Wednesday, June 13, 2012

நான் அறிந்த சிலம்பு - 20

புகார்க்காண்டம் - 3. அரங்கேற்ற காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 129 - 159

மாதவியின் நாட்டியம்

மங்கலப்பாடல்


அரசன் முதலான அனைவரும்
தகுதிக்கேற்ப அமைத்த இருக்கைகளில்
அமர்ந்திருந்தனர்.


இசைக்கருவிகளை இசைப்பவர்தாமும்
அவரவர்க்குரிய இடத்தில்
முறைப்படி நின்றனர்.


நடனமாடும் கணிகையவள்
மாதவி தானும்
தன் வலதுகாலை முன்வைத்து
அரங்கம் அதனில் ஏறியே
பொருமுகத்திரை பொருந்திய
வலப்பக்க்த்தூண் அருகே
மரபதன்படி சென்றே நின்றனள்.


ஆடிய அனுபவ முதிர்ச்சி அதிகமுள்ள
தோரிய நடன மகளிர்தாமும்
ஒருமுகத்திரை பொருந்திய
இடபக்கத்தூண் அருகே
மரபதன்படி சென்றே நின்றனர்.


நன்மைகள் பெருகும்படியும்
தீமைகள் நீங்கும்படியும்
தாள இயல்பு பொலிந்திருந்து
அவதாள இயல்புகள் நீங்கியிருந்து
தெய்வப்பாடல்களாம்
ஓரொற்று வாரப்பாடல்களும்
ஈரொற்று வாரப்பாடல்களும்
முறைமையுடனே இசைத்த்னர்.


வாரப்பாடல்கள் முடிகையில்
இசைக்கும் இசைக்கருவிகள்தாமும்
ஒருங்கே இசைத்தன.


இசைக்கருவிகள் ஒலித்த முறை

குழல் வழியே
அதன் அடியொற்றி
யாழது இசைத்தது.


யாழின் வழியே
சிறப்புடன்
தண்ணுமையது இசைத்தது.


தண்ணுமையின் வழியே
இழைவுடன்
முழவது இசைத்தது.


முழவுடன் கூடிநின்று
இடக்கை வாத்தியமாம்
ஆமந்திரிகை இசைத்தது.


அந்தரக் கொட்டு


ஆமந்திரிகையுடன் கூடி
இசைக்கருவிகள் இடைவெளியின்றியே
ஒன்றியிருந்து ஆர்த்து ஒலித்தன.


ஒரு தாளத்திற்கு
இரு கொட்டுகள் கொண்டு (10 பற்றுகள்)
பஞ்ச தாளப் பிரபந்தம்
கட்டப்பட்டது.
அத்துடன் தீர்வு என்பதுவும் சேர்ந்து (1 பற்று)
பற்று பதினொன்று ஆனது.


இங்ஙனம் பதினொறு பற்றாலே
ஆடி முடிப்பது தேசிக்கூத்து என்பது
நாடக நூல்கள் எழுதிய மரபு.
இம்முறை வழுவாது
அந்தரக்கொட்டு ஆடல் ஆடி முடித்தபின்...


தேசிக் கூத்து


பாலைப்பண் என்னும் மங்கலப்பண்ணை
அளவு குன்றாதபடிஆளத்தி செய்து (ஆளத்தி - ஆலாபனை)
உறுப்புகள் நான்கும் (உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை)
மங்கலச் சொற்கள் உடையதாய்க்
குறைபடாமல் சொற்படுத்தி இசைப்படுத்தி


தேசிக்கூத்தின் முறைமைப்படி
மூன்று ஒத்து உடைய அளவில் ஆரம்பித்து
ஓர் ஒத்து உடைய தாளத்தில் முடித்து
அழகிய மண்டில நிலை கொண்டு
ஒற்றித்து ஒத்தல்
இரட்டித்து ஒத்தல் கடைப்பிடித்து
பாட்டும் கொட்டும் கூத்தும்
மாதவி ஆடிய பின்னே........


மார்க்கக் கூத்து


பஞ்ச பிரபந்தங்களாகக் கட்டப்பட்ட
வடுகில் ஒத்து தேசியில் ஒத்து காட்டி
இரட்டிக்கு இரட்டியாக (இரண்டிரண்டு)
மட்ட தாளம் முதல் நிலையாக
ஏக தாளம் இறுதி நிலையாக
வைசாக நிலை கொண்டு
ஆடியே முடித்தனள்.


பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று
வந்திருந்து நடனமாடியது போலவே
அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து
நாட்டிய நூல்கள் சொல்லிவைத்த
முறையது தவறிடாது
அனைவரும் கண்டு இன்புற்றிட
நாட்டிய அரங்கினில் ஆடினள் மாதவி.

வல்லமை 14.05.12 இதழில் வெளிவந்தது.

6 comments:

பாச மலர் / Paasa Malar said...

ஏதோ கோளாறு காரணமாக சிலப்பதிகார வரிகள் உள்ள Chennai Library பக்கத்தை இணைக்க இயலவில்லை..பின்னர் இணைக்க முயற்சிக்கிறேன்

கோபிநாத் said...

அருமை...!

ராமலக்ஷ்மி said...

நாட்டிய அரங்கேற்றம் மிக அருமை.

ஜீவி said...

ஊருக்குப் போய் வந்தாச்சா?..
யாவரும் நலம் தானே?

//நாட்டிய அரங்கினில் ஆடினள் மாதவி.//

அருமையான பகுதி. தங்கள் கைவண்ணம் புரிதலைக் கூட்டி இன்னும் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

இலக்கண வரம்புகளை மீறிய சுதந்தரம் தான் சுயமாகப் பறப்பதற்கு சுலபமான வழி என்பது இக்காலம்.

இலக்கண வரம்புகளுக்கு உட்படுத்திக் கொண்டு சுயத்தை மிளிரச் செய்ய வேண்டும் என்கிற தாபம் கொண்டது அக்காலம்.

காலத்திற்குக் காலம் எவ்வளவு முரண்பாடு?.. நிதர்சன உண்மையின்
நாட்டியம்!

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி, ராமலக்ஷ்மி

பாச மலர் / Paasa Malar said...

ஊருக்குப் போய் வந்தாச்சு ஜீவி..அனைவரும் நலம்...

இலக்கணங்கள் பொதுவாக இல்லாமல் அவரவர் சூழலுக்கு ஏற்ப மாறிவரும் இலக்கணங்கள்...
இதுதான் இந்தக்காலம்....