Thursday, June 24, 2010

குறளின் குரல் - 10

அதிகாரம்: 89. உட்பகை குறள் எண்:  881

நிழல்நீரு மின்னாத வின்னா தமர்நீரு
மின்னாவா மின்னா செயின்.


நிழல் நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னா ஆம் இன்னா செயின்.

விளக்கம்:

நிழலிலுள்ள நீர்நிலையின் நீரானது, நுகரும் காலத்தில் இன்பம் தருவதாகத்தான் இருக்கும். ஆனால் பிறிதொரு காலத்தில் அதுவே நோய் விளைவிக்கும் தன்மையுடையதாக மாறும்.

அதுபோலத் தீய இயல்புடையவரின் உட்பகை ஆரம்ப காலத்தில் இன்பம் தருவதாகத் தோன்றினாலும், இறுதியில் துன்பமே விளைவிக்கும்.

--------------------

அதிகாரம்: 8. அன்புடைமை
குறள் எண்: 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.


அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் தளிர்த்தற்று.

விளக்கம்:

வன்மையான மேட்டு / பாலை நிலத்தில் உள்ள மரம் காய்ந்து போய், துளிர்க்கும் வழியில்லாது நிலையற்ற தன்மையுடன் தவித்திருக்கும்.

அது போல், அன்பு என்னும் ஈரம் உள்ளத்தில் இல்லாதவரின் வாழ்க்கையும் உலர்ந்த தன்மையுடன் தளிர்க்க இயலாமல் தவித்திருக்கும்.
--------------------

அதிகாரம்: 12. நடுவு நிலைமை
குறள் எண்: 115.

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.


கேடும் பெருக்கம் இல் அல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.

விளக்கம்:

வாழ்வில் செல்வம் அழிவதும், செல்வம் பெருகுவதும் இல்லாதது அல்ல; அனைவருக்கும் ஏற்படுவதுதான்.

செல்வம் நிலையானது அல்ல. அத்தகைய நிலையற்ற ஒன்றுக்காக மனம் தவறி, நடுவுநிலைமை தவறி நடப்பது அழகல்ல.

நெஞ்சத்தில் நடுவுநிலைமை கொண்டு, இடர் வந்த போதும் அந்நெறியிலிருந்து தவறாமல் வாழ்தலே சான்றோர்க்கு அழகாகும்.
--------------------

அதிகாரம்: 4. அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 37

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.


'அறத்து ஆறு இது' என வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

விளக்கம்:

பல்லக்குத் தூக்குபவன் பாவம் செய்தவன்; பல்லக்கில் அமர்ந்திருப்பவன் புண்ணியம் செய்தவன்..

இதெல்லாம் முன்வினைப்பயன் என்றும்,

முன்வினைப்பயன் படி பலன் நுகர்வதுதான் அறவழி என்றும் உணர்த்த வேண்டாம்.

நாம் எல்லோரும் சமம், எவ்வித வேறுபாடும் நமக்குள் கிடையாது என்றுணர்த்துவதே அறவழியாகும்.
-----------------

அதிகாரம்: 22. ஒப்புரவறிதல்
குறள் எண்: 213

புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
யொப்புரவி னல்ல பிற.


புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல் அரிதே-
ஒப்புரவின் நல்ல பிற.

விளக்கம்:

எல்லோருக்கும் பயன் தரும் பொது நன்மைகளைச் செய்யும் ஒப்புரவு மிகவும் நல்லதொரு செயலாகும்.

அதற்கு ஈடான நன்மை தரும் வேறு ஒன்றை இவ்வுலகிலும் பெற முடியாது; தேவருலகிலும் பெற முடியாது.

1 comment:

ராமலக்ஷ்மி said...

விளக்கங்கள் அருமை.