Monday, March 7, 2011

குறளின் குரல் - 23

பால்: அறத்துப்பால் இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 15. பிறன் இல் விழையாமை
குறள் எண்: 144

எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந்
தேரான் பிறனில் புகல்.


எனைத் துணையர் ஆயினும் என்னாம் - தினைத் துணையும்
தேரான், பிறன் இல் புகல்?

விளக்கம்:

வரக்கூடிய இழிவைத் திணையளவும் சிந்திக்காமல் பிறன் மனைவியை விரும்புபவன், எத்தனை பெருமை வாய்ந்தவனாய் இருந்து என்ன பயன்? தீய எண்ணமுடையவன் ஆதலால் அவன் பெருமை அனைத்தும் இழந்து, இழிவையே அடைவான்.

------------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 98. பெருமை
குறள் எண்: 972

பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா,
செய்தொழில் வேற்றுமையான்.

விளக்கம்:

பிறப்பினால் அனைவரும் ஒத்த தன்மையுடையவர்களே. அவரவர் செய்யும் தொழில் காரணமாய் வேறுபட்ட தன்மையுடையவர்களாக இருக்கின்றார்கள். அவரவர் செய்கின்ற தொழில் வேறுபாடுகள் காரணமாய் அவரவருடைய சிறப்புநிலை வேறுபட்டு அமைகின்றது.

எல்லாத் தொழில்களுக்கும், அது அதற்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை. அது தரக்கூடிய வசதி வாய்ப்புகளின் காரணமாக மக்களின் சிறப்புநிலை வேறுபட்டு அமைகின்றது.

------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 36. மெய்யுணர்தல்
குறள் எண்: 354

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.


ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே-
மெய் உணர்வு இல்லாதவர்க்கு.

விளக்கம்:

மெய், வாய், கண், மூக்கு, செவி - ஆகிய ஐம்பொறிகளின் மூலம் அறியப்படும் ஐம்புலன்களைத் தன்வயப்படுத்திக் கட்டுக்குள் வைத்திருந்தாலும், உண்மைப் பொருளை உணரும் ஆற்றல் இல்லாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வாற்றலால் ஒரு பயனும் இல்லை. ஐம்புலன்களின் உணர்வாற்றலை விட, மெய்யுணர்வின் அறிவாற்றலே வலிமை வாய்ந்தது.

-------------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 93. கள்ளுண்ணாமை
குறள் எண்: 926

துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.


துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர்; எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்.

விளக்கம்:

நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்கள், உயிருள்ளவர்களே என்றாலும், அந்த நிலையில் அவர்கள் தோற்றத்தால் இறந்தவரேயன்றி வேறல்லர். அது போல எப்போதும் கள் குடிப்பவர்கள், நஞ்சினை உண்டவரேயன்றி வேறல்லர்.
---------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 118. கண் விதுப்பு அழிதல்
(காணும் துடிப்பால் கண் வருந்துதல்)
குறள் எண்: 1176

ஓஓ வினிதெ யெமக்கிந்நோய் செய்தகண்
டாஅ மிதற்பட் யது.


ஓ, இனிதே! எமக்கு இந்நோய் செய்த கண்
தாஅம் இதற்பட்டது.

விளக்கம்:

எமக்கு இக்காமநோய் வரச் செய்தவை எம் கண்கள்தான்..இன்று அக்கண்கள் தலைவனைக் காணாமல், அவர்தம் பிரிவின் துயரால் வருந்தி அழுகின்றன...ஓ, மிகவும் இனிது இனிது! எமக்குத் துன்பம் தந்த கண்கள் தாமும் துன்புறட்டும். துன்பம் செய்தவர்க்குத் துன்பம் நேர்ந்தால் மகிழ்ச்சிதானே!

------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 05. இல்வாழ்க்கை
குறள் எண்: 48

ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து.


ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

விளக்கம்:

மற்றவர்கள் அனைவரும் அவரவர் நெறிப்படி முறையாக வாழத் துணைநின்று, தானும் அறநெறியில் சிறிதும் தவறாது வாழ்பவனின் இல்வாழ்க்கை, துன்பங்களைத் தாங்கித் தவம் செய்தவரின் தவத்தைவிட மிக்க வலிமையுடையதாகும்.

No comments: