Monday, April 2, 2012

குறளின் குரல் -52

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 102. நாணுடைமை
குறள் எண்: 1012


ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.


ஊண், உடை, எச்சம் எல்லாம் உயிர்க்கு வேறு அல்ல;
நாண் உடைமை மாந்தர் சிறப்பு.


விளக்கம்:

உணவு, உடை, மற்றும் எஞ்சி நிற்கும் இதுபோன்றவை எல்லோர்க்கும் பொதுவான தேவைகளாக, தன்மைகளாக இருக்கின்றன.
உயிருக்கு உயிர் வேறுபடுவதில்லை..

பிறரிடமிருந்து ஒருவரை வேறுபடுத்தி, சிறப்பித்துக் காட்டுவது அவர்தம் நாணுடைமை ஆகும்.

பழி தேடித்தரும் செயல்களைச் செய்ய நாணி, அவற்றைத் தவிர்த்து வாழ்வதே நாணுடமை.

--------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 153


இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.


இன்மையுள் இன்மை விருந்து ஒரால்; வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
.

விளக்கம்:

வறுமையில் கொடிய வறுமை எதுவென்றால், தம்மைத் தேடி வரும் விருந்தினரை வரவேற்று, உபசரிக்க முடியாமல் நீக்கிடும் நிலைமையாகும்.
அது போல, வலிமையில் சிறந்த வலிமை எதுவென்றால், அறிவிலாதாரின் சிறுமைகளைப் பொறுத்துக் கொள்வதாகும்.

இன்மை - இல்லாமை, வறுமை
ஒரால் - நீங்குதல், ஒருவுகை
வன்மை - வலிமை, ஆற்றல், கடினம், வன்சொல், கோபம்
மடவார் - மூடர், பெண்டிர்
பொறை - பொறுமை, வலிமை, கருப்பம், பூமி, பாரம், சுமை, மலை, கல்

--------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 69. தூது 
குறள் எண்: 683


நூலாரு ணூல்வல்ல னாகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.


நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு.


விளக்கம்:

தூதுவனின் பண்பு எப்படி இருக்க வேண்டும்?

ஆட்சிமுறை நூல்களை நன்கு கற்ற அறிஞர்கள் பலருள், அவரைக் காட்டிலும் அந்நூல்களைக் குறித்த அறிவில் மிகச் சிறந்தவராய்த் திகழ வேண்டும்.

அறிவில் சிறந்து விளங்குவதன் மூலம், வேல்தாங்கிய தம் வேந்தனுக்கு வெற்றி தேடித்தரக்கூடிய காரியங்களை எடுத்துரைக்க இயலும்.

வேல்தாங்கிய பகையரசர் அவையில் தன் மன்னனின் வெற்றிச் செய்தியை எடுத்துச் சொல்ல்லும்போது, தன் திறமையால் நயம்படப் பேசித் தன் அரசர்க்குச் சார்பான நிலையை உருவாக்கித் தர முடியும்.

--------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 110. குறிப்பறிதல்
குறள் எண்: 1092


கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது.


கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது.


விளக்கம்:

நான் பார்க்காத நேரங்களில் இவள் என்னைக் கள்ளத்தனமாகப் பார்ப்பது எனக்குப் புரிகின்றது; இந்தக் கள்ளத்தனமான கடைக்கண் பார்வை, காதல் இன்பத்தின் சரி பாதி அன்று; அதற்கும் மேலானதாகும்.

செம்பாகம் - சரிபாதி, இனிமை, நல்ல பக்குவம்

-----------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 54. பொச்சாவாமை
குறள் எண்: 537


அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.


அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியால் போற்றிச் செயின்
.

விளக்கம்:

கடமைகள் மறவாமை / எதையும் மறவாமல் சிந்தித்துச் செயலாற்றும் தன்மை - இந்தக் கருவியை ஏந்தி, அக்கறையுடனும், தப்பாத சிந்தனையுடனும் செயல்பட்டால், செய்வதற்கு அரியவை என்று ஒருவரால் முடியாத செயல்கள் ஏதுமில்லை.
---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 29. கள்ளாமை
குறள் எண்: 281


எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு.

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு.


விளக்கம்:

பிறர் தம்மை இகழாமல் இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள், பிறரின் எந்த ஒரு பொருளையும் அவரை வஞ்சித்துக் களவாட நினைக்காமல் தன் மனதைக் காத்துக் கொள்ள வேண்டும் 

1 comment:

சித்திரவீதிக்காரன் said...

திருக்குறள் குறித்த நல்ல, எளிமையான தொடர் பதிவுகள். பகிர்விற்கு நன்றி.