Wednesday, March 21, 2012

குறளின் குரல் - 51

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 44. குற்றங்கடிதல்
குறள் எண்: 434


குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
யற்றந் தரூஉம் பகை.


குற்றமே காக்க, பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை.


விளக்கம்:

குற்றம் புரிவது என்பது ஒருவருக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய பகையாய் அமையும். எனவே, ஒருவர் தம்மிடம் குற்றம் இல்லாமல் இருப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, குற்றச் செயல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு அழிவு என்பது புறத்திலிருந்து வருவதில்லை; அவர் செய்யும் குற்றங்களாலேயே அழிவு நேர்கிறது. எனவே தமக்குத் தம்மையே பகையாக்கும் குற்றத்தை விலக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டால் அழிவிலிருந்து மீள முடியும்.

அற்றம் - அழிவு, துன்பம், இறுதி, சோர்வு, வறுமை, அவகாசம், அவமானம்,  அறுதி, விலகுகை, சுற்று, நாய், மறைக்கத் தக்கது, பொய், மெலிவு
பொருள் - கொள்கை, செய்தி, சொற்பொருள், செய்கை, அறிவு, தத்துவம், மெய்ம்மை, பொன், தந்திரம், மகன்

-----------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 09. விருந்தோம்பல்
குறள் எண்: 87


இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்.


இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை; விருந்தின்
துணைத் துணை வேள்விப் பயன்
.

விளக்கம்:

விருந்தோம்பலும் வேள்வி / யாகம் கடைப்பிடிப்பதைப் போன்றதாகும். தேவர்களுக்கு விருந்து படைப்பது வேள்வி; உலகினருக்கு விருந்து படைப்பதும் வேள்வி போன்றதேயாகும்.

விருந்தின் பயன் / நன்மை  இவ்வளவுதான் என்று அளவிட முடியாது. வரும் விருந்தினரின் தகுதியின் அளவுதான் அந்த நன்மையின் அளவாகும்.

துணை - இணை, அளவு, ஒப்பு, ஆதரவு, உதவி, உதவுவோன், காப்பு, கூட்டு, இரண்டு, இரட்டை, அன்பு, உடன்பிறப்பு, கணவன், மனைவி, நட்பினன்
----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 04. அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 33


ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.


விளக்கம்:

செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் நல்வினையாகவே இருத்தல் வேண்டும்; செல்கின்ற இடமெல்லாம் அறம் வழுவாத செயல்களை இடைவிடாமல் இயன்ற வரையில் செய்து வாழ வேன்டும்.

அறம் என்பது தருமம் மட்டுமே அல்ல; அது எங்கேயும் எப்போதும் நேர் வழியில் நடந்து நல்வினை புரிவதையும் குறிப்பதாகும்.

ஒல்லும் - இயலும், பொருந்தும்,உடன்படும், தகும், ஆற்றும், ஒலிக்கும், விரையும், கூடும், நிகழும், பொறுக்கும்
ஓவாதே - இடைவிடாதே, நீங்காதே, ஒழியாதே

------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 61. மடியின்மை
குறள் எண்: 610



மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாஅய தெல்லா மொருங்கு.


மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு
.

விளக்கம்:

சோம்பல் இல்லாத அரசன், தன் அடியால் உலகம் அனைத்தையும் அளக்கக் கூடியவனாவான்; அவ்வாறு அளந்து நின்ற அனைத்து உலகப் பரப்பையும், ஒரு சேரத் தனக்குரியதாக அடையும் வாய்ப்பையும் பெறுவான்.
சோம்பல் இன்றி வாழ்ந்தால் உலகையே வெல்லலாம்
---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 33. கொல்லாமை
குறள் எண்: 323


ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.


ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின்சாரப் பொயாமை நன்று
.

விளக்கம்:

ஈடு இணை கூற முடியாத அளவுக்கு மிகவும் உயர்ந்ததும், அறங்களில் எல்லாம் சிறந்த அறமாக முதலிடம் வகிப்பதும் 'கொல்லாமை' ஆகும். அதற்கு அடுத்த நிலையில் 'பொய்யாமை' சிறந்த நல்லறமாக விளங்குகிறது. இவை இரண்டும் தலையாய அறங்கள் என்று போற்றத்தக்க சிறப்பு வாய்ந்தவை.
---------------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 109. த
கையணங்குறுத்தல்
குறள் எண்: 1083


பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு.


பண்டு அறியேன், 'கூற்று' என்பதனை; இனி அறிவேன்
பெண்தகையால் பேர் அமர்க் கட்டு
.

விளக்கம்:

எமன் என்று ஒருவன் இருப்பதாக முன்பிருந்தே நீதி உரைப்பவர் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு; இதுவரை கண்களால் கண்டதில்லை.
இப்போதுதான் அந்த எமன் யார் என்று அறிந்து கொண்டேன். பெரியதாய் உள்ள கண்களால் போர் செய்யும் பெண்வடிவில் உள்ளதுதான் அந்த எமன் என்று இப்போது அறிந்து கொண்டேன்.

பண்டு - முற்காலம், நீதி, பழமை
கூற்று - எமன், காலன், கூற்றுகை, மொழி, கூறத்தக்கது
பேர் -பெருமை வாய்ந்த, பெரிய
அமர் - போர், மூர்க்கம், மாறுபாடு, கொட்டி, விருப்பம், பொருந்து, போராடு
கட்டு - கண் அமைப்பு, உடல் அமைப்பு
---------------

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 03. நீத்தார் பெருமை
குறள் எண்: 21


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிபு.


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிபு.


விளக்கம்:

உலகப்பற்றை எல்லாம் துறந்து வாழ்வது கடினம். ஒழுக்கத்தில் சிறந்தவர்களால் மட்டுமே பற்றை எளிதாகத் துறக்க முடியும். அங்ஙனம் பற்றுகளை நீத்து வாழ்பவரது சிறப்பையும் பெருமையையும் போற்றி உயர்வாகக் கூறுவதே அறநூல்களின் துணிபாகும்.

பனுவல் - நூல், சொல், பாட்டு, கேள்வி, கல்வி, ஆராய்ச்சி
துணிபு - கொள்கை

No comments: