Thursday, June 10, 2010

குறளின் குரல் - 7

அதிகாரம்:90. பெரியாரைப் பிழையாமை
குறள் எண்: 896

எரியாற் சுடப்பனு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்.

விளக்கம்:

ஒருவன் நெருப்பில் அகப்பட்டுச் சுடப்பட்டாலும் பிழைத்து விட வாய்ப்புண்டு.
ஆனால், வலிமை மிக்க பெரியோருக்கு எதிராய்த் தவறான செயல் புரிபவர்கள் பிழைக்க வழியேயில்லை.
-----------

அதிகாரம்: 101. நன்றியில் செல்வம்
குறள் எண்: 1002

பொருளானா மெல்லாமென் றீயா திவறு
மருளானா மாணாப் பிறப்பு.

பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான், ஆம், மாணாப் பிறப்பு.

விளக்கம்:

பொருளினால் எல்லா நலன்களும் எப்போதும் உண்டாகும் என்றெண்ணி, அதன் மீது மயக்கம் கொண்டு, அதை எவருக்கும் கொடுக்காமல் காத்து வைப்பவனுக்கு, சிறப்பில்லாத இழிபிறப்புதான் தொடர்ந்து உண்டாகும்.
----------------

அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 245

அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி.

அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லன் மா ஞாலம் கரி.

விளக்கம்:

அருள் உடையவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை.
வாரி வழங்கும் காற்றினால் வாழும் உயிர்களே இதற்குச் சான்றாகும்.
(உலகைக் காற்று காப்பது போல், அருளுடையவர்களை அருள் காத்து நிற்கும்.)

--------------------

அதிகாரம்: 47. தெரிந்து செயல்வகை
குறள் எண்: 469

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை.

விளக்கம்:
பிறருக்கு நன்மை செய்வதிலும் தவறு நேரும் வாய்ப்புண்டு. எப்படி? ஒருவருடைய பண்பை, இயல்பை ஆராய்ந்து அறிந்து கொண்ட பின்னே அவர்களுக்கு நன்மை தரக்கூடிய உதவிகள் செய்ய வேண்டும்.

சான்றாக, பொறாமையுணர்வு மற்றும் சுயநலம் கொண்ட ஒருவருக்குச் செய்த உதவியே தவறாகக் கூடிய வாய்ப்புண்டு. பெற்றுக் கொண்ட உதவியால் தாம் முன்னேறிவிட்டு,

ஏதேனும் ஒரு சமயத்தில் தமக்கு உதவி செய்தவருக்கே தீங்கு விளைவிக்க வழி வகுக்கும் அவர் இயல்பு. அவர்கள் இயல்பை ஆராய்ந்து இது போன்ற உதவிகளைத் தவிர்த்து விட வேண்டும்.
----------------------------

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை (தந்நலம் நீத்தார் பெருமை)
குறள் எண்: 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணின் கொண்டற்று.

விளக்கம்:

உலகப்பற்றை விட்டு நீங்கியவரின் பெருமையை அளந்து சொல்வது, பிறந்து இறந்தவர் எண்ணிக்கைக் கணக்கெடுப்பதற்கு ஒப்பாகும்.

பிறந்தார் இறந்தார் கணக்கு எல்லையில்லாது தொடர்ந்து கொண்டேயிருக்கும். அது போலத் துறந்தார் பெருமையும் எல்லையற்றது. அப்பெருமையே சிறந்த பெருமையாகும்.

-------------

1 comment:

ராமலக்ஷ்மி said...

அருமையான விளக்கங்கள். நன்றி பாசமலர்.