Sunday, January 30, 2011

குறளின் குரல் - 21

பால்: அறத்துப்பால் இயல்: ஊழியல்
அதிகாரம்: 38. ஊழ்
குறள் எண்: 375

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.


நல்லவை எல்லாம் அம் தீய ஆம்; தீயவும்
நல்ல ஆம்; செல்வம் செயற்கு.

விளக்கம்:

செல்வம் ஈட்டும் முயற்சியின் போது, நல்லவை என்று கருதுபவையெல்லாம் தீயனவாய் மாறும்; தீயன என்று கருதுபவை எல்லாம் நல்லனவாய் மாறும்.

ஊழின் காரணமாய்க் காலம், கருவி, இடம், முயற்சி எல்லாம் உதவியாய் மாறவும் கூடும்; எதிராக மாறி அழிக்கவும் கூடும்.

ஊழ் - வினைப்பயன் / விதி

---------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 11. செய்ந்நன்றியறிதல்
குறள் எண்: 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு.


மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு.

விளக்கம்:

மனதில் அழுக்கில்லாத குற்றமற்றவரின் நட்பு, அவர் செய்த உதவி, அவர் உறவு - இவற்றை மறத்தல் கூடாது. துன்பம் வந்த போது அருகில் துணையாய் நின்றிருந்து உதவி புரிந்தவரின் நட்பைக் கைவிடக்கூடாது. உதவியால் நட்பும் நட்பால் உதவியும் - இரண்டும் ஒன்றையொன்று தொடரும் தன்மை வாய்ந்தவை.

-----------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 62. ஆள்வினையுடைமை
குறள் எண்: 620

ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்.


ஊழையும் உப்பக்கம் காண்பர் - உலைவு இன்றித்
தாழாது உஞற்றுபவர்.

விளக்கம்:

தடைகள் வரும்போது மனம் குலையாது, சோர்வடையாது, தடுக்கும் விதியாலும் வீழாது, விடாமுயற்சியுடன் செயல்பட்டுக் காரியத்தில் கடும் உழைப்பை மேற்கொள்பவர், அங்ஙனம் தடுக்கும் விதியையும் புறமுதுகுகாட்டி ஓடச் செய்து வெல்வர்.

-------------------------
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 95. மருந்து
குறள் எண்: 942

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.


மருந்து என வேண்டாவாம், யாக்கைக்கு - அருந்தியது
அற்றாது போற்றி உணின்.

விளக்கம்:

ஒருவர் ஏற்கனவே தான் உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிகுறிகளால் நன்கு அறிந்து கொண்டபின் அடுத்து உணவு உண்டால், அவர் உடம்புக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை.
----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 76

அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை.


அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

விளக்கம்:

'அறத்தை வலியுறுத்தி நிற்கும் நல்ல செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாகும்' என்று கூறுவர் அறியாதவர். தீமையை எதிர்த்து, நன்மை சார்ந்து நிற்கும் வீரச் செயல்களுக்கும் கூட அன்பே துணையாகும்.


-------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 91. பெண்வழிச் சேறல்
குறள் எண்: 907

பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து.


பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின், நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

விளக்கம்:

சிந்திக்கும் துணிவின்றி, பெண் / மனைவி ஏவியதையெல்லாம் கேட்டு அதன்படி கண்மூடித்தனமாய் நடந்து கொள்பவனின் ஆண் தன்மையைக் காட்டிலும் இயல்பான நாணமுடைய பெண்தன்மையே மேலான பெருமையுடையதாகும்.

No comments: