Sunday, April 15, 2012

நான் அறிந்த சிலம்பு - 15

புகார்க்காண்டம் - 3. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே 56 -60

சிலம்பின் வரிகள் இங்கே 61 - 69

குழலாசிரியன்

இசைநூல் சொல்லிய முறையதன்படி
சித்திரப் புணர்ப்பு வஞ்சனைப்புணர்ப்பு
இவ்விரு கூறுகள் அறிந்தே இசைப்பவன்.
இசையாசிரியன் அவனுக்கு நிகராய்
அறிவுத்திறம் வாய்த்தவன்.

ஏற்றம் இறக்கம் இருவகையுடனே
வர்த்தனைகள் நால்வகையாலே
பண்ணின் மொத்த வகைகள்
மயக்கமின்றி இசைக்க வல்லோன்.
தம்முள் இழைந்திடும்
கூட்டிய இசையாம்
குரல் நரம்பும் இளி நரம்பும்
துல்லியமாய்க் கேட்டுணர்ந்து
தம் இசைநூல் அறிவாலே
இணை நரம்புகளின் வரவும் உணர்ந்து
இசைக்கவல்ல தொழில் வல்லாளன்.

சிறப்பாய்ப் பொருந்திய
பண்ணதனைச் சரியாய் அமைத்து
முழவின் இருகண் நெறிகளுடன்
தாள இயல்புகளின் திறமுமறிந்து
தண்ணுமையாளன் தன்னுடனும்
தக்கவாறு பொருந்தி இசைப்பவன்.

இசையின் இயல்பறிந்து
இசையாசிரியன் பாடுகையில்
இளிநரம்பை முதலாவதாக
யாழின்கண் நிரல்படவைத்து
பண்ணில் வரும் சுரங்கள்
குறைவுபடாது வளர்த்து
பண்ணுக்குரிய சுரங்கள் தவிர
வேற்றுச் சுரங்களின் கலப்பேதுமின்றி
அவற்றோடு ஒற்றியிருந்து,
இன்புற இயக்கி
இசையின் பண்ணிலக்கணத்துடன்
பொருந்திட வைத்துக்
குழலது இசைக்கும் திறமையாளன்.

வாரப்பாடல்களின் இசை
சரிவர நிரம்பச்செய்து
அளவுற அழகுற இசைப்பவன்.

இசைத்திடும் கணமதனில்
வாரப்படலின் இடைத்தோன்றும்
சொல் இசை பொருள் ஒழுங்குகள்
(வாய்ப்பாடல் இசைப்பது போலவே)
இசை எழுத்துருக் கொண்டாற்போல
இயைந்து இசைத்திட
சொற்களின் நீர்மைகள்
சற்றுக்கூடச் சிதைந்திடாமல்
எழுத்து எழுத்தாய்
வழுவின்றி இசைக்கும்
குழலோன் தன்னொடும்..

குறிப்பு::

வர்த்தனை- ஏழிசையைப் படிப்படியாக ஏற்றி இசைத்தல்
நால்வகை வர்த்தனை - ஆயப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை
ஏற்றம் இறக்கம் - ஆரோகணம் அவரோகணம்
பண்ணின் வகைகள் - நூற்று மூன்று வகைகள்
குரல் இளி - சட்சம் பஞ்சமம்
முழவின் இருகண் - இடக்கண், வலக்கண்
நிரல் - வரிசை,ஒப்பு
பண்ணிலக்கணம் - பதினோரு வகை


வல்லமை 09.04.12 இதழில் வெளிவந்தது.

8 comments:

கோபிநாத் said...

இசை பற்றியே இவ்வளவு இருக்கா !!!...அருமை ;-)

ஜீவி said...

முதலில் மூலத்தைப் படித்து உள் வாங்கிக்கொண்டு, அடுத்து வரி தப்பாமல் இன்றைய வழக்கு மொழியில் வழங்குவதென்றால், சிரமமான காரியம் தான். அதுவும் இந்தப் பகுதியை எடுத்து எழுதும் பொழுது, இசை பற்றித் தெரிந்துப் பின் *'சொற்களின் நீர்மை சற்று கூட சிதைந்து விடாமல் எழுத்து எழுத்தாய் வழுவின்றி' எழுத வேண்டிருக்கையில்...

உங்கள் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள்.

* நன்றி: பாசமலர்

இராஜராஜேஸ்வரி said...

சிலம்பின் இசை அருமை..

பகிர்வுக்கு நிறைவான இனிய பாராட்டுகள்..

பாச மலர் / Paasa Malar said...

மிக நன்றி கோபி...இன்னும் எவ்வளவோ சொல்லப்பட்டிருக்கிறது ஆய்வுகளில்....

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஜீவி..மிக்க நன்றி...நான் முன் சொன்னது போலவே இசை பற்றிய இந்தப் பகுதிகள் நான் நினைத்த அளவுக்கு எளிமையாக இல்லை..ஆனாலும் இனியதொரு சவாலாய் இருக்கிறது...

நீங்கள்
http://www.pettagam.blogspot.com/2012/04/14.html

இந்தப் பகுதியைப் படித்தீர்களா...பின்னோட்டப் பகுதியில் ஆய்வுக் குறிப்புகளின் சுட்டி கொடுத்துள்ளேன் பாருங்கள்...அவற்றில் இருப்பதை எளிமையாக்குவது இலகுவாக இருக்கிறது...

இன்றைய இலக்கிய ஆய்வுகள் பற்றிப் பார்க்கும் போதும் மிகவும் செறிவாகச் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகள் என்னும் போது மிகவும் பெருமையாகவே இருக்கிறது...

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...ஊக்கத்துக்கு நன்றி..

ராமலக்ஷ்மி said...

//
இசையின் இயல்பறிந்து
இசையாசிரியன் பாடுகையில்
இளிநரம்பை முதலாவதாக
யாழின்கண் நிரல்படவைத்து
பண்ணில் வரும் சுரங்கள்
குறைவுபடாது வளர்த்து
பண்ணுக்குரிய சுரங்கள் தவிர
வேற்றுச் சுரங்களின் கலப்பேதுமின்றி
அவற்றோடு ஒற்றியிருந்து,
இன்புற இயக்கி
இசையின் பண்ணிலக்கணத்துடன்
பொருந்திட வைத்துக்
குழலது இசைக்கும் திறமையாளன்.//

அழகு வரிகள் மலர். தொடருங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி