Thursday, November 11, 2010

நான் அறிந்த சிலம்பு - பகுதி 8

புகார்க்காண்டம் - கோவலன் கண்ணகி திருமணச் செய்தி அறிவித்தல்


குணத்தில் சிறந்த
கோவலன் கண்ணகி
இருவர்தம் பெற்றோர் பெருமக்கள்
நல்லதொரு திருநாளில்
நங்கைக்கும் நாயகனுக்கும்
நல்மணம் செய்திட விழைந்தனர்.

யானை ஒன்றை அலங்கரித்து
அதன் அம்பாரிமீது
அணிமணிகள் பூண்ட
அம்மணிகளை
அமரச் செய்து
தாம் உறுதிசெய்த
திருமணத் திருநாளை
மாநகர மக்களுக்கு அறிவித்து
அழைத்து மகிழ்ந்தனர்.

கோவலன், கண்ணகி திருமணம்

மணவீடதனில்
முரசுகள் முழங்கின;
மத்தளங்கள் ஆர்ப்பரித்தன;
முறையாக எழுந்தன
சங்கின் ஒலியலைகள்.

அரசனவன்
நகர்வலம் வருகையில்
எழுகின்ற எண்ணற்ற
வெண்கொற்றக்குடைகள் போலவே
இம்மணவுலாவிலும்
எழுந்திட்டன மிகுதியாக....

இவ்வழகு மொத்தமும்
அளவின்றிச் சிறந்தெழ
புகார்நகரம் முழுவதும்
புனைந்திட்டது விழாக்கோலம்.
அதுவோர் மணவிழாக்காலம்.

மணமலர் மாலைகளால்
அலங்கரிக்கப்பட்ட
அழகிய உச்சியதனையும்
வயிரமணித் தூண்களையும்
கொண்டிருந்த மணப்பந்தலது
நீலநிறப் பட்டினாலானது.

வான் தவழ் நிலவது
ரோகிணியைச் சேர்ந்த நன்னாளதனில்
முதிய அந்தணன்
வேதநூல் முறையின்படி
சடங்குகள் செய்திட....

அருந்ததி விண்மீன்போன்ற
கற்புடைய கண்ணகியைக்
கோவலனாம் மணமகன்
திருமணம் புரிந்திட்டுத்
தீவலம் வந்த
திருக்காட்சியைக்
கண்டவர் கண்கள்தாம்
செய்திட்ட தவம் என்னே!

மங்கல வாழ்த்து மற்றும் மங்கல அமளி ஏற்றுதல்

தளிர்மேனியுடைய
மங்கைப் பருவத்து மகளிர்
நறுமணப் பொருட்களையும்
நல்மண மலர்த்தட்டுகளையும்
கைகளில் ஏந்தி
உரைவாயிலாகவும்
பாடல் வாயிலாகவும்
பாராட்டி உடன் நின்றனர்.

ஒதுங்கிய கடைக்கண்பார்வையுடைய
மடந்தைப் பருவத்து மகளிர்
சாந்து, நறும்புகை
மலர்மாலை ஏந்திநின்றனர்.

ஈன்ற குழந்தைக்காய்ப்
பால்சுரந்து தளர்ந்த
இளமுலை கொண்ட
அரிவைப் பருவத்து மகளிர்
இடித்த சுண்ணப்பொடி,
விளக்கு, அணிகலன்கள்,
முளைத்த பாலிகைக் குடங்கள்
தாங்கி வந்தனர்.

பூத்துநிற்கும் புன்முறுவல்கொண்ட
தெரிவைப் பருவத்து மகளிரும்

விரிமலர் சூடிய கூந்தலுடன்
அழகிய பொற்கொடி வடிவுடைய
பேரிளம் பெண்டிரும்
சூழ்ந்து நின்றிருக்க,

செம்முதுபெண்டிரும்
சேர்ந்து நின்று
வாழ்த்தி மகிழ்ந்தனர்
இங்ஙனமே..

கண்ணகியிவள்தாம்
காதலனைத் தன்
கண்ணிலும் மனத்திலும்
பிரியாது வாழ்க!

கோவலன் இவன் தான்
காதலி அவளை
அணைத்து இறுக்கிய
கைகள் நெகிழாமல்
இணைந்து வாழ்க!

மணமக்கள் இவர்தாம்
தீதின்றி நெடுங்காலம்
வாழிய வாழியவே!

இவ்வாறெல்லாம்
பொன்மொழிகளுடன்
பூமலர்கள் தூவி
வாழ்த்திசைத்தனர்.

அதன்பின்
அருந்ததி போன்ற
கற்புடைய கண்ணகியை
மங்கல அமளியில்
ஏற்றி மகிழ்ந்தனர்.

'கோபம் பொருந்திய
வேலது கொண்ட
சோழன் கரிகாலன் தன்
வெற்றிக்கு அறிகுறியாய்
இமயத்துக்கு இப்பக்கம்
வென்று பொறித்த
வாளதன் வரிகள் போன்ற
வரிகளுடைய புலிச்சின்னக் கொடியானது
பொன் கோட்டுடைய
இமயத்துக்கு அப்பாலும் சென்று
போரில் வென்று
புகழ்பரப்பி நிற்பானாக!'..

'மாறுபாடற்ற நீதியுடன்
தன் ஆணைச் சக்கரத்தை
உலகின் எந்தப்பக்கமும்
மன்னவனவன் உருட்டுவானாக!'

இங்ஙனம்
மணமக்கள் தம்மோடு
மன்னனையும் வாழ்த்தி நின்றனர்
ஐவகைப் பெண்டிர்.

(ஏழு வகைப் பெண்டிருள், குழந்தைத்தனம் மிகுதியால் பேதைப் பருவத்தினரும், நாணத்தின் மிகுதியால் கன்னிப்பருவத்து பெதும்பைப் பெண்டிரும் இக்குழுவில் இடம்பெறவில்லை என்பது வழக்கு.)

சிலம்பின் வரிகள் இங்கே..40 - 50

சிலம்பின் வரிகள் இங்கே..51 - 68

3 comments:

கோபிநாத் said...

எளிமையான வரிகளின் மூலம் அந்த காட்சிகளை மிக அழகாக கற்பனை செய்ய முடிகிறது...பெண்கள் அணிவகுப்பு புதிது..;)

ராமலக்ஷ்மி said...

மிக அழகான வரிகள். நன்றி பாசமலர்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

தொடர்ந்து எழுதுங்க மலர், எப்பவாவது வந்தாவது படிச்சுக்கறேன்..