Monday, April 23, 2012

நான் அறிந்த சிலம்பு - 16

புகார்க்காண்டம் - 03. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே..70-81


யாழ்ப் புலவன்


ஏழிசைதனை
இருவரிசைகளாக்கிச் செய்யப்பட்ட
'செம்முறைக் கேள்வி' என்னும்
சிறப்புப் பெயர் பெற்றது யாழ்.

செம்பாலை முதலிய
எழுபாலைப் பண்களையும்
அவற்றுக்கிடையே தோன்றும்
ஐந்து அந்தரப்பாலைப் பண்களையும்
அவற்றின் இணை நரம்புகளையும்
அணைத்து இசைத்துச் சென்றிடும் யாழ்.

இசைத்தமிழின் இலக்கணங்கள்
இம்மியளவும் குறைந்திடாது
வட்டப்பாலையென இசைத்து
அளவைகளின் அழகோடு
அரங்கேற்றுவது யாழ்.

வட்டப்பாலை முடியும் இடத்து
வன்மையாய் நிற்பது 'தாரம்'.
வட்டப்பாலை தொடங்கும் இடத்து
மென்மையாய் நிற்பது 'குரல்'.

'தாரம்' எனும் இசை அணங்குக்குரியவை
அலகுகள் இரண்டு.
'குரல்' எனும் இசை மகளுக்குரியவை
அலகுகள் நான்கு.
 
தாரம் அதன் அலகுகள்
இரண்டில் ஒன்றையும் (1)
குரல் அதன் அலகுகள்
நான்கில் இரண்டையும் (2)
கூட்டியே (1+2 = 3)
தார நரம்பில்
மூன்று (3) அலகுடைய
இனிய இசையை
உண்டாக்கியவிடத்துத்
தோன்றினள் 'கைக்கிளை ' எனும்
 இசை அணங்கு.

தாரம் எனும்
மெய்க்கிளை நரம்பு
கைக்கிளையாகி நின்றது இங்ஙனம்.

(தாரம் 1 அலகு + குரல் 2 அலகு = கைக்கிளை)

தாரம் என்னும் இசைத்தாய்
 பொலிவுடன் வலிவும் உடையவள்;
தன்னிடம் எஞ்சியிருந்த
ஓர் அலகை
அருகில் இருந்த
'விளரி' என்பாளுக்கு வழங்கினள்;
இவ்வழியே
'விளரி' தன் தன்மையது மாறித்
'துத்தம்' எனும் நரம்பாகிப் போனது.

அதுபோலவே
குரல் இளி உழை முதலான
ஏனைய இசை மகளிரும்
தத்தமக்கு ஏற்ற
கிளைஞர் இடங்களை எய்தினர்.

செம்முறை மாறிப்போய்
இங்ஙனம்
பதினாற் கோவையானது
 யாழ்ப் புலவன் இசைக்கும் போது.
 
உழை இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை
இவை கிளைத்த வழியில்
மென்மையாய் நான்கும்
சமனாய் ஏழும்
வன்மையாய் மூன்றும்
இவை பதினான்கு கோவை.

உழை நின்றது முதல் இடம்.
 கைக்கிளை நின்றது இறுதி இடம்.

இப்புதிய கோவைகளாலே தோன்றின
செம்பாலை முதலிய புதிய பண்கள்
புதியதொரு மரபினிலே
யாழிசை தன்னிலே.

(யாழ்ப் புலவன் தலைப்பில் முதல் தொகுப்பு இது..அடுத்த தொகுப்பு அடுத்த பகுதியில் தொடரும்.)

வல்லமை 16.04.12 இதழில் வெளிவந்தது.

4 comments:

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கவியாக்கம்.. தொடருங்க :-)

இராஜராஜேஸ்வரி said...

சிலம்பின் சிங்காரவரிகள் சிறப்பு..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சாரல், ராஜராஜேஸ்வரி மேடம்

ஜீவி said...

படித்தேன். ஆனால் பின்னூட்டமிட மறந்தேன். இந்தப் பகுதியில் சொல்லியிருக்கும் விவரங்களை ஆழ்ந்து பார்ப்பதிலேயே கவனம் கொண்டிருந்திருக்கிறேன்.

குரல், துத்தம், கைக்கிளை,உழை,இளி, விளறி,தாரம், சந்தசுரம் என்பவை ஏழிசை என்று படித்திருக்கிறேன்.

(அகத்திணையில் ஒன்றான கைக்கிளை வேறு)

ஏழிசையை இரு வரிசைகளாக்கி செம்முறைக் கேள்வியாய் திகழும் யாழின் இலக்கணம் படித்து, ஏழிசையே மென்மையாய், சமனாய், வலிமையாய் -- பதினாங்கு கோவையாய் பங்கீடு பெறும் கணக்குகள் காணக்கிடைத்த பொழுது
அடிகளார் யாழிசையின் இலக்கணத்தை எவ்வளவு அழகாகச் சொல்லிச் செல்கிறார் என்னும் பிரமிப்பு இன்னும் நீங்கவில்லை.