Sunday, December 4, 2011

குறளின் குரல் - 35

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 54. பொச்சாவாமை / கடமையை மறக்கும் தன்மை
குறள் எண்: 531

இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.


இறந்த வெகுளியின் தீதே - சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.


விளக்கம்:

அளவுக்கு மீறிய கோபம் மிகவும் தீதான ஒன்றாகும். அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்து, தன்னிலை மறந்து, தன் கடமைகள் மறந்து செயலற்று இருப்பது கொடுஞ்சினத்தைக் காட்டிலும் தீயதாகும்.

----------------

பால்: பொருட்பால்

இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 67. வினைத் திட்பம்
குறள் எண்: 669


துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை.


துன்பம் வரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை.


விளக்கம்:

ஒரு செயலை மேற்கொள்ளும் போது துன்பங்கள் அதிகமாக வந்தாலும், அதனால் மனம் தளர்ந்து விடக்கூடாது. துணிவுடன் செயல்பட்டுக் கடினமாக உழைத்து முயன்றால், முடிவில் இன்பம் என்பது தவறாமல் வந்து சேரும்.
----------------------
பால்: பொருட்பால்

இயல்: அரணியல்
அதிகாரம்: 75. அரண்
குறள் எண்: 744

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண்.


சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.


விளக்கம்:

காவல் செய்ய வேண்டிய வாயில் முதலான இடங்கள் சிறிய பரப்பளவில் அமைந்து, சிறிதளவு முயற்சியுடன் காக்கக்கூடியதாய் இருக்க வேண்டும். உட்பகுதியோ பரப்பளவில் அகன்று இருக்க வேண்டும். நெருங்கி வந்து பகைவர் முற்றுகையிட அஞ்சும் வண்ணம் பகைவரின் ஊக்கத்தை அழித்து, அவர்களின் மலைப்பைப் பெருக்கும் வண்ணம் பரந்ததாய் அமைய வேண்டும். அத்தகைய அரணே சிறந்ததாகும்.
----------------------------

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 06. வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 53

இல்லதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
னில்லவள் மாணாக் கடை.


இல்லது என், இல்லவள் மாண்பு ஆனால்? உள்ளது என்,
இல்லவள் மாணாக் கடை?


விளக்கம்:

இல்லறத்தில் இல்லாளின் பண்புகள் மிகவும் முக்கியமானவை. அவள் மாண்பு மிக்கவளாய் இருந்தால் இல்லாதது என்று எதுவும் இல்லை; அவளிடம் மாட்சிமைப் பண்புகள் இல்லையெனில் உள்ளது என்று எதுவும் இல்லை.

------------------

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 74

அன்பீனு மார்வ முடைமை யதுவீனும்

நண்பென்னு நாடாச் சிறப்பு.


அன்பு ஈனும் ஆர்வம் உடைமை; அது ஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.


விளக்கம்:

குடும்பம், உறவு மற்றும் பிறரிடம் கொள்ளும் அன்பு, அனைவரையும் விரும்பத்தக்க பண்பை உள்ளத்தில் உருவாக்கும்; அதுவே அனைவரையும் நட்பாக்கிக் கொள்ளும் பெருஞ்சிறப்பையும் உண்டாக்கும்.

----------------

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 14. ஒழுக்கமுடைமை
குறள் எண்: 132

பரிந்தோம்பிக் காக்க வொழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினு மஃதே துணை.


பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித்
தேரினும் அஃதே துணை.

விளக்கம்:

எத்தகைய துன்பம் வந்து அதனால் வருந்த நேரிட்டாலும், அத்தனை துன்பத்தையும் பொறுத்துக்கொண்டு எப்பாடு பட்டாவது ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும். எந்தெந்த வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும், எப்போதும் மிகவும் சிறந்த துணையாக வருவது ஒழுக்கம் என்பதால் அதனை எப்பாடு பட்டாவது போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும்.

4 comments:

Unknown said...

பெட்டகம்"குறளின் குரல் - 35" படித்தேன். மக்களுக்கு குறளின் பெருமையை உணர்த்தும் வகையில் குறளுக்கு விளக்கம் சொல்வது நல்லதுதான்.

ராமலக்ஷ்மி said...

அருமை மலர்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி வியபதி, ராமலக்ஷ்மி

கோபிநாத் said...

அனைத்தும் அருமை..முதல் குறள் ஒரு ஸ்பெசல் ;-)