Wednesday, March 7, 2012

குறளின் குரல் - 49


பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 50. இடனறிதல்
குரள் எண்: 491

தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று
மிடங்கண்ட பின்னல் லது.


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடம் கண்டபின் அல்லது.

விளக்கம்:

பகைவரை எதிர்க்கும்போது முழுமையான வெற்றி கிட்டுவதற்கு ஏற்ற இடங்களைக் கண்டு தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்வதற்கு முன்னால், எந்த ஒரு செயலையும் தொடங்காமல் விட வேண்டும். ஏற்ற இடங்கண்டு பின் எதிர்த்தால் வெற்றி கிட்டுவது உறுதி.

பகைவரை அற்பர் என்று இகழவும் கூடாது. சரியான இடத்தைத் தேர்வு செய்யாவிட்டால் என்ன ஆகிவிடும் என்று இகழ்வாக நினைப்பதும் கூடாது. இவை தோல்விக்கு வழிவகுக்கும்.
----------------


பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 11. செய்ந்நன்றியறிதல்
குறள் எண்: 103

பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
னன்மை கடலிற் பெரிது.


பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

விளக்கம்:

உதவி செய்வோர் பலர், தமக்கு அதனால் என்ன பயன் உண்டாகும் என்று கருதியே பிறர்க்கு உதவி செய்வர். இந்த உதவி செய்தால் இந்த பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் அன்பு மட்டுமே கருத்தில் கொண்டு பிறர்க்குச் செய்யும் உதவியின் தன்மையை ஆராய்ந்து பார்த்தால், அத்தகைய உதவி கடலை விடப் பெரிதாகும்.
-----------------


பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 125. நெஞ்சொடுகிளத்தல்
குறள் எண்: 1242

காதல வரில ராகநீ நோவது
பேதைமை வாழியென் னெஞ்சு.


காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி, என் நெஞ்சு!

விளக்கம்:

என் நெஞ்சே! நீ வாழ்க! அவர் நம்மிடத்தில் காதல் இல்லாதவராக இருக்கையில், நாம் அவர் பொருட்டு வருந்துவது,  வரவுக்காக ஏங்குவது  நம்முடைய அறிவின்மையாகும்.
-----------------------


பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 67. வினைத்திட்பம்
குறள் எண்: 662

ஊறொரா லுற்றபி னொல்காலை யிவ்விரண்டி
னாறென்ப ராய்ந்தவர் கோள்.


ஊறு ஒரால் உற்றபின் ஒல்காலை இவ்விரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள்.

விளக்கம்:

ஒரு வினை செய்ய முற்படும்போது ...

(1) அதனால் வரக்கூடிய இடையூறுகளை முன்கூட்டியே கணித்து அவற்றைத் தவிர்ப்பது,

(2) எதிர்பாராதது எதுவும் நேர்ந்து அவ்வினை தடைப்பட்டுப் பழுதுபடுமேயானால், அதைக்கண்டு மனம் தளராது உறுதியோடு நிற்பது

இவ்விரண்டும்  வினையாற்றும் நெறிமுறைகளை நன்கு ஆராய்ந்து தேர்ந்தவர்கள் பின்பற்றும் கோட்பாடுகள் ஆகும்.

ஊறு -  இடையூறு, தொடு உணர்வு, உடம்பு, கொலை, காயம்,வல்லூறு, நாசம்

ஒரால் - நீக்குதல், ஒருவுகை

--------------


பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 65. சொல்வன்மை
குறள் எண்: 645

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ்சொ லின்மை புரிந்து.


சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.

விளக்கம்:

ஒருவர் சொற்களை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும். இந்தச் சொல்லை விடச் சிறந்த சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாமோ என்று பின்னர் எண்ணி வருந்தாதபடி, தாம் பேசிய சொல்லை வெல்லும் சொல் வேறு எதுவும் இல்லை என்றறிந்து சொற்களைப் பயன்படுத்த வேண்டும்

--------------


பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 39. இறைமாட்சி
குறள் எண்: 383

தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்று
நீங்கா நிலனாள் பவர்க்கு.


தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு.

விளக்கம்:

1. செயல்கள் ஆற்றுவதில் சோர்ந்து நில்லாது, காலம் தாழ்த்தாது, விரைந்து முடிக்கும் தன்மை,

2. திறம்பட ஆட்சி செலுத்தும் வகைமுறைகளைக் கற்றுத் தெளிந்த அறிவுடைமை,

3. எதைக் கண்டும் உறுதி குலைந்து விடாமல் துணிவுடன் நன்மை செய்கின்ற தெளிவு

இவை மூன்றும் நிலத்தை ஆள்பவர்களிடம் என்றும் நீங்காது நிலைத்து நிற்கவேண்டிய பண்புகளாகும்.




No comments: