Sunday, March 4, 2012

குறளின் குரல் - 47

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 51. தெரிந்து தெளிதல்
குறள் எண்: 504


குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.


குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்
.

விளக்கம்:

ஒருவரை ஒரு பணிக்கு அமர்த்தும்போது, அவருடைய குணம், குற்றம் இரண்டையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். குணம், குற்றம் இரண்டில் எது அதிகமாக இருக்கிறதோ, அதைக் கருத்தில் கொண்டு, அவரைப் பற்றித் தெளிவான ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதன்பின், அவருக்குத் தகுதியான, பொருத்தமான பணியில் அவரை அமர்த்த வேண்டும்.

------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 07. மக்கட்பேறு
குறள் எண்: 67


தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்.


தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.







விளக்கம்:


தந்தை தன் மகனுக்குச் செய்யக்கூடிய பெரிய உதவி எதுவென்றால், கற்றவர் நிறைந்த அவையில் சிறந்த புகழுடன் விளங்கும்படி தம் மகனுக்குக் கல்வியறிவு வழங்குவதேயாகும்.
-------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 23. ஈகை
குறள் எண்: 221



வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.


வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம்
குறி எதிர்ப்பை நீரது உடைத்து.


விளக்கம்:

பொருட்செல்வம் இல்லாத ஏழைகளுக்குத் தேவையானதைக் கொடுப்பதே ஈகையாகும். வறியவர் அல்லாத பிறர்க்கு உதவுவது என்பது மீண்டும் எதையாவது எதிர்பார்த்துச் செய்யப்படுவதேயாகும்; அல்லது திரும்பப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகும்; அது ஈகையாகாது.

குறி எதிர்ப்பு - அளவு குறித்துக் கொடுத்துத் திரும்ப வாங்கிக்கொள்வது
------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 99. சான்றாண்மை
குறள் எண்: 981




கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.


கடன் என்ப, நல்லவை எல்லாம், கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.


விளக்கம்:
தமக்குரிய கடமைகள் எவை என்றறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு உலகில் உள்ள நல்லவை எல்லாம் இயல்பான கடமைகளாகி விடும்.
கடன் - கடமை, கடப்பாடு, முறைமை, இருணம், இரவற்பொருள், இயல்பு, வைதிகக் கிரியை, விருந்தோம்பல்,மரக்கால், குடியிறை, மானம், இறுதிக்கடன்
-------------------
பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 30. வாய்மை
குறள் எண்: 300
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற.


யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற
.

விளக்கம்:

இவ்வுலகில் மெய்மைப்பொருள் உடையனவாக நான் அறிந்தவற்றுள், 'வாய்மையைவிடச் சிறந்தது' என்று சொல்லத்தக்க தகுதி வாய்ந்தது எதுவும் இல்லை
.--------------------
பால்: பொருட்பால்
இயல்: படையியல்
அதிகாரம்: 77. படைமாட்சி
குறள் எண்: 762

உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது.


உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலை இடத்து
தொல் படைக்கு அல்லால், அரிது
.

விளக்கம்:

போரில் தோல்வியைச் சந்திக்க நேரிடும் தருணம் வந்த போதும், ஊக்கம் சற்றும் குறையாமல், காயங்களுக்கு அஞ்சாமல், எதிர்த்து நிற்கும் மனவுறுதி, வழி வழியாகப் பெருமையுடன் விளங்கிவரும் படைக்கன்றி வேறு எந்தப் படைக்கும் முடியாது.

உலைவு - ஊக்கக் குறைவு, தோல்வி, நடுக்கம், கலக்கம், அழிவு, அலைவு, வறுமை
தொலை - அழிவு, ஒப்பு, தூரம், அக்கரைச் சீமை
தொல் படை - பாட்டன், தந்தை, மகன் என அரச குடும்பத்தோடு பரம்பரை பரம்பரையாக வரும் படை

No comments: