Sunday, April 8, 2012

குறளின் குரல் - 55

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 67. வினைத்திட்பம்
குறள் எண்: 669


துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை.


துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை.


விளக்கம்:
முடிவில் இன்பம் தரக்கூடிய எந்தவொரு செயலையும் செய்யும்போது, எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் பொருட்படுத்தாது, துணிவுடன் செயல்பட்டுச் செய்துமுடிக்க வேண்டும்.

------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 113. காதற் சிறப்புரைத்தல்
குறள் எண்: 1124


வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத
லதற்கன்ன னீங்கு மிடத்து.


வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து.


விளக்கம்:

ஆராய்ந்து அறிந்து அணிகலன்கள் அணிந்த இவள் என்னுடன் கூடியிருக்கும்போது, உடலுடன் ஒன்றிய உயிர் போல் ஆகிறாள்; அதனால் உயிராகிறாள். என்னைவிட்டு நீங்கும் போது, உடலைப் பிரிந்த உயிர் போலாகிறாள்; என் உயிரைக் கொல்லும் சாவாகிறாள்.

ஆயிழை - தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகலன்கள் அணிந்தவள், பெண், கன்னியாராசி

-----------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 48. வலியறிதல்
குறள் எண்: 476


நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க் கிறுதி யாகி விடும்.


நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும்.


விளக்கம்:

மிகவும் வலுவற்றது ஒரு மரத்தின் நுனிக்கொம்பு. மரம் ஏறுபவர் மேலும் மேலும் நுனிக்கொம்பைப் பிடித்துக்கொண்டே ஏற நினைத்தால், அது ஒடிந்து வீழ்ந்து அவர் உயிருக்கே கூட ஊறு விளைவிக்கக்கூடும்.
அது போலவே, தன் எல்லைகளை, வலிமைதனை உணர்ந்து செயலாற்றாதவருக்கும் ஊறுகள் நேர்ந்திடக் கூடும்.

-----------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 100. பண்புடைமை
குறள் எண்: 1000


பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.


பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்தற்று
.

விளக்கம்:

குறையுள்ள பாத்திரத்தில் ஊற்றிவைக்கப்பட்ட பால், கெட்டுப்போகும். பாலில் குற்றமில்லையென்றாலும், கலத்தின் குற்றத்தால் கெட்டுப்போகும்.
சிறந்த பண்புகள் இல்லாதவர் பெற்ற செல்வமும் அத்தன்மைத்தே. நற்பண்பில்லாதவர் செல்வம் யாருக்கும் பயன்படாமல் அழிந்து போகும். பயன் தரும் செல்வம் என்றாலும், அதை உடையவர் பண்பற்றவர் என்பதால் அச்செல்வத்தால் எந்தவொரு பயனுமில்லை.

----------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 105. நல்குரவு
குற்ள் எண்: 1043


தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக
நல்கு ரவென்னு நசை.


தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.


விளக்கம்:

நல்குரவு என்பது ஒருவனுக்குத் தொன்றுதொட்டு இருந்து வரும் குடிப்பெருமையைக் கெடுக்கும். அவனுடைய புகழையும்கூடக் கெடுத்து நிற்கும். குடிச்சிறப்புக்குப் பொருந்தாத இழிவும், அவச்சொல்லும் உண்டாக்கும்.
ஆசையுள்ள இடத்தே வறுமையும் இருக்கும் என்பது ஒரு வழக்கு. இந்தக்குறளில் நல்குரவு என்பது ஆசையையும் குறிக்கிறது. நசை உள்ள இடத்து வறுமை உள்ளது. எனவே நசை என்பதே நல்குரவு ஆகும்.

நல்குரவு- நுகர்வதற்கு ஏதுமின்றி வருந்தும் வறுமை
தொல்வரவு - தொன்றுதொட்டு வரும் குடிச்சிறப்பு
தோல் - நற்பேறின்மை, புகழ், சருமம், உடம்பின் மேலுள்ள தோல், கேடகம், துருத்தி, அழகு, சொல், யானை உடம்பு, தோல்வி, பக்கரை, மூங்கில்

--------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 114. நாணுத் துறவுரைத்தல்
குறள் எண்: 1131


காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி.


காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம
மடல் அல்லது இல்லை, வலி.


விளக்கம்:

காமத்தால் துன்புற்று, காதலை நிறைவேற்றிக்கொள்ளவும் வழியில்லாமல் காத்திருக்கும் இளைஞருக்கு மடலூர்வதைத் தவிர வலிமையான துணை வேறொன்றும் இல்லை.

மடலேறுதல் அல்லது மடலேற்றம் என்பது காதலில் தோல்வியுற்ற சங்கத் தலைவன் ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்களாய்த் தங்களை எண்ணிப் பாடிய ஆழ்வார்கள் சிலர் பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர்.

ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான். (விக்கிப்பீடியா)

No comments: