Sunday, April 15, 2012

குறளின் குரல் - 56

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 108. கயமை
குறள் எண்: 1080

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.


எற்றிற்கு உரியர் கயவர்? ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து
.

விளக்கம்:

தமக்குத் துன்பம் வந்ததையே காரணமாகக் காட்டி, தம்மை விற்பதற்குக்கூட விரைந்து செல்லும் தன்மையுடையவர் கயவர். இந்த ஒரு செயல் தகுதியைத் தவிர அவர்கள் வேறு எத்தன்மையராயிருப்பதற்கு உரியவர்? பிறரது பொருளையே எதிர்பார்த்து, அவர்களுக்கு அடிமையாக இருப்பார்களே தவிர, முயற்சி செய்யும் தன்மையுடையவர்கள் ஆக மாட்டார்கள்.

-----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 02. வான்சிறப்பு
குறள் எண்: 17


நெடுங்கலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலிதான்ல்கா தாகி விடின்.

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின்.


விளக்கம்:

கடலில் முகந்தெடுத்த நீரை மீண்டும் மழையாகப் பொழிந்து அக்கடலுக்கு உதவுகிறது மேகம். அங்ஙனம் மேகம் உதவாவிடில் கடல் வளம் குறையும். மணி, பவளங்கள் விளையாது போகும். கடல் வாழ் உயிரினங்களும் இல்லாது போகும்.

மனித சமுதாயத்திலிருந்து உயர்ந்து வெற்றியும் புகழும் கண்டவர்கள், மீண்டும் இறங்கி வந்து அச்சமுதாயத்திற்கு உதவினால்தான், சமுதாயமும் சிறக்கும்.
நீர்மை- நீரின் தன்மை, எளிமை, அழகு, ஒளி, நிலைமை, ஒப்புரவு
எழிலி - மேகம்
தடிந்து எழிலி - முகந்த நீரை மீண்டும் பொழியும் மேகம்

--------------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 99. சான்றாண்மை
குறள் எண்: 984


கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்து சால்பு.


கொல்லா நலத்தது, நோன்மை; பிறர்தீமை
சொல்லா நலத்து, சால்பு.


விளக்கம்:

பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பது தவம். பிறரின் குற்றங்குறைகளை, அவர் செய்த பழிச்செயலை வாய்விட்டுச் சொல்லாமல் இருப்பது நற்பண்பு.

நோன்மை - தவம், பொறுமை, வலிமை, பெருந்தன்மை
சால்பு - மேன்மை, நற்குணம், தன்மை, கல்வி

--------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 32. இன்னா செய்யாமை
குறள் எண்: 313


செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்.


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்,
உய்யா விழுமம் தரும்.


விளக்கம்:

நாம் பிறர்க்குத் தீங்கு செய்யாத போதும், அவர் நம்மீது கோபம் கொண்டு நமக்குத் தீங்கு செய்ய முற்படுவர். அவர் அங்ஙனம் முற்படுகையில், பதிலுக்கு நாமும் அவர்க்குத் தீங்கு செய்யும் எண்ணம் கொள்ளக் கூடாது. அத்தகைய பழிவாங்கும் என்ணம் நம் மனதில் தோன்றினால், அதனால் மீண்டும் மீண்டும் நேரக்கூடிய துன்பத்திலிருந்து தப்பிக்கும் வழி நமக்கு இல்லாமல் போகும்.

-------------------

பால்: பொருட்பால்
இயல்: அரணியல்
அதிகாரம்: 75. அரண்
குறள் எண்: 741


ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.


ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; அஞ்சித் தற்போற்றுபவர்க்கும் பொருள்.

விளக்கம்:

பகைவர் மீது போர் தொடுத்துச் செல்பவர்க்கும் அரண் பயன்படும் சிறப்பு வாய்ந்தது.  பகைவர்க்கு அஞ்சித் தம்மைத் தற்காத்துக் கொள்ள நினைப்பவர்க்கும் அது பயன்படும் சிறப்பு வாய்ந்தது.

-------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 120. தனிப்படர் மிகுதி
குறள் எண்: 1193


வீழுநர் வீழப் படுவார்க் கமையுமேவாழுந மென்னுஞ் செருக்கு.

வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே,
'வாழுநம்' என்னும் செருக்கு.


விளக்கம்:

தாம் விரும்பும் காதலரால் தாமும் விரும்பப்படுகிறோம் என்று உணரும் மகளிருக்கே,  இணைந்திருக்காமல் பிரிந்திருந்தால் கூட'தாம் இன்புற்று இனிதாய் வாழ்வோம்' என்ற செருக்கு இயல்பாய் அமைந்திருக்கும்.

தற்காலிகமாய்க் காதலர் பிரிந்திருந்தால் கூட, மீண்டும் சீக்கிரம் அவர் வருவார்;கூடி வாழ்வோம் என்ற உறுதியினால் உண்டாகும் செருக்காகும் அது.
வீழுநர் - ஆசைப்படுபவர், நீங்கிச் செல்பவர், வீழ்பவர்

No comments: