Sunday, March 4, 2012

குறளின் குரல் - 46

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 56. கொடுங்கோன்மை
குறள் எண்: 557


துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு.

துளி இன்மை ஞாலத்திற்கு எற்று? அற்றே வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு.


விளக்கம்:

உலகில் மழை இல்லாத போது உலகத்தவர் எவ்வளவு துன்பம் அனுபவிப்பார்களோ, அதைப் போலவே அருளும் கருணையும் இல்லாத அரசின் கீழ் வாழும் குடிமக்களும் அல்லல் படுவர்.

துளி - மழை, சொட்டு, திவலை, சிறிதளவு, நஞ்சு, பெண்மை

அளி - அருள், கருணை, அன்பு, ஆசை, வரவேற்பு, எளிமை, கொடை, வாய், வண்டு, கருந்தேனீ, தேன், மாட்டுக்காடி, கிராதி, மரவுரி மரம், கொடு, காப்பாற்று
---------------------


பால் அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 37. அவாவறுத்தல்
குறள் எண்: 370



ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும்.

ஆரா இயற்கை அவா நீப்பின், அந் நிலையே
பேரா இயற்கை தரும்.



விளக்கம்:

ஆசை என்பது ஒரு போது நிரம்பாத, முடிவு காணாத குணம் உடையது.
அப்படிப்பட்ட இயல்புடைய ஆசையை அகற்றி வாழும் நிலை, எப்பொழுதும் மாறாத இன்பமான வாழ்வைத் தரும்.


ஆரா - ஆராத, நிறைவு பெறாத


இயற்கை - இயல்பான தன்மை, வழக்கம், இலக்கணம், கொள்கை, முறைமை
-------------
பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 36. மெய்யுணர்தல்
குறள் எண்: 353


ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.


விளக்கம்:

மனதில் ஏற்படும் ஐயப்பாடுகளைக் களைய நன்கு ஆராய்ந்து உண்மை நிலையை அறிந்து கொள்பவர்களுக்கு, அவர்கள் வாழ்கின்ற இவ்வுலகத்தை விட வானம் மிகவும் அருகில் இருப்பதாய் நினைக்கின்ற ஊக்கமும் உற்சாகமும் பெருகும்.

நணியது - பக்கத்தில் உள்ளது, அண்மையில் உள்ளது

-------------------
பால்: பொருட்பால்
இயல்: கூழியல்
அதிகாரம்: 76. பொருட்செயல்வகை
குறள் எண்: 753


பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று.


பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.


விளக்கம்:

பொருட்செல்வம் என்பது உண்மையான நிலையான அணையா விளக்காகும். அணையா விளக்கு ஒருவர் கையில் இருந்தால், இருள் நிறைந்த இடங்களுக்குக் கூட இடையூறு இல்லாமல் சென்று வர முடியும். இருளை அழித்து ஒளியைக் கொடுக்கும் அவ்விளக்கு.

அது போலவே, பொருட்செல்வம் என்னும் அணையா விளக்கு ஒருவர் கையில் இருந்து விட்டால், அதை உடையவர்கள் நினைத்த இடத்திற்கு சென்று, வழியில் என்ன துன்பம் நேர்ந்தாலும் அதை அழித்து வெற்றி காண முடியும்.
தேயம் - நாடு, இடம், உடல், பொன், பொருள், களவு,அழகு, புகழ், அறிவு, பெருமை, வீரியம்

-----------------
பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 109. தகையணங்குறுத்தல்
குறள் எண்: 1081


அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு
.

அணங்குகொல்? ஆய் மயில்கொல்லோ! கனங்குழை
மாதர்கொல்! மாலும் என் நெஞ்சு.


விளக்கம்:

இவள் அழகாய் இருப்பதால் தெய்வப்பெண்ணோ? சாயலைப் பார்த்தால், மயிலை ஒத்தவளோ? காதில் கனமான தோடுகள் அணிந்திருப்பதால், ஒருவேளை மானுடப்பெண்தானோ? இவள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றது.

தகை - அழகு
அணங்குறுத்தல் - காதல் துன்பத்தை உண்டாக்குதல்
மாலும் - மயங்கும், மாட்சிமைப்படுத்தும்
------------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 59. ஒற்றாடல்
குறள் எண்: 582


எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில்..






எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.


விளக்கம்:

நண்பர், பகைவர், அயலார், உற்றார் முதலிய எல்லார்க்கும் நிகழ்கின்ற நிகழ்வுகளை எந்தக் காலத்திலும் தொடர்ந்து ஒற்றர்களின் உதவி கொண்டு விரைவாக அறிந்து கொள்ள வேண்டும். இதுவே ஒரு வேந்தனுக்கு இன்றியமையாத தொழில் மற்றும் கடமையாகும்.

No comments: