை, வேறு எந்த வாழ்க்கை நெறியாலும் அடைந்திட இயலாது.

போஒய் - போய் என்பதன் அளபெடை; ஏளனக் குறிப்பாக வந்துள்ளது.
----------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 133. ஊடல் உவகை
குறள் எண்: 1326

உணலினு முண்ட தறலினிது காமம்
புணர்தலி னூட லினிது.


உணலினும் உண்டது அறல் இனிது; காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

விளக்கம்:

உணவு, மேலும் மேலும் உண்பதை விட, உண்டது செரிப்பது இனியதாகும். அது போல், காமத்தில் கூடியிருப்பதைக் காட்டிலும், இடையிடையே
ஊடலில் பிரிந்து நிற்பது மேலும் மேலும் காதலை வளர்த்து இன்பம் தருவதாகும்.

செரித்தபின் உண்டாகும் பசி, உணவின் இன்சுவை அதிகரிக்கும். ஊடலின்பின் வரும் கூடல் காதலின் சுவை அதிகரிக்கும்.

அறல் - இல்லாமல் போதல், கருமணல், நீர், நெறி, அறுதல், திருமணம், விழா
-----------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 106. இரவு (கேட்டுப்பெறுதல் / பிச்சை)
குறள் எண்: 1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி.


இரப்பான் வெகுளாமை வேண்டும்; நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி.

விளக்கம்:

பொருள் வேண்டிப் பிறரிடம் இரந்து நிற்பவன் பொருள் கிடைக்கவில்லையே என்று கோபப்படுதல் கூடாது. வேண்டிய போதெல்லாம் பொருள் கிடைக்காது; செல்வம் தேவையான சமயத்தில் உதவாது என்பதற்கு அவனது வறுமைத் துன்பம் ஒன்றே போதுமான சான்றாகும்.

கரி - சான்று, சாட்சியம், யானை, நஞ்சு, மிளகு, அடுப்புக்கரி, நிலக்கரி, கரிந்தது, பெண் கழுதை, மரவைரம், விருந்தினன், பயிர் தீய்தல்

1 comment:

ராமலக்ஷ்மி said...

விளக்கங்கள் அருமை மலர்.