Sunday, December 4, 2011

குறளின் குரல் - 34

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 598

உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து
வள்ளிய மென்னுஞ் செருக்கு.


உள்ளம் இலாதவர் எய்தார் 'உலகத்து
வள்ளியம்' என்னும் செருக்கு.

விளக்கம்:

ஊக்கம் இல்லாதவர்கள், 'பிறர்க்கு உதவும் வள்ளல் தன்மை உடையவர் யாம்' என்னும் பெருமையான மன உணர்வைப் பெறுதல் இயலாது.

ஊக்கம் இல்லாத காரணத்தால், பொருள் ஈட்டும் தன்மை குன்றியே காணப்படுவார்கள். அத்தகையவர்கள் பொருள் ஈட்டி, தானும் அனுபவித்து, அடுத்தவர்க்கும் கொடுத்து உதவுவது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.

உள்ளம் - ஊக்கம், முயற்சி, மனம், உள்ளக்கருத்து, ஞானம், ஆன்மா

வள்ளியம் - ஈகைக்குணம், ஊதுகுழல், மரக்கலம், மெழுகு, மிளகு
------------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 45. பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 442

உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

உற்ற நோய் நீக்கி, உறாஅமை முன் காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

விளக்கம்:

ஒருவர்க்கு நேர்ந்துள்ள துன்பத்தைப் போக்கி, இனிமேல் வரக்கூடிய துன்பங்களையும் முன்கூட்டியே அறிந்துகொண்டு, அத்துன்பங்கள் நேராமல் காக்க வல்ல தன்மையுடைய பெரியவர்களைப் போற்றி, அவர்களை நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.

உறாஅமை - இசைநிறையளபெடை
-----------------


பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 37. அவாவறுத்தல்
குறள் எண்: 368


அவாவிலார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்.


அவா இலார்க்கு இல்லாகும் துன்பம்; அஃது உண்டேல்,
தவாஅது மேன்மேல் வரும்.


விளக்கம்:

ஆசைகள் இல்லாதவர்களுக்குத் துன்பம் உண்டாவதில்லை; ஆசைகள் உள்ளவர்க்கு, இடைவிடாது, முடிவில்லாது துன்பம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

---------------

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 07. மக்கட்பேறு
குறள் எண்: 68


தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.


தம்மின், தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது.


விளக்கம்:

தம்மை விடத் தம் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்குவது, அப்பிள்ளைகளின் பெற்றோருக்கு மட்டுமேயன்றி, உலகில் உள்ள அனைவருக்கும் இனிமை தரக்கூடிய ஒன்றாகும்.

-------------------

பால்: இன்பத்துப்பால்

இயல்: கற்பியல்
அதிகாரம்: 125. நெஞ்சொடு கிளத்தல்
குறள் எண்: 1247

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு.


காமம் விடு, ஒன்றோ; நாண் விடு - நல் நெஞ்சே
யானோ பொறேன் இவ்விரண்டு.

விளக்கம்:

என் நல்ல நெஞ்சமே! காமம், நாணம் இவற்றுள் ஒன்றை விட்டுவிடு..ஒன்று காமத்தை விட்டுவிடு..அல்லது அதை வெளிப்படையாக என் காதலரிடம் கூற முடியாமல் தடுக்கும் நாணத்தை விட்டுவிடு..இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை..எனவே இரண்டையும் ஒரே சமயத்தில் பொறுத்துக்கொள்ளும் திறம் எனக்கில்லை.
------------------------

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 95. மருந்து
குறள் எண்: 941


மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர்
வளிமுதலா லெண்ணிய மூன்று.


மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று.


விளக்கம்:

மருத்துவக் குறிப்புகள் அடங்கிய நூல்கள் எழுதியவர்கள், வளியை முதலாகாக் கொண்டு எண்ணிய வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூன்றும் தன் அளவில் குறைந்தாலும், மிகுந்தாலும் உடலில் நோய் ஏற்படும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

வளி - காற்று, வாதம்
பித்தம் - பித்த நீர், சூடு
சிலேட்டுமம் - கபம், குளிர்ச்சி

2 comments:

ராமலக்ஷ்மி said...

எளிய விளக்கங்கள். நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி